கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 6,625 
 

தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.

பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருப்பார்கள். பின்புறக் கேரியரில் ஒரு சாக்கினை மடித்துப் போட்டு இருபக்கத்திற்கும் சமமாகத் தொங்குமாறு குடங்களைக் கட்டியிருப்பார்கள். குடத்தின் கழுத்தில் இறுக்கமான சுருக்கு. தண்ணீர் பிடித்துச் செல்லும்போது சிக்கென்று நிற்கும். நிற்க வேண்டும்.

எல்லோருக்கும் கை வந்த அந்தக் கலை ஏனோ எனக்கு மட்டும் படியவில்லை. அவர்களைப் போல நானும்தான் செய்து பார்த்தேன். தண்ணீர் பிடித்துத் தொங்கவிட்டுப் பாதி தூரம் கூட வந்திருக்கவில்லை. கழுத்துப் பகுதியிலிருந்து மேற்புறமாகச் சுருக்கு இளகி அப்படியே கயிறு மேலேறி குடம் பொத்தென்று கீழே விழுந்து விட்டது. நடு ரோட்டில் தண்ணீர் ஆறாய்ப் பெருகி நீராய் ஓடியது. எனக்கோ பெருத்த அவமானமாக இருந்தது. நாலாங்கிளாஸ் படிக்கும் சின்னஞ்சிறுவன் கூட குடத்தைக் கட்டிக் கொண்டு சிட்டாய்ப் பறக்கிறான். தடிமாடு மாதிரி வளர்ந்த எனக்கு அது ஏனோ கைவரவில்லை. நல்ல கனமான குடமா இருக்கணும் சார்…என்றார்கள் உதவிக்கு வந்தவர்கள். பாதித் தண்ணீரோடு நிமிர்த்திக் கொடுத்தார்கள். இதை எங்க கொண்டு போக…என்று அதையும் ரோட்டில் ஊற்றினேன். காலிக் குடத்தைக் கட்டிக் கொண்டு வீடு பயணிக்கையில் ஜோராக நிமிர்ந்து வந்தது அது.

சவக்காடு என்று ஒரு இடம். ஒரு காலத்தில் பிணங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் இடமாக இருந்ததால் அந்தப் பெயர் விளங்கிற்று என்றார்கள். ஒரு சிலர் சவக்காடில்லை, சிவக்காடு என்றார்கள். சிவன் சாம்பலைப் பூசிக் கொண்டு ஆடியதாய் மனதில் நினைத்துக் கொண்டு. அந்த இடத்தில்தான் வழக்கமாய் எல்லோரும் சென்று அடைவார்கள் தண்ணீர் பிடிப்பதற்கு. கூட்டமான கூட்டம். நாலு ஐந்து இடங்களில் அடி பைப் வைக்கப்பட்டிருக்கும். படக்கு படக்கு என்று தண்ணீர் அடிக்கும் சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

என்ன விசேஷம் என்றால் ஊரெல்லாம் நாயாய் பேயாய் தண்ணீருக்கு அலைந்தாலும், அங்கு மட்டும் எந்நேரமும் வந்து கொண்டேயிருக்கும். நின்றது என்கிற பேச்சுக்கே இடமில்லை. பூமிக்கடியிலான பைப் லைன் வெகு பள்ளம் அங்கே, அதனால்தான் அப்படி வருகிறது என்று சொன்னார்கள். அருகில் நூறடி தூரத்தில் உள்ள வீடுகளில் பொட்டுத் தண்ணீர் வராது. இங்கே அடி பைப்பை வைத்து சிறிது தண்ணீரை உள்ளே ஊற்றி படக் படக்கென்று அடித்து பிரஷரை ஏற்றினால் எழும்பிக் கொண்டு மேலே வந்து தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும்.

குடம் ஒரு ரூபாய். ஒரு அடி பைப்பில் நாளெல்லாம் தண்ணீர் கொட்டுவதால் எப்படியும் நூறு நூற்றைம்பது குடங்களுக்காவது காசு தேறும். இப்படியான சேதி ஊர் பூராவும் பரவி கார்ப்பரேஷன்காரர்கள் வந்து தண்ணீரைக் காசுக்கு விற்கக் கூடாது என்றார்கள். சரி, ஓசி கொடுக்கிறோம் என்று தெரியாமல் காசு வாங்கிக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள். அதுவும் தெரிந்து போய் கார்ப்பரேஷனில் தண்ணீர் விடும் நாள், நேரம், தவிர மற்ற நேர, நாட்களில் யாருக்கும் தண்ணீர் அடிக்க விடக் கூடாது, அப்படிச் செய்தால் குழாய் கனெக் ஷன் பிடுங்கப்படும் என்று கண்டிப்பாகச் சொல்லப் போக கொஞ்ச நாட்களுக்கு அந்தக் களேபரம் ஓய்ந்தது அங்கே. அடிக்கடி சம்பந்தப்பட்டவர்கள் வேறு வந்து வேவு பார்க்கப் போக, ஜனங்களுக்குத் தண்ணீர் விடுவது நின்றது.

பழையபடி ஆட்கள் சைக்கிளில் குடங்களைச் சுமந்து கொண்டு சர்ரு, புர்ரு என்று வேகமாய் மிதித்துக் கொண்டு எங்கடா தண்ணீர் கிடைக்கும் என்று அலைய ஆரம்பித்தார்கள்.

கார்ப்பரேஷன் கமிஷனர் பங்களாக் குழாய்ல தண்ணி கொட்டுதாம்….என்று யாரோ சொல்லப் போக கூட்டம் அலை மோதியது அங்கே. போலீஸ் வந்து இங்கல்லாம் தண்ணி பிடிக்கக் கூடாது என்று விரட்ட, பிடிச்சிட்டுப் போகட்டும்யா விடுங்க…என்றாராம் கமிஷனர். என்ன ஒரு இரக்கம் பாருங்கள். மவராசனா இருக்கட்டும் என்று வாழ்த்தியது ஜனம். அதுக்காக இப்படியா? டிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு கூட்டம் கட்டி ஏறியது என்றால்? கடைசியில் போலீஸ் பந்தோபஸ்து போட வேண்டிய நிலை வந்தது. ஒரு கட்டத்தில் கமிஷனர் தன் பங்களாவுக்கு முன் அப்படியான கச்சரா புச்சராக் கூட்டம் விடாமல் இருப்பதை வெறுக்க தண்ணீர் விடுவது அறவே நின்றது. பங்களா வெளி கேட் இழுத்து மூடப்பட்டது.

இப்படியாகத்தானே சைக்கிளில் குடத்தைக் கட்டிக் கொண்டு தவறு, தவறு அதுதான் ஆகாமல் ஆயிற்றே, என் மொபெட்டில் ஒரே ஒரு குடத்தை வைத்துக் கொண்டு அல்லது கேனை நிறுத்திக் கொண்டு நானும் அலைய ஆரம்பித்தேன். அப்படி அலைந்த போது நான் கண்டுபிடித்த இடம்தான் அந்த வீடு.

வாங்க…எங்க இன்னும் கடந்து போறீங்க…இங்கதான் தண்ணி வருதுல்ல.. என்று சாலையைப் பார்த்துக் கொண்டு நின்ற அந்த அம்மாள் வலிய அழைத்தது என்னை. எப்பொழுதுமே யாராவது அங்கு தண்ணீர் பிடித்துக் கொண்டேயிருப்பார்கள்தான். யாரேனும் ரெண்டு பேர் காத்துக் கிடப்பார்கள். இதையெல்லாம் பார்த்தவாறே நகர்ந்து விடுவது என் வழக்கம். சொல்லப்போனால் அங்கிருந்து அரைக் கி.மீ. தூரம் கடந்தால்தான் நான் வழக்கமாய்ப் பிடிக்கும் அந்த சவக்காடு இடம் வரும்.

அதுதான் இல்லை என்று ஆகிவிட்டதே என்று கேட்கிறீர்களா? அது அப்படியல்ல. இல்லை என்று ஆகும். பிறகு இருக்கும். பின்னும் ஒரு நாள் இல்லை என்று ஆகிப் போகும். இதுதான் வழக்கம்.

போகட்டும்யா…சனம் தண்ணிக்காக என்ன பாடு படுது…நம்மளாலதான் எல்லா எடத்துக்கும் விட முடியல…அங்க அதுபாட்டுக்கு வந்திட்டிருக்குது…அத நிறுத்தி என்னா செய்யப் போறோம்…அதக் கெடுப்பானே…அங்க நிறுத்தப் புகுந்தோம்னா அதோட கனெக் ஷன் உள்ள மேட்டு வீடுக பலதுக்கும் இல்லாமப் போகும். பெறவு அங்க பிரச்னை கௌம்பும்…அவுகளுக்குப் பதில் சொல்லி மாளாது. கழுத கெடக்கு விடு…என்னா அந்தத் துட்டை வாங்கி அவுக என்ன கோட்டையா கட்டிடப் போறாக…ஏற்கனவே நம்ம செக் ஷன் ஆபீசரு ஒருத்தர் போயி அடி பெத்துட்டு வரல்லியா…இனியும் அங்க பிரச்னை பண்ணினம்னா டப்பா கழன்டு போகும்…

இதுதான் நடந்தது. இப்பொழுதும் அங்கே ஜே.ஜே. என்று திருவிழாக் கூட்டம்தான். யம்மா, அய்யா, அண்ணே, யக்கா, என்னங்ணா, வந்துட்டங்ணா, சரிங்ணா, என்று மக்களிடையே உறவு முறை ரெம்பவும் நெருக்கமாகி விட்டது அங்கே.

அரை கி.மீ. கடந்து அந்தச் சந்து நுனியில் நுழையும்போதே காத்துக் கிடக்கும் கூட்டத்தைப் பார்த்து வதக் என்கும் எனக்கு. இங்க போயி என்னத்த நின்னு, என்னத்த அடிச்சு, என்னத்த தண்ணிய என்னத்தப் பிடிச்சு….. என்று மலையாய் அலுப்பு வந்தது எனக்கு. போதும்டா சாமி இந்தத் தண்ணிக்குப் படற பாடு…..

உங்கள யாரு பாடு படச் சொன்னா…அதான் ட்ரை சைக்கிள்ல புருஷன் பொண்டாட்டியா ரெண்டு பேர் தள்ளிட்டுப் போறாங்களே… …அவுங்ககிட்டச் சொல்லுங்க…தெனம் நமக்கும் ரெண்டு கொடம் வேணும்னு…தருவாங்க…

அந்தாளு கொடம் அஞ்சு, ஏழுங்கிறான்…தூரத்துக்கேத்தமாதிரி….தெனம் இதுக்கு இருபது முப்பதுன்னு கொடுக்கச் சொல்றியா…அவன் கொடத்தக் கழுவுறானோ இல்லியோ…எந்நேரமும் ஒரு பாக்கப் போட்டு மென்னுக்கிட்டே கிடக்கான்…அங்கங்க புளிச் புளிச்சின்னு துப்ப வேற செய்றான்…அப்டியே வாயத் துடைச்சிக்கிறான். அதே கையால தண்ணிக் கொடத்தத் தூக்கிக் கவுத்து ஊத்துறான்…அங்கங்க நின்னு பீடியை இழுக்கிறான்…அன்டர்வேர் தெரியறமாதிரி சொறியறான்…இதெல்லாம் நீ பார்த்திருக்கியா…நா தெனம் பார்க்கிறேன்…அவன்ட்டப் போயி தண்ணிய வாங்குங்கிற…வௌங்கினாப்லதான்…

அவள் வாய் அத்தோடு அடைத்துப் போனது. எப்டியோ கொண்டுவந்தாச் சரி என்று விட்டு விட்டாள். பாடெல்லாம் எனக்குத்தானே..தினமும் 25 லிட்டர் மினரல் வாட்டர் கேனைக் கொண்டு வந்து இறக்க எவனிடம் ஐவேஜூ உள்ளது.

நீங்க என்ன சைக்கிள்லயா போறீங்க…செலவாகாம இருக்க…? மொபெட்லதான போறீங்க…அதுக்கு பெட்ரோல் எங்கிருந்து வருது? ஓசிலயா ? அந்தச் செலவையும் கணக்குப் பண்ணினீங்களா? – கேட்டாள்.

நானென்ன லேசுப்பட்டவனா? என்ன கவனித்தாள் அவள்? ஏதேனும் கடை கண்ணி என்று செல்லும்போதே ஒரே வேலையாய் நாலைந்து காரியத்தை முடிப்பதுபோல்தானே சென்று வருகிறேன். இந்த ஒன்றுக்கு மட்டும் என்றா வண்டியைக் கிளப்புகிறேன்?

என்ன சார்…லைப்ரரிக்கு கொடத்தோட வர்றீங்க…?

என்ன சார்…பேங்க் வேலையா வர்றபோதும் கையில குடம்தானா?

அட, உழவர் சந்தைக்கு பைக்கு பதிலா குடத்தக் கொண்டு வந்த ஆள இப்பத்தான்யா பார்க்கிறேன்… – நண்பர் கேலி செய்யவில்லையா?

எத்தனை கேள்விகள்? எத்தனை கிண்டல்கள்? எதைக் கண்டாள் எதைக் கேட்டாள்? எல்லாப் புகழும் ஒருவனுக்கே….

வண்டி தானாக நின்று போகிறது அந்த இடத்தில். ஒரு அடி அதற்கு மேல் வைக்க முடியாது. இப்படி நின்று தடுத்தால்? ஓரமாய் மரத்தடியில் நிறுத்தி ஸ்டான்ட் போடுகிறேன். அதற்குள் அந்தத் தண்ணீர்க் கேனை உரிமையோடு எடுத்து உள்ளே செல்கிறது அந்தம்மாள்.

என்னா கேனப்போயி இப்டி வச்சிருக்கீங்க…கழுவவே மாட்டீகளா…? – கேட்டுக் கொண்டே குழாயின் குறுக்கே நீட்டி சிறிது தண்ணீரைப் பிடித்துக் குலுக்குகிறது.

தெனம் கழுவணுமாக்கும்…அப்பத்தான் உள்ளாற பாசம் பிடிக்காம இருக்கும்…தண்ணி வீச்சமில்லாம இருக்குமாக்கும்…

என்னவோ ஒரு பொடியை உள்ளே தூவி மீண்டும் குலுக்குகிறது. கொஞ்ச நேரத்தில் வெளியில் இருந்து பார்த்த எனக்கு உள்ளே தெரியும் வெளிச்சம். மனிதர் மனங்களையும் இப்படி நுணுகிப் பார்த்தால்தான் உள்ளே இருக்கும் வெளிச்சம் தெரியும் போலும்.

அடேயப்பா எத்தனை குடங்கள்? இத்தனை எண்ணிக்கையை எப்படிச் சேர்த்திருக்கும் இந்த அம்மாள்? தண்ணீர் பிடிக்க வந்து மறந்து போனவர்கள் இருப்பார்களோ? அஞ்சாறு குடம் என்று வைத்துப் போனவர்கள் மறந்து விட்டிருப்பார்களோ? அப்படி ஒன்றிரண்டாய் மறந்து மறந்து இத்தனை சேர்ந்திருக்குமோ? பழைய குடங்கள் எங்கும் விற்பதில்லையே? புதிதுதானே வாங்கியாக வேண்டும். ஒட்டும் போட முடியாதே? ஓட்டை விழுந்தால் அடைக்க முடியாதே…அடைத்தாலும் நிற்காதே…!

நீ இருக்கியே…இப்டியே கண்டமேனிக்கு விட்டேத்தியா நினைக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு…சும்மாக் கெடடா… வந்தமா, தண்ணியப் பிடிச்சமா, போனமான்னு இல்லாம…இதென்ன விருதாச் சிந்தனை?

கேனுக்குள் தண்ணீர் ஃபோர்சாக இறங்கும் சத்தம். ஒரு குறிப்பிட்ட அளவு நிறையும் வரை சாய்ந்து விடாமல் இருக்க கேனைக் கையால் பிடித்துக்கொண்டு நிற்கும் அந்த அம்மாள். என்ன ஒரு அக்கறை? செய்யும் வேலையில்தான் என்ன ஒரு அர்ப்பணிப்பு உணர்வு? அங்கே வரிசையாக அணிவகுத்து நிற்கும் நீர் நிறைந்த குடங்களே அதற்கு சாட்சி. அது விற்பதற்கோ அல்லது கொண்டு வந்தவர்கள், வந்து எடுத்துச் செல்வதற்கோ? எதுவானாலும் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு. என்ன ஆனாலும் மூத்த தலைமுறையினரின் பொறுப்புணர்வே தனிதான். இந்த சமூகம் இன்னும் அவர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களால் காப்பாற்றப்படும் விழுமியங்கள்தான் நம் குடும்ப அமைப்பின் ஆதார சுருதியாக விடுபடாமல் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மாற்றம் என்ற ஒரு வார்த்தையைத் தவிர எல்லாமும் மாறுதலுக்குட்பட்டது என்கிறோம். ஆனால் மாறாத, காலம் காலமான, அழிவற்ற, அடிப்படை ஒழுக்கங்களும், பண்பாடும், பொறுப்புணர்வும், செயல்பாடும்தான் இன்னும் மீதமாகி நாம் வீழ்ந்து படாமல் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு நிகழ்வுகளிலும் இப்படி எத்தனை எத்தனையோ அர்த்தப்பூர்வமான மேன்மைகள். இந்தாங்க,எடுத்துக்குங்க…சொல்லியவாறே தண்ணீர் கேனைத் தூக்கி என்னருகே வைத்தது அந்த அம்மாள்.

கையில் காசைத் திணித்தேன்.

என்னாது…? ஒத்த ரூபாயக் கொடுக்கிறீங்க…..மூணு ரூபா கொடுங்க…..

எது? மூணு ரூபாயா? எல்லா எடத்துலயும் ஒரு ரூபாதான…? எல்லார்ட்டயும் வாங்குறத என்ட்டயும் வாங்கிக்குங்க…- அந்த அம்மாள் என்னிடம்தான் ஸ்பெஷலாகக் கேட்கிறது என்று தோன்றியது எனக்கு.

பின்ன? உங்ககிட்ட மட்டுமா கூடக் கேட்கப் போறேன்….அல்லாருந்தான் கொடுக்கிறாக…கொடுங்க…கொடுங்க…பாட்டிக்குக் கொடுத்தா என்ன கொறஞ்சா போவீங்க…கொடுங்க….- தன்னைப் பாட்டி என்று எனக்கு பாவித்துக் கேட்டதில் நான் இறங்கலாம் என்ற நினைப்பு..

எங்கிட்டக் காசில்ல….ஒர்ரூபாதான் கொண்டாந்தேன்….அடுத்தவாட்டி பார்ப்போம்….சொல்லிக் கொண்டே கீழே இறங்கினேன்….நான் அங்கே நின்ற வேளையில் வெறும் ஐம்பது பைசாவும், ஒரு ரூபாயும் கைமாறுவதைத்தான் பார்த்தேன். என்னிடம் மூன்று கேட்டால் எப்படி? நான் என்ன இளிச்சவாயனா? ஏன் என்னிடம் மட்டும் அப்படிக் கேட்கிறது? எல்லோரும் சைக்கிளில் தண்ணீர் எடுத்துச் செல்ல, நான் மட்டும் மொபெட்டில் வருகிறேனே, அதனாலா? வேறு சிலரும் அப்படி வருகிறார்கள்தானே? ஆனால் அவர்களில் யாரும் இங்கு பிடிப்பதாய்த் தெரியவில்லை. இங்கு வருவதெல்லாம் வெறும் சைக்கிள் பார்ட்டிதான். அப்படியானால் மாட்டிய முதல் கிறுக்கன் நான்தானா? வசதியான பார்ட்டி என்று நினைத்துவிட்டதோ?

நல்லாயிருக்கு நீங்க பண்றது…கேனை வச்சு தண்ணிய அடிச்சி, நிரப்பிக் கொடுத்திருக்கேன்….அதுக்காச்சும் காசு கொடுத்திட்டுப் போங்க…நீங்க பாட்டுக்குப் போறீங்க…நல்ல ஆளுங்க நீங்க….அஞ்சு ரூவால்லாம் கொடுக்கிறாக…நீங்க என்னடான்னா மூணு கொடுக்க அழுகிறீங்க….

இன்னும் கொஞ்சம் போனால் சத்தம் பலமாகி தெருவில் மானத்தைக் கூட்டிவிடும் போலிருக்கிறது. நல்லா மாட்டினன்யா நானு….

பையைத் துழாவினேன். இன்னொரு ஒரு ரூபாய் தட்டுப் பட்டது. எடுத்து நீட்டினேன்.

இம்மாம் பெரிய கேனைத் தூக்கிட்டு வந்து ஒத்த ரூபா கொடுக்கிறாரு…? ஆளப்பாரு….

அந்தம்மாள் சத்தம் போடுவது வந்து கொண்டிருந்த என் காதில் விழுந்தது. எப்படி அழுத்தமாய் உழைக்கிறதோ அதுபோல் படு அழுத்தமாய்ப் பேசவும் செய்யும் போலும்…

இதோ…இன்றும், இப்பொழுதும் தண்ணீர் பிடிக்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அங்கே அல்ல. வழக்கமான சவக்காட்டுப் பக்கம்தான். காத்திருந்துதான் பிடித்தாக வேண்டும். கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ…சொல்ல முடியாது. ஆனாலும் அங்கு ஒரு ரூபாய்தான். அதில்தான் மனதுக்கு நிம்மதி. அரைக் கிலோ மீட்டர் அதிகம்தான். போக, வர ஒரு கி.மீ. தூரம். அந்தப் பெட்ரோலுக்கான காசு என்னாவது? வண்டி என்ன தண்ணீரிலா ஓடுகிறது? காற்றாய்க் கரைவது காசுதானே? அதை நினைத்து அந்தம்மாளுக்கு ஒத்த ரூபாய் கூடக் கொடுக்கக் கூடாதா? மனசாகவில்லையே? நான் என்ன செய்ய? எல்லோரிடமும் வாங்கும் துட்டை என்னிடமும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே? அதென்ன என்னிடம் மட்டும் கூடக் கேட்பது? அது எனக்கு நியாயமாகப் படவில்லை. இன்று என்னிடம் மூணு கேட்டால் நாளை என்றேனும் மற்றவர்களுக்கு உயர்த்தும்போது எனக்கும் ரேட் கூடுமல்லவா? அப்போது அஞ்சக்கொண்டா, பத்தக் கொண்டா என்றால் நான் எங்கு போவது? அப்போது இன்னும் மனசுக்குக் கஷ்டமாக இருக்குமே?

இதென்னடா இது வம்பாப் போச்சு? வேலியோட போற ஓணானை வலிய மடில பிடிச்சுக் கட்டின கதை?

ஏண்ணே…பேசாம நடந்து வர வேண்டிதானே…உங்கள யாரு அந்தச் செடியப் பிடிச்சு இழுக்கச் சொன்னாங்க? என்று கையில் முள் கோடாய் இழுத்துவிட்ட வேதனையில் சுரீர் என்று துள்ளித் துடிக்கும் பாலையாவைப் பார்த்து, காகா ராதாகிருஷ்ணன் ஏதோவொரு பழைய அரதப் பழசுப் படத்தில் கூறுவார். அது ஞாபகம் வந்து சிரிப்பை மூட்டியது எனக்கு.

அம்புட்டு தூரம் சென்று பிடித்தாலும் பிடிப்பேனேயொழிய ஒரு ரூபாய் அதிகம் கொடுப்பதாக இல்லை. என்ன மனசு இது? எனக்கு நானே கேட்டுக் கொள்ளத்தான் செய்கிறேன். ஒரு வகையில் பார்த்தால் முட்டாள்தனமாகக் கூடத் தோன்றத்தான் செய்கிறது. மனிதன் தான் ஏமாற்றப்படுவதாக உணரும்போது ஏதோ ஒரு பிடிவாதம் அவனிடம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை, ஏமாறுவதில்லை என்கிற வைராக்கியம் பிறக்கிறது. ரொம்பச் சாதாரண விஷயம்தான். ஆனாலும்….

உங்க வீட்டுக்காரரென்ன தண்ணி பிடிக்கவே வரமாட்டேங்குறாரு இப்பல்லாம்…வரச் சொல்லுங்க…. – அந்த அம்மாள் கேட்டதாக என் மனையாள் சொல்கிறாள்.

அவுங்களுக்கு எப்டித் தெரிஞ்சது நீதான் என் பொண்டாட்டின்னு….? ஜோடியா எப்பப் பார்த்தாங்களாம்? அப்டியே பார்த்திருந்தாலும், நீ என் பொஞ்சாதின்னு எப்டி முடிவு பண்ணினாங்களாம்?

எப்டியோ தெரிஞ்சுது….இப்ப அதுவா முக்கியம்…? இந்த வாய்தான ஆகாதுங்கிறது? போகட்டும், அங்கயே பிடிங்க…அந்தம்மா கேட்குற காசைக் கொடுங்க…பிசினாறித்தனம் பண்ணாதீங்க…பாவம் அவுங்க…பல சமயம் காசிராஜன் க்ளினிக்குல அவுங்களைப் பார்த்திருக்கேன்….எலும்பும் தோலுமான வீட்டுக்காரரக் கூட்டிட்டு வர்றதப் பார்க்கணுமே….பெரிய்ய்ய்ய கொடுமை அது… இன்னைக்கோ நாளைக்கோன்னு இருப்பார் அவர்…யார் வாயிலயும் விழாதீங்க…. ஆகாது…கேட்டதக் கொடுத்திட்டு, தண்ணியப் பிடிச்சிட்டு வந்து சேருங்க….ஒண்ணும் நஷ்டமாயிடாது…..குடி முழுகிடாது…..புரியுதா….

உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது அவள் சொன்னது. அநேகமாக நாளை அங்கேதான் செல்வேன். அதற்கு மேல் என் வண்டி நிச்சயம் நகராது. அந்தளவுக்குத் தளர்ந்தாயிற்று நான். கடைசியாக என்னவள் சொன்ன அந்தச் செய்தி…மனதை என்னவோ பாடாய்ப் படுத்துகிறது? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…! அங்கேயே செல்வோம்…பழக்கத்தில், பின்னால் ஏதாவது கடன் உடன் கேட்டாலும் கொடுத்து உதவலாம்தான். பாவமாய்த்தான் இருக்கிறது பார்க்கப் பார்க்க…! மனதைத் தொடர்ந்து சங்கடப்படுத்தத்தான் செய்கிறது. போனால் போகிறது. நம்மாலான உதவி. தேவையென்றால் செய்துதான் வைப்போமே…போகுமிடத்திற்குப் புண்ணியம் தேடி…. மனம் பட்டென்று ஒரு அதீத முடிவுக்குச் சென்றது. திடீரென்று உறுதிப் பட்டது. தேர் நிலைக்கு வந்தது.

எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்ல…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *