டெக்னாலஜி – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,407 
 

ஏங்க நம்ம தெருவுல புதுசா ஒரு பூக்காரி வந்திருக்கா.

எல்லாரும் கையாலதானே முழம் போட்டு கொடுப்பாங்க? இவ ஸ்கேல் வச்சு அளந்து கொடுக்கிறா…ஏதோ கொஞ்சம் படிச்சிருப்பா போலிருக்கு…அதுக்காக அதை இப்படிக் காட்டணுமா! டெக்னாலஜி எல்லாரையும் மாத்திடுச்சு” என கிண்டலாக தன் கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகுணா

சரியாக அப்போது அந்தப்புது பூக்காரி தெரு முனையில் பூக்கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். வழக்கமாக வரும் பூக்கார அம்மா அன்று வராததால், சுகுனா அவளிடம் பூ வாங்கினாள். அவள் கேட்ட இரண்டு முழம் பூவை பூக்காரி ஸ்கேல் கொண்டு அளப்பதை கதிரும் கண்கூடாகப் பார்த்தான்

‘ஏம்மா, எல்லாரும் முழம்தானே போடுவாங்க..நீ ஏன் ஸ்கேலால அளக்கிறே? அடக்கமாட்டாமல் கேட்டு விட்டான், கதிர்.

”ஐயா, நான் கொஞ்சம் குள்ளம்! என் கையால் முழம் போட்டால் ரொம்ப கம்மியா இருக்கும்னு யாரும் வாங்க மாட்டாங்க.. அதனாலதான் , ஸ்கேலாலே அளந்து
கொடுக்கிறேன். வேற ஒண்ணும் உள் நோக்கம் இல்லீங்க ” என்றாள் வருத்தமாக.

படிப்பும் இல்ல…பகட்டும் இல்ல..டெக்னாலஜியும் இல்ல..எதையும் நீயா முடிவு பண்ணாம கேட்டுத் தெரிஞ்சுக்க’ எனப் பார்வையாலேயே மனைவியிடம் பாடம் சொல்லிக் கிளம்பினான் கதிர்

– வி.சகிதா முருகன் (திசெம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *