கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,295 
 

“ஏன் இப்படி இடிச்சிட்டு வரீங்க. அமைதியாய் நின்னு தரிசனம் பண்ணுங்களேன்.” அவரின் குரல், மந்திர ஓலி, மணி ஓலியையும் மீறிக் கொண்டு கணீரென்று ஓலித்தது.

“வந்துட்டான்யா வலுத்த கிழவன்! இவன் மட்டும்தான் சாமியாக் கும்புடணுமோ? எங்கயும் இவனாலே இடைஞ்சல்தான்” என்றார் முதிய பெண்மணி ஒருவர்.

அனைவரின் கவனமும் அந்தக் கிழவரின் பக்கம் திரும்பியது. ரிஷிப வாகனம் வலம் முடிந்து இறங்கியது. தீபாராதனை ஆனதும் வாகனத்தை அலங்கரித்த மலர் பிரசாதம் பெற தள்ளுமுள்ளு! கிழவரும் பூ வாங்குவதற்கு முண்டியடித்தார்.

“கெழவனுக்கு ஏன்யா பூவு? பொம்பளைகளை வாங்கவிடாம குறுக்கே வர்றானே!” என்றார் அந்தப்பெண்மணி.

இதைச் சட்டையே பண்ணாமல் அவர் பூவை வாங்கிய பிறகே போனார். பெண்கள் பழிப்புக் காட்டினர். பூவுடன் வெளியே வந்த அவர், பிராகாரத் தூண்களில் சாய்ந்தபடி, நடக்க இயலாதவர்களாய் இருந்த வயோதிகப்பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பூவைக் கொடுத்தார்.

பிரதோஷப் பிரசாதம் பெற்ற பூரிப்பு அவர்களின் முகத்தில், உதவிய சந்தோஷம் கிழவரிடத்தில்.

– ஓகஸ்ட் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *