சிறுமி ஜெலினாவிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து பக்கத்து கடைக்குச் சென்று வாஷிங் சோப்பும் ஷாம்பும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ஜமுனா.
சரிம்மா! என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள். கடைக்காரரிடம் வாஷிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள் ஜெலினா.
மொத்தம் ஒன்பது ரூபா ஆச்சு. மீதி ஒரு ரூபாய்க்கு சில்லரை இல்ல, அதுக்கு ஒரு சாக்லெட் வாங்கிக்க! என்றார் கடைக்காரர்.
எனக்கு சாக்லெட் வேணாம் பாக்கி ஒரு ரூபாதான் வேணும்!
அடம்பிடித்தாள் ஜெலினா. ஏம்மா, சாக்லெட் பிடிக்கதா?
சாக்லெட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ உங்கிட்ட சில்லரை இல்லையின்னு நான் சாக்லெட் வாங்கினா என் அம்மா நம்பமாட்டாங்க. நான்தான்
வேணும்னு மீதி காசுக்கு சாக்லெட் வாங்கினதா நினைப்பாங்க!-
இந்த சின்ன வயதில் அவளுக்கிருந்த நாணயத்தைப் பார்த்து அசந்தபடியே கல்லாப்பெட்டியில் தேடி ஒரு ரூபாய் நாணயத்தை தந்தார் கடைக்காரர்.
– ஆகஸ்ட் 2011