கோளறுபதிகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 9,634 
 

பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே நுழைந்தேன். ஆஸ்பத்திரிகளுக்கே உரிய அந்த நெடி கனமாக வீசிற்று. கூடவே ஈக்களும் திரிந்தன. நான் OPD க்குள் நுழையும் தருவாயில் எனக்குப் பின்னே ஒரு கனமான வாகனம் உறுமியபடி வந்து நின்றது. தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலே ஒரு எலுமிச்சம்பழத்தைப் புதைத்து வைக்கலாம் எனத்தோன்றுபடி ஒரு பள்ளம் பறித்திருந்தது. அதன் ஓரத்திலிருந்து கிழிபட்டுப்போன தோலோ, தசையோ ஒரு ஜாண் நீளமுள்ள ஒரு சிவந்த பேப்பர் நாடா போன்று காற்றில் துடித்தது. மிகுதிக் கரம் முழுக்க காய்ந்த இரத்த ஓடைகள் கறுத்துப் போயிருந்தன. பள்ளத்திலிருந்து உறைந்த களி போன்ற இரத்தம் சொட்டுச் சொட்டாக பாகுத்தன்மையுடன் ஒழுகித் தரையில் விழுந்தது. தரை அதை அவசர அவசரமாக விழுங்கிற்று.

ஒரு ஸ்ரெட்சரில் பிரதேசம் கிடத்தப் பட்டிருந்தது. மறுகரம் சேதமெதுவுமின்றிச் சுத்தமாக இருந்தது. ஆனால் வலிப்பினால் மிகவும் முறுக்கேறி ஸ்ரெட்சரின் ஓரத்தைப் பற்ற விளைந்தது போல் பாவனை காட்டிற்று. விறைப்பேறிய நிலையிலும் அந்தக்கரம் வாளிப்பாகவும் மென்மையாகவும் இருந்தது.

ஒரு பெண்ணின் பிரதேசம் தான்.

சனங்கள் சிலர் கூடினார்கள். கூடவே ஈக்களும். ஓரு ஓடலிப் பையன் இன்னெரு ஸ்ரெட்சரை ஓசையெழத் தள்ளியபடி அவசரமாக வந்தான். தோசையைத் திருப்பிப் போடுவதுபோல அசிரத்தையுடனும், இலாவத்துடனும் பிரேதத்தை தனது ஸ்ரெட்சருக்கு புரட்டிப் போட்டுக் கொண்டு OPD ஐ நோக்கி ஓடினான். அவனுக்கு வீட்டுக்குப் போகும் அவசரம் போலும்

அவ்வளவாக உயரமில்லை. சாதாரணமாக பெண்கள் வீட்டில் அணியும் உடைகள் அணிந்திருந்தாள். முழங்கால்களுக்கு கீழே உள்ள வாளிப்¡ன தசைப்பிடிப்பான கால்கள் விறைத்துப் போய் திகம்பரமாகத் தெரிந்தன. முகம் முழுக்க இரத்தவிளாறாக அடிக்கப்பட்டிருந்தது. இடது புருவத்துடன் கூடவே ஒரு குண்டு பாய்ந்திருந்தது. அவ்விடத்தில் ஒரு புடைப்பு. அதிலிருந்து இரத்தக் கூழ் ஒழுகிற்று. மற்றைய குண்டு இடது மார்பில் பாய்ந்திருக்க வேண்டும். சட்டையின் மேற்புறம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது.

சேதமாகிப் போன மேல் சட்டையினூடு வெளுப்பான திரட்சியான மார்புத்தசைகள் தெரிந்தன. ஒரு ஆணின் ஸ்பா¢சத்தையோ, ஒரு குழந்தையின் இதழ்களையோ அனுபவத்தறிந்திராத மார்பகங்கள்.

ஆகக் கூடினால், இருபது வயதிருக்கலாம்.

OPD யிலிருந்து ஒரு டாக்டரம்மா ஸ்டெதஸ்கோப்பையும், வார்த்தைகளையும் சுழற்றி வீசிய வண்ணம் வந்தாள். அவளுக்கு நிறைந்த களையான முகம். கூடவே ஒரு தாதி. முகம் முழுக்க பருக்களும் பீதியும்.

பிறகு சனங்களும் ஈக்களும். சனங்களுக்கென்ன, எல்லாமே புதினம் தான்! ஈக்களுக்கு ருசிமிகுந்த சாப்பாடு!!

ஆளரவம் அடங்கிக் கொண்டிருக்கும் ஒடுங்கிய நீண்ட ஆளோடிகளினூடாக நடக்க ஆரம்பித்தேன். எனக்கு முன்னே நடுத்தர வயதைக் கடந்த மெலிந்த உயரமான ஒரு பெண்ணும், அவளைத் தாங்கியபடி வேறும் ஒரு பெண்களும் போய்க் கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு தொடைகளில் கூனிய முதுகுடன், கால்களைப் பதனமாக எடுத்து வைத்து தள்ளாடித் தள்ளாடி மெல்ல அவள் நடந்து கொண்டிருந்தாள். அவர்களைக் கடக்கும் போது ஓரப்பார்வையால் பார்த்தேன்.

அந்தப் பெண்ணின் முகத்திலுள்ள தசைகள் யாவும் ஒருவாறு கோணிப்போய் துடித்தன. வாயும் கண்களும் அகல விரிந்திருந்தன. கண்களில் அதிர்ச்சியும் ஏக்கமும் தேங்கிப் போய்க்கிடக்க, வாய் சில வார்த்தைகளை வெளிப்படுத்த முயல்வதாய் மெல்ல அசைய உன்னியது.

அவளுக்கு நோயல்ல, துக்கம்! தாங்க முடியாத துக்கம். அழுது குழறுவதால் மட்டும் அப்படியான துக்கங்களை முழுமை வெளிக்கொணர முடியாது. அனேகமாக அவளது கணவனோ, குழந்தையோ எங்காவது குண்டு வெடிப்பிலோ, துப்பாக்கிச் சூட்டிலோ மிக மோசமாகக் காயப்பட்டிருக்க வேண்டும். இறந்து கூடப் போயிருக்கலாம்.

நான் ஒரு பத்தடி தூரம் கடந்திருப்பேன். பின்னாலிருந்து ‘ஐயோ ஐயோ ஐயோ’ என ஈனஸ்வரத்தில் மூச்செடுக்க முடியாத அவதியுடனம் அவசரத்துடனும் ஒரு குரல் பிறந்தது. வர வர அதன் ஸ்தாயி கூடி உரத்த வீரிடல்களாகத் தெறிந்தது. ஒடுக்கமான ஆளோடியின் இருபுறமும் உயர்ந்திருந்த சுவர்களுக்குள்ளும் கூரையின்கீழும் திரிகின்ற அசுத்தமான காற்று அந்த அவலக் கூக்குரலினால் மேலும் அசுத்தமாக்கப்பட்டு என் நெஞ்சினுள் புகுந்து கொண்டது.

இன்னும் ஒரு நொடிகூட அந்தக்காற்றை என்னால் சுவாசிக்க முடியாது. என்னால் எதையும் காணமுடியாது. அவசர அவசரமாகத் திரும்ப நடந்தேன்.

வெளியே சைக்கிள் பார்க்கின் முன்புறம், தேவனைச் சந்தித்தேன். வெகுகாலத்துக்குப் பிறகு அவனைக் கண்டதில் சிறிய மகிழ்ச்சியும், பெருவியப்பும் ஒருங்கே எய்தினேன். கூடவே கொஞ்சம் பயமும்….


தேவனை நான் கடைசியாகக் கண்ட போது ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருப்பதாகச் சொன்னான்.

“அரசியல்லை தோத்தவனும், புறமொதுக்கப் பட்டவனும் இலக்கியத்திலோ அல்லது வேறேதாவது கலைத்துறையிலோ ஈடுபடவேண்டியது அவசியம்…., மச்சான்” என்றான்.

பிறகு, “அதுக்கிடையிலை நான் செத்தாலும் செத்துபோவன் போல கிடக்கு” என்றபடி ‘ஹோ…ஹோ’ என போலிக்குரலில் சிரித்தான்.

கூடவே, “மாட்டன்…” என சங்கல்பமும் செய்தான்.

அதன்பின் இன்று தான் அவனைக் காண்கிறேன். முன்னரைவிட கொஞ்சம் பருந்தும், உற்சாகமாகவும் இருந்தான். வழக்கம்போல இதழ்கள் சிவக்க, வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பித் துப்பிக்கொண்டிருந்தான்.

தேவனை நான் முதன் முதலாகக் கண்டபோது அவனது ‘அய்யா’வின் கைகளைப் பற்றிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது சிலேற் மிகவும் பழையதாகவும் அழுக்கேறிக் கீறல் விழுந்ததாகவும் இருந்தது. புத்தகம்கூட மேலுறையை உரித்து விட்டும் பக்கங்கள் எல்லாம் ஓரம்மடிந்தும் காணப்பட்டது. எனது சிலேற்றும் புத்தகமும் புத்தம் புதியனவாயும் மிளிர்ந்தன. புத்தகத்திலிருந்து புதிய காகிதத்தின் இனிய மணமும், சிலேற்றிலிருந்து காய்ந்த மண்ணின் வாடையும் வீசின.

தேவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காக வருவது கிடையாது வரும் நாட்களிலும் அனேகமாக வாங்கின் மீது ஏறி நிற்பது கட்டாயமாகப் பட்டது. எல்லாப் பாட வேலைகளிலும் அநேகமாக அடி வாங்கினான். கணக்குப்பாட வேளைகளில் அகோர அடி விழுந்தது. ஆனால் அவன் அழுவது கிடையாது. கல்லுளி மங்கன் போல முழித்துக் கொண்டே நிற்பான். அவன் மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தவன். எனினும், எட்டாம் வகுப்புக்குப் பிறகு அவன் பாடசாலைக்கு வரவில்லை.

அதன் பின், அவனது ‘அய்யா’வுக்குப் பின்னால், அவனும் ஒரு பழைய, பொ¢ய ‘கா¢யர்’ பூட்டிய சைக்கிளில் ஓலைப்பறியுடன் வலைகளைப் பொதிந்து ஏற்றியபடி முன்னால் சற்றே வளைந்தவனாய் சைக்கிளை உழக்கிக் கொண்டு ‘வீச்சு’க்குப் போகக் காண்பேன். அந்நாட்களில் தான் அவன் வெற்றிலை போடப பழகியிருக்க வேண்டும்.

தேவனது வீட்டுக்கு ஒரே ஒருதரம் போயிருக்கிறேன். அது எங்களது வீட்டிலிருந்து முக்கால் மைல் தூரம் தள்ளியிருந்தது. ஒரே ஓலைக் கூரையின் கீழான ஒரு சிறு அறையும், சற்றே அகன்ற காற்றோட்டமான மாலும் தான் வீடு. அறையின் சுவர்கள் தென்னங்கீற்றுகளால் நெருக்கமாக அடைக்கப்பட்ட தட்டிகளினால் ஆனவை. மாலுக்குள் கிடந்த தீராந்திகளிலும் வேலிகளிலும் வலைகள் கிடந்து மீன் நாற்றத்தை ஈன்றன. பக்கத்திலே இன்னுமொரு சிறு கொட்டில். அது அடுக்களை. அதற்குள் நுழைவதெனில், ஆள்பாதியாக மடியவேண்டும். எந்நேரமும் அதற்குள் புகை வண்டிச் சுழலும்.

எனக்கொரு பழையவலை அவசரமாகத் தேவைப்பட்டது. எங்களது தோட்டத்தில் நிறைய தக்காளிகள் இருந்தன. கிளிகளின் தொல்லை பொறுக்க முடியாமல் இருந்தது. வலைபோட்டால் கிளிவிழாது என அப்பு ஆலோசனை சொன்னார். ஆனாலும் ஒரே ஒரு கிளியாவது வலையில் விழவேண்டும் என நான் உள்ளூர ஆசை வைத்திருந்தேன். தேவனிடம் வாங்கப் போகும் வலையில் சிறு துண்டொன்றை வெட்டியெடுத்து ‘கிளிக்கூண்டு’ ஒன்றை செய்யும் உத்தேசமும் எனக்கு இருந்தது. அந்த வலையை கிளிகள் அறுக்க மாட்டா என அந்த இரண்டுங்கெட்டான் வயதிலும் பேதமையுடன் நான் நம்பினேன்.

மாலின் ஒரு மூலையில் ஒரு பழைய ‘சன்லைட்’ பெட்டியும் அதற்குள் நிறையப் புத்தகங்களும் கிடந்தன. அவை எல்லாம் தேவனின் புத்தகங்கள்! பள்ளிக்கூடத்தில் மாடுபோல் அடிவாங்கிய தேவனால் இவ்வளவு புத்தகங்களைப் படிக்க முடிகிறதா?

பிற்காலங்களில் அவனை அடிக்கடி இலக்கியக் கூட்டங்களில் காண நேர்ந்தது. நான் எண்ணியது போல தேவன் மக்கு அல்ல. அவனது புலன்களும் புத்தியும் வேறு திசைகளை நோக்கித் திரும்பப்பட்டிருந்தன.

இன்னும் கொஞ்ச காலம் போனதும், அவனது சைக்கிளின் பொ¢ய ‘கா¢யர்’ வைக்கப்பட்டது. அவனது “அய்யா” வுக்கும் அவனுக்கும் ஒத்து வரவில்லை. தேவனின் சைக்கிள் விரைந்து செல்லத் தக்கவாறு உருமாற்றப்பட்டது. அத்துடன், ஹாண்டிலில் ஒரு பொ¢ய துணிப்பை தொங்கிய வண்ணம் இருந்தது. அது சிறிய, கனமான சில பொருட்களைச் சுமந்தது.

ஒரு நாள், அவனது வீட்டின் பக்கமாக இருந்து பெரும் இடியோசை போன்ற சத்தத்துடன் கூடவே புதை மண்டலம் எழுந்தத. தீயில் கருகிய சருகுகள் வெகு உயரத்துக் கிழம்பி காற்றினால் அடித்து வரப்பட்டதையும், பலர் கூடி சத்தமிடுவதையும் கேட்டேன். அதற்குப் பிறகு வெகு நாட்களாக தேவனைக் காணவில்லை. அவனது “அய்யா” ‘அவனைக் கண்ட இடத்திலை வெட்டுவன்’ எனச் சொல்லித் திரிந்தார். அவர்களது சொற்ப சொத்துக்களான வலைகளும், அந்தச் சிறிய கொட்டில் வீடும், துணிமணிகளும், தேவனது புத்தகங்களும் அந்த விபத்தில் நாசமாய்ப் போயின.

அதற்குப் பிறகு, ‘ஒப்பந்தம்’ முடிந்த கையோடே அவனைப் புத்தகக் கடை ஒன்றில் முன் கண்டேன். அப்போது தான், அவன் நாவல் எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னான். அன்று முழுக்க வெற்றிலை கூடப் போடவில்லை என்றும் சொன்னால் மிக மெலிந்து போய் இருந்தான். என்னிடம் கொஞ்சம் காசு ‘கடன்’ வாங்கினான்.

அதற்குப் பிறகு இன்று தான் காண்கிறேன். என்னுடன் தங்குவதற்கு தேவன் விரும்பினான்.


நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் பேய்களும் அத்து மீறிக் குடியேறிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வீடு மிகப் பொ¢யது. புதிய ‘பாஷனில்’ அமைந்திருந்தது. மேல் மாடியில் நான் மட்டும், கீழே ஒரு இளந்தம்பதிகளும், அழகிய துடியான பெண்குழந்தையும் வீட்டின் முன்புறம் ‘பாஷனுக்கு’ சற்றும் பொருந்தாத வகையில் ஒரு நீற்றுப் பூசினிக்காயில் குங்குமத்தினால் வரைந்த கோரமுகம் தொங்கியது. பேய்களுக்கு ‘சாந்தி’ செய்வித்ததை அது கட்டியம் கூறிற்று. சாந்தி செய்த பிறகு பேய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டனவாம்.

அதற்கு முன்னரே வெனில், தினம் தினம் இருட்டியதும் தாகத்துடன் யாரோ நாவைச் சப்புக் கொண்டுவதும், அங்குமிங்கும் ‘தடதட’வென ஓடித்திரிவதும். உபாதைகளுடன் முனகுவதும் என சத்தங்கள் கேட்குமாம். கதவுகளும் ஜன்னல்களும் தம்பாட்டில் திறந்து ‘படார்’ என சாத்திக் கொள்ளுமாம்.

எனது அறையின் ஜன்னலைத் திறந்தால், பூஞ்செடிகள் வா¢சையாக வளர்ந்திருந்த முற்றமும், சுற்றுமதிலும், அநேகமாக மெளனமாகவே இருக்கும் பாதையும் தெரியும். கதவைத் திறந்தால், கால்வட்டமாக வளைந்தபடி மாடிப்படிகள் இறங்கி ஹோலுக்குள் போவதைக் காணலாம். அந்தக் கால்வட்ட விளிம்புடைய சுவா¢ன் சரிபாதியில் ஒரு கண்ணாடி அலுமாரி போல உள்வாங்கிய பீடம் இருக்கிறது. அதற்குள் செம்மஞ்சள் ஒளியில் குளிக்கின்ற கண்ணன்சிலை வேய்க்குழலை உதடுகளில் பொருத்தியபடி குறுஞ்சிரிப்புச் சிரிக்கிறது.

அந்தக் கண்ணன் சிலை, இதே வீட்டில் முன்பு நடந்த கோரங்களுக்கு சாட்சியாக அப்போதும் குழலூதிச் சிரித்திருக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் எல்லாம் துப்பாக்கிக் குண்டுகள் மழையெனப் பொழிந்ததில் மேற்பூச்சுகள் புண்பட்டு மூளியாகப் போயினவாம். இதே மாடிப்படிகளின் வழியாக இரத்த ஓடை குதூகலத்துடன் கீழிறங்கிப் போயிற்றாம். உட்கட்சிப் போராட்டத்தை சில துப்பாக்கிக் குண்டுகள் சப்தித்து முடித்து வைத்தனவாம். மொத்தமாக பன்னிரண்டு பேர்கள் ஒரே இரவில் சில நொடிகளுக்குள் கட்சியினின்றும் உலகத்தினின்றும் வெளியேற்றப்பட்டபின் மயான அமைதி நிலவிற்றாம். அதற்குப் பிறகு அந்தப் பன்னிரண்டு பேரும் பேய்களாகி விட்டார்களாம். இல்லாத தொந்தரவுகள் எல்லாம் உண்டாக்கிக் காட்டினார்களாம். இரவானதும் சந்தடிகள் மிகச் செய்து தமக்கிழைக்கப்பட்ட அநியாயத்தைச் சொல்லிப் புலம்பினார்களாம்.

பிறகு குடியிருக்க வந்தவர்கள் சாந்தி செய்தார்கள். எனக்கும் குடியிருக்க ஒரு அறையும், கொஞ்சம் பயமும் கிடைத்தன.

எனக்குப் பேய் பிசாசுகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. தேவனுக்கும் இதையெல்லாம் சொன்னேன்.

“எனக்கு இப்ப ஒண்டிலும் நம்பிக்கை இல்லை மச்சான்” என்றான்.

தேவனின் ‘அய்யா’ வின் தகப்பனார்- இப்போது இறந்து போய்விட்ட அப்பு-பல பேய்க்கதைகளைத் தேவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாராம். அடிக்கடி அவர் பலபேய்களைப் பேய்க்காட்டிவிட்டு வெறும் பறியுடனும் காய்ச்சலுடனும் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறாராம்.

ஒரு நாள், நல்ல நிலவு. அப்பு விடிகாலையில் வீச்சுக்குப் போக ஆயத்தங்கள் பண்ணிவிட்டு படுக்க எண்ணினார். வெள்ளி காலிக்கும் போது கனகன் வந்து கூப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறான். அப்பு, ஆச்சியிடம் அண்ணாந்து முகட்டு வளையைப் பார்த்தபடி படுத்திருக்கிறார். அன்றிரவு நாய்கள் மிகுதியாகக் குரைத்தன. ஆச்சி சுருட்டுப் பிடித்தபடி கால் உளைவு போக்க முணுமுணுத்தபடி தைலம் தடவுகிறாள். சுருட்டின் காரநெடியுடன் தைலத்தின் வாசனையும் சேர்ந்து அபூர்வமான கிறக்கும் வாசனை. அப்பு கிறங்கினார்.

“எடேய்!…கந்தப்பு…வாடா!” எனக் கண்டாயத்திலிருந்து கனகன் கூப்பிடுவது போலக் கேட்கிறது. அப்பு எழுந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்தார். வலைகளைத் தூக்கித் தோளில் போட்ட வண்ணம் ஆச்சியைப் பார்த்தார். ஆச்சி நல்ல நித்திரை. தலைமாட்டில் குறைச் சுருட்டு கருகிப் போய்க்கிடக்கிறது. தீப்பெட்டியும், சுருட்டும், வெற்றிலைக் கொட்டப் பெட்டியும், திருநீற்றுச் சம்புடமும், வில்லுக் கத்தியும் எடுத்து ‘மடியில்’ பொதிந்து கொண்டு அப்பு முற்றத்தில் இறங்கினார். நிலவு வெளிச்சத்தில் கண்டாயத்தடியில் யாரோ நிற்பது தெரிகிறது.

“டேய்….கந்தப்பு வெள்ளி காலிச்சுப் போட்டுது…. வாடா” என கனகனின் குரல் கேட்கிறது. அப்பு மடியைத் தடவிய வண்ணம் அவனுடன் போய்க் கொண்டிருக்கிறார். நிலவு வெளுறி ஒளியிழக்கிறதோ, அல்லது மேகங்கள் மூடி மறைக்கிறதோ? அப்பு வானை நிமிர்ந்து பார்த்தார். விடிவெள்ளி காலிக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாகப் பட்டது. பக்கத்தில் வருபவன் சுண்ணாம்பு கேட்கிறான். சுண்ணாம்பு எடுத்துக் கொடுத்தபோது தான் அவனுக்குக் கால்கள் இல்லாததை அப்பு கண்டார். விக்கித்துப் போனார். திரேகம் ‘ஜில்’ விட்டுக் குளிர்ந்தது. எவ்விடத்திலே நிற்கிறோம் என அறிய, சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே தண்ணீர் மினுங்குகிறது. குளிர்காற்றை அள்ளித் தெளிக்கிறது. மறுபடியும் பக்கத்தில் பார்த்தால், கூடவந்தவனைக் காணோம்!

“கந்தப்பா…வீசடா வீசு…நல்லா மீன் படும்!” என அசா£ரி மட்டும் கேட்கிறது. அப்பு அவதியுடன் நீருக்குள் இறங்கினார். ‘தொளப்’ என தண்ணீர் குழப்பத்துடன் ஒலியெழுப்ப மேலும் மிரண்டார். அரையில் கட்டிய நான்கு முழத்தையும் ‘மடியில்’ பாரங்களையும் சேர்த்து தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டார். திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்ட ‘வைரவா’ என உளமுருகி உரக்கக் கூவினார்.

“கந்தப்பா…கந்தப்பா” என கரையிலிருந்து குரல் நைச்சியம் பண்ணிக் கூப்பிடுகிறது. அப்புவுகுக்கு தேவாரங்கள் நல்ல மனனம் கோளது பதிகத்தை வா¢சைக் கிரமமாக பத்திலயத்துடனும், பயத்தால் நடுங்கும் குரலுடனும் பாடத்தொடங்கினார். பாடுகிறார் பாடுகிறார்… பயம் பறக்கிறது. விடிவெள்ளி மெல்ல உதயமாகி அப்புவுக்கு ¨தா¢யம் சொல்லிற்று. தூரே ஊரிலிருந்து கோழிகள் கூவி அப்புவுக்கு சுருதி சேர்த்தன. அப்பு கோளறு பதிகத்தை திரும்பத் திரும்பப் பாடுகிறார். கிழக்கு வெளுக்கிறது. மேனி விறைக்கிறது. அப்பு ¨தா¢யமாகக் கரையில் ஏறினார். உடல் நடுங்குகிறது. நடுங்கிய படியே வீட்டில் வந்து விழுந்தவர் தான். ஒரே குலைப்பன் காய்ச்சல்.

“அட….மேனே, இப்ப உந்த இஞ்சின் போட்டுகள் கடலுக்குள்ளை ஓடடா ஓடெண்டு ஓட…பேயும் இல்லைப் பிசாசும் இல்லை….நம்மோடொத்தவனுக்கு மீனும் இல்லை” என்று தேவனின் அப்புவின் கதை முடியுமாம்.

என்னுடைய அம்மாவின் தகப்பனார்-இன்னும் ஜீவியவந்தராய் தாடியைக் கோதிக் கொண்டிருக்கும் எனது அப்பு-ஒரு தரம் ஒரு பேய்க்கு துவரந்தடியால் விளாசியிருக்கிறார். அந்தப் பேய் வஞ்சம் மறக்காமல் சில இரவுகளில் ஞாபகமாய் வந்து அப்புவின் மென்னியைத் திருகுமாம். உடலைப் பெரும் பாறையாக அழுத்துமாம். முறித்து எடுக்குமாம், உடலை முறுக்குவதையும், வாய் பிதற்றுவதையும் நானே நோ¢ல் கண்டிருக்கிறேன். தொடர்ந்து “இங்கிலீசு மருந்து”க்கும் ஒத்து வராது. காய்ச்சல் குடிநீரை அம்மா சுண்டச் சுண்டக் காய்ச்சி ஒரு துண்டு பனங்கட்டியுடன் கொடுப்பாள். அப்பாவோ வெனில், நல்ல தென்னஞ் சாராயத்தில் ‘ஒரு அரை’ எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்து விடுவார். கிழவனார் ஆசையால் கண்கள் மின்ன சாராயக் கிளாஸை பதபக்குவமாக பற்றுவார்.

“போடா அங்காலை…எளிய வடுவா, வாய் பாக்காமல்…” என்று என்னை விரட்டுவார். பிறகு,தொண்டையைச் செருமுவதும், நாவைச்சப்புக் கொட்டுவதும் கேட்கும்.

சற்று நேரத்தில், “இஞ்சை வாடா மேனே….” என கிழவனார் ஆ¨சாயக்க் கூப்பிடுவார். அவரது முகத்திலிருந்தும் தாடியிலிருந்தும் சாராய நெடி அடிக்கும். ஒளியிழந்த கண்கள் சிமிட்டும். பல்லிழந்த பொக்கை வாய் இளிக்கும். துவரந்தடியால் பேய்க்கு விளாசிய கதை நூறாவது தடவைக்கு மேல் எனக்கு விஸ்தாரமாகச் சொல்லப்படும். கேட்கக் கேட்க அலுக்காத கதை. அப்பு கதை சொல்லும் பாணியே அலாதி. அடிக்கடி நான் ‘ஊம்’ கொட்டி எனது ஆர்வத்தைக் காட்டி, அவரது வீரத்தையும் மெச்ச வேண்டியது அவசியம்!

அப்பு கல்வீட்டினுள் படுப்பது கிடையாது. வேப்பமரத்தின் குளிர் நிழலின் கீழ் கிழவனார் தனக்காக ஒரு கொட்டில் போட்டு வைத்திருக்கிறார். தீராந்திகளில் கலப்பையும், பிக்கானும், நுக்காலும், நாலைந்து துவரந்தடிகளும், இரும்புப் பூண் இட்ட கா¢ய ஏழுமுள்ளுக் கொட்டனும் சொருகப்பட்டிருக்கும். பாம்புகள் மாதிரி மாடுகளின் கழுத்துச் சங்கிலிகள் வளைந்தபடி தூங்கும். ஒரு பழைய உறுதியான நார்ப்பெட்டிக்குள் லாடங்கள். மாட்டின் கழுத்துச் சதங்கைகள்…. இன்னும் பல கிழவனாரின் அரிய பொக்கிஷங்கள் எல்லாம் உண்டு. அவையெல்லாம் அவருக்கு மிக இனியவை அவரது வாலிபத்தின் நினைவுகளைத் தூண்டுவனவல்லவா? அவை எவ்வளவு கதைகளை அறிந்திருக்கும்? எவ்வளவு பேய்களுடன் அப்புவுடன் தோளோடு தோள் நின்று போராடியிருக்கும்!

“அப்ப நான் நல்ல வடக்கன் மாடுகள் ஓறிணை வைச்சிருந்தனான்…என்னைவிட உயரம்…மாவெள்ளை நிறம்…ஒரு நாளைக்கு ஒரு கடகம் பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் வேணும்….” என்று கதை தொடங்கும்.

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. எங்களது வீட்டுக்கு அப்போ மதில் கட்டப்படவில்லை. அலம்பரும் பனையோலையும் கொண்டு மிக நெருக்கமாகவும் கலா நேர்த்தியுடனம் அடைக்கப்பட்ட அழகிய வேலி தான் இருந்தது. அந்தக்காலத்தில், எங்களூரில் தோட்டவேலையும் வயல்வேலையும் குறைந்த வெயில் மிகுந்த ஆனி ஆடி மாதங்களில், எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து “அலம்பல் காட்டுக்கு” வண்டி பூட்டிப் போவார்கள். போகமுதல் வைரவர் கோயிலில் மடை பரவுவார்கள், ஒரு கிழமையோ, பத்து நாட்களோ பயணம். பானைசட்டிகள், அரிசி, நல்லெண்ணைய், பருப்பு, கருவாட்டுடன் போவார்களாம்.

ஒரு தடவை மற்றவர்களை விட நல்ல அலம்பர் வெட்ட வேண்டும் என்ற அவாவில் அப்பு காட்டுக்குள் வெகுதூரம் போய்விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம். மல்லன் போல உடல் கட்டு. கல்யாணமாகி எனது அம்மா பிறந்து அப்போது தான் தவழ்கிறாளாம். அப்புவின் வாழ்க்கையில் உல்லாசம் வீசுகின்ற காலம், நல்ல பாரமாக அலம்பர் வெட்டி விட்டார். மற்றவர்களுக்கெல்லாம் பொறாமை. அப்புவையும் அவரது பிரசித்தி பெற்ற ‘வடக்கன்’ களையும் விட்டு விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள். அப்பு இரண்டு மூன்று ‘கட்டை’ பின் தங்கிவிட்டார். அக்காலங்களில் அப்புவுக்குப் பயமே கிடையாது. வாலிபம் அல்லவா?

நிலவு பகல் போலக் காய்கிறது. அப்போ தார் ரோட்டுகள் கிடையாது. குண்டுங் குழியும் புழுதியும் நிறைந்த மக்கி ரோட்டுக்களும், வண்டிப் பாதைகளும் தான். வண்டி நிறைந்த பாரம். ‘வடக்கன்’கள் முக்கித்தக்கி இழுக்கின்றன. வண்டி அப்படியும் இப்படியுமாக இலேசாகத் தாலாட்டுகிறது. பாதையின் இருபுறமும் தாழம்புதர்கள் மலர்ந்திருந்ததால் ‘கம்’மென்ற வாசனை. கண்டல் மரங்கள் நீருக்குள் முக்குளித்து நிமிர்ந்தன. நீரில் கண்டல் சாயம் ஊறி தேயிலைச்சாயம் மனோரம்யமான சிவந்த நிறம் காட்டுகிறது. காற்று வேறு மெல்ல வீசிற்று. தனிமை தந்த சலிப்பும் ஏக்கமும் வாட்டுகிறது. அப்புவுக்கு பாட்டு வந்தது. பாடத் தொடங்கினார்.

வயல் வெளிகளும் சிறுபற்றைகளும் மாறிமாறி வருகின்றன. அப்புவை நோக்கிக் கையசைத்து பின்னால் போய் நின்று திரும்பிப் பார்த்தன. வயல்வெளிகளினூடாக யாரோ ஒருவன் நொண்டி நொண்டி வருகிறான். செம்பாட்டு மண்ணில் விழுந்து புரண்டவன் போல பழுப்புநிற வேட்டி கட்டியிருக்கிறான். வந்தவன், வாய்பேசாமல் பிண்ணியத்தில் பிடித்து தூங்குகிறான். பின்பாரம் மிக அதிகா¢த்து மாடுகளை தூக்க எத்தனித்தது. மாடுகளின் வாயிலிருந்து வெண்நுரை கக்கிற்று. அப்பு திட்டினார்.

“வேசைபிள்ளை, எடடா கையை… துவரங்கம்பாலை வெளுப்பன்.”

அவன் முன்னால் வந்தான். வந்தவன், நுகத்தடியில் ஏறி உட்கார்ந்தான். அவனுடலிலிருந்து கெட்ட நாற்றம்- மலநாற்றம் வீசிற்று. மாடுகள் வெருண்டடித்தன. கதறின. பாரம் தாங்காமல் முன்னங்கால்களை மடித்து விழுந்தன. அப்புவுக்குச் சினம் பொங்கிற்று.

“எளிய வடுவா…” என உறுமியபடி, ஆசனத்திலிருந்தபடியே எட்டி அவனது முதுகில் துவரங்கம்பால் சாத்தினார். கூர்மையான குரலில் ஓலமெழுப்பியபடி அவன் பாய்ந்து இறங்கினான். அப்போது கோடை வானம் கிழியும்படி ஒரு மின்னல் தெறித்தது. மின்னல் ஒளியில் வந்தவனை அப்பு நன்றாகக் கண்டார். வானத்துக்கும் பூமிக்குமாக அவன் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தான். சில நொடி கழித்து பெரும் இடியோசை கேட்டது. அத்துடன் கூடவே அப்புவின் நெஞ்சில் பலத்த உதை கிடைத்தது. வண்டியின் துலாவில் அப்பு மயங்கிச் சாய்ந்தார். எப்படி வீடு வந்து சேர்ந்தோமென அப்புவுக்கு இப்போது தெரியாதாம். அதெல்லாம் அவரது பாதைபழகிய அருமையான வடக்கன் மாடுகளின் மகிமை என நன்றியுடன் சொல்லுவார்.

“நீ பேயைக் கண்டா என்னடா செய்வாய்?” என்று அப்பு எகத்தாளமாய்க் கேட்பார்.

“பயத்திலை கழிஞ்சு போடுவாய்” என பொக்கைவாய் சிரிக்கும்.

“இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டுபாதி சாமமெண்டும் பாராமல் உழுது உழுது பேய்பிசாசெல்லாம் எந்தப் பக்கம் போனதெண்டு சொல்லேலாமல் போவிட்டுது” என மிக வருத்தத்துடன் முத்தாய்ப்பு வைப்பார்.

இதையெல்லாம் நான் அடங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தேன். தேவன் வெகு சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு தொண்டைக்குள்ளாகவே ஒரு சிரிப்புக் சிரித்தான். பேசாமல் சிலநேரம் படுத்துக்கிடந்தோம்.

வெளியேயிருந்து இரவின் மிகவும் சூக்குமமான ஒலிகள் கேட்டன. இருந்தாற்போல சிறு தொலைவிலிருந்து ஒரு நாய் ஊளையிட்டழுதது. பிறகு இந்தத் தெருவிலிருக்கும் எல்லா நாய்களும் சேர்ந்து எச்சரிக்கையும், பயபிராந்தியும் கலந்த குரலில் குரைக்கத் தொடங்கின. எங்களது வீட்டின் பின்புறமாக சில நாய்கள் பயந்தடித்து ஓடியதால் ஏற்பட்ட துடியான காலடிச் சத்தங்களையும், அடித்தொண்டையிலிருந்து புறப்பட்ட அவற்றின் பீதி கலந்த முனகல் ஒலிகளையும் தெளிவாகக் கேட்டோம்.

ஒரு வெடிச்சத்தம் இருளை உறுக்கியது. நாய்களின் சந்தடிகள் ஓய்ந்தன. தெருவிளக்குகள் மட்டும் அச்சம்தரும் அமைதியைக் குலைக்க மாட்டாதனவாய் வெறித்துப் பார்த்தன.

ஜன்னலை எச்சரிக்கையாகத் திறந்தோம். தெருவில் சிலபேர் கனமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். இரண்டு ஓரங்களினாலும் அவர்கள் வா¢சையாகப் போனார்கள். நிழல்கள் போல, காலடி அரவங்களைப் கிளப்பாது, ஈசலைப் பிடிக்க எத்தனிக்கும் பல்லிகளெனப் போயினர். சுற்றுச் சூழல் முழுவதற்கும் அச்சமூட்டும தோற்றமொன்றை அவர்கள் வெகு இலகுவாகக் கொடுத்துச் சென்றனர்.

யாரோ ஒருவன் பாடினான் போலும். அர்த்தம் புரியாத வேற்று மொழியில் ஒரு முரடான கரகரத்த குரல்….ஆனால் ஆத்மார்த்தமாக உணர்ச்சியைச் சிந்தும் வண்ணம் பாடிற்று. அனேகமாக அதுலொரு விரகந்தெறிக்கும் காதல் பாடல்.

விளக்குகளை அணைத்துவிட்டு சிறு பெருமூச்சுகளுடன் படுத்தோம்.

சற்று நேரத்தில், சற்றுத் தூரத்திலிருந்து இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. வெகுநேரம் வரை எமது காதுகளுக்குள் அந்தச் சத்தம் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டேயிருந்தது.


விடிந்தது, தேவன் மேலும் சில நாட்கள் என்னுடன் தங்க விரும்புவதாகச் சொன்னான். எனது சைக்கிளை சில நாட்களுக்கு இரவல் தரும்படியும் கோரினான்.

மிகச் சில நாட்களே என்னுடன் தங்கினான். நன்கு இருட்டிய பிறகு, சாப்பாட்டுப் பார்சலுடனும், அலைந்து திரிந்த களைப்புடனும், வியர்வை நாற்றத்துடனும், துர்மரணங்களைப் பற்றிய செய்திகளுடனும் வருவான். இந்தச் சில நாட்களில் தேவனது பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

தேவன் என்னை விட்டு மறுபடியும் பிரிந்து போனபிறகு வீட்டில் ஒரு விசித்திரமான விரும்பத்தகாத மாற்றம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்தேன். இப்போ வாடைக் காற்று மாறி சோளகம் புறப்பட்டுவிட்டது. இரவு நேரங்களில் எனக்கு தெளிவற்ற கனவுகளும், விவா¢க்க முடியாத பயப்பிராந்திகளும் ஏற்பட்டன. வெளியே உக்கிரமாகச் சோளகம் வீசிற்று.

ஜன்னல்களும் கதவுகளும் தம்பாட்டில் திறந்து கொள்ள காற்று புழுதியையும் சருகுகளையும் அள்ளிக்கொண்டு வீட்டினுள் விசையாக நுழையும். ‘தடார் தடார்’ என ஜன்னல்களும் கதவுகளும் மூடிக்கொள்ளும். சற்று நேரத்தில் தாமே திறந்து கொள்ளும். யாரோ சிலர் பிராணாவஸ்தையுடன் முனகும் அவல ஓலங்கள் கேட்பதைப் போலிருக்கும். மிக நெருங்கும் அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் அவதியுடன், மூத்திரம் முட்ட சிலபேர் வீட்டினுள் தாறும் மாறுமாக தடுமாறி ஓடிக்கொண்டிருப்பதெனவும் அரவங்கள் எழுந்தன. சிலவேளைகளில் சொட்டுச் சொட்டாக நீர் விரைந்து சிந்துவதைப்போல, ஆனால் மிகவும் பெருத்த உரப்புடன் குளியலறையிலிருந்து சத்தங்கள் வரும்.

எனதுடல் வியர்க்கும். இதயம் துடிக்கும். வேகவேகமாக மூச்சு வரும். எழுந்து போகவோ மறுபுறம் திரும்பிப் பார்க்கவோ இயலாதவனாய் போர்வையால் முகத்தை மூடியபடி படுத்துக்கிடப்பேன்.

ஒரு தரம், ஒரு கனவு கண்டேன்.

தேவனை யாரோ சிலர் கூட்டிக் கொண்டு போவது போல தெளிவற்ற காட்சி. அது மார்கழி மாதமாக இருக்க வேண்டும். ஒரே பனிப்புகார். தேவன் மறுபடியும் மெலிந்திருக்கிறான். அவனது மேலில் சேட்இல்லை. வலையை தோள்கள் மீது போட்டிருக்கிறான். கிழிந்துபோன பழைய சாரன் உடுத்திருக்கிறான். அவனுக்கு கால்கள் இல்லை. அந்தரத்தில் தொங்குகிறான். ஒரு நிறைந்த நீர்நிலைப்பக்கமாக அவர்கள் போகையில், தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான். அவர்கள் போகையில், தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான். அவர்கள் ‘அடே தம்பி…வாடா…’ என நைச்சியம் பண்ணும் குரலில் கூவி அழைத்தனர். அவன் மேலும் நீருக்குள் இறங்குகிறான். சாரனை கழற்றி தலையில் முண்டாசாக கட்டிக்கொள்கிறான். திருநீறு பூசிக்கொள்கிறான். ஏதோ முணுமுணுக்கிறான். அவர்கள் கைகளை வீசி வீசி அவனைப் பயமுறுத்த எத்தனிக்கின்றனர். மலநாற்றம் வீசுகிறது. மலநாற்றமா அல்லது பிணம் கருகும் நெடியா? அது மார்கழி மாதப்பனியா, அல்லது ஊர்கள் எல்லாம் சுட்டொ¢க்கப்படும் புகையா? எனக்கு மூச்சு முட்டுகிறது. ஒன்றுமே தெளிவாகத் தெரியமா டேன் என்கிறது.

மிகப் பிரயாசைப்பட்டு கண்விழித்தேன். உடல் வியர்த்திருந்தது. மிகத் தாகமாக இருந்தது. நீர்க்குவளை இருந்த பக்கம் கைகளைத் துளாவி, அதை இருட்டில், நிலத்தில் உருட்டி உடைத்தேன்.


அடுத்த நாள் காலையில், தேவனின் நண்பன் ஒருவன் என்னைத் தேடிவந்தான். தேவனைக் கண்டாயா, என வினாவினான்.

மேலும் சில நாட்கள் கழித்து இன்னொருவன் வந்தான். இரண்டொரு நாள் கழித்து இரண்டு பேர் வந்து தேவனை விசாரித்தார்கள்.

அதற்குப் பிறகு நான் தேவனைக் காணவேயில்லை!

அத்துடன் நான் வீடு மாறிவிட்டேன். பேய்கள் பற்றி நான் மிகவும் அஞ்சுகிறேன். இரவுகளில் நிம்மதியின்றி தூக்கத்துக்கு போகிறேன். நடுஇரவில் விழித்தெழுந்து வேதனை நினைவு படுத்த முயற்சித்தவாறு, நெடுநேரம் புகைபிடிக்கிறேன்.

நன்றி – நூலகம்

– மோகவாசல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1995, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *