கதையாசிரியர்: ,
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 23,953 
 

வேலை கிடைக்காத காரணத்தால், மன உளைச்சலில் தவித்த, சுந்தர், அம்மா ராஜம் கொடுத்த காபியை குடித்தவாறே, ”இன்னிக்கு போற இடத்திலேயாவது, ‘இன்டர்வியூ’வில் தேர்ச்சி பெற்று, வேலையில் சேரணும்ன்னு நினைக்கிறேம்மா,” என்றான்.

”நிச்சயம் நீ நினைக்கிறது நடக்கும்.”

”கடவுள்கிட்ட வேண்டிக்கோம்மா,” குழந்தை மாதிரி சொன்னான், சுந்தர்.

”நான் வேண்டாத தெய்வம் இல்லடா, சுந்தர்… ஆனாலும், கடவுள் இன்னும் கண்ணை திறக்க மாட்டேங்கிறாருடா,” என்றாள், ராஜம்.

கணவர் வேதாசலத்திற்கு காபியை கொடுத்தவள், ”ஏங்க, ஜெர்மனியிலிருந்து வந்து, ரெண்டு வருஷம் ஆச்சு… நம் சுந்தருக்கு வேலை கிடைக்கலியே. யாருகிட்டயாவது சிபாரிசு பண்ணி ஏதாவது வேலை வாங்கி கொடுக்கலாமே என்ற எண்ணம் இருக்கா…

”பணி ஓய்வு ஆனாலும் என்ன, ஏற்கனவே பழகிய நண்பர்கள்கிட்ட சொல்லலாமே… எப்ப கேட்டாலும், ‘சிபாரிசுங்கற வார்த்தையே எனக்கு பிடிக்காது; அவங்க சொந்த முயற்சியிலே நின்னு போராடி ஜெயிக்கணும்’ங்கற வழக்கமான பல்லவியை தானே சொல்லிட்டு வர்றீங்க…

”ஊர் உலகத்துல, சிபாரிசு இருந்தா தான், வேலை கிடைக்கும்ன்னு நிலைமை இருக்கறப்ப, ஒங்க பழைய, எம்.டி.,கிட்ட சொல்லக் கூடாதா…

”காலையிலும், மாலையிலும் நடை பயணம் போக வேண்டியது, பேப்பர் படிக்க வேண்டியது, சாப்பிட வேண்டியது, மொபைல் போனில், ‘யூ டியூப், பேஸ்புக், வாட்ஸ் – ஆப்’ பார்த்து பொழுத கழிக்கிறதே பொழப்பா போச்சு… பையனுக்கு வேலை கிடைக்கல… பொண்ணுக்கு வரன் அமையலைங்கற கவலை இருக்கா…

”ஆறு மாசமா, திருமண தகவல் மையத்திலும், தரகர் மூலமாவும், தெரிஞ்சவங்ககிட்டே சொல்லியும், பாரதிக்கு வரன் பார்த்துட்டு இருக்கேன். ஒண்ணும் சரியா அமையலையே,” என, புலம்பினாள்.

”இத பாரு ராஜம், தேவையில்லாம பேசி, உன்னுடைய, ‘எனர்ஜி’யை, ‘வேஸ்ட்’ பண்ணிட்டு அப்புறமா, ‘பீபீ’ அதிகமாயிடுச்சுன்னு புலம்பாதே. நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ, சுந்தருக்கு, கூடிய சீக்கிரம் நல்ல வேலை கிடைச்சுடும்… இவ்வளவு நாள் அவனுக்கு வேலை கிடைக்காததற்கு காரணம், அவன் நேரம் சரியில்லாம போனது தான்.”

”ஒங்க ஜோசியத்தை கொண்டு குப்பையிலே போடுங்க. எப்ப பார்த்தாலும், நேரம் சரியில்லைன்னு சொல்லிக்கிட்டு,” என்று கோபமாக கத்தினாள், ராஜம்.

”அம்மா – அப்பா, இங்க பாருங்க… என் பிரச்னையை மையமா வெச்சு, நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க. பாரதி கல்யாணம் பத்திய கவலையை விடுங்க… ஜெர்மனியில, எம்.எஸ்., முடிச்ச கையோடு, நல்ல வேலையில்தானே இருந்தேன்.

”எங்க கம்பெனி மட்டுமல்ல, நாடு பூராவும் வேலையில்லா திண்டாட்டம் தான். அதுவும், அங்கு, அவங்க நாட்டு பட்டதாரிகளுக்கு தான் முன்னுரிமை. அப்புறம் தான், மத்த நாட்டுக்கார பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்…

”அது, அவங்க கொள்கை. நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க. இரண்டு ஆண்டுகளாக சம்பாதிச்ச பணத்தில தான், இந்த வீடு கட்டியிருக்கேன். கவலைப்படாம இரும்மா,” என, சமாதானம் சொன்னான், சுந்தர்.

குளித்து தயாராகி, வண்டியை எடுத்து கிளம்பிய சுந்தரிடம், ”டிபன் சாப்பிட்டு போடா,” என்றாள்.

”வேண்டாம்மா… எனக்கு பசிக்கலை… போயிட்டு வரேன்,” என்று கிளம்பினான்.

காலம் இப்படியே போய் விடுமோ என்ற அச்சம், சுந்தருக்கு மட்டுமல்ல, ராஜத்திற்கும் மனதில் அரிக்க ஆரம்பித்தது.

இந்தியாவிற்கு திரும்பி வந்ததிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சுந்தர் போடாத விண்ணப்பம் இல்லை, போகாத, ‘இன்டர்வியூ’ கிடையாது.

எங்கே, ‘இன்டர்வியூ’ போனாலும், ‘நீங்க படிச்சிருக்கிற படிப்பு, ‘ஓவர் குவாலிபிகேஷன்’ சார். எங்களுக்கு, ‘செட்’ ஆகாது…’ என்றும், சில இடங்களில், ‘சொல்லி அனுப்பறோம்…’ என்றும், சில கம்பெனிகளில், ‘ஷார்ட் லிஸ்ட்ல வெச்சுருக்கோம்… வி வில் கால் யூ பேக்…’ என்றும் கூறினர்.

இது மாதிரியான வசனங்களை கேட்டு, புளித்து போயிருந்தது, சுந்தருக்கு.

அயல் நாட்டில், யாருடைய கம்பெனிக்கோ, உடலையும், உள்ளத்தையும் உருக்கி, வேளா வேளைக்கு சாப்பிட முடியாமல், உண்மையாக தான் உழைத்தான், சுந்தர்.
ஜெர்மன் நாட்டின் கலாசாரமும், பழக்க வழக்கங்களும், பூத்துக் குலுங்கும் மரங்களின் நடுவே அவனுடைய ஆபீஸ் இருந்தது. நுழையும்போதே உற்சாகமாக தான் இருந்தான்.

எதிலும் நேர்மையும், ஈடுபாட்டையும் காண்பிக்கும் அந்த நாட்டு மக்களோடு பழகியதால் என்னவோ, தன்னையும் அவ்வாறே வளர்த்துக் கொண்டான். ஒரு, விஷயத்தை பற்றி அறிந்து கொள்ள, அதற்கான குறிப்புகளை தேடி, நல்ல, ‘ரிசல்ட்’ கொடுப்பவன். தான் கற்றதை, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் மன பக்குவம் நிறையவே இருந்தது அவனிடம்.

‘பாலிசி மேட்டர்’ என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பி விட்டது, அந்த நிர்வாகம். அனுபவமும், நன்னடத்தை சான்றிதழ் இருந்தும், ஒரு பிரயோஜனமில்லை, ‘ஓவர் குவாலிபிகேஷன்’ என்கிற, வசனம் தான் எப்போதும்.

‘என்ன உலகம் இது… நேர்மைக்கும், திறமைக்கும் மதிப்பில்லை. எங்கு போனாலும் சிபாரிசு தான். இப்படி சிபாரிசால் மட்டுமே வேலை வாங்கிக் கொள்ளும் நபர்கள் மத்தியில், நான் ஒரு செல்லாக்காசாக ஆகி விட்டேனே…’ என்று, மனதுக்குள் புலம்பினான்.

தான் உழைக்க தயாராக இருந்தும், வாய்ப்பே கிடைக்காத வாழ்க்கை.

காலையில், தன் பெற்றோரிடம், ‘பாரதி கல்யாணத்தை பற்றி, கவலைப்படாதீங்க…’ என்று சொல்லி இருந்தாலும், எப்படி பணம் புரட்டி கல்யாண செலவை சமாளிக்க போறோம் என்ற மனக்கவலை இருக்கதான் செய்தது.

அந்த பிரமாண்ட கட்டடத்தின் ஏழாவது மாடியில் உள்ளே நுழைந்து, வரவேற்பாளினியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அடுத்த, 10வது நிமிடம் அழைப்பு வந்தது, எச்.ஆரிடமிருந்து.

எச்.ஆர்., மேடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த விதம், அவர்களுக்கு பிடித்துள்ளதை தெரிந்து கொண்டான்.

”ஓ.கே., சுந்தர்… உங்க, ‘புரபைல்’ பிடிச்சிருக்கு… ‘ஷார்ட் லிஸ்ட்’லே வெச்சிருக்கோம்… இன்னும் இரண்டொரு நாளில், வி வில் கால் யூ பேக்,” என்றாள்.

வழக்கமான, வசனம் தானே இது. வெறுப்புடன் வெளியே வந்து, ‘லிப்ட்’டை விட்டு இறங்கினான். அப்போது, ‘லிப்ட்’டில் ஏற வந்த நபர், சுந்தர் மீது இடிக்க, ‘சாரி சார்… கவனிக்கலை…’ என்று, இருவரும் ஒரே நேரத்தில் கூறினர். இடித்த நபரை பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்த வேளையில், ”நீங்க, நீ சுந்தர் தானே!” என்றான், அவன்.

”நீங்க, நீ ரமேஷ் தானே… எவ்வளவு நாள் ஆச்சு. வா, இப்படி உட்கார்ந்து பேசலாம்…’ என்றான், சுந்தர்.

ஊரில் விளையாடிய கிரிக்கெட்டிலிருந்து, பிளஸ் 2 முடித்து பள்ளியை விட்டு வந்தது, கூட படித்த தோழியிடம், ரமேஷ், ‘லவ்’வை சொல்லி, அடி வாங்கியது வரைக்கும் தொடர்ந்தது.

”சுந்தர்… நீ இன்ஜினியரிங் முடிச்சு, பிறகு ஜெர்மனி போயிட்டதா ஊர்ல சொன்னாங்க… ஆமாம், இப்ப என்ன செய்யறே?”

நடந்ததை முழுவதும் சொன்னபோது, சுந்தர் மீது அனுதாபப்பட்டான், ரமேஷ்.

”என் கதை கிடக்கட்டும், நீ இப்ப என்ன பண்றே?”

”நான், நாய், ‘வாக்கிங் பிசினஸ்’ பண்றேன்.”

”என்ன சொல்ற, ரமேஷ்… கொஞ்சம் விளக்கமா சொல்லு.”

”உனக்கே தெரியும், பிளஸ் 2 முடிச்சதும், நம் நண்பர்கள் எல்லாரும் இன்ஜினியரிங் படிக்க, நான் மட்டும், ‘டிப்ளமோ’ படிக்க வேண்டிய சூழ்நிலை. நானும், என் அப்பாவை கோபித்துக் கொண்டேன். ‘சிபாரிசு பண்ணி, ஏதாவது வேலை வாங்கி கொடுக்க கூடாதா’ன்னு. அப்படி கேட்டதால், ஆத்திரமடைந்த அவர், ‘வீட்டை விட்டு வெளியே போ’ன்னு சொன்னதால், சென்னைக்கு வந்து பல வேலைகள் பார்த்தேன்.

”ஒருநாள், பார்க்கில் உட்கார்ந்திருக்கும்போது, பக்கத்து பெஞ்சில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர், மற்றொருவரிடம், ‘வெளியூர் செல்கிறேன்; வருவதற்கு, 15 நாள் ஆகும். அதனால், நாயை, ‘வாக்கிங்’ அழைத்து போக, ஒரு ஆள் வேணும். தெரிஞ்ச ஆளா இருந்தா சொல்லு…’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

”உடனே, நான் சென்று, என்னை அறிமுகப்படுத்தி, நாய்கள் வளர்ப்பை பற்றி நிறைய அனுபவம் உண்டு. கிராமத்தில், என் வீட்டில் நாய்கள் உள்ளன. எனக்கு அந்த வேலையை கொடுக்குமாறு வேண்டினேன்.

”மறுநாளே, அவர் வீட்டிற்கு என்னை வரவழைத்து, நாயை, ‘வாக்கிங்’ அழைத்து போக சம்மதித்தார். அதற்கு சம்பளமாக, 3,000 ரூபாய் பேசினார். இரண்டொரு நாளில், அவருடன், ‘டூர்’ வரும் மற்ற நண்பர்களின் வீட்டு நாய்களை, ‘வாக்கிங்’ அழைத்து போக உதவி செய்தார்.

”காலையில், அரை மணி நேரம்; மாலையில், அரை மணி நேரம், நாய்களுடன், ‘வாக்கிங்!’ மொத்தமா, 15 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. என் மேல் நம்பிக்கை வர ஆரம்பிக்கவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐந்து நாயுடன், ‘வாக்கிங்’ போன நான், இன்று, 500 நாய்களுடன், ‘வாக்கிங் பிசினஸ்’ பண்ணுகிறேன்.

”கார்பரேட் ஸ்டைலில், ஒவ்வொரு நாய்க்கும் அடையாள அட்டை, அதற்கு வேண்டிய பிஸ்கட் மற்றும் பயிற்சி. இதற்காக, ஐந்து நாய்களுக்கு, ஒரு பயிற்சியாளரை நியமித்து, மாதம், 6,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறேன். விடுமுறை எடுத்தால், மாற்று ஆட்களை தயாராக வைத்திருக்கேன்.

”இது ஒரு பகுதி நேர வேலைங்கிறதால, நிறைய கல்லுாரி மாணவர்கள், தங்களின் செலவுக்கு இந்த வேலையை செஞ்சு சம்பாதிக்கிறாங்க… தினமும், காரை எடுத்து போய், ஒவ்வொரு ஏரியாவையும், ‘மானிட்டர்’ பண்றேன். சமீபத்தில், புறநகர் பகுதியில், நாய்களுக்கான, ‘ஹாஸ்டல்’ திறந்திருக்கேன்,” எனக் கூறி முடித்தான், ரமேஷ்.
”என்னது, நாய்களுக்கு, ஹாஸ்டலா,” என, ஆச்சரியத்துடன் கேட்டான், சுந்தர்.

”ஆமாம்… இந்த, ‘ஹாஸ்டல்’ திறக்கறதுக்கு ஊக்கமளித்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், எனக்கு வாய்ப்பு கொடுத்தாரே, அவர் தான்… அவருக்கு ஏற்பட்ட நிலைமை, மற்றவர்களுக்கு வரக்கூடாதுங்கிற காரணத்தினாலேயே, அவர் கையாலேயே இந்த, ‘ஹாஸ்டலை’ திறந்திருக்கேன்.

”நாய் வைத்திருப்போர், ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் வெளியூர் போகும் பட்சத்தில், அவர்கள், எங்கள், ‘ஹாஸ்டலில்’ நாயை அழைத்து வந்து விடுவர்.

”எங்கள் கால்நடை மருத்துவ குழு மூலம், நாய் மட்டுமல்ல, எந்த, ‘பெட்’ பிராணிகளையும் நன்கு சோதித்து, நோய் இருந்தால், அதற்கு மருத்துவ சிகிச்சை கொடுப்போம். அவைகளுக்கு என்று தனியே இட வசதி கொடுத்து, பாதுகாப்போம். வாடிக்கையாளர்களுக்கு பெரிய நிம்மதி; கவலையில்லாமல் இருப்பாங்க… எனக்கும் கணிசமான வருமானம்.”

”வாவ்… எப்படி இது சாத்தியமாச்சு, ரமேஷ்!”

”ஏற்கனவே சொன்ன மாதிரி, உன்ன மாதிரி நிறைய படிச்சவங்களுக்கு வேலை கிடைக்கிறதுல சிரமம் இருக்கறப்போ, ‘டிப்ளமோ’ படிச்ச எனக்கு எப்படி வேலை கிடைக்கும். அப்பா என்னை, ‘தண்டச் சோறு’ என்று திட்டும்போது, ஒவ்வொரு முறையும் குறுகி போவேன்.

”ஆனால், அவர் அப்படி சொன்னதால தான், எனக்கு ரோஷம் உண்டாகி, ‘பார்க்’கில் பெரியவரின் நட்பு கிடைச்சு, இன்னைக்கு, 200 பேருக்கு மேல் வேலை கொடுக்கறேன். இதை தவிர, மாதத்திற்கு ஒருமுறை, பிராட்வேயில் உள்ள, நாய்கள், பறவைகள், முயல்கள் சந்தைக்கு, கால்நடை மருத்துவர் குழுவுடன் போய், தரமான நாய்களை வாங்கி, விற்கிறேன். அதில், கணிசமான லாபம் கிடைக்குது.

”நாங்கள், ‘வாக்கிங்’ அழைத்து போக தேவையான உபகரணங்கள், ‘பெடிகிரே பிஸ்கட்ஸ்’ போன்றவற்றை வைத்து ஒரு கடை திறந்துள்ளேன்.”

”நீ சொல்றதை கேட்க கேட்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு, ரமேஷ்!”

”இத பாரு, சுந்தர்… உன் திறமை என்னவென்று, எனக்கு நல்லாவே தெரியும். உன் ஊதியத்தை நீ, முடிவு பண்ணு. எல்லா அப்பாகளும் இப்படிதான் பேசுவாங்க. ஆனா, அவங்க பேச்சு நமக்கு ஆரம்பத்திலே கசப்பா இருந்தாலும், அது ஒரு, ‘பூஸ்ட்’ மாதிரி… என்னை மாதிரி நீயும் ஜெயிக்கணும்ன்னு, மனப்பூர்வமா நினைக்கிறேன்…

”இந்த தொழிலை இன்னும் விரிவாக்கணும். ஒரு, ‘வெப்சைட்’ உருவாக்கணும். ‘ஆன்லைன் பிசினஸ்’ பண்ணணும். என் கம்பெனியை நிர்வகிக்க, மேலும் விரிவுபடுத்த, உன்ன மாதிரி நண்பன் தேவை. உன்னுடைய திறமைக்கு தகுந்த சம்பளம் கொடுக்க, நான் தயார்.

”இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாய், ‘வாக்கிங் பிசினஸ்’ பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனா, இன்னிக்கு, சென்னையில் புற்றீசல்கள் மாதிரி நிறைய கம்பெனி முளைச்சிருக்கு… அவங்க மத்தியில நாம கட்டாயம் ஜெயிக்கணும்… என்ன சொல்றே,” என்றான்.

”டேய் ரமேஷ்… வாழ்க்கையின், ‘ரியாலிட்டி’யை மிக அருமையா நீ புரிஞ்சது மட்டுமல்ல, எனக்கும் புரிய வெச்சு, என் கண்ணை திறந்திட்ட… உனக்கு தோள் கொடுக்க, நான் தயாரா இருக்கேன்.”

‘நீ என் நண்பேன்டா…’ என, இருவரும் ஆர தழுவ, மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது அவர்களிடத்தில்.

– மார்ச் 2020

Print Friendly, PDF & Email

1 thought on “நண்பேன்டா!

  1. ‘நாய் வாக்கிங்’ பிசினஸ் பற்றி இந்தக் கதையின் மூலம் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார் கதாசிரியர். வழக்கமான தன்னம்பிக்கை ஊட்டும் சிறுகதைகளில் இருந்து சற்றே வித்தியாசமான முறையில் ட்ரெண்டியாக சிந்தித்திருப்பது சிறப்பினும் சிறப்பு.
    கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *