நிழல் மனிதன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 7,316 
 

“உள்ளே நுழையலாமா ? வேண்டாமா ? தயங்கி கொண்டிருந்த, சுஷ்மாவை ”என்னம்மா, தயங்கி தயங்கி வாரே ? ஏதாச்சிலும் கம்ப்ளையன்ட் கொடுக்கணும்ன்னா உள்ற போ! வழியில நிக்காதே, பெரிய அதிகாரிங்க வந்தா என்னை திட்டுவாங்க” என்றார் பாரா போலிஸ்காரர்.

உள்ளே போனவள், ஸ்டேஷன் ஏட்டிடம் “ஸார், நா ஒரு கம்ப்ளையண்ட கொடுக்கணும்”என்றாள்.

“என்ன கம்ப்ளையண்ட், ஏதாச்சிலும் காணுமா, இல்லே காதல் தகராறா” கேட்டார்.

“அதில்லே ஸார், நான் எங்கே போனாலும் என்னைய யாரோ பாலோ பண்றாங்க, ரொம்ப பயமா இருக்கு, யாரு பாலோ பன்றதுன்னு திரும்பி பார்த்தா அங்கன யாருமே இருக்க மாட்டாங்கறாங்க, ஒளிஞ்சிக்கிறாங்க போலிருக்கு…எனக்கு ரொம்பவே பயமா இருக்கு, நீங்கதான் எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேணும்” என்று சொன்னாள்.

“நீ என்ன சொன்னியோ, அதை கம்ப்ளையண்டா எழுதிக் கொடு, இந்தா பேப்பர்” என்று வெள்ளைத்தாளை நீட்டினார் ஏட்டு

அவள் அதை கம்ப்ளையண்டாக எழுதி கொடுத்து விட்டு வெளியேறினாள்.

சற்று நேரத்தில் ரவண்ட்ஸிலிருந்து திரும்பி வந்த இன்ஸ்பெக்டர், இன்னாப்பா ஏட்டு, இன்னைக்கு ஏதாச்சிலும் கம்பளையண்ட் வந்திச்சா ? கேட்டார்.

கம்ப்ளையண்ட் காகித த்தை ஏட்டு கொடுக்க, அதைப் படித்து பார்த்து விட்டு, “சரி..சரி, அந்த வழியா போகும் போது நானே விசாரிக்கிறேன்“ என்று சொல்லி விட்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

ஓரிருநாள் கழித்து அந்த பெண் வீட்டுவழியே ஜீப் செல்ல, ஜீப்பை அந்த பெண்ணின் வீட்டுமுன்பு நிறுத்தினார்.

அந்த பெண் வீட்டு கதவை “டொக்…டொக்…டொக்“என்று கதவை தட்டினார். சிறிது நேரம் கழித்து, கதவை முழுவதும் திறக்காமல் கால்வாசி திறந்து எட்டிப்பார்த்தாள் அவள்.

“இன்ஸ்பெக்டர் ஸாரா ! எனக்கு ரொம்ப பயமா இருக்கு நீங்கதான் எனக்கு பாதுகாப்பு தரணும்” என்றாள்.

“எவ்வளவு நாளா ஒன்னைய பாலோ பண்றாங்க ? ஒனக்கு எதிரிகள் யாராச்சிலும் இருக்காங்களா ? ஒனக்கு யார் மேலாவது சந்தேகமிருக்கிறதா ? என்று குடைய ஆரம்பித்தார்.

“ஆறுமாசமா என்னைய பாலோ பண்றா மாதிரி இருக்குது இன்ஸ்பெக்டர், நானும் அலட்சியமா இருந்திட்டேன், எனக்கு எதிர்வீட்டு டேவிட் மேலே சந்தேகம், அவன்தான் என்னைய மாடியிலேயிருந்து வெறிச்சு பார்த்துகிட்டே இருப்பான்,அவனொட முழுமுகத்தைக் கூட இதுவரை பார்த்த்தேயில்லை, நானும் அவனை அடையாளம் பார்க்கணும்ன்னு முயற்சி செய்தேன், இன்னைவரைக்கும் என் கண்ணில மாட்டவில்லை அந்த ராஸ்கல்… ஆனா, இப்போ வெறிச்சு பார்க்காமல் பாலோ பன்றான்னு தோணுது” என்றாள்.

சரி..சரி நான் விசாரிக்கிறேன் என்று எதிர்வீட்டுக்கு கிளம்பினார் இன்ஸ்பெக்டர்.

“எதிர் வீட்டு கதவின் காலிங் பெல்லை அழுத்த…. வெளியே எட்டிப்பார்த்தது ஒரு பெண் உருவம்.

“இன்ஸ்பெக்டரா ? அதிர்ந்தாள்

“இங்க யாரும்மா டேவிட் என்று கேட்டவுடன் முகத்தில் கூடுதல் அதிர்ச்சியைக் காண்பித்தாள்.

“என் புருஷன்தான்” இன்ஸ்பெக்டர், அவருக்கு என்ன ஆச்சு ? பதட்டப்பட்டாள்.

“நீ பயப்படுறாமாதிரி இல்லே, ஒன் புருஷன் மேல கம்ப்ளையின்ட், அதாவது, எதிர்வீட்டுல இருக்கிற சுஷ்மாவை, டேவிட் பாலோ பண்றதா சந்தேகப் படறா, அதான் விசாரிக்கலாமன்னு வந்திருக்கேன்” என்றார்

“என்ன இன்ஸ்பெக்டர், என் புருஷன் டேவிட் வெளிநாட்டுக்கு போய் ஒரு வருஷமாச்சு, இந்த மாசம்தான் வறேன்ன்னு சொல்லியிருக்காரு, அதெப்படி என் புருஷன் சுஷ்மாவை பாலோ பண்ணமுடியும்” என கேள்வி எழப்பினாள்.

கேள்வியின் நியாயம் புரிந்தது இன்ஸ்பெக்டருக்கு, இருந்தாலும், போலீஸ் வேலையில் “சந்தேகம்தான்” பிரதானம் அதை விட்டுவிட்டால் எல்லோரும் நல்லவர் என்று நம்பினால் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்று யோசித்து கொண்டே ஸ்டேஷனுக்கு திரும்பினார்.

குழப்பத்திலேயே ஸ்டேஷனில் வேலை பார்த்து கொண்டிருக்க, அலைபேசி ஒலித்தது.

“ஹலோ, நான் லோகேஷ் பேசறேன், குரல் கேட்க, நான் ராஜேஸ்வரன் பேசறேன் குரல்கொடுத்து விட்டு …“இன்னாப்பா லோகேஷ், நீ பெரிய சைக்கிரியாரிஸ்ட் ஆயிட்டு வெளிநாடு போயிட்டே, எப்போ ஊருக்கு வருவேன்ன்னு கேட்க….நான் ஊர்லேதான் இருக்கேன், ஈவினிங் ஓட்டல் ரோலக்ஸ்-ல மீட் பண்றோம்” என்றார் பால்ய நண்பனான டாக்டர் லோகேஷ்.

ரெஸ்ட்ராண்டில் காபி சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

திடிரென்று கூச்சல் கேட்டது. “அடேய், நீ, என்னைய எதுக்குடா பாலோ பண்ணி டார்ச்சர் கொடுக்கிற, போலீஸ்ல கம்ப்ளையின்ட் கொடுத்திருக்கிறேன்” காட்டுக்கத்தலாய் பெண் குரல்.

இன்ஸ்பெக்டரும், டாக்டரும் போய் பார்த்தார்கள். ஆங்கே, ஸ்டேஷனில் கம்ப்ளையின்ட் கொடுத்த சுஷ்மா.

“ஸார், இப்ப கூட பாலோ பண்ணி வந்திருக்கான், சத்தம் போட்டவுடன் ஆளைக் காணோம், இங்கதான் எங்கனாச்சிலும் இருப்பான் பிடிச்சுடுங்க” என்றாள். அங்கு யாருமே சந்தேகப்படும்படி இல்லை.

இன்ஸ்பெக்டர், டாக்டரை பார்க்க, கண்களாலேயே, ஏதோ சொன்னார் டாக்டர்.

இன்ஸ்பெக்டருக்கு புரிந்த து. “சரிம்மா, நீ பத்திரமா வீட்டுக்கு போ, ஒன் பின்னாலேயே நான் ஜீப்பில வருகிறேன்” என வழியனுப்பி வைத்தார்.

ஜீப்பில்…. இன்ஸ்பெக்டரும், டாக்டரும். “என்ன லோகேஷ், இந்த கேஸ் விசித்திரமா இருக்கே, ஒங்கிட்டே வர்ற கேஸா இல்லே, ஸ்டேஷனுக்கு வர்ற கேஸா, எப்படித்தான் தீர்க்க போறேனோ புரியல” என்றார் இன்ஸ்பெக்டரஃ.

“நாம ரெண்டு பேருமே பிரண்டுதானே, இந்த கேஸை ஆளுக்கு பாதியா பிரிச்சுக்கலாம் என்றார் டாக்டர்“

அடே, லோகேஷ் இது என்ன ? சொத்தா பிரிக்கிறதுக்கு, அப்படியெல்லாம் பிரிக்க முடியாது, ஐடியா மட்டும் கொடு மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்றார்

“பழைய கைதிகள்ல டேவிட்டுன்னு யாராச்சிலும் இருக்காங்களா பாரு, இருந்தா, அவனை, அந்த பொண்ணை பாலோ பண்ண சொல்லு, பிரச்சினை தன்னால தீர்ந்திடும்” என்றார் டாக்டர்.

இன்னாப்பா, கம்ப்ளையிண்டே பாலோ பண்றதுதான், ஒரு ஆளு பாலோ பண்றான்னு கம்ப்ளையிண்ட், இன்னொரு ஆளுமா ? கேட்க. நான் சொல்றத நம்பு பிரச்சினை தன்னால தீர்ந்திடும் என்றார்.

“ பழைய கைதிகளின் விவரத்தை தேடியபோது, டேவிட் என்பவன் விவரம் தட்டுப்பட்டது. அவனைக் கூப்பிட்டு இன்ஸ்பெக்டர் விவரம் சொன்னார்.

“ஸார், முன்னே மாதிரில்லாம் இல்லே ஸார், ஜெயில்ல இருந்தப்ப கூடஇருக்கிற கைதிகளுக்கு முடிவெட்டி விட்டிருந்தேன், இப்போ அதையே தொழிலா செஞ்சு குடும்பத்தோட வாழ்ந்திட்டிருக்கேன், தப்புதண்டாவுக்கெல்லாம் போறதில்லே… “திரும்பவும்…இழுத்தான்.

“ இப்போ ஓரு பெண்ணுக்கு உதவி செய்றதுக்குத்தான் இந்த ஏற்பாடு, அதனால பாதிப்பு ஏதும் ஏற்படாது, நான் பொறுப்பென்று உத்திரவாதமளித்தார்.

சுஷ்மா கடைத்தெருவிற்கு போனாள், ….அங்கே.. டேவிட், கோவிலுக்கு போனால், டேவிட், எங்கு போனாலும் டேவிட் பின் தொடர்ந்தான்.

ஒரு நாள் தோழிகளுடன் தியேட்டருக்குள் நுழைந்தாள்…அங்கே டேவிட்….அதிர்ச்சி அவளுக்கு …அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்….“டேவிட்டை போலீஸ் படை சூழ்ந்து கொண்டது“

“ஏன்டா, ஒரு பொண்ணை இப்படியா பாலோ பண்ணி டார்ச்சர் கொடுப்பே, ஏறுடா ஜீப்புல” மிரட்டி ஏறச்சொன்னார். டேவிட்டும் மிரண்டபடியே ஜீப்பில் ஏறினான்.

“ஏம்மா சுஷ்மா, நீ முன்னாலே ஸ்டேஷனுக்கு போய் காத்திரு, நாங்க வந்திடுறோம்“ என்றார்.

ஸ்டேஷனில், ஸார், ரொம்ப நன்றி, ஆறு மாசமா பாலோ பண்ணி டார்ச்சர் பண்ண இவனுக்கு தண்டனை வாங்கி கொடுங்க, “என்றாள்.

“இனிமே யாரும் பாலோ பண்ண மாட்டாங்க, அதான் பிடிச்சட்டும்ல, நீ புறப்படு தைரியமா இரு என்று வழியனுப்பினார்.

சுஷ்மா, வெளியே போனபின்… “ஏட்டய்யா, டேவிட்டை வெளியே விடுங்க” என்றார்.

டேவிட்டின் கரங்களைக் குலுக்கி, “ ஒரு பெண்ணோட மனஉளைச்சல போக்கிறதுக்கு உதவி செய்திருக்கே, ஒனக்கு அந்த ஜீஸ்ஸ்ஸின் கருணைக் கிடைக்குமென்றார்.

அந்த நிழல் மனிதன் திருப்தியாக வீட்டுக்கு போனான்.

Print Friendly, PDF & Email

1 thought on “நிழல் மனிதன்

  1. தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாக்குகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *