பள்ளித்தளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 11,993 
 

அந்தியூரிலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் பேருந்து பர்கூர் வந்து மணியாச்சி பள்ளத்தை அடையும்போது எட்டரை மணி ஆகிவிடும். மணியாச்சி பள்ளத்திற்கு மேல் தம்புரெட்டி, ஒன்னகரை, கொங்காடை போன்ற மலை கிராமங்களுக்கு கால் தடத்தில்தான் நடந்துபோக வேண்டும். மணியாச்சி பள்ளத்தில் எல்லாக் காலங்களிலும் தண்ணீர் சலசலத்து ஓடும். காலை ஒன்பதரை மணிக்கு ஒன்னகரை பள்ளியின் காலை வழிபாட்டு சப்தம் மணியாச்சி பள்ளத்தில் உள்ளவர்களுக்கு லேசாகக் கேட்கும். மலைப்பகுதிகளில் தொலைதூரத்திற்கு கூப்பிடும் ஒலி கேட்பதை பலசமயம் நான் ஆச்சர்யத்துடன் உள்வாங்கியது உண்டு.

ஒன்னகரையின் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியனாக நான் பணிபுரிந்தேன். எனக்கு ஆசிரியருக்கான எந்தத் தனித் தகுதியும் கிடையாது. எனக்குப் பாடத்திட்டத்தில் எவ்வித வரையறையும் இல்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களைச் சொல்லித்தர வேண்டும். அவர்களை கையொப்பமிட பழக்க வேண்டும். எழுத்துக்கூட்டி அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். என் பள்ளியில் பதினாறு மாணவர்கள் இருந்தார்கள். எல்லோரும் ஐந்து வயதிலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்டவர்கள். என் பள்ளி பல சமய‌ம் திறந்தவெளியில் நடக்கும். மணியாச்சி பள்ளத்திற்கு சில சமயம் மாணவர்களுடன் வந்துவிடுவேன். நீரோடையில் சூரியக் கதிர்கள் பிரதிபலித்து பளிச்சிடும். அந்நீரோடையின் கரையில் நெடிய நாகமரமும் ஈட்டிமரமும் இருக்கும். அதில் கனத்த கரிய தேன்கூடுகள் அதிகமிருந்தது. நான் என் பள்ளிக் குழந்தைகளிடம் கேட்பேன்.

“இம்மரத்தின் பெயரென்ன?”

“இது பெஜில் மரம்” ஒரு சேரக் குரல் வரும்.

“அது சரி, இதன் பயன்பாடு என்ன?”

“கூதல் காய, அடுப்பு எரிக்க…”

“அதைத் தவிர இந்த மரம் இம்மலைக்கு என்ன பயன் தருகிறது?”

குழந்தைகள் மெளனமாக இருந்தபோது, “உங்க அம்மா, அப்பா, தாத்தாகிட்டே கேட்டுட்டு வந்து நாளைக்குச் சொல்லணும்.”

நான் நீரோடையில் கரையிலிருந்த மணலில் படுத்தபடியே நாகமரங்களின், ஈட்டி மரங்களின் குடை போல விரிந்த கிளைகளைப் பார்ப்பேன். என்னைச் சுற்றி குழந்தைகளும் படுத்துக் கொள்வார்கள். நீரோடையின் சலசலப்பினூடே மரத்திலிருக்கும் குயில்களின் கீக்கி சப்தம் கேட்கும்.

“இந்தக் குயில்கள் எந்த மரத்தை இங்கே உருவாக்கக் காரணமாகயிருக்கின்றது?”

குழந்தைகள் மெளனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மகாதேவன் மட்டும் அவனின் பளிச்சிடும் கண்களை சிமிட்டிக் கொண்டு ‘சந்தன மரம்’ என்றான்.

நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். அவனின் கன்ன‌த்தைத் தட்டி, `எப்படிச் சொல் பார்க்கலாம்’ என்றேன்.

“இந்தக் குயில்கள் சாப்பிட்டு எச்சமிடும்போது விழும் சந்தனப் பழ விதைகள் மட்டுமே சந்தன மரமாக முளைக்கும்.”

எல்லாக் குழந்தைகளும் மகாதேவனைப் பார்த்தனர்.

“குயில்கள் இல்லை என்றால் சந்தன மரங்களில்லை”

எல்லாக் குழந்தைகளும் ஒருமுறைச் சொல்லச் சொன்னேன். குழந்தைகளின் உரத்த குரலில் சப்தத்தினால் மரத்திலிருந்த குயில்கள் சிறகடித்துப் பறக்கத் துவங்கின.

நான் இப்பள்ளிக்கு ஆசிரியனானதும், பள்ளி வந்ததும் எல்லாம் தற்செயலாக நடந்ததுதான். பழங்குடி மக்களின் சங்கம் ஒன்று ஒன்னகரையில் இருந்தது. ஒன்னகரை கொத்துக்காரர் ஜவனன் சங்கத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருந்தார். மலை கிராமத்தில் பள்ளிக்கூடம் வேண்டி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான தயாரிப்புக்காக நான் அன்று ஒன்னகரை வரும்போது மதியம் மூன்று மணியாகிவிட்டது. ஊரில் ஜவனன் இல்லை. அவர் பாங்காட்டில் உள்ள மாட்டிப்பட்டிக்குப் போய்விட்டார் என்ற தகவல் வந்தது. ஜவனனை அவசியம் பார்க்க வேண்டும் என்பதால் தொட்டியிலிருந்த பசுவனும், சடையனும் என்னை பாங்காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். உன்னிப் புதர்களும் நெருக்கமான மரங்களும் அடைந்த அந்த வனத்தில் நாங்கள் கால் தடப்பாதையில் நடந்தோம். பாதையின் பல இடங்களில் யானை மற்றும் சிறுத்தையின் ரத்திகள் காய்ந்து கிடந்தன. எனக்கு ஊன்றுவதற்கு ஒரு மூங்கில் கம்பினை வெட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் மாட்டுப்பட்டியை அடையும் சமயம் சூரிய வெளிச்சம் மங்கிவிட்டிருந்தது. மாட்டுப்பட்டி மலையின் சரிவில் இருந்தது. சுமார் ஐம்பதிலிருந்து எழுபத்தி ஐந்து மலை மாடுகள் அங்கிருந்தன‌.

மலைச்சரிவு முடிந்து சமதளம் வரும் பகுதியில் அந்தப் மாட்டுப்பட்டி இருந்தது. மாடுகளை வனத்திற்குள் காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு மாலையில் பட்டியில் அடைப்பார்கள். வருடத்திற்கு பத்து மாதம் இங்கேயே மாடுகள், ஆட்கள் தங்க மூன்று குடிசைகள் போடப்பட்டிருந்தன‌. அதன் கூரையாக ஒழுங்கின்றி சிதறிக் கிடந்த கானாம்பில் கட்டப்பட்ட கத்தைகள் சில கிடந்தன‌. மூங்கில் குழலில் ஒரு கட்டில். அதன் கீழே நேற்று விறகு மூட்டி கூதல் காய்ந்த விறகின் மிச்சமிருந்தது. மாடுகள் அப்போதுதான் வனத்திலிருந்து ஓட்டிவந்து பட்டியில் அடைத்துக் கொண்டிருந்தனர். பட்டியைச் சுற்றிலும் ஒப்புக்குச் சில காய்ந்த மரங்களின் தடுப்பு வேலை இருந்தது. மாடுகளை ஓட்டி வந்ததில் நான்கு சிறுவர்களுமிருந்தனர். கிழிந்த அழுக்கடைந்த சட்டை மற்றும் சிராயுடனிருந்தனர். அதில் ஒருவன் துருதுருவென கண்களைச் சிமிட்டிப் பார்த்தான். பின் குடிசைக்குள் வந்து நின்று கொண்டான். அங்கு என்னைப் பார்த்ததும் கொத்துக்காரர் ஜனனன் மகிழ்ந்து போய் வணக்கம் சொன்னார்.

நான் குடிசைக்குள் நின்ற சிறுவனைப் பார்த்து பெயர் கேட்டேன்.

“மகாதேவன்” என்றான்.

“அவனுக்கு இனிமேல் விடியும் வரை கண் தெரியாது – மாலைக்கண்” என்றார் ஜவனன்.

எனக்குள் அச்சிறுவனைப் பார்த்து பெரும் சோகம் எழுந்தது. அவன் கட்டிலுக்குக் கீழே உள்ள விறகு கிடந்த இடத்தின் அருகில் அமர்ந்து கொண்டான். மகாதேவன் கொத்துக்காரரின் பேரன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் தாய் நோயில் இறந்து போனாள். அதன்பின் அவனின் அப்பன் அவனை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

இரவு வளர்ந்ததும் கூதல் எடுக்கத் துவங்கியது. சுற்றிலும் பாங்காடு என்பதால் சில்வண்டுகளின் இடையறாது ஒலிக்கும் சப்தம் கேட்டது. கூடவே மாடுகளின் சப்தம். கொத்துக்காரர், விறகைப் பற்றவைத்துவிட்டு என்னைக் கட்டிலில் உட்கார வைத்தார். நான் மகாதேவனின் கண் பிரச்சினைக்குக் காய்கறிகள் சாப்பிடுவது நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அருகில் களி தயாராகிக் கொண்டிருந்தது. கொத்துக்காரர் எங்களின் அருகில் உட்கார்ந்து கூதல் காய்ந்து கொண்டிருந்த சிறுவனைத் தயிர் கொண்டுவரச் சொன்னார். அவன் அருகிலிருந்த மரத்தில் ஏறி மரக் கிளையிலிருந்த ஒரு மண்செப்பை எடுத்து வந்தான். காலையில் மாடு ஓட்டிப் போகும்போது புரையூற்றி சாப்பாடு கட்டிச் சென்ற பால் தயிராகியிருந்தது.

களியைத் தயிருடன் பிசைந்து சாப்பிடும் சமயம் பெருமூச்சுவிடும் பிளிறல் கேட்டது. நான் உறைந்துபோய் நின்றேன். நான்கு யானைகள் மாட்டுப் பட்டியின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன‌. நிலவொளியிலும் அதன் கண்கள் பிரகாசித்தன. கொத்துக்காரர் என்னை சப்தமிடாமலிருக்க சைகை காட்டினார். சில நிமிடங்களுக்குப் பின் அவை விலகி அப்பால் போய்விட்டன‌. எங்களுடன் இருந்த சிறுவர்கள் யானைகள் அசைந்து போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். என் வாழ்வில் காட்டு யானைகளை வெகு அருகில் அன்றுதான் பார்த்தேன். வாழ்வுக்கும் மரணத்துக்கும் வெகு குறுகிய இடைவெளியை உணர்ந்தேன். கொத்துக்காரர் களி சாப்பிடச் சொன்னார். அந்த யானைகள் என்னை வேறு வகையாக யோசிக்க வைத்தன‌. எனக்குத் தூக்கம் வரவில்லை. கொத்துக்காரர் ஜவனன் பேசிக் கொண்டே இருந்தார். விடியும் தருவாயில் ஒன்றைச் சொன்னேன். “ஊரில் ஒரு பள்ளிக்கூடம் அமைக்க முடியும் என்றால் நான் ஆசிரியராகப் பணிபுரிந்து குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருகிறேன்” என்று.

விடிந்த பின்னே மாட்டுப் பட்டியை பசுவனையும் சடையனையும் பார்க்கச் சொல்லிவிட்டு கொத்துக்காரர் என்னுடன் வந்தார். மகாதேவனும் மற்ற மூன்று சிறுவர்களும் என்னுடன் ஒன்னகரை வந்தார்கள். கொத்துக்காரர் தொட்டிக்காரர்களிடம் பேசிவிட்டு நாகி என்ற பெண்ணின் ஆரியம் தட்டிய களத்துமேடும் அவளின் குடிசையையும் தற்போது பள்ளிக்கூடமாக உபயோகிப்பது என்றும் அந்த ராகி அறுத்த வயலை ஒட்டிய இடத்தில் உள்ள மேட்டு நிலத்தில் பள்ளிக்குக் குடிசை போடுவது என்றும் முடிவானது. நான் தற்கால பள்ளிக் குடிசையின் முன்பிருந்த களத்தில் அருகருகே தூரக்கிடந்த இரண்டு கவை உள்ள சாய்ந்த மரங்களை நட்டேன். அந்த இரண்டு கவைகளுக்கிடையே ஒரு மூங்கிலை வைத்து அதன் மையத்தில் கயிறு கட்டச் செய்து ஊஞ்சலை உருவாக்கினேன். என் பள்ளியில் குழந்தைகள் விளையாடத் தடையில்லை என்றேன். மகாதேவன் முதலில் அந்த ஊஞ்சலில் ஆடத் துவங்கினான். பின் சிறுவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஊஞ்சலுக்காக நின்றனர்.

சங்கத்தினருக்கு என் செயல் ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் புலி வாலைப் பிடித்தது போன்ற இப்பள்ளி விவகாரத்தில் பாதியில் நான் நின்றுவிட்டால் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் சங்கத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும் என்றனர். நான் தொடர்ந்து அக்குழந்தைகளுக்காக ஆசிரியனாக இருப்பதாகக் கூறினேன். விரைவில் மேட்டுப்பகுதியில் நீண்ட கானாம்பில் குடிசை போடப்பட்டது. அந்தக் குடிசையினுள் ஒரு பகுதி தடுக்கப்பட்டு என் அறை உருவானது. எனக்கு தொட்டிக்காரர்கள் வீட்டிலிருந்து களி உருண்டையும் குழம்பும் வந்து கொண்டிருந்தன‌. தொட்டிக்காரர்களுடன் சேர்ந்து மேட்டுப்பகுதியின் சரிவில் கற்களை வைத்து தடுப்பு எழுப்பி அதில் மண்ணை நிரப்பி ஒரு மைதானம் உருவாக்கப்பட்டது.

எங்கள் பள்ளியின் காலை வழிபாடு இம்மைதானத்தில் நடந்தது. அங்கிருந்து குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து மணியாச்சி பள்ளத்தில் அப்பால் பேருந்து நிறுத்தம் வரை கேட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் பேருந்து கிளம்புவது மணியாச்சி பள்ளத்தில் வழக்கமாயிற்று. பள்ளி மைதானத்தைச் சுற்றிலும் சந்தன மரநாற்றுகளும் வேப்பமரமும் நடப்பட்டது. கூடவே காய்கறிச் செடிகளை நான் மகாதேவனை மனதில் கொண்டு நட்டேன். மகாதேவன் தினமும் சீங்கை மற்றும் ரக்கினிக் கீரை சாப்பிட்டு வரத் துவங்கினான். மாட்டுப்பட்டிக்கு எந்தச் சிறுவர்களையும் அழைத்துப் போகாமல் எல்லோரும் பள்ளிக்கு வந்தனர். சில சிறுவர்களின் கைகளிலிருந்த சிரங்குக்காக பள்ளி வந்ததும் சிகைக்காய்த் தூளால் கைகால்களைக் கழுவிக் கொண்டு பாடம் படிக்கத் துவங்கினர். அச்சிறுவர்களுடன் நான் இருந்த நாட்கள் என் வாழ்வில் இனிய நாட்களுள் ஒன்று. ஆனால் என் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை.

நான் மலேசியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். மலை வைத்தியம் என் உடலுக்கு ஏற்புடையதாக இல்லாததால் எனக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஈரோட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டேன். நான் ஒரு மாதம் ஒய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் மிகவும் வெளிறிப் போயிருந்தேன். மீண்டும் மலைக்குப் போவது இயலாமல் போனது.

சங்கத்தினர் பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதற்காக வேறு வழியின்றி பர்கூரில் பத்தாவது படித்திருந்த இளைஞன் வெங்கடேசனை மாதம் ரூபாய் ஆயிரம் சம்பளம் தருவதாகப் பேசி என் இடத்தில் பணியமர்த்தினர். வெங்கடேசன் ஏற்கெனவே ஒரு தொண்டு நிறுவனத்தில் சில காலம் வேலை செய்திருந்ததால் அவன் அப்பணிக்கு ஒத்துப் போனான். அரசாங்கப் பாடத்திட்ட புத்தகத்தில் உள்ளவற்றை முறையே சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தான். சிறுவர்களும் வெங்கடேசனிடம் நன்கு பழகிவிட்டனர். நான் சங்கத் தோழர்களுடன் சேர்ந்து மலைப்பள்ளிக்கு ஆசிரியர் சம்பளம் மாதம் ஆயிரம் பெற்று அனுப்ப நன்கொடை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

குழந்தைகள் எழுத்துக்கூட்டி அவர்கள் படிக்கத் துவங்கியுள்ளதாக ஜவனன் சொல்லி பூரித்து போனார். மாதம் மாதம் நன்கொடை தேர்த்துவதில்தான் நாங்கள் சிரமத்தை எதிர்கொண்டோம். ஆனால் மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தியும் எங்களுக்குக் கிடைத்தது. வரும் கல்வியாண்டில் அரசாங்கம் ஒன்னகரை எடுத்துக்கொள்ளவும், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சமையல்காரர் பணி அங்கு நியமிக்கப்படும் என்பதுதான் அது.

ஆனால் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் மிகுந்த வருத்தமடைந்தான். தான் பர்த்த வேலை பறிபோகிறது என்பது மட்டுமல்லாது இக் குழந்தைகளைப் பிரிய மனமின்றி, கோடைவிடுமுறைக்கு முந்தைய நாள் கலங்கிய கண்களுடன் அவன் பள்ளியிலிருந்து விடை பெற்றான். அதன் பின்பு அவன் அந்தியூரில் விசைத்தறி ஓட்டும் வேலைக்குச் சென்றுவிட்டான். கோடைவிடுமுறை முடிந்து ஜீன் ஒன்றாம் தேதி பள்ளிக்கு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் நேரமே வந்தனர். புதிய ஆசிரியரை வரவேற்க ஒன்னகரை மக்கள் பள்ளிக்கூடத்தை சாணமிட்டு வழித்து கோலமிட்டிருந்தனர். பள்ளியின் வாசலில் மரமல்லியைக் கொண்டு மாலையாக்கி தோரணமாகக் கட்டியிருந்தனர்.

ஒரு மாத கோடை விடுமுறைக்குப்பின் காலை ஒன்பதரை மணிக்கு மலையிலிருந்து கேட்கும் மாணவர்களின் காலை வழிபாட்டுத் தாய்த் தமிழ் பாடல் இன்று கேட்கும் என மணியாச்சிப் பள்ளத்தில் பேருந்துக்காக நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஒன்னகரை மக்கள் தங்கள் ஊருக்கு மணியாச்சிப் பள்ளத்திலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையைப் பார்த்துக்கொண்டேயிருந்தனர். ஒன்பதரை மணி தாண்டியது இன்னமும் யாரும் வரவில்லை. புதிய ஆசிரியர் சற்று கால தாமதமாகக்கூட வருவார் என தொட்டிக்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். மைதானத்தில் மாணவர்கள் விளையாடத் துவங்கிவிட்டனர். மதியம் ஆன பின்பும் யாரும் வரவில்லை. பள்ளியின் வாசலில் கட்டியிருந்த மல்லிகை மாலை வாடியிருந்தது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு தங்கள் குடிசைகளுக்கு சலிப்புடன் சென்றனர் தொட்டியினர்.

அடுத்த நாள் இழந்த உற்சாகத்தை திரும்பப்பெற்று குழந்தைகள் நம்பிக்கை பளிச்சிடும் கண்களுடன் வந்திருந்தனர். ஆனால் நேற்று போல இன்று அவர்கள் விளையாட மனமின்றி இருந்தனர். காலை வழிபாட்டு நேரம் தாண்டி வெகுநேரம் கழித்து ஒரு உயரமான இளைஞன் ஒரு கையில் பையைப் பிடித்தபடி வந்தான். ஆறு மைல் தூரம் நடந்து வந்த களைப்பு அவன் முகத்திலிருந்தது. அவன் உருவம் ஒத்தையடிப்பாதையில் தெரியத் துவங்கியங்தும் பள்ளிக் குழந்தைகள் கைதட்டி குதிக்க ஆரம்பித்தனர். அவன் பள்ளியை அடைந்ததும் தொட்டி மக்கள் வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அவன் முன்னே சென்று “வணக்கம் ஐயா” என ஒரு சேர சொன்னார்கள். அவன் உணர்ச்சியற்று அவர்களைப் பார்த்தான். சற்று நேர மவுனத்திற்குப் பின் “நான் தற்காலிகமாக மதிய உணவு சமைக்க வந்திருக்கேன்” என்றான். எல்லோர் முகத்திலும் ஏமாற்றம் மிஞ்சியது.

“வாத்தியார் பின்னாடி வர்றாரா?” என்று கேட்டார் கொத்துக்காரர்.

“அவர் வரமாட்டார். லீவு போட்டுட்டு மாறுதலுக்கு முயற்சி செய்யறாரு. அவருக்கு மலைக்கு வர இஸ்டமில்லை. சீக்கிரம் மாறுதல் வாங்கிடுவார்” என்றான். பின் ஒரு செப்பு தண்ணீர் குடித்துவிட்டு, ம‌ணியாச்சி பள்ளத்து பேருந்து நிறுத்தத்திலே சமையல் மற்றும் மளிகை சாமான்களை வைத்திருப்பதால் இரண்டு பேரை அனுப்பி அதை எடுத்து வரச் சொன்னான் சமையல்காரன் கோபால்.

மூன்று நாட்கள் மதிய உணவு சமைத்து மாணவர்களுக்குப் போட்டுவிட்டு நான்காம் நாள் அப்பணியை ஒன்னகரை ஒன்னானிடம் ஒப்படைத்து விட்டு ஊர் போய் வருவதாகவும் வந்து பணம் தருவதாகவும் கூறிச்சென்றான் கோபால்.

குழந்தைகள் பள்ளிக்கு வருவதை மறந்து போனார்கள். மதிய உணவுக்கு மட்டும் சாப்பாட்டு தட்டுடன் வந்து போனார்கள். பள்ளியைச் சுற்றி மைதானத்தில் கானாம்பில்லும், உன்னிச்செடியும் முளைக்கத் துவங்கியது.

பழங்குடி சங்கத்தினர் அந்தியூரில் உள்ள கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஒன்னகரை ஆசிரியரின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு பள்ளிக்குப் போக கட்டளையிடப்பட்டது. அதன் பின்பு ஆவணங்களின் படி பள்ளிக்குச் சென்று வருவதாக இருந்தது. மாதம் மாதம் சம்பளத்தை அந்தியூரிலிருந்தே பெற்று வந்தார். ஒன்னகரை எங்கு உள்ள‌து என ஒரு முறை கூட அவர் எட்டிப் பார்க்கவேயில்லை. அவர் பெயர் இளங்கோ. சற்று பருமனான உடலும், பூசிய முகமும், சற்று வழுக்கைத்தலையுடனும் காட்சியளித்தார். தொடர்ந்து மாறுதல் கேட்டு வந்தார். சில நாட்களுக்குப் பின் அதிக நிர்பந்தம் வரவே ஒரு நாள் அந்தியூரில் பேருந்து பிடித்து மணியாச்சிப் பள்ளம் இறங்கி வனத்தின் ஒத்தையடிப்பாதையில் நடக்கத் துவங்கினார். வழியில் பாதையின் மேடும் கல்லும் கால்களை இடறும் போதெல்லாம், ஒன்னகரை மக்களை வசைமாரி பொழிந்தபடியே நடந்து வந்தார். வெறுப்பின் உச்சத்தில் சிறு கற்கள் அவருக்கு பாறை போல எரிச்சல் படுத்தியது.

பள்ளியில் அன்று ஊருக்குப் போய்விட்டு சமையல்காரன் கோபால் திரும்பியிருந்தான். பள்ளிக்கு எந்த குழந்தையும் வரவிலை. தான் வந்ததிற்காகத் தொட்டியில் சொல்லி குழந்தைகளை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். மதிய உணவுக்குப்பின் பள்ளி துவங்கியது. குழந்தைகள் ஆசிரியரிடம் “வணக்கம் ஐயா” என்றனர். உற்சாகமின்றி முகத்தை சுருக்கிக்கொண்டார் ஆசிரியர். பள்ளி துவங்கி நான்கு மாதத்திற்குப் பின் முதல் வகுப்பு துவங்கியது. ஆசிரியர் வெறுப்புடன் பாடம் நடத்தத் துவங்கினார். குழந்தைகள் ஈர்ப்பில்லாததால் வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். இளங்கோவுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. எட்டிப் பார்த்த மகாதேவனின் கையை நீட்டச்சொல்லி பிரம்பால் இரண்டு அடி வைத்தார். மகாதேவனின் கையில் ரத்தம் கன்றிப்போனது. அவன் கையை தனது கால்களுக்கிடையே வைத்து அழுத்திக்கொண்டு அழுதான். பிற குழந்தைகளின் கண்களில் அச்சமும் பீதியும் தோன்றியது. அவர்களின் கண்களும் காதுகளும் அடைபட்டுப் போனது. பள்ளி முடிந்ததும் அழுது கொண்டே வீடு சென்ற மகாதேவன் அவன் தாத்தா கொத்துக்காரரை அழைத்து வந்தான்.

“எங்க குழந்தைகளை மனுசப் பிறவின்னு நினைச்சீங்களா அல்லது விரியன் குட்டின்னு அடிச்சி கொல்லப் பார்த்தீங்களா? என்றார் கொத்துக்காரர்.

“அப்படித்தான் அடிப்பேன். அவனிடம் ஒழுக்கமில்லை” என்றார் ஆசிரியர்.

“உங்க மாதிரி வாத்தியார் ஆகணும், கலெக்டராகணும்னு நாங்க நினைக்கலை. எங்க ஊர் பஸ்சை கண்டுக்கற‌ அளவு பாடம் நடத்துனா கூடப் போதும். அதுக்குக்கூட நீங்க தயாரில்லே. பாவிகளா குழந்தைகளை அடிக்கிறீங்களா?” என சப்தமிட்டார்.

இளங்கோ, சமையல்க்காரர் கோபாலிடம் இனிமேல் பள்ளிக்கு ஊர்க்காரர்களையோ, சங்கத்துக்கரர்காளையோ அனுமதிக்கக்கூடாது என கட்டளையிட்டு, விடிந்ததும் ஒன்பதரை மணி பஸ்ஸில் மணியாச்சிப் பள்ளம் போய் சேர்ந்தார்.

கொத்துக்காரர் பாங்காட்டிலே மாட்டுப்பட்டிக்கு போகும் போது பேரன் மகாதேவனையும் அழைத்துப் போனார். பள்ளியைச் சுற்றி மைதானம் எங்கும் உன்னிச்செடிகள் நன்கு வளர்ந்து விட்டன. பழங்குடி சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருவதால், பெரிய மனதுடன் இளங்கோ தன் சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் தருவதாகவும், ஒரு படித்த பையன் இருந்தால் ஒன்னகரையில் அவன் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு தன்னிடம் மாதம் ரூபாய் ஆயிரம் வாங்கிக்கொள்ள ஒரு ஆளை ஏற்பாடு செய்து தர தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்துள்ளார்.

அது நடக்கும் சமயம் மீண்டும் ஒன்னகரையில்லிருந்து பள்ளிக் குழந்தைகள் பாடும் காலை வழிபாட்டு தமிழ்த் தாய் வாழ்த்து மணியாச்சிப் பள்ளத்தில் கேட்கும்.

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *