குழல் விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 7,784 
 

சாவி வாங்க வேண்டி வந்ததினால் அங்கு வந்தேன்.இல்லையெனில் வந்திருக்க மாட்டேன்.

ஒரு டீ நாவின் சுவையறும்புகள் மீது படர்ந்து தொண்டைக் குழி வழியாக இறங்கி சுவை கொடுக்கிறதாக அல்லது திருப்தியோ, மன நிம்மதியோ கொள்ளச் செய்வதாக காளியம்மா வீடு, பெருமாள் சாமி டீக்கடை,சிந்திக்கிடந்த மண் விரிந்து கிடந்த சாலை. அழகர்சாமி டீக்கடை, எல்லாம் கடந்து பஸ்டாப்பிற்கு போன ஐந்தரை மணிப்பொழுதிற்கெல்லாம் இப்பொழுது நீங்கள் ஊர்ப்போக பேருந்து இல்லை. இன்னும் கால் மணியிலிருந்து 20 நிமிடங்கள் வரை ஆகலாம். அதுவும் சரியாக வந்தால் கால் மணி நேரம் கொஞ்சம் நேரம் பிசகினால் கூடகால் மணி நேரம். அல்லது ”சரி”கொஞ்சமாய் நொண்டியடித்தும் நீட்டித்துப்போயும் விட்டால் கூட அரை மணி வரை ஆகலாம் அதிலும் மழை காலம் என்றால் கேட்கவே வேண்டாம். எப்பொழுது பஸ் வருகிறதோ அப்பொழுது ஏறிக் கொள்ள வேண்டியதுதான். பயணித்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார் அங்கிருக்கிற ஒருவர்.

பஸ்ஸிற்குள்ளாய் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் படர்ந்து அமர்ந்தோ அல்லது சாய்ந்தமர்ந்தோ பஸ்ஸினுள்ளாய் இருக்கிற சகபயணிகளையும், ஓட்டுனரையும், நடத்துனரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணிக்க வேண்டியதுதான்.

பிங்க்கலரில் பஸ்சினுள்ளாய் அடித்துப் போர்த்தப்பட்டிருந்தமைக்காவும், அதற்கேற்ற வர்ணத்தில் இருந்த பேருந்தின் இருக்கைகளும், பேருந்தினுள்ளாய் நடப்பட்டிருந்த உயர்ந்து நின்ற சில்வர் கம்பிகளுமாய் பார்க்க நன்றாகவே இருந்தன, கூடவே டிரைவர் கண்டக்டர் அணிந்திருந்த யூனிபார்மும் பயணிக்கிற மனோநிலைக் கேற்றதாய் பேருந்தினுள்ளாய் ஒலிக்கிற பாடல்கள் அமைந்து போவது தற்செயல் ஒற்றுமையாய்/

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவனில் ஒரு டீ அருந்தினால் நன்றாக இருக்குமே என மிதந்த எண்ணத்தின் கைபிடித்துச் சென்று மாரிச்சாமி கடையில் ஒரு டீ சாப்பிட்டவனாய் அமர்ந்திருந்த பொழுது விழிப்படர்வில் காட்சிப்பட்டு மையம் கொண்டதாய் மாரிச்சாமி விறகுடைப்பது தென்படுவதாக/

பழைய ஏர்க்கலப்பை போல இருந்தது பார்ப்பதற்கு, சீமைக்கருவேலைத்தூர், மஞ்சனத்திக் கட்டை, இன்னும் மரத்தூர்கள் எனநிறைய கிடக்கும் அவரது கடைக்கு பக்கவாட்டாய் கிடக்கும் வெற்றிடத்தில் பக்கத்தில் அவர் வளர்க்கும் அல்ல, அவர் கறி போடுவதற்காய் கம்பி வலை போட்ட கூண்டில் அடைத்து வைத்திருக்கிற கோழிகள் கூண்டினுள் சுற்றியவாறு சமயத்தில் வெளியே திறந்து விட்டிருப்பார். கிண்ணத்தில் வைத்திருக்கிற அரிசியையும்,பக்கத்தில் சின்னக்கிண்ணத்தில் இருக்கிறதண்ணீரையும் கொத்திக்கொண்டிருக்கும் கோழிகள் அப்பாவியாக/

கரையின் மேல் அமைந்திருந்த கடை அது. எவ்வளவு வேகமாக டீப் போட்டார். அதை எவ்வளவு வேகமாக இவனுக்குக்கொடுத்து விட்டு எப்பொழுது அந்த அவர் வேலைக்கு தலைக்கொடுப்பவராய் ஆகிப் போனார் என்பது அந்த தக்குனூண்டு இடத்தில் தொக்கி நிற்கிற கேள்வியாகவே/

மனம் தாங்கி நெற்றி முன்னால் நின்ற கேள்வியை தூரப்போ அந்தப் பக்கம்? உழைக்கிறவர்களால் இருக்க முடியாது சும்மா, கைகாலை கட்டிப் போட்டால் கூட கட்டிய கயிறை எதன் உதவியுடனாவது அறுத்துக் கொண்டு வந்து வேலை செய்யப் போய் விடுவார்கள். உடல் மன நிலையை பொருட்படுத்தாமல்/

”அழுதுக்கிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிருக்கணும்” என்கிற உழைப்பாளியின் கூற்றுப்போல டீக்கொடுத்துவிட்டுப்போய் விறகுடைத்துக் கொண்டிருந்தவரை எதுவும் கேட்கவும் அவரிடம் எதுவும் சொல்லவும் தோணாமல்குடித்த டீக்கான காசை சரியாக மூடாத கடலை மிட்டாய் பாட்டிலின் மீது வைத்துவிட்டு நகரவும், பஸ் வரவுமாய் சரியாக இருந்தது.

கூட்டமில்லாத பஸ்ஸில் அப்படியே அருப்புக்கோட்டைவரை சென்று காய்கறி ஏதேனும் வாங்கி வந்து விடலாம். அங்கு கொஞ்சம் சௌகரியம் என்றார்கள். என்கிற எண்ணத்தை இடை மறித்ததாய் பாலவனத்தத்தில் வைத்து விட்டு வந்த இருசக்கரவாகனம் ஞாபகம் வர அங் கேயே எடுத்தும் விடுகிறான் டிக்கெட்டை/

இப்போழுது பஸ்ஸில் செல்லாமல் இருசக்கரவாகனத்தில் சென்றால் படர்ந்து நீண்டிருக்கிற சாலை சாலையின் வெம்மை குளிர்ச்சி அதன் நீளம் அகலம் சாலையின் இருபக்கமுமாய் இறங்கி ஓடுகிற ஓடைகள், ஓடைகளை ஒட்டி படர்ந்து பாவிக்கிடக்கிற விளை நிலங்கள். அதில் தன் ஆகுருதி காட்டியும் வளர்ச்சி காட்டியுமாய் நிற்கிற மரங்கள் முளைத்துத் தெரிகிற செடிகள், படர்ந்து நின்றிருக்கிற பச்சைகள் என நிறைந்து காணப்படுகிறவைகள் கண் நிறைந்து காட்சிப்படும். இப்படியானகாட்சிகளை உள்வாங்கியவனாய் சென்று கொண்டிருந்த ஒரு நாளில்தான் சாலைப்பணியாளர் கோட்டையும், ராமச்சந்திரனும், வீரநாகுவுமாய் சாலையோரத்தில் இருந்த முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் வரும் போது ஒன்றும் தெரியவில்லை. சாலையோரத்தில் முட்ச் செடிகள் தலையாட்டுவது மட்டுமே தெரிந்தது. ஆளுயரத்திற்கும் மேலாக வளர்ந்து நின்ற முட்ச்செடிகளின் உள்ளே நின்ற வீரநாகுவும், கோட்டையும், ராமச்சந்திரன்என மூவருமாய் நின்றது தெரியவில்லை. அருகில் போனதும் தான் சப்தம் வருகிறது. அடர்ந்து நிற்கிற முட்செடிகளைத்தாண்டி. அது கோட்டையின் குரலாகவும், வீரநாகுவின் சிரிப்பாயும் ராமச்சந்திரனின் பேச்சாவுமாய் இருக்கிறது. நிறுத்திவிடுகிறேன் இரு சக்கரவாகனத்தை. அன்பும், பாசமும், வாஞ்சையும் நிறைந்த பேச்சுக்களை கேட்டு எத்தனை நாட்களாகிப் போனது. போகிற போக்கில் படர்கிற எண்ணங்கள் எவ்வளவாயினும் அதன் மேனி முழுவதுமாய் படர்ந்து பாவுகிற நினைவுகளாய் இவர்களைப் போன்றவர்களை அவ்வப்பொழுது பார்த்துக் கொள்ள முடிகிறது போகிற வருகிற வழியெங்கிலுமாய்/ என்கிற ஆறுதலான சிரிப் புடன் “இப்படிமுள்ளுக்குள்ளெல்லாம் திரிகிறீர்களே,பூச்சி பொட்டு ஏதும்”,,,,? “இருக்கும் தான் தோழர் அது இல்லாத இடத்துலயா நாம இருக்கம் அததொந்தரவு பண்ணாத வரைக்கும் அது நம்மள ஒண் ணும் செய்யாது.போகுது தோழர் நல்லவிதமா, போகுற வரைக்கும் போகட்டும்”/என்கிற அவர்களது சொற்கட்டின் மூலமுடிச்சை பிடித் தவனாய் கிளம்பிவிடுகிறான்.

அன்று அவர்களைப் பார்த்த பிறகு, அதிகமாய் அவர்களை பார்க்க வாய்க்கவில்லை. அப்படி அவர்களுக்குள்ளாய் ஏதும் இருப்பதாய் நினைத்துக் கொள்கிற நாட்களில் சக்தியண்ணன் கடையில் குடிகிற டீயுடன் முடிந்து போகும் அந் நிகழ்வு. அப்படியாய் முடிகிற நிகழ்வின் முடிச்சு டீக்கடைக்கு வந்து போகிற அன்றாடர்ளை பிரதிபலிப்பதாய்/

கொடுத்த பத்து ரூபாயைதிருப்பக்கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய் சில்லறை யாக இருந்தால் கொடுங்கள் என்றார் கண்டக்டர். இதயம் இருக்கிற இடது பக்கமாய் அமைந்திருந்த சட்டைப்பைக்குள் கை விரல்கள் இறங்கி தேடிய ஆழ்ந்த தேடலுக்குப்பின்னால் பிடிபட்ட இரண்டு ரூபாய் காய்ன்கள் இரண்டையும், ஒரு ரூபாய் காய்ன் ஒன்றையுமாய் தேர்ந்தெடுத்து நூல்க்கோர்க்காமல் கொடுத்தபோது வாங்கிக் கொண்ட கண்டக்டர் பாலவனத்தம் வந்து விடும் சிறிது நேரத்தில் இறங்கிக் கொள்ள ரெடியாகிக்கொள்ளுங்கள் மனோரீதியாக என்கிறார். தட்ட முடியுமா அவரின் பேச்சை. நடத்துனர் ஆயிற்றே/

நடத்துனர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டியிருக்கிறது.

அதன்படி நான் இறங்கிச்சென்ற இடம் பாண்டியனின் டீக்க்கடையாய்/ அதனால் என்ன இப்பொழுது பலசரக்குக்கடை, பால்ப்பண்ணை, ஒர்க்‌ஷாப்,,,,,,,,, அந்த வரிசையில் டீக்கடை இருக்கக்கூடாதா என்ன? இருக்கட்டும் அப்பொழுதான் தோதாகவும் நன்றாகவும் இருக்கும்.இவன் போன்ற டீ விரும்பிகளுக்கு.

உடல் பொருள் ஆவி அனைத்தையும் டீக்கு கொடுத்து விட்ட பிறகு வாழுகிற நிமிடங்களை அதுவே பிரதான கணமெடுத்து ஆக்ரமித்துக் கொள்வதாக/

சீக்கிரமே போக வேண்டும்,பெர்மிஷன் போட்டு விட்டேன். இங்கிருந்து ஊர் போக வண்டியில்லை. என்ன செய்யலாம் சொல்லுங்கள் என சக ஊழியர் இவனைக் கேட்டபொழுது எனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த இரு சக்கர வாகனத்தின் சாவி அவரதுகைக்கு மாறுகிறது. கண்கட்டி வித்தை ஏதேனும் இல்லாமல்/

பாலவனத்தம் போய் பாண்டியன் கடையில் நிறுத்திவிட்டு நகருங்கள் நீங்கள் செல்லவேண்டிய திசை நோக்கி என முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் அவரிடம் சொல்லிவிட்டு இப்பொழுது பஸ்சில் வந்து இறங்கிய இடம் பாண்டியனின் கடையாய்/

”டீ சாப்புடுறீங்களா சார்” என அவர் கேட்ட கேள்விக்கு மறுப்பேதும் சொல்ல மனம் வரவில்லை சற்றைக்கு முன்னான நிமிடங்களில் டீக் குடித்துவிட்டு வந்த போதும் கூட/

”தத்தன்னத்தானா,,,,,,நெருங்கி வந்து”,,,,,,பாண்டியனின் கடைக்கு எதிர் வரிசை வீட்டிலிருந்து மிதந்து வருகிறது பாடல்/

ஆமாசார், பஜ்ஜி போடல இன்னைக்கு பொம்ளையாளு கேரளாவுக்கு போயிருக்கு ஒரு கேதத்துக்கு இந்தா எதுத்த கடை காளியப்பன்

இருக்கார்ல்ல அவரோட மாமனாருக்கு நேத்து காலையில ஆக்ஸிடெண்டாம், பாஜார்ல போயிக்கிட்டு இருந்த வர பின்னாடி வந்த லாரிக்காரன் வந்து இடுச்சிட்டானாம், தலையில பெளமான அடியாம், கால் ரெண்டும் நொறுங்கிப் போச்சாம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க, சாய்ங்காலமே யெறந்து போனாராம்.கேதம் கேட்டுப் போனவுங்க மத்தியானமே கெளம்பீட்டாங்களாம். அங்கயிருந்து இங்க வர ஒரு ஆறு மணி நேரமாகுமா சார்.என்றார் இவனிடம்/

“தேவை தேவிபார்வை,,,,,தத்தன்னதானா”,,,,,,,,,பாண்டியனின் பேச்சை ஊடறுத்ததாய் தொடர்கிறது பாடல். பாண்டியன் கொடுத்த டீயின் மிடறு களை உள் விழுங்கிக் கொண்டிருந்த நேரம் வண்டி வீட்டுக்கிட்ட நிக்குது சார் என சாவியைக் கொடுத்தார்.

“சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி”,,,,,

“நாளைக்கு பஜ்ஜி போட்டுருவோம் சார், எது ஒண்ணும் இல்லாதப்ப தான் அதுக்குகெராக்கி கூடிப்போகுது,இல்லைன்னாஅதோட அரும தெரியுது சார். இந்தா இருக்கிறஊர்லபேய்ஞ்சமழை இங்ககாணோம். பாருங்க என்றார்.

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது,,,,,,,,,,,,டீக்கு காசு கொடுத்து விட்டு கிளம்புகிறான், பாடலின் கைபிடித்தாவனாயும், பாண்டியன் பேசிய பேச்சைஅசைபோட்டவனாயும்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *