சங்குத் தேவனின் தர்மம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 17,439 
 

முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள்போல் முறுக்கு விற்ற பணத்தினாலோ, ரங்கூனிலிருந்து திடீரெனத் தோன்றும் தமையனின் ஐசுவரியத்தினாலோ கோடீசுவரியாகி விடவில்லை. வறுமையில் குசேலரின் தமக்கை. சமயக் குரவர்கள் இயற்றும் அற்புதங்கள் என்ற செப்பிடு வித்தைகள் நடவாத இந்தக் காலத்தில் அவள் தினந்தினம் காலந் தள்ளுவதுமல்லாமல், தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்ததுதான் அற்புதத்திலும் அற்புதம்.

நமது இந்து சமயத்தின் பழைய உலர்ந்துபோன கட்டுப்பாடுகளின் கைதிகளாக ஏழைகள்தாம் தற்போது இருந்து வருகிறார்கள். ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்சக் காலமாவது கன்னிகையாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலைமையைவிட கன்னியர்கள் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள். ஆனால் ஒரு கன்னிகையோவெனின் அவதூறு, உலகத்தின் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்களின் மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது. இவ்வளவும் முத்தாச்சிக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ வின்டில் (ஜ்ண்ய்க்ப்ங்) துரை பங்களாவில் பங்கா இழுக்கும் மாடசாமி பிள்ளைக்குத் தன் மகளைக் கொடுக்க நிச்சயித்துவிட்டாள். நாளை காலையில் கலியாணம்.

சாயங்காலம் ஐந்தரை மணியிருக்கும். முறுக்குப் பாட்டி தங்கவேலு ஆசாரியின் வீட்டுத் திண்ணையில், சுவரருகில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாள். செம்பாதி நரைத்த தலை, ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் (ஞ்ழ்ஹல்ட்) போட்டுக்காட்டுவதுபோல கோடுகள் நிறைந்த முகம், பாம்படமில்லாது புடலங்காய்த் துண்டுகள் மாதிரி தொங்கும் காதுகள், “இந்திரன் கலையாய் என் மருங்கிருந்தான்’ எனக் காணப்படும் சம்பிரதாயமாய்ப் புடவை என்ற இரண்டு வெள்ளைத் துண்டுகள் (ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்தவை) இவள் பணக்காரியல்லள் என்பதை இடித்துக் கூறின. கையிலிருந்த உலர்ந்த வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, அதற்குத் துணையாக ஒரு நீளத்துண்டு கருப்பட்டிப் புகையிலையையும் உள்ளே செலுத்தி, கைகளைத் திண்ணையில் துடைத்துவிட்டு, “ஆசாரியாரே! என்ன? வேலையெ சுருக்கா முடியும். மோசம் பண்ணிப்பிடாதீரும்” என்றாள்.

“ஆச்சி! பயப்படாதே, பொழுது சாயிரத்துக்கு மின்னே ஒன் வேலெ முடிஞ்சிடும்!” என்று, தன் கையிலிருந்த பாம்படத்திற்கு மெருகிட்டுக் கொண்டே தேற்றினான் தங்கவேலு ஆசாரி. போன மூன்று மாதகாலமாக மாதாந்தரம் நடந்து, அன்று விடியற்காலை முதல் உண்ணாவிரதமிருந்த முறுக்குப் பாட்டிக்கு இது ஆறுதலளித்ததோ என்னவோ? ஒரு பெருமூச்சுத்தான் வந்தது.

பிறகு சில நிமிஷங் கழித்து, புன்னகையுடன், “நான் கைலாசவரத்துக்குப் போகணும். வழி காட்டுப்பாதை, இன்னம் நான் போய்த்தான் மேலெ வேலையைப் பாக்கணும். எல்லாம் அப்படி அப்படியே கெடக்கு” என்று பின்னும் துரிதப்படுத்தினாள்.

“ஒன் வேலெ அன்னைக்கே முடிஞ்சிடும். அந்தச் சிறுகுளம் சுப்பையர் வேலை வராட்டா. அவர்தான் விடேன் தொடேனுன்னு அலஞ்சு சாமானை நேத்துத்தான் வாங்கிட்டுப் போனார். இல்லாட்டா ஒரு நொடிலெ; இதென்ன பெரிய காரியமா? அது சரிதான், இருக்கட்டும் ஆச்சி. ஒன் வீட்டிலே இதுதானெ முதல் கலியாணம். செலவு என்ன ஆகும்” என்று பேச்சையிழுத்தார் ஆசாரி.

“என்னமோ, ஏளெக்கு ஏத்தாப்பிலே, எல்லாம் சேந்து ரெண்டு நூறு ஆகும்”என்றாள்.

“நகை எம்பிட்டு?”என்று மீண்டும் பேச்சைப் பெருக்கினார் ஆசாரி.

“எல்லாமென்ன, அந்த எங்க வீட்டுக்காரர் போனாரே அவர் போட்டதுதான், என்ன ரெண்டு மோருதம், இப்பொ நீர் அழிச்சுப் பண்ணற ஒரு சோடு பாம்படம், வேறு செலவு என்ன, ஒரு அம்பது, அது கெடக்கட்டும், வேலே என்ன இப்பொ முடியுமா?”என்று மீண்டும் ஒரு முறை கேட்டாள்.

“இதோ! நீதான் பாத்துக் கொண்டிருக்கயே! ஏங் கைக்கிச் செறகா கட்டியிருக்குது? வேலையெ ஒட்டத்தான் செய்யிறேன். அவரசப்படாதே…நீ இந்தச் சமுசாரத்தைக் கேட்டியா? ஊருலெ களவுங்கிளவுமாயிருக்கே? அன்னைக்கி நம்ப மேலப் பண்ணை வீட்டிலெ 2000-த்துக்குக் களவாம்! காசுக்கெட செட்டியாரு பத்தமடைக்கிப் போயிட்டு, வட்டிப் பணத்தை மடிலே முடிஞ்சுகிட்டு வந்தாராம்; மேலப் பரம்பு கிட்ட வாரப்போ, பொளுது பல பலன்னு விடியாப்பிலே, வந்து தட்டிப் பறிச்சுக்கிட்டுப் போயிட்டான்; செட்டியாரு வயித்திலே அடிச்சுக்கிட்டு வந்தாரு. காலங் கெட்டுப்போச்சு! இதெல்லாம் நம்ம கட்டப்ப ராசா காலத்துலெ நடக்குமா?”என்றான் ஆசாரி.

“இம்பிட்டுஞ் சேசுபிட்டுப் போனானே அவனாரு”என்றாள் கிழவி.

“அவன்தான் நம்ம சங்குத்தேவன். எல்லாம் இந்தக் கும்பினியான் வந்த பிறவுதான்! ஊர்க்காவலா எளவா? எல்லாம் தொலைந்து போயுட்டதே!”

“சவத்தெ தள்ளும். எம் பாவத்துலெ வந்து விழாமெ இந்த மூங்கிலடியானும் பேராச்சித் தாயுந்தான் காப்பாத்தணும்…என்ன ஆச்சா?”

“இரு, இரு ஒரு நொடி. இதெ மாத்ரம் ராவித் தாரேன்”என்று சொல்லி, ராவப்பட்ட பாம்படத்தையும், தங்கப் பொடியையும் இரண்டு சிவப்புக் காகிதங்களில் மடித்து மரியாதையாகக் கொடுத்தான். முத்தாச்சியும் மடியிலிருந்த முடிப்பையவிழ்த்து ஒரு கும்பினி ரூபாயை வைக்க,”என்ன! ஒனக்காக இன்னக்கி முச்சோடும் கஞ்சிகூடக் குடியாமெ பண்ணித்தர, நல்ல வேலெ செஞ்சை”என்றான்.

“என்னெத்தான் தெரியுமே, ஏழெக்கி…”

“அப்படின்னா தொள்ளாளிக்கிக் கூலி குடாம முடியுமா?”என, அவனுடன் வாதாட நேரமில்லையென்று கருதிக் கேட்டதைக் கொடுத்துவிட்டு, நகையைப் பத்திரமாக முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டு வெகு வேகமாய்க் காலாழ்வானைத் தட்டிவிட்டாள் கிழவி.

எவ்வளவு வேகமாக நடந்தாலும், மனித உடல் என்ன மோட்டார் வண்டியா? அதிலும் ஒரு கிழவி! கவிஞர் வெகு உற்சாகமாக வருணிக்கும் “அந்தி மாலை’போய், இரவு துரிதமாக வந்தது. கிழவி போகும் பாதை ராஜ பாதையானாலும், அக்காலத்தில் ஜனநாட்டமேயில்லாமல் மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப்பாதை. இருள் பரவ ஆரம்பித்தது என்றால், வெகுவாக அர்த்த புஷ்டியுடைய வார்த்தைகள் அல்ல-கிழவி கூறிய மாதிரி “தன் கை தெரியாத கும்மிருட்டு’

கிழவி இதுவரை பேய்க்கும் பயப்பட்டவள் அல்லள், திருடருக்கும் பயப்பட்டவள் அல்லள். ஆனால் இன்று, ஒவ்வொரு மரத்தடியிலும் ஒவ்வொரு சங்குத் தேவன்! மரக்கிளைகள் மீது குதிக்கும் தருவாயில் பதுங்கியிருக்கும் சங்குத்தேவன்! இவ்வாறு ஒவ்வொரு மரத்தைத் தாண்டுவதும் ஒரு வெற்றியாக, தனது மனவுலகில் தோன்றும் சங்குத் தேவர்களிடம் தப்பித்துக் கொண்டே செல்கிறாள்.

இப்படி அவள் தவித்துத் தவித்துச் செல்லும்பொழுது, தனக்கு முன் சிறிது தூரத்தில் ஓர் இருண்ட கரிய உருவம் தோன்றலாயிற்று. கிழவியின் வாய் அவளையறியாமலே, “சங்குத்தேவன்!” என்று குழறிற்று. கால் கைகள் வெடவெடவென்று நடுங்கின. முன் அடியெடுத்துக் வைக்க முடியவில்லை. மடியை இன்னொரு முறை இறுக்கிச் சொருகிக் கொண்டு, “ஏ, மூங்கிலடியான்! நீதான் என்னைக் காப்பாத்தணும்!”என்று ஏங்கினாள். அந்தக் கரிய உருவம் தான் போகும் திசையில் இருளில் மறைவதைக் கண்டவுடன், அதுவும் தன்னைப் போன்ற பாதசாரியாக இருக்கலாம் என்று நினைத்தாள். மூங்கிலடியான் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, “அதாரது! ஐயா! ஐயா!”என்று கூவிக்கொண்டே நடக்கலானாள்.

“யாரங்கே கூப்பாடு போடுவது?” என்ற கனத்த ஆண் குரல் இருளோடு வந்தது.

“சித்த பொறுத்துக்கும், இதோ வந்தேன்!”என்று நெருங்கினாள்.

தலையில் பெருத்த முண்டாசு, நீண்ட கிருதா, வரிந்து கட்டின அரை வேஷ்டி, திடகாத்திரமான சரீரம், அக்குளிள் ஒரு குறுந்தடி-இவ்வளவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவாரம்பித்தன. சரீர ஆகிருதியைப் பார்த்ததும் கிழவிக்குப் பெரிய ஆறுதல். இனிக் கவலையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையினால்.

“ஏ கெழவி! இந்தக் கும்மிருட்டிலே நீ எங்கே கெடந்து வாரே?”என்றான் அந்த அந்நியன்.

“நான் இங்கென இருந்துதான். எம்பிட்டுப் பறந்து பறந்து வந்தாலும் கெழவிதானே! பொளுது சாஞ்சு எத்தினி நாளியிருக்கும்? நான் போயித்தானே கொறெ வேலெயும் முடியணும். நாழி ரொம்ப ஆயிருக்குமா?”என்று கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.

“பொழுதா? நேரம் ஒண்ணுமாகல்லே! நீ எங்கே போறே?”என்றான் துணைக்கு நடந்த பாதசாரி.

“நான் எங்கே போனா என்ன? ஒரு ஆளப் பாக்கணும் அதுதான்!”

“நீ என்ன சாதி?”

“நாங்க வெள்ளாம் புள்ளெக (வேளாளர்கள்) நீரு?”

“நான் தேவமாரு”

“தேவமாரா! என்ன அய்யா, இப்படியும் உண்டா? சங்குத்தேவன் ஊரெல்லாம் இப்பிடி கொள்ளெ போடுறப்ப, நீங்க பெரிய மனிசரெல்லாம் சும்மா இருக்கலாமா? அந்த அநியாயத்தெ நீங்க பாத்துச் சும்மா இருக்கலாமா? கலிகாலமா?”என்றாள்.

“கிழவிக்கு வாய்த்துடுக்கெப் பாரு!” என்று கோபித்தவன், கலகலவென்று சிரித்துவிட்டு பிறகு, “நீ என்னமோ தெரியாமே பேசுறயே. அவன் வேற கிளை, நான் வேறே. அந்தப்பய கொண்டயங்கோட்டையான், நான் வீரம் முடிதாங்கி…ஆமாம் கிழவி, ஏன் பதறிப் பதறிச் சாகிற?”

என்று கேலியாகக் கேட்டான் அந்தத் தேவன்.

“ஆமாம்! எங்கிட்டெ லெச்ச லெச்சமா இருக்கு, நான் பதறரேன்”என்று ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“பொய் சொல்லாதே. மடிலே கனமிருந்தா, வழிலே பயம்”என்று சிரித்தான் அந்த அந்நியன்.

“ஒம்ம கிட்ட உண்மையெச் சொன்னா என்ன? என் மகளுக்குக் கலியாணம். நான் போயித்தான் நாலு வேலெ பாக்கணும். ஒரு சோடு பாம்படம் வாங்கிக்கிட்டுப் போரேன். ஏதோ பகட்டா செய்தாத்தானே நாலு பேரு மதிப்பான்”என்றாள் கிழவி.

“பாம்படமாவதிருக்கே!”என்று கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு, “எத்தினி மக்கள் உனக்கு? மகள் என்ன மூத்ததா?”என்று கேட்டான். அவன் கண்களும் மனமும் கிழவியைத் துருவிக்கொண்டிருந்தன.

“எல்லாம் ஒத்தைக்கொண்ணுதான்”

“சரி”

பிறகு இருவரும் பேசாமல் நடந்தனர். அந்த மறவன் கிழவியை நோக்குவதும், பிறகு குனிந்து யோசிப்பதுமாக நடந்தான்.

சற்று நேரத்தில் கிழவி,”அதோ கோயில் தெரியுது. நான் இனிமெ போயிக்கிடுவேன்”என்றாள்.

“ஏ ஆச்சி! நில்லு, ஒரு சமுசாரம். நீ ஏழெதானெ? இன்னா இதெ வச்சுக்க! முதல் பேரனுக்கு என் பேரிடு!”

“நீங்க மகராசரா இருக்கணும். என்ன பேரு இட?”

என்று சொல்லிக் கொண்டே, தனது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் மதி மயங்கிக் கையை நீட்டினாள்.

“சங்குத்தேவரின்னு!”

கையில் வாங்கிய பணப்பை பொத்தென்று விழுந்தது. “வேண்டாம். வேண்டாம்! என்னெ விட்டிருங்க. நான் ஓடிப்போறேன்!”என்று பதறினாள்.

“இல்லெ ஆச்சி, எடுத்துக்கொ! ஒன்னெ கண்ணாணை ஒண்ணுஞ் செய்யலே!”என்று கையில் கொடுத்து அனுப்பினான். கிழவியும் திரும்பிப் பார்த்தபடியே இருட்டில் மறைந்தாள்.

சங்குத் தேவன் அங்கிருந்த கல்லில் சற்று உட்கார்ந்தான். குழம்பிய மூளை சரியானது போல் தெரிந்தது.”ஆமாம், கிழவி திடுக்கிட்டுப் போயிட்டா. ஒண்ணா ரெண்டா, நூறு! இதுவும் ஒருவேடிக்கெதான்! சங்குத்தேவனெக் கெழவி…”என்று முனகிக்கொண்டே எழுந்து ஓர் ஒற்றையடியப் பாதையில் நடந்தான்.

– காந்தி, 25-04-1934, தினமணி செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *