கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2013
பார்வையிட்டோர்: 110,065 
 

அவன் துறவி!

வாழ்க்கையை வெறுப்பது அல்ல. வாழ்வைப் புரிந்துகொண்டு, அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வதுதான் துறவு எனில், அவன் துறவிதான்.

முப்பது வயதில் அவன் புலனின்ப உணர்வுகளை அடக்கப் பழகிக் கொண்டான் என்று சொல்வதை விட, அவற்றில் நாட்டம் இல்லாததே அவனது இயற்கையாய் இருந்தது என்று சொல்வதே பொருந்தும். இதற்கு அர்த்தம் அவனிடம் ஏதோ குறைஎன்பதல்ல. அவன் நிறைவான மனித வாழ்வின் தன்மையிலேயே குறைகள் கண்டான். ‘ஓட்டைச் சடலம் உப்பிருந்த பாண்டம்’ என்று பாடும் சித்தர்களின் கூற்றைப் பரிகசிக்காமல் அந்தப் பரிகசிப்பின் காரணங்களை ஆராய்ந்து அதில் உண்மைகள் இருக்கக் கண்டான். எனவே, பக்தியின் காரணமாகவோ, மோட்சத்தை அடைய இது தவமார்க்கம்
என்று கருதியோ அவன் துறவு பூணவில்லை.

சொல்லப்போனால் ‘கண்ட கோயில் தெய்வம் என்று கைஎடுப்பதில்லை’ என்ற சிவவாக்கியரின் ஞானபோதனையின்படி எவ்வித ஆசாரங்களையும் கைக்கொள்ளாமல்தான் இருந்தான்.

அவன் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவன் மாதிரி விழித்தானே அல்லாமல், ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டானில்லை.

அவன் அந்தச் சிவன் கோயில் வாழ்ந்து வந்தான். அதற்குக் காரணம் பக்தி அல்ல; அங்கேதான் அவனுக்கு இடம் கிடைத்தது. கோயில் குருக்கள் அவனுக்கு மடப்பள்ளியிருந்து உணவு தந்தார். அதற்குப் பதிலாய் அவனிடம் வேலை வாங்கிக் கொண்டார். கோயின் பக்கத்திலுள்ள நந்தவனப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் சில சமயங்களில் பூப் பறித்துக் கொண்டு வருவதும் அவனுக்கு அவரிட்ட பணிகள்.

அரையில் ஒரு துண்டும். நெஞ்சுக்குழி வரை அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடுமó அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.

பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் எனினும். அவன் சோம்பேறி அல்ல. சாமியார் என்ற பட்டம் பெற்ற பிறகும் கூட அவன் நாள் முழுவதும் ஏதோ ஒரு வேலையை யாருக்கோ செய்து கொண்டிருக்கிறான். வேலையின் தன்மைகளோ அது உயர்வா, தாழ்வா என்றபாகுபாடோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல.

செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான். மடப்பள்ளிக்கு விறகு பிளந்து போடுவான். கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்; குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான். செட்டியார் வீட்டுக்கு…. எள் மூட்டை சுமப்பான்; பட்டாளத்துப் பிள்ளை வீட்டு வண்டியில் ஏறிப்போய் நெல் அரைத்துக்கொண்டு வருவான். அவன் எல்லாருக்கும் தொண்டன்….. ஒரு வேளை பிறவியின் அர்த்தமே இந்தப் பயன் கருதாத் தொண்டில் அவனுக்குக் கிட்டுகிறதோ
என்னவோ?

“பூந்தோட்டத்துச் சாமி” என்று யாராவது கூப்பிட்டுவிட்டால் போதும். சம்பளம் கொடுத்து வைத்துள்ள ஆள்கூட அவ்வளவு கடமை உணர்ச்சியோடு ஓடிவரமாட்டான்…..

எனவே அவனுக்கு வேலையும் வேலையிடும் எஜமானர்களும்
நிறையவே இருந்தனர்.

இரவு பதினோரு மணிக்குமேல் கோயில் பிரகாரத்தில் உபந்நியாசத்துக் காகப் போட்டிருந்த பந்தலடியில் இருளில் – நிலா வெளிச்சம் படாத நிழல்- கருங்கல் தளவரிசையில் வெற்றுடம்போடு மல்லாந்து படுத்திருந்தான் பூந்தோட்டத்துச் சாமி.

பிரகாரம் எங்கணும் கொட்டகையின் கீற்றிடையே விழுந்த நிலவொளி வாரி இறைத்தது போல் ஒளி வட்டங்களை அவன் மீது தெளித்திருந்தன…..

அவன் மனத்தில் அன்று காலையிருந்து உறுத்திக்கொண்டிருந்த ஒரு சம்பவமும். அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளும் சம்பந்தமற்றது போலும். சம்பந்தமுடையன போலும் குழம்பின.

செட்டியார் வீட்டு அம்மாளை. பிரார்த்தனையை எண்ணியபோது. வீட்டை விட்டுக் கோபித்துக்கொண்டு வடக்கே வெகு தூரம் ஓடிப்போன அவள் மகனின் நினைவும் அவனுக்கு வந்தது.

இன்று அதிகாலையில். பூந்தோட்டத்துச்செடிகளுக்கு அவன் நீர்வார்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் விம்மலும் அழுகையும் கலந்த பிரார்த்தனை கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது. மாணிக்கம் செட்டியாரின் மனைவி. குளித்து முழுகிய ஈரக் கோலத்தோடு கை நிறைய மஞ்சள் குவளை மலர்களை ஏந்திக்கொண்டு விநாயகர் சந்நிதியில் முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.

என் அப்பனே….. விக்னேஸ்வரா….. எனக்கு நீ குடுத்தது ஒண்ணுதான்… அவன் நல்லாயிருக்கும்போதே என்னைக் கொண்டு போயிடு தெய்வமே!…. அந்தக் குறையும் பட்டு வாழ முடியாது அப்பனே!…. அவன் எங்கே இருந்தாலும் ‘நல்லபடியாய் இருக்கேன்’னு அவன் கிட்டேருந்து ஒரு கடுதாசி வந்துட்டா வரவெள்ளிக்கிழமை உன் சந்நிதியிலே அம்பது தேங்காய் உடைக்கிறேன்….”

-தன்னையும், சூழ்நிலையையும் மறந்து அந்தத் தாய் அந்த நட்ட கல்லைத் தெய்வம் என்று நம்பிப் புலம்புவதைப் பூந்தோட்டத்துச் சாமியார் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தத் தள்ளாத சுமங்கக் கிழவியின் தாளாத ஏக்கம் – அவன் கண்களைக் கலக்கிற்று.

அவள் பிரார்த்தனை முடிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தபோது தன்னையே பார்த்தவாறு நிற்கும் பூந்தோட்டத்துச் சாமியாரைப் பார்த்தாள்.

“ரெண்டு நாளா ராத்திரியெல்லாம் தூக்கமில்லே சாமியாரே!….. நம்ம தம்பி இருக்கிறஊர்லேதான் இப்ப கடுமையா சண்டை நடக்குதாம்; ஆஸ்பத்திரி மேலே எல்லாம் குண்டு போடறானுங்களாமே பாவிங்க…… எங்கப்பன் விக்னேஸ்வரரு என்னைச் சோதிக்க மாட்டாரு….. அப்புறம் கடவுள் சித்தம்!” என்று பொங்கி வரும் கண்ணீரை மீண்டும் முந்தானையால் துடைத்துக் கொண்டாள் கிழவி.

“விக்னேஸ்வரர் துணையிருப்பாரு; கவலைப்படாதீங்க அம்மா” என்று பூந்தோட்டத்துச் சாமியும் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“சாமியாரே!…. உன் வார்த்தையை நான் விக்னேஸ்வரர் வாக்கா நம்பறேன். நீயும் அவர் மாதிரிதான்! என்று அவனை வணங்கி ஏதோ ஒரு நம்பிக்கையும் ஆறுதலும் தைரியமும் பெற்று அங்கிருந்து நகர்ந்தாள் கிழவி.

பூந்தோட்டத்துச் சாமியார் அந்தப் பிள்ளையார் சிலையை வெறித்துப் பார்த்தான்.

‘நட்ட கல்லைத் தெய்வம் என்று’ பாட்டு அவன் மனத்தில் ஒலித்தது.

“இந்தக் கிழவிக்கு இந்த நட்டகல் தரும் ஆறுதல் பொய்யா?” என்று தோன்றியது.

நல்ல வேளை அந்தப்பாடலை அவள் படித்திருக்கவில்லையே என்றெண்ணி மகிழ்ச்சியுற்றான் அவன்…..

மத்தியானம் பிரகாரத்தில் கொட்டகை வேய்ந்து கொண்டிருந்தார்கள். இன்றிருந்து ஒரு வாரத்துக்குக் கோயில் பகவத் கீதை உபந்யாசம் நடக்கப்போகிறது. யாரோ பெரிய மகான் பட்டணத்திருந்து வந்து கீதை சொல்கிறாராம். சாயுங்காலத்தில் கோயில் கொள்ளாத ஜனக்கும்பல் வந்து விடும். பூந்தோட்டச் சாமியாருக்கும்வேலைக்குப் பஞ்சமில்லை.

கொட்டகை போடுவதற்காக மூங்கில் கட்டி மேலே உட்கார்ந்து ஓலை வேய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு உதவியாய்க் கீற்றையும், கயிற்றையும் ஏந்தி, அண்ணாந்து நின்றுகொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

அப்போது அவனைத்தேடிக்கொண்டு வந்த தர்மகர்த்தா. “சாமி!
ஓடிப்போயி நம்ப பட்டாளத்துப் பிள்ளை வீட்டிலே அம்மாக்கிட்ட கேட்டு. கல்யாண சமக்காளம் இருக்காம் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாங்கன்னு கேளுங்க. ஓடுங்க” என்றதும். கையிருந்த கீற்றைப் போட்டுவிட்டு ஓடினான் அவன்.

அவன் பட்டாளத்துப் பிள்ளை வீட்டருகே வரும்போது அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு கூட்டமே கூடி நின்றிருந்தது.

பட்டாளத்துப் பிள்ளை என்று அழைக்கப்படும் பெரியசாமிப் பிள்ளை காலையிலும் மாலையிலும் பத்திரிகை படிக்கும் பழக்கமே அப்படித் தான்.

பட்சணக்கடை மணி முதலி ஜோசியர் வையாபுரி. எண்ணெய்க்கடை மாணிக்கம் இன்னும் கீழே சில சிறுவர்கள் நின்றிருந்தனர். மடியில் மூன்று வயதுள்ள தன் பேரப்பையனை உட்கார வைத்துக்கொண்டு பெரியசாமிப் பிள்ளை பழுப்பேறிய தமது நரைத்த மீசையைத் திருகிக்கொண்டு உற்சாகமான குரல் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.

பத்திரிகையிருந்து ஒரு செய்தியைப் படித்துவிட்டு,

“போடு…..! இந்தியான்னா இளிச்சவாயன்னு நெனச்சிக்கிட்டு இருக்கானுவளா? நம்ப ஊர்லே செஞ்ச விமானங்கள் ஐயா…. ஓய் செட்டி யாரே. இதைக் கவனியும் – ஜெட் விமானங்களை நொறுக்கிட்டு வருது ஐயா! சபாஷ் நானும் நெனைச்சிருக்கேன் ஒரு காலத்திலே…. நமக்கு எதுக்குப் பட்டாளம் – இந்தத் தேசத்து மேலே எவன் படையெடுக்கப் போறான்னு…. இப்ப இல்லே தெரியுது – அந்தக் காலத்திலே ஹிட்லர் செஞ்ச மாதிரி டாங்கிப் படையெ வெச்செ நம்ப அடிச்சுடலாம்னு திட்டம். இந்தியத் துருப்புகள் கைப்பற்றியிருந்த டாங்கியின் படம் பிரசுரிக்கப்பட்டிருந்ததை உட்கார்ந்திருந்தவர்களிடம் காட்டினார் பெரியசாமிப் பிள்ளை.

“பயங்கரமான டாங்கி! அந்தக் காலத்திலே இவ்வளா பெரிசு கெடையாது….. டாங்கின்னா என்னான்னு நெனக்கிறே….. ஊருக்குள்ளே பூந்துடுச்சின்னா அவ்வளவுதான்! ராட்சஸக் கூட்டம் வந்த மாதிரிதான். ஒண்ணும் பண்ண முடியாது – நம்ப ஊரிலே இப்ப டிராக்டர் வச்சு உழவு நடத்தல்லே அந்த மாதிரி ஊரையே உழுதுட்டுப்போயிடும்.. வீடு தெருவு கோயிலு எல்லாம் அதுபாட்டுக்கும் நொறுக்கித் தள்ளிட்டுக் காடு மலைன்னு பாக்காம குருட்டுத்தனமாப் போகும்! சும்மா…. நம்ப படைங்க அந்த மாதிரி டாங்கிகளைப் போட்டு நொறுக்கி விளையாடுது போ! அடடா…. நமக்கு வயசு இல்யே….. இருந்தா போயிடுவேனய்யா பட்டாளத்துக்கு!” என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கையில், வையாபுரி சோசியரின் தோளுக்கு மேல் எக்கி அந்த டாங்கியின் படத்தைப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

அவன் வந்து நிற்பதையே கவனிக்காத பிள்ளை தொடர்ந்து பத்திரிகையைப் படிக்கும்போது திடீரெனக் குரலைத் தாழ்த்தினார்: ஒரு மேஜரின் வீர மரணம் – புதுடெல். செப்டெம்பர் பதினேழு. சென்றபதிமூணாந் தேதியன்று சியால்கோட் அருகே நடந்த டாங்கிப் போரில் பகைவர்களால் சுடப்பட்ட மேஜர் முகமது ஷேக் வீர மரணம் எய்தினார்” என்பதைப் படித்துவிட்டு மௌனமாகத் தலைகுனிந்தார்
பிள்ளை.

அவர் மடியிருந்த குழந்தை அவரது மீசையைப் பிடித்திழுத்துச் சிரித்தது.

சில வருடங்களுக்கு முன் போர் முனையில் வீரமரணமுற்றஇப் பேரக் குழந்தையின் தகப்பனின் – தன் மகனின் – நினைவு வரவே உணர்ச்சி மயமானார் கிழவர்.

“சண்டையினாலே ஏற்படறநஷ்டங்களைப் பார்த்தீரா?” என்றார் சோசியர் வையாபுரி.

சிவந்து கலங்கும் விழிகளோடும் முகம் நிமிர்ந்தார் பிள்ளை.

“நஷ்டம் தான்…. அதுக்காக? மானம் பெரிசு செட்டியாரே. மானம்
பெரிசு!…” என்று குழந்தையை மார்புறத் தழுவிக்கொண்டு கத்தினார் பிள்ளை. “என் வாழ்க்கையிலே பாதி நாளுக்கு மேலே ரெண்டு உலக யுத்தத்திலே கழிச்சிருக்கேன் நான்….. என் ஒரே மகனையும் இந்தத் தேசத்துக்குக் குடுத்துட்டதிலே எனக்குப் பெருமைதான்….. அவன் சொன்னானாமே….. “பூ உதிரும் ஆனாலும். புதுசு புதுசாவும் பூக்கு” மின்னு….. ஆ! அவன் வீரனய்யா…. வீரன்…..” என்று மீண்டும் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்ட பிள்ளை. சற்று தானே தன் உணர்ச்சிகளைச் சமனப்படுத்திக் கொண்டு வழக்கமாய்ப் பத்திரிகை படித்து விவாதிக்கும் தொனியில் பேசினார்.

“நாம சண்டைக்குப் போகலே…. எவ்வளவோ பொறுமையாகவே இருந்திருக்கோம்…. நல்லவங்க எவ்வளவுதான் விரும்பினாலும் கெட்டவங்க உலகத்திலே இருக்கறவரைக்கும் சண்டை இருக்கும் போலத் தான் தோணுது…. ஆனா. எம் மனசுக்கு இது சந்தோஷமாத்தான் இருக்கு…. பாத்துடுவோம் ஒரு கை. சண்டை வேண்டியதுதான்” என்று மீண்டும் உணர்ச்சி வெறியேறி அவர் பிதற்றிக் கொண்டிருக்கையில் மாணிக்கம் குறுக்கிட்டுக் கேட்டார்:

“”சண்டை நடக்கிறது சரி. நீங்க சண்டை வேணும்னு சொல்லறது வேடிக்கையாய் இருக்கு. அதுவும் நீங்க. அந்தக் கொடுமையையெல்லாம் பார்த்த நீங்க – அனுபவிச்ச நீங்க – அப்படிச் சொல்லலாமா?” என்று கேட்டார். அப்போதுதான் பெரியசாமிப் பிள்ளைக்கும் நினைவு வந்தது. செட்டியாரின்மகன் – இப்போது நடக்கும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஜோத்பூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்கிற விவரம். அந்த – நினைவு வந்தததும் செட்டியாரின் முகத்தை ஒரு விநாடி உற்றுப்பார்த்துவிட்டு. அவரது தோளைப்பற்றி அழுத்தி. “பயப்படாதீர்! கடவுள் இருக்கிறான்” என்றார்.

அந்தச் சாதாரண நம்பிக்கைதான் செட்டியாருக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தது என்பது அந்நிலையிருந்து பார்க்கிறவர்களுக்குத்தான் தெரியும். பூந்தோட்டத்துச் சாமியாருக்கும் தெரிந்தது.

“ஐயோ! எவ்வளவு நாசம். எவ்வளவு அழிவு” என்று முணுமுணுத்துக் கொண்டார் சோசியர்.

“அழியாட்டிப் போனா வளர்ச்சி ஏது? ஒண்ணு சொல்றேன். கேளும். தர்மம்! தர்மம் மட்டும் அழியாது. அதர்மமும் அக்குறும்பும்தான் சண்டை வந்தா அழிந்தே போகும். சத்தியத்துக்குத்தான் போராடறகுணமும் உண்டு; பொறுத்திருக்கிறகுணமும் உண்டு. சண்டைன்னு வந்துட்டா அப்புறம் சண்டையெ நெனச்சி பயப்படக் கூடாது. சண்டையில்லாத காலமே கெடையாதே ஐயா!…. ராமாயண காலத்திலே. மகாபாரத காலத்திலே கூடத்தான் சண்டை இருந்திருக்கு…. யோசிச்சுப் பாரும். எந்தச் சண்டையிலேயாவது அநியாயம் ஜெயிச்சிருக்கா? சொல்லும்!…..”

-வந்த காரியத்தை மறந்துவிட்டு பிள்ளையின் பிரசங்கத்தை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

“யாரு. பூந்தோட்டத்துச் சாமியா? எங்கே வந்தீங்க?” என்றார் பிள்ளை.

உறக்கத்திருந்து விழித்தவனைப் போல் ஒரு விநாடி சுதாரித்து “தர்மகர்த்தா ஐயா ஜமுக்காளம் வாங்கிகிட்டு வரச்சொன்னாரு” என்றான்.

“உள்ளே போயிக் கேளுங்க…. அம்மா. கௌரி…..பூந்தோட்டத்துச்சாமி வராரு பாரு…. அந்தக் கல்யாண ஜமுக்காளத்தை எடுத்துக்குடு… மத்தியானமே கேட்டாங்க. மறந்துட்டேன்” என்று உட்புறம் திரும்பிக் குரல் கொடுத்தார் பிள்ளை.

“உங்களுக்கு சண்டையெத் தவிர வேறஎன்ன ஞாபகமிருக்கும்ஃஃ என்று உள்ளேயிருந்து ஒலித்த தன் மனைவியின் குரலை அவர் பொருட்படுத்தவேயில்லை.

வீட்டிற்குள்ளே வந்து கூடத்து வாசற்படி அருகே நின்றபூந்தோட்டத்துச் சாமியாரின் விழிகள் கௌரியைப் பார்க்கையில் கலங்கின. அவள் ஜமுக்காளத்தை எடுக்க அறைக்குள் போனாள். அப்போது கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ராணுவ உடையில் – பார்க்கப் பார்க்க விகசிப்பது போன்ற புன்னகையுடன் – உள்ள சோமநாதனின் போட்டோவை வெறித்துப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

சோமநாதன் ராணுவத்தில் சேர்ந்த அடுத்த வருஷம் லீவில் வந்திருந்த போது கோயிலுக்கு வந்து தன்னோடு பேசியிருந்து குசலம் விசாரித்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது மனத்தில் தோன்றின. பொழுது போகாததால் வீட்டைச் சுற்றிலும் புஷ்பச் செடிகள் பயிராக்க எண்ணித் தன்னிடம் செடிகளும் விதைகளும் வாங்கி வந்து பயிரிட்ட சம்பவங்களெல்லாம் பெருகி வந்து நெஞ்சை அடைத்தன.

அவன் திரும்பி நின்று அந்த வீட்டைச் சுற்றிலும் செழித்துக் கிடக்கும் புஷ்பச் செடிகளைப் பார்த்து மீண்டும் திரும்பி அந்தப் போட்டோவைப் பார்த்தான்.

வெளியே வீட்டுத் திண்ணையில் பெரியசாமிப் பிள்ளை ன்னும் மிகுந்த உற்சாகத்தோடு யுத்தச்செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தார்.

அன்று மாலை கோயில் பிரகாரத்தில் ஜனக்கும்பல் நிரம்பி வழிந்தது.

காவி நிறப் பட்டிலே அங்கி தரித்திருந்த அந்தப் பண்டிதர் மிக அழகாக கீதையை உபதேசம் பண்ணினார்; அந்தப் பண்டிதரின் ஒரு பழைய உதாரணம் பூந்தோட்டச் சாமியாருக்குப் புதுமையாகவும் மிகவும் பிடித்ததாகவும் இருந்தது. இந்த உடம்பு நம்ஆத்மாவின் சட்டை; சட்டை பழசானதும் ஆத்மா இதை உதறிவிடுகிறது…. “ஒன்றுமே செய்யாமல் ஒருவனுமே இருக்க முடியாது. எல்லா ஜீவன்களும் இயற்கையான தன்மையினாலே தமது இச்சையின்றியே ஏதாவது ஒரு தொழிலோடு பூட்டப்பட்டிருக்கின்றன. “ஹே! அர்ஜுனா… உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரம் உண்டு. பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதும் இல்லை…. அவ்விதமான கர்மத்தின் பயனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்து கொண்டிருக்கிறானோ அவனே துறவி. அவனே யோகி’ என்பதாகவெல்லாம் பகவான் சொல் யிருக்கிறார்…..

– கூட்டத்தினர் அனைவரும் அந்தப் பண்டிதரின் ஞான வாசகங்களை ஏதோ பாட்டுக் கச்சேரி கேட்பது போல இடையிடையே “ஹா ஹாஃ என்று சிலாகித்தவாறு கேட்டிருந்தனர்.

பூந்தோட்டத்துச் சாமியார் ஒரு மூலையில் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு தாடியை நெருடியவாறு அங்குப் பேசப்படும் மெய்ஞ்ஞானங்களையெல்லாம் ஹிருதய பூர்வமாகக் கிரகிப்பது போல் கூரிய நோக்கோடு நின்றிருந்தான்.

உபந்நியாசம் முடிந்து கூட்டம் கலைந்த பிறகு பிரகாரத்தின் கருங்கல் தள வரிசையில் ஓர் ஓரமாய்ப் படுத்து வானத்தை வெறித்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்கு ஏனோ அடிக்கடி அந்தச் சோமநாதனின் முகமே எதிரில் வந்து தோன்றுகிறது.

பத்து வருஷங்களுக்கு முன் தனக்கு யாருமே பந்தம் இல்லாது போனதன் காரணமாய்ப் பிறந்த ஊரைவிட்டு ஓடிவந்துவிட்ட தன்னைப் பற்றியும் அவன் யோசிக்கிறான்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை ராணுவத்திலேயே கழித்துவிட்டு. தன் ஒரே மகனையும் யுத்தத்தில் இழந்து விட்டு. இன்னும்கூட மனத் தளர்ச்சியில்லாமல் தர்மத்தின் தன்மைகளைப் பற்றிப் பேசுகின்றபெரியசாமிப் பிள்ளையை விட. கீதை உபந்நியாசம் பண்ணிய அந்த மகா பண்டிதர் எந்த விதத்தில் துறவி என்று எண்ணிப் பார்க்கிறான் அவன்.

அவன் வெகுநேரம் உறக்கமில்லாது வெறித்த விழிகளோடு எதை எதையோ சிந்தித்தபின். ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் அங்கிருந்து எழுந்து நடந்து கோயிலை விட்டு வெளியேறினான்….

பிறகு அவன் திரும்பவே இல்லை!

ஒரு நாள் கடைத்தெருவில் பெரியசாமிப் பிள்ளையைப் பார்த்த கோயில் குருக்கள் மனம் பொறுக்காமல் அங்கலாய்த்துக் கொண்டார். “மடப்பள்ளியிலே ரெண்டு வேளை சாப்பாடு போட்டு நல்லபடியா வெச்சிருந்தேன்…. ஓய் பிள்ளை. இதைக் கேளும்!….. அந்தப் பூந்தோட்டத்துச் சாமியார் பய சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ ஓடிட்டான்…..

நாலைஞ்சு நாளாச்சு….. நீர் எங்கேயாவது பார்த்தீரா?”

அப்போது ஒரு ராணுவ லாரி அவர்களைக் கடந்தது. பெரியசாமிப் பிள்ளை தமது வழக்கமான ஆர்வத்துடன் அந்த லாரி நிறைய நிற்கும் ராணுவ வீரர்களைப் பார்த்தார்.

சற்றுத் தள்ளிச் சென்று லாரி நின்றது…..

அதிருந்து ஒரு ராணுவ வீரன் “தொபீரெனக் குதித்து “சரக் சரக்ஃ கென நடந்து வந்தான்….

தன் மகன் சோமநாதனே வருவது போன்றபிரமிப்பில். வருவது யார் என்று தெரியாமல் பரவசமாகி நின்றிருந்தார் பிள்ளை.

வந்தவன் பேசிவிட்டுப் போகட்டும் என்றநினைப்பிலோ, பட்டாளத்துக்காரன் என்ற பயத்திலோ குருக்கள் தெருவோரமாய் விலகி நின்றார்.

அருகில் வந்த நின்றஅந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்து, “தெரியலயே” என்றார் பிள்ளை.

“நான்தாங்க….. பூந்தோட்டச்சாமி. தெரியங்கள? என்ன சாமி….. உங்களுக்குமா தெரியலை? உங்ககிட்ட எல்லாம் சொல்லிக்காம போறேனேன்னு நெனச்சேன்…. நல்ல வேளை பார்த்துட்டேன்…. ரயிலுக்குப் போறோம். வரட்டுங்களா?” என்று கைகூப்பி நிற்கும் அவனை வெறித்துப் பார்த்த பிள்ளை. அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டார்.

மழுங்கச் சிரைத்த மோவாயும் உதட்டுக்கு மேல் முறுக்கிவிட்ட மீசையும்…… கிராப்புத் தலையும். காக்கிச் சட்டைக்குள் புடைத்துக் கவசமிட்டது போல் கம்பீரமாய் உயர்ந்த மார்பும்……

“சபாஷ்” என்று அவன் முதுகில் தட்டினார் பிள்ளை.

சட்டையில்லாத வெற்றுடம்பில் அரைத்துண்டும். தலை நிறைய முடியும். தாடியுமாய் இருந்த அந்தப் பழைய கோலத்தையும் இந்தப் புதிய கோலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த குருக்கள்-

“சட்டையெல்லாம் போட்டு. தாடியை எடுத்திட்டு…. நம்ப பூந்தோட்டத்துச் சாமியா? நம்ப முடியயே…” என்று கண்களைச் சிமிட்டினார்……

அவன் சிரித்தான்.

“ஆத்மாவுக்கு உடம்பே ஒரு சட்டைதானுங்களே….. இந்த ஆத்மாவுக்கு அந்தச் சட்டையே சம்பந்தமில்லே….. அதுக்கு மேலே எந்தச் சட்டெயப் போட்டுக்கிட்டாத்தான் என்ன? சொல்லுங்க சாமி?” என்றான்.

இந்தக் காக்கி உடுப்புக்குள் இருந்து இந்த வார்த்தை வருவதைக் கேட்கப் பிடிக்காத குருக்கள் குறுக்கிட்டார்:

“இந்தப் பேச்சையெல்லாம் இனிமே விடு. நீ வாழ்க்கையெ வெறுத்துச் சாமியாரா இருந்தப்போ அது சரி….. இனிமே பொருந்தாது” என்றார் அவர்.

“வாழ்க்கையெ வெறுத்தா? வாழ்க்கையெ வெறுத்தவன் தற்கொலை பண்ணிக்குவான் சாமி – சாமியாராகிறதில்லே…..” என்றான் அவன்.

தூரத்தில் அவனுக்காக நின்றலாரி ஹாரனை முழக்கிற்று.

“அப்போ நான் வர்றேன்ஃஃ – என்று பெரியசாமியையும், குருக்களையும் மீண்டும் வணங்கி விட்டு இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு லாரியை நோக்கி அந்தப் ‘பூந்தோட்டச்சாமி’ ஓடுவதைக் குருக்களும் பிள்ளையும் பார்த்தவாறு இருந்தனர்.

“ம் அவன் துறவிதான்” என்று தீர்மானமாகச் சொன்னார் பிள்ளை.

குருக்கள் கண் கலங்கப் பெருமூச்சுவிட்டார்.

– 03 அக்டோபர் 1965

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *