கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 8,047 
 

அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம் முடிந்தது. சோர்ந்து போன அவன் முகம் க்ளோஸ் அப்பில் வர ‘இவன் போன்றோரின் பயணங்களுக்கு முடிவில்லை’ என்ற வாசகத்துடன் திரை ஒளிர்ந்து இருண்டது.

அந்த ‘பிரிவியு தியேட்டரி’ன் விளக்குகள் உயிர் பெற வெளிச்சம் பரவியது.

கதிரவன் ஆவலுடன் அந்த படத்தை பார்க்க வந்திருந்த அந்த இளைஞன் மற்றும் அவனுடன் இருந்த இரண்டு நபர்களின் முகத்தை பார்த்தான்.  குறிப்பாக நடுவில் பணக்கார செழிப்பும், அலட்சியமும் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த அந்த இளைஞன் முகத்தை.

கதிரவனுடன் அந்த படத்தை உருவாக்கியவர்கள், கதாநாயகனாக நடித்த அந்த புது இளைஞன் எல்லோரும் அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து கதிரவனை சூழ்ந்து கொண்டனர்.

‘ஐ’ம் க்ருபா ..படம் தொடங்கிய பின் வந்ததால் என்னை சரியாக அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை.’ என்று கதிரவனை பார்த்து கை நீட்டிக்குலுக்கினான் அந்த நடு இளைஞன்.

கதிரவன் அவன் முகத்தை ஆவலுடன் பார்த்து ‘ ரொம்ப நன்றி சார், படம் எப்படி வந்திருக்கு?’ என்று கேட்டான்.

‘வெல்..ஒரு காலத்தில் பண்ணையார்கள், பணக்காரர்கள் வில்லன்களாக இருந்தாங்க..இந்த காலத்து வில்லன்கள் எல்லாம் பெரும்பாலும் அரசியல் வாதிகள் ஆயிட்டாங்க..அப்படி ஒரு பார்முலா வந்து விட்டது..இல்ல?’ என்று சொல்லி சிரித்தான் கிருபா. .

அவனுடன் இருந்த மற்ற இருவரும் கிருபாவுடன் சேர்ந்து சிரித்தார்கள். கதிரவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவல்லை. இருந்தாலும், தானும் தன பங்குக்கு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான். தொடர்ந்து ‘மக்கள் அதைத்தானுங்க எதிர்பாக்கறாங்க’ என்றான்.

‘தோடா..அவங்க படத்தில கவர்ச்சியைக்கூடத்தான் எதிர்பாக்கறாங்க.. இந்த படத்தில் அந்த ஹீரோயினுக்கு வேலையே இல்லையே?’ என்றான் கிருபா.

கதிரவன் ‘கதை கொஞ்சம் சீரியஸ் ஆக இருந்ததாலே காதல் காட்சிகளில் அவ்வளவு கவனம் செலுத்தலீங்க..இது காதல் கதை இல்லைங்களே’ என்றான்.

‘அப்படி இல்லை மிஸ்டர் கதிரவன்..நம்ம மக்களுக்கு எல்லாத்தயுமே சரி விகிதத்தில் கலந்து தரணும்..அப்பத்தான் ரசிப்பாங்க..’ என்றான் கிருபா. கூட இருந்த இரண்டு பேரும் பலமாக தலையாட்டினார்கள்.

‘சரியான ஜால்ராக்கள்’ என்று நினைத்து கொண்ட கதிரவன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நின்றான். பிறகு, ‘படம் உங்களுக்கு பிடிச்சிருக்கு இல்லைங்க?’ என்றான் தயக்கத்துடன்.

‘ம்..ம்..இருக்கு..ஆனால், நான் இந்த படத்தை ‘டிஸ்டிரிபியூட்’ பண்ணனும்னு நீங்க விரும்பினா சில பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்…சரியா?’ என்று இழுத்தான் கிருபா.

கதிரவனுக்கு சற்று திடுக்கிட்டது. இருந்தாலும், படம் முடிந்து வெறும் ரீ ரெகார்டிங் மட்டுமே இருக்கும் நிலையில் என்ன மாற்றங்கள் எங்கே செய்வது என்று புரியவில்லை.

‘சார்’ என்றான் மையமாக.

‘ஆமாம் மிஸ்டர் கதிரவன். இரண்டு கனவு காட்சி டூயட்டுகள் வேணும். அப்புறம் அந்த ஹீரோயின் புதுமுகம்தானே. உடை விஷயத்தில் இன்னும் கொஞ்சம் தாராளமாக இருந்திருக்கலாமே? ஏன் நீங்க ஒரு காதல் பாட்டு கூட சேர்க்கல இந்த படத்தில்..? என்றான்.

கதிரவன் ஒரு கணம் திகைத்தான். பின்னர், தன்னை சமாளித்துக்கொண்டு ‘இது ஒரு போலீஸ் அதிகாரி பற்றின சீரியஸ் சப்ஜக்ட் கரத்தாலே காதல் டூயட் இதுக்கல்லாம் அவ்வளவு முக்யத்துவம் தரலீங்க..’ என்றான்.

‘இத பார்ற..போலீஸ் அதிகாரின்ன காதலிக்க மாட்டாரா? சொல்லுங்க..’ என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய ஜோக் அடித்தது போல் கிருபா கப கப என்று சிரித்தான். அந்த ஜால்ராக்களும் உடன் சிரித்தன.

கதிரவனுக்கு உள்ளுக்குள் ஒரு தீ கிளம்பினாற்போல் இருந்தது. பேசாமல் இருப்பதுதான் உத்தமம் என்று தோன்றியது.

‘அப்புறம் இன்னொன்று.. அரசியல்வாதிகள், மந்திரிகள் செய்வதை எல்லாம் ரொம்ப புட்டு புட்டு வச்சிரிக்கீங்க..அதையும் கொஞ்சம் கம்மி பண்ணனும். இதெல்லாம் போதாது என்று கடைசியில் அந்த ஹீரோ சாவறத்துக்கு முன்னாலே பேசற டயலாகும் காட்சியும் ரொம்ப நீளம். ஹீரோ சாவக்கூடாது. அந்த சீனையும் நீங்க எடிட் பண்ணனும். இதெல்லாம் பண்ணிட்டு என்னை கூப்பிட்டு அந்த அந்த கட்சிகளை மட்டும் போட்டுக்காமிங்க..நான் வாங்கறத பத்தி யோசிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு வெளியேறினான் கிருபா.

கதிரவனின் ‘தாங்க்ஸ்’ கூட அவன் செவிகளில் விழுந்திருக்குமா  என்று தெரியவில்லை.

கிருபாவை அழைத்து வந்து கதிரவனுக்கு உதவ நினைத்த நண்பர் அவரை வழி அனுப்பி விட்டு தியேட்டருக்குள் வந்த போது கதிரவன் ஒருத்தரிடமும் பேசாமல் ஒரு நாற்காலியில் யோசனையில் ஆழ்ந்தவனாய் உட்கார்ந்திருந்தான்.

ஹீரோவாக நடித்த அந்த கட்டுமஸ்தான புதுமுகம் குமரன் நகத்தை கடித்தபடி ஓர் மூலையில் நின்றுகொண்டிருந்தான். கிருபாவை வழி அனுப்பி விட்டு வந்த அந்த நண்பர் கைலாசம் கதிரவன் அருகே இருந்த ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

‘கதிர்..நான் ரொம்ப பிரயாசைப்பட்டு கிருபா சாரை அழைச்சிட்டு வந்திருக்கேன் தெரியுமா? அவர் சொன்னபடி திருத்தங்கள் செய்தால் அவர் டிஸ்டிரிபியூட் பண்ண ரெடியாக இருக்கார்..என்ன சொல்றே?’ என்றார்.

கதிரவன் ‘ம்ம்,..’ என்றானே தவிர பதில் பேசவில்லை.

‘என்ன கதிர்.. இப்ப பண்ணப்போறே? என் நிலம் வித்த பணம், உன் நிலம் வித்த காசு, ஹீரோ குமரனின் பணம் எல்லாம் இந்த புது படத்தில் முடங்கி கிடக்கு. இந்த பார்ட்டி நல்ல பசையான பார்ட்டி. முதல் தடவய சினி பீல்டுக்கு வராங்க..அப்படி இப்படி அட்ஜஸ் பண்ணி ஒரு நல்ல விலைக்கு தள்ளி விடலாம்..ஆமாம்..’ என்றார் கைலாசம்.

‘என்ன அண்ணே புரியாம பேசறீங்க..அவர் சொல்ற மாற்றம் எல்லாம் பண்ணனும்னா அத்தனை சுலபம் இல்லையே?’

‘என்ன சுலபம் இல்ல? ‘ என்ற கைலாசம் சட் என்று அதன் பொருள் உணர்ந்தவராய் ‘அட ஆமாம்.. இன்னும் ரண்டு டூயட் சேர்க்கணும், கவர்ச்சி காட்டனும்கறாரு..அந்த புது ஹீரோயின் ஒப்புத்துக்குமா..இல்ல மேல பணம் கேக்குமா?’ என்றார்.

கதிரவன் கைலாசத்தை பார்த்து விழித்தான்.

‘புரியறதில்ல..அந்த பொண்ணு கவர்ச்சி எல்லாம் காட்டுமான்னு தெரியல்ல. தவிர இந்த படத்தில எப்படிப்பா ரண்டு பாட்டை சேக்கிறது? ஹீரோ சாவக்கூடாது, பொழச்சிக்கனும்கறாரு..சரி. அதாவது செய்துடலாம். கடைசி காட்சி நீளத்தை குறைக்கலாம். அரசியல்வாதிகளை சாடிய டைலாக் கொஞ்சம் கட் பண்ண சொல்றாரு..ம் ..’

கைலாசமும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சற்று நேரம் ஜடம் போல் அமர்ந்திருந்தார்.

‘டேய் கதிர். இவர் யாரு தெரியுமா? நம்ம ஸ்டேட் மினிஸ்டர் ஒருத்தர் பைய்யன்..அதான் ராஜா சிம்மன்…அவரு பிள்ளைப்பா’ என்றான்.

‘என்னது? ராஜ சிம்மன் பையனா? அவருக்கு இரண்டு பொண்ணுங்க இல்ல?’ என்ற கதிரவன்.

‘அட..இது வேற வொய்ப் பிள்ளையப்பா..கைல செம காசு’ என்றார் கைலாசம்.

‘அது சரி.. அதான் அரசியல்வாதிகளை பற்றிய வசனங்களின் நெடியை கொறைக்கச்சொல்றாரு’ என்ற கதிரவன்.

அதற்குள் ஹீரோவாக நடித்த குமரன் இவர்கள் அருகில் வந்து நின்று

‘என்னங்க..நான் இந்த ரோலுக்காக ஸ்பெஷல் கேர் எடுத்து சிக்ஸ் பேக் கொண்டாந்தேன்.’ என்று புஜத்தை மடக்கி காட்டினான்.

‘அட போப்பா..சிக்ஸ் பேக்காவது..ஹாட் பேக்காவது? அவர் இப்ப நடிகையோட பாடிய காட்ட சொல்றாரு..உன் பாடி யாருக்கு வேணும்? நீ வேற..’ என்றான் கதிரவன் வெறுப்போடு.

‘சரி..பாக்கலாம். நான் யோசனை பண்றேன். பாட்டுக்கு அந்த மியூசிக் டைரக்டர் கிட்ட பேசணும்..அந்த நடிகை கிட்ட டூயட் பத்தி கேக்கிறேன்’ என்று சற்று வெறுப்போடு சொல்லி விட்டுக்கிளம்பினான் கதிரவன்.

ஆறு சினிமா ஆசை கொண்ட இளைஞர்கள் தங்கள் முதலீடுகளை கொட்டி தயாரித்த அந்த படத்தை வாங்குவர் இல்லாததால் இன்னும் ஆறு மாசம் கிடப்பில் கிடந்தது.

****

ஆனால், அடுத்த  மூன்று மாதங்களில் பிரபல ஹீரோ ரிஷியும், கவர்ச்சி ஹீரோயின் அமீதா மற்றும் லேகா இருவரும் நடிக்க ‘சரித்திரம்’ என்ற பெயரில் இதே சாயலில் ஒரு கதை பிரபல இயக்குனர் ஒருவரால் இயக்கப்பட்டு துரிதமாக தயாரிக்கப்பட்டு வெளி வந்து தமிழ் நாட்டில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தை தயாரித்து விநியோகித்திருப்பவர் கிருபா. அதில் இரண்டு டூயட். ஒன்றில் படு கவர்ச்சி. இன்னொன்று குத்துப்பாட்டு. அந்த பிரபல ஹீரோ அரசியலில் உள்ளே நுழைய நேரம் பார்த்துக்கொண்டிருப்பவர்.

கதிரவன் அண்ட் கோ தயாரித்த அவர்கள் படத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் கை நஷ்டத்தை ஈடு செய்ய பல்வேறு வேலைகளில் அதே திரைப்பட துறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கைலாசம் வேறொரு தயாரிப்பு கம்பெனியில் பி ஆர் ஓ வாக வேலை செய்கிறார்.

கதிரவன் மற்றொரு பிரபல இயக்குனரிடம் நான்காவது உதவியாளராக ‘கன்டின்யூடி’ பார்க்கிறான்.

‘சிக்ஸ் பாக்’ குமரன் ‘ஸ்டன்ட்’ காட்சிகளில் ஹீரோவிடம் அடி வாங்கும் அடியாட்களில் ஒருவனாக பல படங்களில் தலை காட்டிகொண்டிருக்கிறான்.

கதாநாயகியாக நடித்த அந்த பெண்ணுக்கு இப்போது டெலிவிஷன் சீரியலில் நல்ல வரவேற்பு.

ஆனால், எல்லோருக்குமே என்றாவது ஒரு நாள் வெள்ளித்திரையில் பிரகாசிப்போம் என்ற நம்பிக்கை இழை மனசின் ஏதோவொரு மூலையில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

‘நாளை..’ என்ற புதிருக்கு விடை கிடைக்காத வாழ்க்கைதான் சுவாரசியம். அதிலும் சினிமாவிலும், அரசியலிலும் ‘நாளை’ என்பது இன்னொரு நம்பிக்கைக்குரிய நாள்.

அந்த நாட்களுக்ககத்தான் மேலே சொன்ன நால்வரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *