கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 4,976 
 

நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை ‘டொராண்டோ’வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,”அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் “என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருச‌த்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் .

அவன் தரப்பில் ,மனைவி… தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிறவன். ‘இறுதி யுத்தம்’ என‌ சிறிலங்காவில் மனிதப் படுகொலைகள் மோசமாக நடந்த போது எல்லா நாடுகளிலும் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வல்லரசு நாடுகள் பாகிஸ்தானில் காலூன்றியது போல சிறிலங்காவிலும் காலூன்றி விட்டன.நிறைகூடிய குண்டுகள், வகை தொகையின்றி சிதறி வெடிக்கும் குண்டுகளை எல்லாம் சிறிலங்காபடையினர் சரிவர கையாளுமா? என்பதே சந்தேகம், சிறிலங்கா அரசின் அனுமதியில்லாமல் கூட,தன்னிச்சையாகவும் ,போடப்பட்டே இந்த மனிதப் பேரவலம் நடந்தன. ஈழத்ததமிழர்கள் மேலும் அதே பாலஸ்தீனர்களின் தலைவிதி ஒரேயடியாய் கவிந்து விட்டது.

சிறிலங்கா,அவசரகாலச் சட்டத்தையும்,பயங்கரவாதச் சட்டத்தையும் கையில் (ஏற்படுத்திக்) எடுத்துக் கொண்டு இன்னொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களை காலனிநாடுகளைப் போல படுகொலைகளைச் செய்து கொண்டிருந்தது. எல்லா சிறிய நாடுகளிலுமே ‘ஒரினத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழலாம்’என்ற ‘சைக்கோ’ பரவிக் கிடக்கின்றன.அவை,சொந்த நாடற்ற இஸ்ரேலியரைப் போல, மக்களை படுகொலை செய்து அகதிகளாய் விரட்டி அடித்தும் அவர்கள் நிலங்களைப் பறிப்பதும், அவர்களை சிறைகளில் நிரப்புவதும், …என சண்டித்தனங்கள் செய்கின்றன.இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பெரிய நாடுகள்,தடுக்காமல் பெரியநாடுகளே போரை நடத்தியது போன்ற தோற்றம். நைஜிரியா அரசாங்கமே ‘பொக்ககராம் போராட்டக்குழுவிற்கு அமெரிக்காவை ஆயுதங்கள் விற்க வேண்டாம்’என கூறுகிறது.சிறிலங்காவிடம் ‘கொத்துக் குண்டுகளை பாவிக்கும்படி,அமெரிக்கா கூறியதை விக்கிலீக்ஸ் ‘லீக்’ பண்ணியிருக்கிறது. அமெரிக்காவின் வியாபாரமே இரண்டு பக்கமும் ஆயுதங்கள் விற்பது..போலவே இருக்கிறது. எதிர் பக்கமும் இவர்களுடைய …சம்பந்தம் இருந்திருக்கிறது.பொம்மலாட்டத்தில் ஆட்டுவிப்பவது போல இரண்டையும் ஆட்டுவித்திருக்கிறது.இரண்டு உலகப் போர்களிலும் அதிகளவு வியாபாரம் பார்த்தது அமெரிக்கா என்றே சொல்லப்படுகிறது. ‘போர்கள்’ஒரு வகை ‘சூது’ போல. நடைபெறுகின்றன‌. பெரியநாடுகள் உறுதியற்ற நாடுகளில் எல்லாம் சூதாட்டக் காய்களை நகர்த்துகின்றன. அவர்களுக்கு வீடியோ விளையாட்டுப் போல, புதிய புதிய உத்திகளை கண்டு பிடிப்பதில் ஆர்வமாய்யிருக்கிறார்கள்.நீதி,நியாயங்களை எல்லாம் டெக்னொலொஜியால் புறம் தள்ளி விட்டு,ஆட்டம் ஆடுகிறார்கள். எண்ணெய் வார்பது மட்டுமில்லாமல் அரசியல் செய்வதாகவும் மாறிப் போய் இருக்கின்றன.உலகத்தில் அமைதி நிலவ முடியாதது இல்லை. முடியும்! பொறுப்பற்று..காட்டுமிராண்டித் தனமான தன்மைகளால்.தலைவிதியை மாறாமல் அப்படியே நிலவ வைக்கின்றன‌ .

நடேசனும் அந்த ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் பங்குபற்றியிருந்தான். எல்லாமே வீடியோ பண்ணப் பட்டிருக்கலாம் என்ற பயம் ஏற்பட்டிருந்தது. தற்போது அவற்றை வைத்துக் கொண்டு சிறிலங்கா செல்பவர்க்கு வலை விரிக்கப் பட்டிருக்கிறதா? என அப்பப்ப வரும் செய்திகள் மிரட்டுகின்றன. வியாபார உலகத்தில் ,பெரிய நாடுகளின் அனுசரனையுடன் உலக அமைதியைக் காக்க எழுந்த அமைப்பு ஜக்கியநாடுகள்சபை அவ்வளவாக வேலை செய்வதில்லை .அந்த நாடுகளே அச்சபையை பெரிதாக மதிப்பதில்லை. அவர்களுடைய அரசியலுக்காக மட்டுமே அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.உலகயுத்தத்தில் ஈடுபட்டவை, அவற்றில் ‘ஈடுபடாத நாடுகளுக்கும் தாம் பெற்ற மனித துர்ப்பாக்கியத்தை சீரழிவை ஏற்படுத்த வேண்டும்’ என்ற ‘சைக்கோஏற்பட்டு விட்டதோ என்று சந்தேகமாகவே இருக்கிறது.? எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உறுதியற்ற சிறிலங்கா, கொலைவெறியுடன் செயல்படுகிறதா அல்லது இவர்கள் கையில் வீழ்ந்து விட்டதா எனத் தெரியவில்லை. தம்மக்களைக் காப்பாற்ற கையாளாகத நாடுகளில் எல்லாம் கருமேகங்கள் சூழ்ந்து விட்டன‌.

தற்போது தாயகம் சென்றவர்கள் சிலர் சிறைகளில்,சிலரைக் காணவில்லை.தம் சக தோழமை நாடுகளையே புலனாய்கிற பெரியவை வீடியோக்களையும் சிறிலங்காவிடம் கையளித்திருப்பார்கள் போலவே நடேசன் குடும்பத்தாருக்குப் பட்டது.பிள்ளைகள் பயந்ததால்”வேண்டாமப்பா”என மறித்ததால் இங்கே ..வந்திருக்கிறார்கள்.

கொஞ்ச நஞ்சமில்லை, நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கிறார்கள்.தற்போது,பேச்சில்(அப்பாவைப் போல‌) ஐயாவைப் போல இழுத்து இழுத்துப் பேசுற‌ அவன் உருவத்திலும் அவரைப் போல‌வே… இருக்கிறான். .”நாங்க கொழும்பிலிருந்து வந்த போது…” என ரவியோட கதைத்துக் கொண்டிருந்தான். “என்ன நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அல்லவா வவுனியா வந்தனீர்கள்” என விஜயன் குறுக்கிட்டான். தொடர்ந்து .”ஓ!,அது தான் அப்பாவை ஐயா என கூப்பிடுறீர்களா ?”எனக் கேட்ட‌ போது,”ரவி “ஐயா என்றது சிங்களச் சொல்லில்லை.. .காலனியாட்சியாளர்கள் ஆசியாவில் கால் பதிக்க முதலே தமிழர்மத்தியிலே அப்பாவை “ஐயா..”என அழைக்கிற வழக்கம் நிலவியிருக்கிறது.பிறகு நிலபுலன்களை உடைய பெரிய குடும்பங்களில் நிலவி,பிறகு சில ஊர்களில் மட்டுமாக அருகி விட்டது.” கூடுதலாக அச்சொல் கொழும்பில் பிழங்கிறதால் சிங்களச் சொல்லாகி விடாது”என்றான்.

அப்ப,அப்பாவை ‘ஐயா’எனக் கூப்பிடுறது விஜயனுக்கு வித்தியாசமாகவே இருந்தது, தெளிவுபடவில்லை. அவனுடைய அம்மாவும் கூட‌ அவருடைய அப்பாவை- தாத்தாவை ‘ஐயா’என கூப்பிடுறதே இருந்திருக்கிறது.அவனுக்கு தாத்தாவையே பெரிதாக தெரியாது.அவர் வேளைக்கே இறந்து விட்டவர்.

அவர்களுடைய பேச்சு தொடர… “வவுனியாவில் முதலில் உங்கட பெரியப்பாட குடும்பம் தான் இருந்தது.எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது “என்றான் ரவி.அப்ப,யாழ்ப்பாணத்திருந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியாவில் காட்டை அழித்து ‘விவசாயப் பண்ணைகளை’அமைத்துக் கொள்றது நடந்து கொண்டிருந்தது.நடேசனின் பெரியப்பா,குடுபத்தோடு வந்து அப்படி ஒன்றை ஏற்படுத்துவதிலே ஈடுபட்டிருந்தார்.1958ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் அவரைக் குழப்பி விட்டது.

நல்ல சிங்களவர்களால் கொழும்பில் இவர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால்,பெரியப்பா பயந்து போனார். வீட்டிலே நடேசனின் அப்பா, கடைசித் தம்பி,செல்லமும் கூட.”டேய்,நீ இங்க வந்து இரு”என கூப்பிட்டு அவர்களை வவுனியா வீட்டில் அமர வைத்து விட்டு வெட்டிய காணியையும் கையளித்து விட்டு யாழ் திரும்பி இருக்கிறார்.அதன் பிறகு இவர்கள் காட்டில், மேலும் 2 ஏக்கர் காணியை வெட்டி விவசாயம் செய்தார்கள்.. முதலில், நிலக்கடலை,அவரை,நெல் என சேனைப்பயிர்கள் செய்தார்கள்.பிறகு கிணறும் வெட்டி விவசாயத்திலும் வெற்றி ஈட்டினார்கள்.

இதெல்லாம் நடக்கிற போது விஜயனுக்கு 2,3 வயசிருக்கலாம்.அவனுக்கு தெரியாதது அல்லது விளங்காதது ஆச்சரியமில்லை .

அவனுக்கு யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகே, சரிவர அவர்கள் சென்ற கிராமத்தில் இருந்த அவனுடைய பெரியப்பா குடும்பம் தெரிய வந்தது. பிறகு, நடேசன் குடும்பம் போல அவர்களோடும் பழக்கம் ஏற்பட்டு விட்டது

ரவிக்கும், நடேசனுக்கும் இடையில் 2,3 வயசு வித்தியாசமே இருந்தன. ரவி, வவுனியாவில் கூட படித்தவர்களின் பெயர்களை எல்லாம் மறக்காமல் தெளிவாக ஞாபகம் வைத்திருந்து…விசாரித்தான். தற்போது,’ஃபேஸ் புக்’ மூலமாகவும் ஓரிருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தானிருக்கிறான். நடேசனுக்கும் ஞாபக சக்தி அதிகம். அவனும் மூளையை குடைந்து குடைந்து பதிலளித்துக் கொண்டிருந்தான். வன்னியில் சிறு கோபதாபங்களுக்கு, ஒ.லெவல் ஃபெயிலானால்… எல்லாம் ஓடுற ரயிலுக்கு முன்னால் பாய்ந்து விடுகிறவர்கள் அதிகம். அல்லது ‌ விவசாயத்திற்கு வைத்திருக்கிற பூச்சி மருந்தை எடுத்து குடித்து விடுவார்கள். அவர்களை பற்றி கூடுதலாக …கதைத்தார்கள்.அவர்களில் சிலர் நண்பர்களாக இருக்க வாய்ப்பும் இருக்கிறது தானே. “ஓ!, (ஒருத்தன்ர)அவன்ர அக்கா இங்கே தான் இருக்கிறார்” என்றான் நடேசன்.

விஜயனுக்கு இருபது வருசத்திற்கு முதல் நடந்ததே நினைவுக்கு வர சிரமப்படுகிறது. இவர்கள் அனாவசியமாக கதைக்கிறார்கள், விட்டால் இருவருமே அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த இருண்ட உலகத்தை பற்றியும் கதைப்பார்கள் போல இருந்தது.

ஒருமுறை,வவுனியாவில்,விஜயனுக்கு 3 வயசிருக்கும் போது படுக்கையில் அவனுக்குப் பக்கத்தில் வீட்டுக்கூரையிலிருந்து ஓரளவான பாம்பொன்று தொப்பென்று விழுந்தது.ரவி தான் விழுந்தடித்துக் கொண்டு ஓடி அயலில் இருந்த தச்சுவேலைகள் செய்கிற சிங்கள பாஸ்ஸை கூட்டி வந்தான். அவர் ,சிங்கள தொனியில் தமிழ் நல்லாவே பேசுபவர்.விஜயனை எப்பவும் “விஜய் ஐயா …..” என செல்லமாக கூப்பிடுறவர்.”தவளைக் குஞ்சுகள் என்ன விநோதம்,ஆடிப்பாடி,ஓடி..என்ன விநோதம்”என மகிழ்ச்சியாக‌ பாடி கலகலப்பூட்டுவார். அவர் பாடிய மற்ற வரிகள் இவனுக்கு துப்பரவாக மறந்து விட்டன. மறதி வீரன்.அவர் செய்த தளபாடங்கள் தான்அப்ப ‌ எல்லார் வீட்டிலேயும் இருந்தன. அவர்கள்.என்ன பிரச்சனை என்றாலும் அவரிடமே ஓடுறவர்கள். நடேசனுக்கு அந்த இடத்தில் நின்றது …நல்லாய் ஞாபகம் இருந்தது.இருவரும் அதை பற்றிக் கதைத்தார்கள்.

அவர் உடனே நீண்ட தடியுடன் வந்து பாம்பை வெளியில் எடுத்துப் போட்டு அடித்தை.,குறை உயிரில் விட்டால் “பழிவாங்கும்”எனக் கூறி பயமுறுத்தியதை, மண்ணெண்னெய் ஊத்தி எரித்து நிலத்தில் தாட்டு விட்டு சென்றதை …சுவாரசியமாக கதைத்துக் கொண்டிருந்தார்கள்.காட்டுமுனி,பாம்பின்,மிருகங்களின் சோடி பழி வாங்கும் என்கிற ஜதிகங்கள் எல்லாம் வவுனியாவில் சர்வ சாதாரணம்‌. மனிதர்களின் ஆத்மா(உயிர்)அழியாதது.செத்த பிறகும் …வெளியில் அலைந்து கொண்டிருக்கும் என்றால்,மற்ற உயிரினங்களிற்கும் அதே ஆத்மா இருக்கத் தானே செய்யும். அவையும் அலையும் தானே.பழிவாங்கும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் பொய்யில்லை போலவே படுகின்றன.

அதனாலே அங்கே பொதுவாக எல்லா உயிரினங்களையும் அடிக்கிறதுக்கும் கொல்றதுக்கும் எல்லாரும் பயப்பட்டார்கள் . தமிழர்களை அடித்த சிங்களவர்களுக்கும் கூட அந்த நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன போலும்.அவர்களுடைய விகாரைகள் உள்ளேயும் ‘இப்படி செய்தால் இன்ன தண்டனை’என அன்னியன் சினிமாவில் காட்டிய அத்தனை தண்டனைகளையும் கலர் கலராக சித்திரக் குப்தரின்தண்டனைகளாக‌ கீறி வைத்திருக்கிறார்கள். விஜயன், இங்கே தொலைக்காட்சியில் சிறிலங்காவின் ஆவணப்படம் …ஒன்றில். பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறான்.

சிங்கள மக்கள் அடிப்படையில் நல்லவர்கள் .ஆனால்,சிங்கள அரசியல்வாதிகள் தான் (அவர்களுள் இனத்துவேசத்தை ஏற்றி, ஏற்றி)அவர்களை நஞ்சாக்கி விட்டு இருக்கிறார்கள்.

பாம்படிக்கிறதுக்கு துணிச்சல் வேண்டும் . பாஸ்ஸுக்கு அது ஜால்தியாகவே இருந்தது எதற்கும் துணிந்தவராக பாம்பை அடித்தது எல்லாம் விஜயனுக்கு துப்பரவாய் நினைவில் ஒட்டவில்லை. நடேசனுக்கு ஞாபகம் இருந்தது. மூன்றாம் மனுசன் போல அதிலே இருந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

அக்கா, மறதிக்கு “பிறகு,பிறகு ஏற்படுற பலமான அனுபவங்கள் பழையவற்றை மறக்கடித்து விடுகின்றன,அல்லது மங்கலடைய வைத்து விடுகின்றன ‘இல்லையா,என்ன?”என அறிவியல் விளக்கம் கொடுத்தார். உண்மை தான்.

கலவர நிகழ்வுகள் சில‌பேரை பையித்தியம் பிடிக்க வைத்திருக்கிறன!”

19,20 வயசிற்குள் நடைபெறுபவையே தாம் பசுமரத்தாணிப் போல பதிந்து கிடக்கின்றன” ஆனாலும், ஆகச் சிறுவயசு நினைவுகள் சில பேர்களிற்குத் தான் ஞாபகம் இருக்கின்றன‌. அதைத் தான் அறியாப் பருவம் என்கிறார்களோ?அண்ணர் ஒரு அறியாப்பருவத்து ஐயன்டையின்!
நடேசனின் அக்கா அக்காட சினேகிதி..

அக்கா வெளிநாடு வந்ததிற்கு ஒருமுறை யாழ்ப்பாணம் திரும்பவும் போய்யிருந்தார். அப்பவும் ,வவுனியாவில் பயணம் தடைப்பட்டு ஒரிரவு நின்று தான் தொடர்ந்தது. அப்ப, குருமண்காட்டுக்குக்கு போக முடியாமல் போனதை குறித்து வெகுவாக கவலைப்பட்டார். அவரைப் பற்றி வாரப்பாடாக‌ விசாரித்தார்.

அந்த‌ காலத்தில் தமிழர் மாகாணங்களில் வேலை வாய்ப்புக்கள் இருக்கவில்லை, ஒ.லெவல் வரையில், எ.லெவல் வரையில் படித்த பிறகு,அதற்கு மேல் படிக்கிற ‘சிமார்ட்’அற்றுப் போற போது.. பெடியள்களிற்கு கொழும்பிற்கு வேலை தேடி போறது மரதன் ஓட்டமாகவே இருந்தன‌ ஆனால்.எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடவில்லை. அவர்களிற்கு முந்திய சந்ததியில் ,சிறிமாட காலம் வரையில்… பொதுவாக எல்லாருக்கும் வேலை கிடைத்து ….நிம்மதியான காலமாகவே இருந்தன.அவர்,எப்ப சிறிலங்காவை ‘குடியரசா’க்கி அறிவித்து,கல்வியில் சிங்களவருக்குச் சார்ப்பாக மாற்றங்களைச் செய்தாரோ…அப்ப இருந்து சனி தொடர‌ ஆரம்பித்து விட்டது.அது மட்டுமில்லை சிறிமா,குடியரசாக்கிய பிறகு பல வஞ்சகக் கொள்கைகளை புகுத்திற சிங்கள நிபுணர்களின் கைப்பாவையாகியும் விட்டார். பிறகு, தமிழர் கதியும் அதோ கதியாகி விட்டது.

58ம் ஆண்டு கலவரம் நடந்து கனகாலமாகி விட்டதால்,1ம் உலகப் போர் நடந்த பிறகு “இனி நடக்காது”என நம்பிக்கை அங்கிருக்கும் மக்களுக்கு ஏற்பட்டது போல.. இங்கேயும் நம்மவர்களிற்கு “இனி ஒரு கலவரம் ஏற்படாது”என்ற நம்பிக்கை எந்த கொழுகொம்பற்றும்! ஏற்படுவதும் முறிவதும், ஏற்படுவதும் முறிவதுமாகி கிடந்தன‌. தவிர, இவர்கள் அடுத்த சந்ததி,இவர்களிற்கு கொழும்பில் நடந்த …பயங்கரங்கள்அவ்வளவாக‌ புரிந்திருக்கவில்லை வேலை இல்லாதவனை மனைவியும் மதிக்க மாட்டாள்.

எனவே,கொழும்பில் உத்தியோகம் எடுப்பதே’வாழ்க்கையாக கிடந்தது அதாவது.நாம் திரும்பவும் கொழும்பின் கால்களிலே வீழ்ந்து கிடந்தோம்.

அரசாங்க வேலை கிடைப்பதாக இருந்தாலும் கூட‌ கொழும்பிற்கே போய் குத்துக்கரணம் அடித்தே அந்த வேலையை பெறுவதாகவும் இருந்தது.லஞ்ச‌ம் கொடுக்கக் கூடியவர்கள்,செல்வாக்காக இருந்தவர்களின் தயவைப் பெற்றவர்களால் மட்டுமே பெறக் கூடியவையாய் இருந்தன‌. தமிழர்கள் எவ்வளவு பாவம் செய்த பிறவிகள்!

, சிங்கள‌ அரசாங்கம்,ஈழத்தமிழரின் வேலை வாய்ப்பில் ‘மேலும்,மேலும் கை வைக்க ஒரு கட்டத்தில் துப்பரவாகவே வேலை வாய்ப்புக்கள் கிடைக்காமல் போய் விட்டன‌ தமிழ்ப் பெடியள்கள் மத்தியில் விரக்தி,வெறுப்பு,கோபம் எல்லாம் காட்டுத் தீ போல அதிகமாக வளர்ந்து,.இவற்றிலிருந்து விடுதலைப் பெற, வேலை கிடைக்க வேண்டுமானால் ‘ஆயுதப் போராட்டம்’ தான் ஓரே வழி என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். எங்கும் இயக்கங்களாகி மயமாகி விட்டன‌. அதில், சேர்ந்தவர்களிற்கு “இன்னொரு பெயரையும் உங்களிற்கு தெரிவு செய்யுங்கள்”என்று உடனடியாகச் சொல்லப்பட்டது.அந்த பெயரையே பாவிக்க வேண்டும்.நாமும் கூப்பிடுவோம்”என்றார்கள்.படையினர் இலகுவாக அடையாள அட்டையை வைத்து பிடிக்க முடியாதிருப்பதற்காக ஏற்பாடு.ஆனால்,ஒரே கிராமத்தில், அயலில் தெரிந்தவர்களின் இயற் பெயர் தெரிய,மற்றைய தோழர்களின் உண்மைப் பெயர்கள் அவ்வியக்கத்தில் இருந்தவர்களிற்கு பொதுவாக தெரிவதில்லை.அங்கே இருக்கிற போதே மற்ற இடங்களிற்குப் போய் தோழர்களை தேடுற போது…ஊராரிற்கு “யார் தம்பி,அந்த பெயரிலே யாருமே இல்லையே”என்பார்கள்.ஒவ்வொரு இடங்களிலும் அவர்களுடைய ஒரு காம் இருக்கும்.அங்கே போய் …அறிந்து கொள்றது இருந்தது.சகோதரக் கொலைகள் மலிந்து,ஓரிரு இயக்கங்களால் பல இயக்கங்களும் தடை செய்யப்பட்ட போது,அதுவும் குழம்பிப் போய் விட்டது. வீதிகளில் தோழர்களை யதேச்சையாக‌ சந்தித்த போது”கொழும்பிற்கு போய் விடு.இங்கே இருப்பது பாதுகாப்பில்லை”என்றார்கள்.புலம் பெயர்ந்த பிறகும் தம்தம் தோழர்கள் உயிரோடு இருக்கிறார்களா?”என்று தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.சொந்தக்காரர்களிற்கு இயற் பெயர் வேண்டும்.அதை, இனி எங்கே போய்ப் பெறுவார்கள்? முக நூல் ஒரளவிற்கு கை கொடுத்தாலும் அது இன்னொரு சிலந்தி வலை. தவிர, புலம்பெயர் நாடுகளிலும் கணனியே வைத்திருக்காதவர்களும் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். சுவர்களிற்கு மட்டுமில்லை கணனிகளிற்கும் கண் உண்டு என்ற நிலமையும் இருக்கிறது.கணனி பாவிப்பை தொழினுட்பத்திப் பயன்பாடு என்பதா,இல்லை விரிக்கப்பட்ட வலை என்பதா? தெரியவில்லை இந்தியாவும் தனக்கென சுயமான ஒபரேட்டிங் சிஸ்டம் ஒன்றை ஏற்படுத்திக் (எழுதிக்)கொள்ள வேண்டும்.இலங்கைக்கு இந்தியா தாய் நாடு என்பதால்…அதற்கூடாக பாதுகாப்பும் கிடைக்குமா? என்று எழும் கேள்வியிலும் நியாயம் இல்லாமலில்லை.

இங்கேயிருப்பவர்கள்,அங்கே இருப்பார்களோ;,அங்கேயிருப்பவர்கள் இங்கே இருப்பார்களோ? எனக் … காலம், நிறையவே குழம்பி விட்டிருக்கிறது.

ரத்தச்சரித்திரமே எழுதப்பட்டு விட்டிருக்கிறது. இதில் மக்களும் அகப்பட்டுக் கிடந்தார்கள். எல்லாம் குறைப்பிரசவமாகி…இன்று ரத்தச்சகதியில் அனைவரும். விஜயன் வெளிநாடு சென்றிருந்தது நடேசனுக்கு தெரியவில்லை.அவன் கலவரமாக நினைத்து விட் டிருந்தான். நடேசன் வீட்டுக்கு முன்னால் இருந்த தம்பி என அழைக்கப்பட்ட செந்தில், வவுனியாவில் தப்பான இடத்தில் தப்பான நேரத்தில் நின்ற போது படையினரால் அள்ளிக் கொண்டு போய்…வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டு விட்டான். சிறையில் நடந்தேறிய‌ கலவரப் படுகொலையின் முதல் நாளே கொல்லப்பட்டும் விட்டான்.கொலையுண்டவர்களின் பெயர்களில் அவன் பெயரைப் தினசரிப் பத்திரிகையில் பார்த்த‌ குருமண்காடே சோகக்கடலில் மூழ்கிப் போனது.கலவரம் தொடர்வதற்கு முதல் நடேசன், பிரான்சுக்கு வந்து விட்டான்.விஜயனைப் பற்றி ….அறிந்திருக்கவில்லை. பிறகு கனடாவிலிருந்த பெரியப்பாட இளையவன்(2வது மகன்)குகன்,தொலைபேசியில் பேச்சு வாக்கில்..”விஜயன்,இங்கையல்லோ இருக்கிறான்”என்ற போது….தான் அவனுகேற்பட்ட நிம்மதி கொஞ்ச நஞ்சமில்லை.தொலைபேசி நம்பரைப் பெற்று உடனேயே பேசியிருந்தான்.

இப்ப‌வும் யார் உயிருடன் இருக்கிறார்கள்? என்பதை’என்று அறிவதில் ஆர்வம் இருந்தது.

குருமண்காட்டு நினைவுகளையும் பேசி களைத்தார்கள். .அடுத்து, படம் எடுப்பதில் கவனம் சென்றது.தற்போதைய டிஜிட்டல் கமரா அதிகளவு பேர்களை அடக்க சிரமப்பட்டது.

விஜயன்”பெடியள்கள் எல்லாரும் ஒன்றாக,பெண்கள் எல்லாரும் ஒன்றாக படம் எடுக்கலாம்”என்று கூறினான்.

“பெடியள்க‌ளா…?நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை” என்ற பெண்கள் மத்தியிலிருந்து சிரிப்பு எழுந்தது.

காதோரம் மட்டுமில்லை தலைமயிர் முழுதும் நரைகள் பரவ ,நெற்றியில், முன் பின் தலையில்..எல்லாம் வலுக்கைகள் விழ‌ பெருப்பாலான ,பிள்ளைகள்…இருபது (வயசு)க்கு மேலே வளர்ந்து,சிலர் யூனிவெர்சிட்டியும் ‌ கூட படித்து முடித்தவர்களாக இருக்க…அட, நாம் கிழவர்களாகிப் போனது எப்படி மறந்து போயிற்று?

நாமெல்லாம் அகப்பட்டு தப்பி வந்த காலங்களில் இருந்து. வெளிய வர முடியவில்லை அந்நினைவுகள் ‘ஸ்ரோங்கானதாக இருந்து நம் மூளைகளை உறைய வைத்து விட்டன‌. நம் பிள்ளைகள் கிழவர்களாகினாலும் கூட நம்மால் அந்த வெளியிலிருந்து வெளிய வர முடியுமா எனத் தெரியவில்லை

“நாம் எல்லாம் கிழவர்கள்”ரவியும்,நடேசனும் ஒருதரம் தம் கைகளை கிள்ளிப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார்கள்.

இரவுணவு சாப்பிட்டு விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.

இனி, எப்ப மறுபடியும் சந்திக்கப் போறார்களோ?அல்லது சந்திக்காமலேயே போய் விடப் போறார்களோ? என்பது யாருக்கும் தெரியப் போவதில்லை .தொலைந்து போனாலும் கூட தேடிக் கொண்டே தான் இருக்கப் போறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *