செருப்பு தைக்கும் தாத்தாவின் விசிறி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 7,290 
 

இளவெயில் லேசா அடிச்சுது, பரபரப்பான நகரத்தோட பிரதான சாலை அது.

எந்நேரமும் எதையும் அலட்டிக்காம இயந்திர கதியா ஓடற மக்களை அங்க சுலபமா பாக்கலாம். தெருவோட ஒரு பகுதி முழுக்க கடைகள். அலங்கார தோரணம், வண்ண விளக்குகள், விளம்பர பலகைகள் எல்லாமே பள பள ன்னு இருக்கும்.

தெருவோட இன்னொரு பக்கம் வாகனங்கள் சௌகரியப்படுத்தப்பட்டு இருக்கும். மூன்றடுக்கு கட்டிடங்கள், கண்ணாடி அறைக்குள வைக்கபட்டிருக்கும் பொம்மைகள், மின்சாதன கருவிகள் இது போல இன்னும் நிறைய; பகட்டான வாழ்வோட பிரதிபலிப்பா நம்ம கண் முன்னாடி விரியும். அதுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் கூட அதே தெருவில நடக்கும்.

பிளாட்பார கடைகள், நடைபாதைல பாதி அடைச்சுருக்கும். கண் பார்வையிலாதவங்க அவங்க கையில உள்ள தட்டை யாராவது நிரப்ப மாட்டாங்களா ன்னு பாப்பாங்க. சில சின்ன பசங்க ஐஸ் கிரீம் விப்பாங்க; பொருட்களை வண்டியில ஏத்தி இறக்குவாங்க.

இப்படி அந்த சாலைக்கு ரெண்டு இப்படி பரபரப்பா இயங்கிட்டு இருந்த அந்த சாலைல, ஒரு கோவிலுக்கு பின்புறத்தில ஒரு மரத்தடி நிழல்ல உக்காந்திருந்த ஒரு தாதாவை நிச்சயம் யாரும் கவனிச்சுருக்க மாட்டாங்க.

லேசா வெளுத்து போன அரக்கை பனியனும் வேட்டியும் போட்டுருப்பார். மழிக்காத தாடியும், ஒட்டின கன்னமும் அவரோட பசியை அளந்து சொல்லும். அவருக்கு முன்னே எப்பவும் ஏழெட்டு ஜோடி செருப்புங்க, செருப்பு தைக்க உதவற உபகரணங்கள், ஒரு கட்டப்பை, ஒரு சொம்பு தண்ணி இதெல்லாம் இருக்கும். வலது கையை மேவாயில வெச்சுட்டு, இடது கைல விசிறியை ஆட்டிட்டு வேடிக்கை பாத்துட்டு இருப்பாரு. அப்பப்போ பையில இருக்கற சில்லறைகளை எண்ணி பாத்துட்டு இருப்பாரு.

மெதுவா எந்திரிச்சு பக்கத்துக்கு டீ கடைக்கு போய் வர டீ மட்டும் குடிப்பாரு. அதுவும் நாளுக்கு ஒரு தரம் தான் போல, சாப்பிடற மாதிரி தெரியல. சாயங்கால வெயிலுக்கு அவருக்கு நிழல் கிடைக்காது. விசிறியால முகத்தை மட்டும் மறைச்சுட்டு உக்காந்துக்குவாரு. நான் தினமும் வேலைக்கு போக அந்த வழியை பயன்படுத்துறதால, என்னால அவரை கவனிக்க முடிஞ்சது.

ஆனா நான் ஏன் அவரை கவனிச்ச அளவுக்கு அவர் கிட்டே பேச எத்தனிக்கல ன்னு எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருந்துட்டே வந்துச்சு.

ஒரு நாள் பெரிய மழை பெய்தப்போ , நான் நனையாம இருக்க அந்த கோவில் கிட்டே ஒதுங்கி நின்னேன். அந்த பெரியவர் தன்னோட குடையை செருப்புகள் நனையாம கவுத்தி வெச்சுட்டு என் பக்கத்தில வந்து நின்னுட்டாரு மழைக்கு ஒதுங்கி. தலைக்கு மேல விசிறியை மட்டும் புடிச்சுககிட்டாரு. அவர் கிட்டே இப்போவாது பேசலாமே ன்னு எனக்கு ஒரு நிறைவு. மெதுவா என்ன தாத்தா, குடையை செருப்புகளுக்கு வெச்சுட்டீங்க?

அதுக நனைஞ்சா என் பொழப்பு படுத்துருமே தம்பி…

வீடெல்லாம் ஏது பா? இருக்கற இடத்தில.. அப்படியே படுத்துக்கறது தான்….

அப்பா இல்ல, அம்மா இருந்தாங்க….போய்டாங்க….தம்பி இருந்தான்,, நானே போக வெச்சுட்டேன்…. பொண்டாட்டிக்கு நான் வேண்டாம்.. வந்துட்டேன்….மெதுவா சிரிச்சாரு.

தனியா இருக்க கஷ்டமா இல்லீங்களா?

யாரு தான் தம்பி தனியா இல்ல? எத்தினி பேர் நம்ம கூட இருந்தாலும் நம்ம தனிங்க்றது தானே நிசம்? ரெண்டாவது என் ராசா என் கூடவே நான் எங்க போனாலும் வருவான்.. பாருங்க எப்படி வாலட்டறான்….அப்பறம் டீ கடை பையன்…தோ..இப்போ நீங்க வந்துட்டீங்க…அப்பறம் என்ன?

வருமானம் லாம் கட்டுபடியாகுதுங்களா ?

ஒரு செருப்பு பிஞ்சு போனா அதை தெச்சு போடற நிலைல இப்போ யாரும் இல்ல தம்பி புது செருப்பு வாங்கி போட்டுட்டு போயிட்டே இருக்காங்க. அப்பறம் வருமானம் எங்கேர்ந்து? அது சரி…. இங்க மனுசாளுகளுக்கே அ தானே நிலைமை, அப்புறம் செருப்பெல்லாம் எம்மாத்திரம்?

என்ன தாத்தா? ரொம்ப தத்துவம் பேசறீங்க?

நம்மளை சுத்தி எல்லாமே தத்துவம் தானே? டீ சாப்பிடறீயளா?

நான் புன்னகையோட ரெண்டு டீ வாங்கிட்டு வந்தேன். கருப்பு பஞ்சுருண்டை போல இருந்த அவரோட நாய் குட்டிக்கு கொஞ்சம் டீ ஊத்தினாரு. அந்த நாயை நான் கொஞ்சம் கொஞ்சினேன்.

திரும்பி பாத்தா அவரே டீக்கு காசு கொடுத்துட்டாரு.

அய்யயோ…என்ன தாத்தா? நான் கொடுதுக்கரேனே?

இன்னிக்கு நீங்க தானே தம்பி நம்ம விருந்தாளி? நம்ம இடத்துக்கு வந்துருக்கீங்கள்ல? மழை விடராப்பில இருக்கு.மொள்ள போங்க…நான் வரட்டுங்களா?

மெதுவா நகர்ந்து போனாரு அந்த செருப்பு தைக்கிற தாத்தா. ஒரு கைல விசிறி ஆடிட்டே இருந்துச்சு. அப்போ தான் ஞாபகம் வந்துச்சு. நான் அவரோட பேர் கூட கேக்கல. குனிஞ்சு பாத்தேன்.

அவர் கால்ல செருப்பில்லாம வெறுங்கால் ல நடந்து போனாரு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *