கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 6,204 
 

‘ பந்தாம் பந்த் ! யாருக்கு வேண்டும் பந்த் ! எவனோ. .. எவனையோ அடிச்சிட்டானாம். அதுக்காகப் பந்த்தாம். அவன் தப்பு செய்திருப்பான். இவன் அடிச்சிருப்பான். அதை சங்கமாக்கி, சாதியாக்கி, அரசியலாக்கி. … நக்கிங்க….நாட்டையே குட்டிச் சுவராக்குறானுங்க. நாசமாய்ப் போறவனுங்க. எப்படியோ இன்னைய பொழப்புல் மண்ணையள்ளி போட்டுட்டானுங்க. இன்னைக்கு எங்கேயும் போக முடியாது. ! ‘ என்று நினைக்கும்போதுதான் வாசலில் கட்டியிருந்த இரண்டு ஆடுகள் ‘ மே. ..! மே. .! ‘ என்று கத்தின.

‘ இதையாவது மேய்ப்போம் ! ‘ என்று தீர்மானித்து அதுகளை அவிழ்த்து ஒட்டிக்கொண்டு வயல்காட்டுப் பக்கம் கிளம்பினார் ராமையா.

காலை வெயிலே சுள்ளென்று அடித்தது. தரிசாய்க் கிடக்கும் தன் வயலில் ஆடுகளை ஓட்டி மேயவிட்டுவிட்டு வரப்பிலுள்ள தென்னை மர நிழலில் துண்டைக் கீழே விரித்துப் போட்டு அதன்மேல் அமர்ந்தார்.

பாளம்பாளமாய் வெடித்துக் கிடைக்கும் வயலைப் பார்க்க வயிறெரிந்தது. கண் கலங்கியது.

‘ எவ்வளவு கண்ணான நிலம். ! இரண்டு போகம் எப்படி விளையும். எல்லாம் போச்சு ! ‘ மனம் கனக்க கண்களை மூடிக்கொண்டு அப்படியே மரத்தில் சாய்ந்தார்.

‘ இந்த மூன்று ஏக்கர் போதும். வீட்டு சாப்பாட்டிற்கு, மேல் செலவிற்கு என்று எல்லாம் போதும். தான், மனைவி, மகன், மகள் என்று குடும்பமே நிம்மதியாகக் காலம் கழிக்கலாம்.

‘ இது செழிப்பான பூமி. பொன் விளையும் இடம். பூட்டன், பாட்டன் என்று வழி வழியாய் வந்தது. இப்போது வறண்டு, தரிசாய்க் கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் இந்த நிலத்திற்கு கொண்டாட்டம். காவிரியிலிருந்து கிளையாய் வரும் நாட்டாறுதான் இதற்கு உயிர் நாடி. வண்டல் படிந்த நீர் ஆற்றில் வந்தால்தான் இது செழிக்கும்.

‘ இவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இந்த வயல்தான் சொத்து, சுகம், செல்வம். இதைத்தான் இவர் தன் குடும்பத்திற்கு மேலாக நேசித்தார். உயிர் காக்கும் பூமியை யார்தான் நேசிக்காமலிருக்க முடியும். ..?

இன்றைக்கு இந்த நிலம் தரிசாய்க் கிடக்கின்றது. இன்று மட்டுமா. ..? ! கடந்த இருப்பது இருபத்தைந்து ஆண்டு காலமாக இப்படித்தான் கிடக்கின்றது. காரணம் ஆற்றில் நீர் வரத்து அதிகம் இல்லாமல் போய் விட்டது. அரை ஆறு தண்ணீர் வந்தால்தான் இந்த நிலங்களுக்கெல்லாம் ஏறிப் பாயும். அதற்கும் குறைவாக வந்தால் ஆடு மாடுகள் குடித்தது போக மீதி ஆற்றோடு போகும். இப்படித்தான் இத்தனை ஆண்டுகளாய் நடந்து கொண்டிருக்கிறது.

காவிரியிலேயே நீர் காணாமல் போவதற்கு கர்நாடகம் காரணமென்கிறார்கள். காட்டில், நாட்டில் மரங்கள் வெட்டப்பட்டு விட்டதால் மழை பெய்யவில்லை என்கிறார்கள். அரசியல் என்கிறார்கள். எது காரணமோ ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை.

இந்த தமிழ் நாட்டைத் தவிர. .. ஆந்திரா, கேரளம், மஹராஷ்ட்ரம் என்று வடக்கேயெல்லாம் மழையும் தண்ணீரும் தட்டுப்பாடில்லாமல் வெள்ளமாய்க் கிடைக்கும்போது இந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் வறட்சி. உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்குப் பிறகும். … ம். .ம். .. இந்தியாவில் இது பெரிய கொடுமை இல்லையா. ..? !

கங்கையையும் காவிரியையும் இணைக்க வேண்டும் என்கிறார்கள். நாட்டில் எல்லா நதிகளையும் இணைத்தால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விவசாயம் செழிக்கும் என்பது உண்மைதான். இணைக்க விட்டால்தானே . ..! எத்தனை மாநிலங்கள் இணைக்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் மாற்றம் என்றாலே மாற்றாம்தாய் மனப்பான்மை. அப்படி இருக்கும்போது இது எப்படி சாத்தியம். ..? !

‘ ஆடுகள் மேய்ந்து வீடு வரட்டும் ! ‘ எழுந்து வீட்டிற்கு வந்தார்.

படித்த மகன் வீட்டில் காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

” ஏண்டா. .! எங்கேயும் போகலையா. .? ”

” இல்லே. .”

” ஆமா. .! இன்னைக்கு எதுக்குப் பந்த். .? ”

” எதுக்கோ. .? ! ” சொல்ல விருப்பமில்லாதவன் போல் முகத்தைத் திருப்பிக்கொண்டான். இல்லை. .. சொல்லித்தான் என்ன ஆகப்போகிறது என்கிற நினைப்பு. .!

பந்த் ! மக்களைக் கஷ்டப்படுறதுக்குத்தான் பந்தா. .? கடை இருக்காது. பேருந்து ஓடாது. திறந்தாலும், ஓடினாலும் நொறுக்குவார்கள், சேதப்படுத்துவார்கள். இது பந்த் இல்லே. மிரட்டல் ! அரசாங்கத்தை அச்சுறுத்த செய்யும் காரியம்.

இப்படி ஏதேதோ நினைவுகள்.

மறுநாள்.

மண்வெட்டி, தட்டுக்குடை சகிதம் நூறு நாட்கள் வேலைக்குப் புறப்பட்டார் ராமையா.

அடுத்த வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த செல்லப்பன். .

” எங்கே போறீங்க. .? ” கேட்டான்.

”ஏன். .. வேலைக்குத்தான் ! ”

” இன்னைக்கும் பந்த் ! ”

” எ… எதுக்கு. .? ”

” தெரியல. .இன்னைக்கு ஆளும் கட்சி பண்ணுது. கலிகாலம். !! ” செல்லப்பன் விசனப்பட்டான்.

கண்களில் குப்புக்கென்று கண்ணீர் புறப்பட. … ராமையா அப்படியே துவண்டு உட்கார்ந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *