திருப்புமுனைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 18, 2013
பார்வையிட்டோர்: 10,973 
 

பிரசாத்தின் பார்வையில் விரோதமும், அலட்சியமும் நிதர்சனமாகத் தெரிந்தது. ‘நீ யார்… நீ எதற்கு என்னை இதுபோல் கேள்விகள் கேட்டு உபத்திரவம் செய்கிறாய்?’ என்ற பாவம்.

ஆனால், நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

“இதோ பார் பிரசாத்… ‘ஸெமஸ்டர்’ தொடங்கி ஒரு மாசம் முடிந்து நானும் எட்டு கிளாஸ் எடுத்து விட்டேன்… நீ இதுவரை ஒரே ஒரு ‘க்ளாஸ்’ தவிர மற்ற எல்லாவற்றுக்கும் ‘ஆப்ஸென்ட்…’”

பிரசாத் விறைப்பாகப் பதில் சொன்னான்.

“அதான் சொன்னேனே ஸார்… எனக்கு உடம்பு சரியாக இல்லை…”

நான் அவனை முறைத்து ஆழமாகப் பார்த்தேன்.

”நிஜத்தைச் சொல்லு பிரசாத்… நீ மற்ற வகுப்புகளை ‘அட்டென்ட்’ பண்ணியிருக்கே… வேண்டுமென்றேதான் என் ‘க்ளாஸு’க்கு வரவில்லை… ஏன்…?”

“……..”

“நான் எடுக்கும் ‘ஸப்ஜெக்ட்’ நிச்சயம் கஷ்டமானது. என் ‘க்ளாஸ்’களுக்கு நீ வரவில்லையென்றால் உன்னுடைய ‘இன்டர்னல் மார்க்ஸ்’ நிச்சயம் குறையும்… நீ ‘பாஸ்’ பண்ண முடியாது… அதோடு நீ இந்த பாடத்தை ‘கேரி ஓவர்’ பண்ணிக்கொண்டு போனால் உனக்கு மேலும் பிரச்சினைதான்…”
பிரசாத் என்னைப் பார்த்த பார்வையில் திரையிட்ட கோபம் நன்றாகத் தெரிந்தது.

“என்ன ஸார் பயமுறுத்தறீங்களா?” என்றான்.

நான் அவனை நேராகப் பார்த்து பதிலளித்தேன்.

“அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்… நாளைக்கு பிற்பகல் என்னை ‘டிபார்ட்மென்டி’ல் வந்து பார் பிரசாத்”

மறுநாள் என்னை வந்து பார்த்தபோது பிரசாத்திடம் அத்தனை விறைப்பும், கோபமும் இல்லை. என்னைப்பற்றி மற்ற ‘ஸீனியர்’ மாணவர்களிடம் ஏதாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். காரணமில்லாமல் நான் எவரையும் கஷ்டப்படுத்த மாட்டேன் என்பதை பிரசாத்துக்கு எவனாவது சொல்லியிருக்க வேண்டும்.

“உட்கார் பிரசாத்… நிஜமாக உன் பிரச்சினை என்ன? நீ ஏன் ஒழுங்காக எந்த வகுப்புக்கும் வரமாட்டேன் என்கிறாய்?” என்று கேட்டேன்.

பிரசாத் என் நேர் பார்வையைத் தவிர்த்தான். என் அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

நான் அவன் பதிலுக்காகக் காத்திருந்தேன்.

அவன் ஒரு நிமிஷம் ஒன்றும் பேசாமல் ஜன்னல் வழியே வெளியே பார்வையைச் செலுத்தினான்.

நானும் ஒன்றும் பேசாமல் அவனாகப் பேசட்டும் என்று இருந்தேன். ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு பிரசாத் என்னைப் பார்த்துப் பேசினான்.

“எனக்கு நான் படிக்கும் இந்தக் ‘கோர்ஸ்’ சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனக்கு எந்தப் பாடத்தைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது” என்றான்.

“பின் எதற்காக இந்தப் பிரிவில் சேர்ந்தாய்?”

“என் மார்க்குக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் பிரிவில்தான் இடம் கிடைத்தது…”

“சரி… பிரசாத்… வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் எல்லாமே கிடைத்து விடுகிறதா… வேறு தனியார் கல்லூரியில் பணம் கொடுத்தால் நீ ஆசைப்பட்ட பிரிவு கிடைத்திருக்குமே?”

“அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்தில் வசதி இல்லை…”

“உன் அப்பா என்ன செய்கிறார்?”

அவன் ஒரு விநாடி மௌனமாக இருந்தான். பின் தலைகுனிந்தபடி இருந்தவன் திடீரென்று பதில் சொன்னான்.

“அவர் ஒரு லாரி மெக்கானிக்…”

இது எனக்குப் புதிய செய்திதான்.

“எங்கே…?”

“காட்பாடிக்குப் பக்கத்தில்… கிட்டத்தட்ட ஒரு கிராமம்…”

“உன் வீட்டில் யார் யார்…?”

”நான், அம்மா, அப்பா, தங்கச்சி, பாட்டி…”

“இப்ப உனக்குக் காலேஜ் ஃபீஸ், ஹாஸ்டலில் தங்க அதற்கெல்லாம் எப்படி சமாளிக்கிறார்?”

“நான் ‘பாங்க் லோன்’ வாங்குகிறேன்… அது போதவில்லை என்றால் அப்பாகிட்டேயிருந்தும் வாங்குவேன்.”

எனக்குக் கொஞ்சம் மனசு கஷ்டப்பட்டது.

நிச்சயம் இவன் முதல் தலைமுறையில் படிக்க வந்திருப்பவன். இவன் பிளஸ்டூ மார்க் ஓரளவுக்கு நன்றாக இருந்திருக்க வேண்டும்.

“இத பார் பிரசாத்… நீ படித்து முன்னேறி நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதுதான் உன் அப்பாவின் விருப்பமாக இருக்கும். அதனால்தானே நீயும் சேர்ந்திருக்கிறாய்… பிடிக்குமோ, பிடிக்காதோ, வாழ்க்கையில் சில விஷயங்களில் நமக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைப்பதில்லை…”

“………..”

“முதல் மூன்று ‘ஸெமஸ்டர்’களில் பாக்கி இருக்கிறதா?” என்றேன்.

“ம்… நான்கு பேப்பர்கள்…”

“ஏன்.. பிரசாத்?”

“படிக்கலை… சில வேண்டாத ஃப்ரண்ட்ஸ்கள கூடச் சேர்ந்து தண்ணியடிச்சு, ஊர் சுத்தினேன்…”

”என்னது…?”

“ஆமாம்… வெறுப்பு…”

“உங்க அப்பா-அம்மாவுக்குத் தெரியுமா?”

“ம்ஹூம்…”

“உனக்கு அது தப்புன்னு தோணலை?”

“எது, தண்ணியடிக்கிறதா?”

“ம்..”

“எங்கப்பா தண்ணியடிப்பார்… சித்தப்பா, மாமா எல்லாருமே ‘ரெகுலரா’ குடிப்பாங்க… அவங்க மட்டும் குடிக்கலாமா? அப்ப… அது தப்பில்லையா?”

நான் அயர்ந்து போனேன். எனக்கு ஒருகணம் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

என்னை சமாளித்துக்கொண்டு பேசினேன்.

“இதபார் பிரசாத்… அவங்க குடிக்கறதும் தப்புத்தான்… ஆனால் அவங்க சொந்த சம்பாத்தியத்தில இருந்து பணம் எடுத்துக் குடிக்கறாங்க… நீ உங்க அப்பா காசில இல்ல குடிக்கற…?”

பிரசாத் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“நீ சரியாகப் படிக்காததுடன், பாடங்களில் ஃபெயில் ஆனதும் அவங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“ஏன் சொல்லலை?”

“சொன்னாலும் அவங்களுக்கு என்ன புரியப்போகுது… அவங்க வெறும் படிக்காத ஜாதி…”

நான் மறுபடி அயர்ந்து போனேன். யார் இவன்? ஒளவையார் அன்று ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை… இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்’ என்றாள். இன்று இந்திய அரசியலே ஜாதிவாரியாகச் சிதைபட்டுக் கிடக்கின்றது.

இதில் இவன் இன்னொரு ஜாதியை வேறு புகுத்துகிறானே?

ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி எனக்குக் கடும் சினம் மூண்டது.

‘‘அந்தப் படிக்காத ஜாதியாக நீயும் இருந்து விடக்கூடாது என்றுதானே உன்னை படிக்க வைக்கிறார்கள்… அது உனக்கு ஏன் புரியவில்லை? நீ உன் காலேஜைப் பற்றி ஊரில் உங்க அப்பா, அம்மாகிட்டப் பேச மாட்டியா?”

பிரசாத் சிரித்தான்.

“அதான் சொன்னேனே… ஊருக்குப் போனால் அம்மா நல்லா சமைச்சு சாப்பாடு போடுவாங்க… பத்து மணி வரை தூங்கிட்டு எழுந்து சாப்பிட்டு விட்டு அங்க இருக்கற ஃப்ரண்ட்ஸோட ஊர் சுத்திவிட்டுத் திரும்ப சாப்பிட வருவேன்… அவ்வளவுதான்… அவங்ககிட்ட பேச என்ன மேட்டர் இருக்கு?”

எனக்குக் கோபம் தலைக்கேறியது.

“என்ன பேச்சு இது… நீ நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கற அப்பா அம்மாவுக்கு நீ செய்யற உதவி இதுதானா? ஷேம்…உங்க அப்பாவுக்கு உதவியாக வொர்க்ஷாப்ல வேல செய்… உங்க அம்மாவுக்கு உதவியாக கிணற்றில் இருந்து தண்ணி இழுத்துக் கொட்டு… கடைக்குப் போய்ட்டு வா…”

பிரசாத் தலையைச் சொறிந்து கொண்டான்.

“அவங்ககிட்ட யாரப் பத்திப் பேசறது?”

“என்னப்பத்திப் பேசு… ஒரு வாத்தியார் உங்களுக்கு உதவியா வீட்டுல வேல செஞ்சிண்டு, பேசச் சொன்னார்னு சொல்லு…”

பிரசாத் இப்போது புன்னகை செய்தான்.

“சரி சார்… செய்யறேன்… இனிமே உங்க க்ளாஸ்க்கு ஒழுங்கா வரேன்…”

“நீ தரவேண்டிய ‘அஸைன்மென்ட்’ எங்க?”

“இதோ…” என்று எடுத்து ஒரு பத்து பக்கம் ஸ்டேபிள் செய்த பேப்பரை நீட்டினான்.

வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். கிறுக்கல் கையெழுத்து.

“ஏன் இப்படி எழுதற… ஒழுங்கா எழுதக் கூடாது?”

அவன் பேசவில்லை.

“உன் கையெழுத்து பிரம்ம லிபி மாதிரி இருக்கு…”

திடீரென்று அவன் மீண்டும் புன்னகை செய்தான்.

“அப்படீன்னா?”

“பிரும்மாவின் கையெழுத்து… அது நமக்குப் புரியாது…”

“நம்ம தலையெழுத்தச் சொல்றீங்களா?” என்றான் பிரசாத் திடீரென்று தோன்றிய நட்புணர்ச்சியுடன்.

நானும் புன்னகை செய்தேன்.

“ம்… ஆமாம்…”

“நீங்க மத்த ஸார் மாதிரியில்ல… நல்லாப் பேசறீங்க…” என்று ஒரு விமர்சனம் செய்தான்.

நான் பேசாமல் இருந்தேன்.

“எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு ஸார்… என்மேல இவ்வளவு அக்கறை எடுத்து அட்வைஸ் பண்ணறீங்க… உங்களுக்காகவாவது நான் படிக்கணும்… படிப்பேன்… நிச்சயம் உங்களுக்கு ஒருநாள் ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன்…” என்றான் அதே புன்னகையுடன்.

என்ன மாதிரிப் பிள்ளை இது?

அரை மணி முன்னால் விரோதமாகப் பார்த்தது இப்போது சின்னக்குழந்தை போல் குழைகிறது. ஒருவகையில் குழந்தைதானே?

“சரி… உன் பேச்சை நம்புகிறேன்.”

“நம்புங்க ஸார்… நிச்சயம் காப்பாத்துவேன்.”

அப்போது நான் பார்த்த பிரசாத் வேறு. இந்த நிகழ்வுக்குப் பின்னர் நான் பார்த்த பிரசாத்தும் வேறு.

என் வகுப்புகளுக்கு ஒழுங்காக வர ஆரம்பித்தான். கையெழுத்து ரொம்பவும் மாறவில்லை என்றாலும் ஓரளவுக்குப் புரியும் வகையில் நிறுத்தி நிதானமாக எழுத ஆரம்பித்தான்.

ஆனால், கட்டாயம் முன்பைவிடச் சற்று மாறுபட்ட மாணவனை என்னால் உணர முடிந்தது.

நல்ல வேளையாக அந்த செமஸ்டரில் என்னுடைய அந்தப் பாடத்தில் பாஸ் மார்க்குக்கு மேலாகப் பத்து மார்க் வாங்கியே தப்பித்து விட்டான். அதற்கு அடுத்த செமஸ்டர்களில் எனக்குப் பாடம் இல்லை.

ஒருநாள் என்னை வழியில் பார்த்தவன், “ஸார்… ஒரு நிமிஷம்…” என்றான்.

“என்ன பிரசாத்… கிளாஸுக்கு ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கிறாயா?” என்றேன்.

“யெஸ் ஸார்… ஆனால் நான் உங்களுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் தரப் போகிறேன்…” என்றான் சிரித்தபடி.

“நீயா…? என்ன ஸர்ப்ரைஸ்… கிளாஸில் ஃபர்ஸ்ட் வரப் போகிறாயா?” என்றேன் கிண்டலாக.

“கிண்டல் ஸார்… புரிகிறது… அதெல்லாம் இல்லை… நீங்களே நான் அதைச் சொல்லும்போது புரிஞ்சுப்பீங்க” என்றான். தொடர்ந்து “இன்னும் கோர்ஸ் முடிய ஒரு ‘ஸெம்’தான் ஸார் இருக்கிறது… அதை முடிச்சதும் வந்து சொல்றேன்…” என்றான்.

ஒருநாள் ஏதோவொரு மிக நீண்ட ‘மீட்டிங்’கை பிரின்ஸ்பல் அறையில் முடித்துக்கொண்டு என் அறைக்கு மிகச் சோர்வுடன் திரும்பியபோது அங்கு பிரசாத் உட்கார்ந்து எனக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

என்னைக் கண்டதும் புன்னகையோடு எழுந்து நின்றவன் “குட் ஆஃப்டர்நூன் ஸார்” என்றான்.

“என்ன பிரசாத்… என்ன சமாச்சாரம்?”

“என் கோர்ஸ் முடிஞ்சிடுத்து ஸார்… நான் பாஸ்…”

“தெரியுமே… குட்.”

“இன்னொரு முக்கிய விஷயம் ஸார்…”

“என்னது?”

“இந்தாங்க ஸார்…” என்று தன் கையிலிருந்து ஒரு சிறிய அட்டைப் பெட்டியை நீட்டினான்.

“அட… இனிப்பா… பாஸ் பண்ணியதற்கு…”

“பாஸ் பண்ணதற்கு மட்டுமில்ல ஸார்… நான் உங்ககிட்ட ஸர்ப்ரைஸ்னு சொல்லிட்டிருந்தேனில்லயா?”

“ம்… ஆமாம்…”

“அதுவும் கூட ஸார்… எனக்கு வேலையும் கிடச்சிருக்கு ஸார்…”

“அடடே.. தேவலையே…”

“ஆனா… நான் படிச்ச இந்தத் துறைல இல்ல… கம்ப்யூட்டர் கம்பெனில…”

“ஸாஃப்ட்வேர்லயா?”

“ஆமாம் ஸார்.”

“எப்படி?”

“உங்ககிட்ட எனக்கு இந்தத் துறைல விருப்பம் இல்லன்னு சொன்னது நினைவிருக்கும்னு நினைக்கிறேன்… அதனால நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஈவ்னிங்ல படிக்க ஆரம்பிச்சேன்… என்னோட இந்த டிகிரி முடிஞ்சப்போ அதுவும் முடிஞ்சிடுத்து ஸார்… அதன் மூலமாத்தான் இந்த வேலை…”

“பேஷ்… சபாஷ்… எங்கே…?”

“ஹைதராபாத்ல ஸார்.. ஊருக்குப் போய் அம்மா-அப்பா கிட்ட சொல்லிட்டு அடுத்த வாரம் வேலைல சேரணும்…”

“எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“நிசமாகவே ஸர்ப்ரைஸ்தான் பிரசாத்… வாழ்த்துக்கள்…” என்றேன்.

“நீங்க அன்னக்கி என்கிட்ட ஒரு நண்பன் மாதிரி பேசினீங்க இல்ல… அதுக்கப்புறம்தான் நான் நல்லா சீரியஸா யோசிச்சு படிக்க ஆரம்பிச்சேன் ஸார்…”

“குட்…”

“ரொம்ப தாங்க்ஸ் ஸார்…”

“எதுக்கு…?”

“எனக்கு என்னைப் புரிய வச்சதுக்குத்தான்.”

பிரசாத்தின் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது போல் தோன்றியது. எனக்கு உண்மையில் அந்த நிமிஷம் நானும் புதிதாகப் பிறந்தது போல் உணர்வு உண்டாயிற்று.

“ஆல் த பெஸ்ட் பிரசாத்… இந்தா நீயும் இந்த ஸ்வீட்டை சாப்பிடு” என்று அவன் கொண்டு வந்த இனிப்பையே எடுத்து அவனுக்கு வழங்கினேன்.

“போய்ட்டு வரேன் ஸார்… ஞாபகம் வச்சிக்குங்க என்னை…” என்று விடைபெற்றான்.

அதன்பின்னர் எனக்கு பிரசாத்திடம் தொடர்பு இல்லை.

ஆனால், அவனுடைய வகுப்பு மாணவர்களில் சிலரை இரண்டு வருஷங்களுக்குப் பின் எதேச்சையாகச் சந்தித்தபோது பிரசாத் லண்டனில் இருப்பதாகவும், அந்தக் கம்பெனியில் அவன் நல்ல பெயர் பெற்று இருப்பதாகவும் செய்தி கிடைத்தது.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் திருப்புமுனைகள் வருகின்றன. ‘எங்கே, எப்போது, யாரால்’ என்பதைத்தான் சொல்ல முடிவதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *