தர்மம் தலை காக்கும் என்பது வழக்கு. தர்மத்தின் வழி சற்று சிரமமானதாக இருக்கலாம்; ஆனால், அதுவே முடிவில் சுகத்தை அளிக்கக் கூடியதாக அமைந்துவிடும்.
அதனால், முதலில் காணப்படும் அசவுகர்யத்தையோ, துன்பத்தையோ கண்டு பயந்து, தர்மத்தை விட்டு விட வேண்டாம். தர்மம் என்ன சொல்கிறதோ, அதன்படி நடக்க வேண்டும். அதர்மம் என்பது ஆரம்பத்தில் சுகம் போலத்
தெரியும்; ஆனால், அது கடைசியில் துன்பத்தில் கொண்டு விடும். தர்மம் என்றால், பிறருக்கு கொடுத்து உதவுவது
மட்டுமல்ல… பிறருக்குக் கொடுத்து உதவுவது என்பது உபகாரம் தான். இதற்கும் புண்ணியம் உண்டு தான். ஆனால்,
தர்மத்தில் சொன்னபடி, தர்ம சாஸ்திரத்தில் சொன்னபடி நடப்பது தான் முழுமையான தர்மம்.
இப்படி, தர்ம வழியில் நடப்பது சிரமமானதாக இருந்தாலும், மனித வாழ்க்கையில் அமைதியைத் தருவது தர்ம வாழ்க்கை தான். தர்ம வாழ்வு என்பது சத்தியம், அகிம்சை, பொறாமை போன்ற துர்குணங்களை விலக்கி, நியாயமான வழிகளில் பொருள் தேடி, இருப்பது போதும் என்ற திருப்தியோடு வாழ்வது. ஆனால், மனிதனுக்கு திருப்தி சுலபமாக
ஏற்படுவதில்லை.
ஒன்று இருந்தால், மற்றொன்றுக்கு ஆசைப்படுகிறான். இந்த ஆசைக்கு முடிவே இல்லை. தீயில் என்ன போட்டாலும், எவ்வளவு போட்டாலும் அது போன இடம் தெரிவதில்லை. மேலும், மேலும் போடச் சொல்கிறது. இதே போலத்தான் ஆசை என்பதும். ஒண்டு குடித்தனம் இருப்பவன், தனி வீட்டுக்கு ஆசைப்படுகிறான்; நடந்து போகிறவன், வாகனத்தில் செல்ல ஆசைப்படுகிறான். இது, சகஜம் தான் என்றாலும், தன் தகுதிக்குத் தகுந்தபடி ஆசை இருக்க வேண்டும். பிறரை ஏமாற்றியோ, களவு, கொள்ளை மூலமாகவோ ஆதாயம் பெறுவது பாவம் மட்டுமல்ல; ஆபத்தை வரவழைத்துக் கொள்வதும் ஆகும்.
அதனால், இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழலாம். தம் ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் பகவானை பிரார்த்திக்கலாம். பகவான் விரும்பினால் கொடுப்பான். அதற்கு காலமும் ஒன்று சேர வேண்டும். காலம் வரும் போது நிச்சயம், கொடுப்பான். அதனால், அதிகமாக ஆசைப்பட்டு, மன வேதனைப்படாமல், நாம் செய்த புண்ணியத்துக்குத் தகுந்தபடி தான் பகவான் கொடுத்திருக்கிறான் என்ற எண்ணத்தோடு தர்ம வழியில் நடப்பவன், என்றாவது ஒரு நாள் சுகம் பெறுவான்.
– வைரம் ராஜகோபால் (ஜூன் 2011)