குதிரைக்காரன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,237 
 

அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று சொல்லத் தொடங்கியிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னர் பழைய சந்தையில் வாங்கிய கோட்டை அணிந்திருந்தான். வயது ஏறும்போது கோட்டும் வளரும் என்று எண்ணினானோ என்னவோ அது அவன் உடம்பைத் தோல்போல இறுக்கிப் பிடித்துக்கொண்டது. விளிம்புவைத்த வட்டத் தொப்பி ஒன்றைத் தரித்திருந்தான். சாமான்கள் நிரம்பிய முதுகுப்பை பாரமாகத் தொங்கியது. லராமி ஆற்றை ஒட்டிய பாதையில் நடந்து போனால் மார்க் ஓகொன்னருடைய பண்ணை வரும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் எத்தனை மணி நேரம் அப்படி நடக்க வேண்டும் என்பதை எவரும் சொல்லவில்லை. மரப் பாலங்கள் அடிக்கடி வந்தன. மிகவும் எச்சரிக்கையாக அவற்றைக் கடக்க வேண்டும். ஒன்றிரண்டு பலகைகள் உடைந்து தண்ணீர் மினுங்கிக்கொண்டு கீழே ஓடுவது அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பாதை இரண்டாகப் பிரிந்த ஒவ்வொரு சமயமும் பிலிப்பைன் நாட்டில் இருக்கும் தன் தகப்பனை நினைத்துக்கொண்டான். அவருடைய அறிவுரை பயனுள்ளதாகத் தோன்றியது. வழிதெரியாத புதுப் பிரதேசத்தில் நடக்கும்போது எப் போதும் பாதை பிரிந்தால் இடது பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வழி தவறினால் திரும்பும்போது வலது திருப்பங்களை எடுத்துப் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்துவிடலாம். இடம், வலம் என்று மாறி மாறிச் சென்றால் திரும்பும் வழி மறந்து தொலைந்துபோய்விட வேண்டியதுதான். எத்தனை நல்ல புத்திமதி. மான் கூட்டம் ஒன்று அவனைத் தாண்டிப் போனது. கொம்புவைத்த ஆண் மான் பாதையின் நடுவில் நின்று ஒருவித அச்சமும் இல்லாமல் எதையோ தீர்மானிக்க முயல்வதுபோல அவனை உற்றுப் பார்த்தது. அது வெள்ளைவால் மான் என்பது அவனுக்குப் பின்னாளில் தெரியவரும். கறுப்புவால் மான்கள் இன்னும் பெரிதாக இருக்கும். கீழே தூரத்தில் பைஸன்கள் பள்ளத்தாக்கிலே மேய்ந்துகொண்டிருந்தன. ஆனால் அவன் பயப்படுவது கரடிகளுக்குத்தான். அவை ஆபத்தானவை என்று கேள்விப்பட்டிருந்தான். ஓநாய்களும் அவனுக்கு அச்சம் ஊட்டுபவை.

பனிக்காலம் முடிந்துவிட்டாலும் இன்னும் சில இடங்களில் கடைசிப் பனி உருகாமல் தரையை ஒட்டிப் பிடித்திருந்தது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஐஸன்ஹோவர் தனது இரண்டாவது தவணை ஆட்சியைத் தொடங்கி நாலு மாதங்கள் ஆகிவிட்டன. அவனுடைய நாட்டு ஜனாதிபதி மகசெசெ விமான விபத்தில் இறந்துபோய் இரண்டு வாரங்கள் ஆகின்றன. பின்னாளில் உலகப் பிரபலமாகப் போகும் ஒசாமா பின்லாடன் பிறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. இது ஒன்றும் அவனுக்குத் தெரியாது. முதுகுப்பையில் பத்திரமாக அவன் காவிய மரக்கன்றுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் அவன் கவனம் இருந்தது. பண்ணை எப்போது வரும் என அலுத்துப்போய்ச் சற்று நின்று வானத்தை நிமிர்ந்து பார்த்தபோது கண்களை அவனால் நம்ப முடியவில்லை. மஞ்சள் தலை கறுப்புக் குருவிகள் ஆயிரம் ஆயிரமாகத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. இவை என்ன பறவைகள் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மீண்டும் பார்வையை நேராக்கியபோது ‘ஓகொன்னர் பண்ணை’ என எழுதிய பெயர்ப் பலகை கண்ணில் பட்டது..

ஓகொன்னர் நீண்ட பொன்முடி விழுந்து கண்களை மறைக்கத் தட்டையான அகன்ற நெஞ்சுடன் ஆறடி உயரமாகத் தோன்றினார். மாலை ஆறு மணி ஆகிவிட்டதால் தூரத்தில் தெரியும் இரண்டு மலை முகடுகளைப் பார்த்தபடி ஓய்வெடுத்தார். சூரியனுடைய கடைசிக் கிரணங்கள் அவர் முகத்தைச் சிவப்பாக்கின. அவருக்கு முன் இருந்த இனிப்பு மேசையில் நுரை தள்ளும் பானம் இருந்தது. பியர் ஆக இருக்கலாம். மரநாற்காலிகள் நிறைய இருந்தும் அவர் அவனை உட்காரச் சொல்லவில்லை. மார்ட்டின் தொப்பி விளிம்பில் ஒரு விரலை வைத்து அது போதாதென்று நினைத்தோ என்னவோ இடுப்புவரை குனிந்து வணக்கம் சொன்னான். ‘பண்ணையில் என்ன வேலை செய்யத் தெரியும்?’ என்று அவனிடம் கேட்டார். மார்ட்டின் ‘எல்லா வேலைகளும் தெரியும். கோழி வளர்ப்பு, பன்றிகள், ஆடுகள், மாடுகள் எல்லாம் பராமரிப்பேன். தச்சு வேலையும் கொஞ்சம் கற்றிருக்கிறேன்’ என்றான். அவனுடைய தகப்பன் ‘தச்சுவேலை உனக்கு உதவும். அது யேசுநாதருடைய தொழில்’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘குதிரை பராமரித்து உனக்கு ஏதாவது அனுபவம் உண்டா?’ என்றார். ‘இன்னும் இல்லை ஐயா. ஆனால் எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்வேன்’ என்றான். ‘அப்ப சரி. உனக்குத் தச்சு வேலை வரும் என்பதால் நீ வேலிகளைச் செப்பனிடலாம். குதிரைப் பராமரிப்பாளன் தொம்ஸனுக்கு உதவியாளாக இரு’ என்றார்.

‘நன்றி, ஐயா. ஒரு சின்ன விண்ணப்பம். ஒரு செடி கொண்டு வந்திருக்கிறேன். அதை நடுவதற்கு அனுமதி வேண்டும்’ என்றான். ‘செடியா? என்ன செடி?’ என்றார் ஓகொன்னர். ‘அஸ்பென் செடி ஐயா. அதிவேகமாக வளரும். தன் இனத்தைத் தானே பெருக்கிக்கொள்ளும். பண்ணைக்குச் சுபிட்சத்தையும் மனிதர்களுக்கு அமைதியையும் கொடுக்கும்’ என்றான். ‘அப்படியா, மிக்க மகிழ்ச்சி. அஸ்பென் செடி ஒன்றை நானும் தேடிக்கொண்டிருந்தேன். நீ கொண்டுவந்துவிட்டாய், நன்றி. வராந்தாவுக்கு முன் நட்டுவிடு. நான் தினம் தினம் பார்க்கலாம்’ என்றார். மார்ட்டின் ‘ஆகட்டும்’ என்றான்.

தொம்ஸன் ஒரு கறுப்பின அமெரிக்கன். அறுபது வயதில் சற்றுக் கூன் விழுந்து ஆறடி உயரமாக இருந்தான். யோசித்துப் பார்த்தபோது மார்ட்டின் அமெரிக்காவில் ஆறடிக்குக் குறைவானவர்களை இன்னும் சந்திக்கவில்லை. நேரம் இருட்டிவிட்டதால் சமையல் அறை பூட்டு முன்னர் தொம்ஸன் அவனுக்கு இரவு உணவு வாங்கிவந்து கொடுத் தான். வாட்டிய மாட்டிறைச்சி, பீன்ஸ், ரொட்டி. குதிரை லாயத் துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு அறையை அவனுக்கு ஒதுக்கி அங்கே படுத்துக்கொள்ளச் சொன்னான். மரக்கட்டிலின் மேல் பரப்பிய வைக் கோல் மெத்தை ஒன்று கிடந்தது. அதிலே கால்களை நீட்டிப் படுத்த போதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவனுக்கு மேல் சரி நேரே பழுப்பு நிறத்தில் பெரிய வௌவால் ஒன்று தலைகீழாகத் தொங்கியது. அவன் அதை பார்த்துக்கொண்டிருந்தபோது அது கால்களை விடுவித்து நேரே விழுந்து பாதியில் செட்டையை அடித்து வெளியே பறந்துபோனது. அவன் நியூயோர்க்கில் ஒருவாரம் தங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அமெரிக்காவில் காலடிவைத்த அந்த முதல் நாள் அவனுக்கு ஐந்தாவது மாடியில் தங்க இடம் கொடுத்தார்கள். எவ்வளவோ அவன் மறுத்தும் அவர்கள் சம்மதிக்கவில்லை. கழிப்பறை போவதற்கு 5 மாடிகளும் இறங்கிக் கீழே வந்தான். மறுபடியும் மேலே ஏறினான். மூன்றாம் நாள்தான் கழிப்பறை ஐந்தாம் மாடியிலேயே இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தான். தரையில் கழிப்பறை இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் ஐந்தாவது மாடியில் ஒரு கழிப்பறையை உருவாக்க முடியும் என்பது அவனுக்குப் பெரும் புதிராகவே இருந்தது. எப்படி யோசித்தும் அதைக் கற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் முதல் அதிசயமாக அது மனத்தில் பதிந்துபோய்க் கிடந்தது.

குதிரைகள் கால் மாறி நிற்பதும் அவற்றின் கனைப்புச் சத்தமும் அவனை மறுநாள் காலை எழுப்பியது. தொம்ஸன் அவனை அழைத்துச் சென்று குதிரைகளை அறிமுகப்படுத்தினான். அவற்றின் பெயர்கள் எலிஸபெத், தண்டர்போல்ட், ஸ்கைஜம்பர், ரப்பிட்ஸ்டோர்ம் என்று பலவிதமாக இருந்தன. குதிரைகளைப் பார்த்தவுடனேயே அவனுக்கு அதீதப் பிரியம் ஏற்பட்டுவிட்டது. அவற்றைப் பராமரிப்பது பற்றித் தொம்ஸன் சொல்லித் தந்தான். மார்ட்டின் ஒவ்வொரு குதிரையையும் தொட்டு அதன் பெயரைச் சொல்லி சிநேகப்படுத்திக்கொண்டான். குதிரை வளர்ப்பு பற்றி நிறையக் கேள்விகள் கேட்டான். உயர்ஜாதிக் குதிரை ஒன்று மட்டும் கூடிய பாதுகாப்புடன் பிரத்தியேகமாகப் பராமரிக்கப்பட்டது. பகலிலும் மின்சார பல்புகள் எரிந்தன. ‘குதிரையின் கர்ப்பகாலம் 11 மாதம். கருத்தரிக்கக்கூடிய சிறந்தமாதம் மே அல்லது ஏப்ரல். அதிக வெளிச்சம் கருத்தரிக்கும் வாய்ப்பைக் கூட்டும். அதுதான் அப்படியான கவனம். அந்தக் குதிரை சீக்கிரத்தில் கர்ப்பமடையப்போகிறது’ என்று தொம்ஸன் கூறினான்.

குதிரை வளர்ப்பைப் பற்றிய எல்லாக் கலைகளையும் பயின்றாலும் மார்ட்டினுக்குக் குதிரைச் சவாரியில் அதிக விருப்பம் இருந்தது. அதையும் தொம்ஸனிடம் கற்றான். அவனை இயற்கையான குதிரை ஓட்டி எனத் தொம்ஸன் வர்ணித் தான். ஏறி உட்கார்ந்ததும் குதிரை ஆளை எடை போட்டுவிடும். மார்ட்டினை எந்தக் குதிரையும் இடர்ப்படுத்தவில்லை. வெகு சீக்கிரத்தில் நல்ல குதிரை ஓட்டக்காரனாகத் தேர்ந்துவிட்டான். 2000 ஏக்கர்கள் கொண்ட அந்தப் பண்ணையை அவன் குதிரைமேல் அமர்ந்தபடியே சுற்றிப் பார்வையிட்டான். ஆரம்பத்தில் அவனுடைய பணி வேலிகளைச் செப்பனிடுவது. காட்டு மிருகங்கள் அடிக்கடி வேலியை உடைத்து உள்ளே வந்துவிடும். அவற்றைத் துரத்துவது தான் பெரிய தொல்லை. அவனுடைய அப்பா கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்திய தச்சு வேலை அவனுக்குக் கைகொடுத்தது.

ஒரு நாள் மாலை நேரம் எசமான் அவனை அழைத்தார். அவர் படுக்கை அறைக்கு முன் இருந்த வராந்தாவில் சாய்மனைக் கதிரையில் அமர்ந்து பியர் குடித்தபடி சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அவன் நட்ட அஸ்பென் மரம் கிடுகிடுவெனப் பத்தடி உயரத்துக்கு வளர்ந்துவிட்டது. அந்த மரத்தை உற்றுப் பார்த்தார். ஒரு சோடா முடி அளவான இலைகள்-கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவர் அதைப் பிடித்து ஆட்டுவது போல-எந்த நேரம் பார்த்தாலும் துடித்தபடி இருந்தன. மரத்தின் வெள்ளையான மரப் பட்டைகளில் குறுக்கு மறுக்காகக் கோடுகள் விழுந்திருந்தன. ‘இது என்ன கோடுகள் தெரியுமா?’ என்றார் எசமான். ‘இதைக் கேட்கவா தன்னைக் கூப்பிட்டார்’ என மனத்துக்குள் நினைத்தபடி ‘தெரியாது எசமான்’ என்றான். ‘பண்ணை வேலியில் நிறையப் பொத்தல்கள் உள்ளன. எப்படியோ மான்கள் உள்ளே நுழைந்துவிடுகின்றன. ஆண் மான்களுக்கு அஸ்பென் மரம் நிரம்பப் பிடிக்கும். அவை தங்கள் கொம்புகளைத் தீட்டுவது அஸ்பென் மரத்தில்தான். அவை வளைந்து கொடுப்பதால் மான்களுக்குச் சுகமாக இருக்கும். ஒரு காலத்தில் இங்கிலாந்தில் இந்த மரங்களை அம்புகள் செய்வதற்கு மட்டும் பாவித்தார்கள். யாராவது அஸ்பென் மரத்தை வெட்டி வேறு எதற்காவது பயன்படுத்தினால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை அரசன் வழங்கினான். அது தெரியுமா?’ என்றார். அவனுக்குத் தெரியவில்லை. ‘அப்படியா?’ என்றான். ‘அதோ, இலைகள் துடிக்கின்றன, பார்த்தாயா?’ என்றார். அப்பொழுது காற்று ஒரு சொட்டுக்கூட இல்லை. ‘இந்த மரத்துக்கு நடுங்கும் அஸ்பென் என்று பெயர். அப்படி ஏன் பெயர் வந்தது தெரியுமா?’ என்றார். அவர் கேட்ட ஒரு கேள்விக்குகூட அவனுக்கு விடை தெரியவில்லை. ஆனால் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலாக இருந்தான். அதற்கிடையில் அவருடைய ஒரே மகள் அலிஸியா துள்ளிக்கொண்டு வந்தாள். அவளுக்கு பதினான்கு வயது தொடங்கியிருந்தது. மிகப் பெரிய அழகியாக வருவதற்குத் திட்டம் போட்டிருந்தாள். இரண்டு பக்கமும் கூரிய முனைகள் கொண்ட நீலக் கண்கள். தகப்பனுடைய காதில் குனிந்து எதையோ சொல்லி அவருடைய கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போனாள். அவள் வந்த தோரணையும் தகப்பனை அழைத்துப்போனதும் அவளை எசமானி என்றே காட்டியன. மார்ட்டின் அதே இடத்தில் பல நிமிடங்கள் நின்றிருந்தான். எசமான் திரும்பவில்லை. தன் அறைக்குப் போகாமல் தொம்ஸனை தேடிச் சென்று அவனிடம் அஸ்பென் மரம் ஏன் நடுங்குகிறது என்று கேட்டான். தொம்ஸனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ‘நடுங்குகிறதா?’ என்ற சொல்லை மட்டும் உதிர்த்தான்.

அடுத்த நாளும் அதே நேரத்துக்கு எசமான் அவனை அழைத்தார். முந்திய நாள் அவர் அழைத்த காரணம் என்னவென்று அப்போதுதான் தெரிந்தது. அஸ்பென் மரத்தைப் பற்றிய விடுகதையை அவர் மறந்துவிட்டார். ‘குதிரைகளைப் பற்றி எல்லாம் படித்துவிட்டாயா? என்றார். ‘அப்படியே எசமான்’ என்றான். ‘பண்ணை வேலிகளைத் தினம் சோதிக்கிறாயா?’ என்றார். ‘சோதிக்கிறேன்’ என்று பதில் கூறினான். ‘துப்பாக்கி பிடித்துச் சுடுவாயா?’ என்றார். ‘இல்லையே, எசமான்.’ ‘தொம்ஸன் உனக்குச் சொல்லித் தரவில்லையா? குதிரை பராமரிப்பாளனுக்குத் துப்பாக்கிப் பயிற்சி முக்கியமல்லவா?’ என்றார். மார்ட்டினுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அடுத்த நாள் தொம்ஸன் குதிரை ஓட்டம் சொல்லித் தந்தது போலத் துப்பாக்கிப் பயிற்சியும் கொடுத்தான். அது ஒன்றும் குறி பார்த்துச் சுடும் தந்திரம் அல்ல. எப்படித் துப்பாக்கியில் ரவை போடுவது, எப்படி விசையை இழுப்பது. எப்படிக் கழற்றிப் பூட்டுவது, அவ்வளவுதான். எசமானோ அல்லது தொம்ஸனோ அவனுடைய துப்பாக்கி சுடும் வல்லமையை ஒரு நாள் சோதிக்கக் கூடும் என எதிர் பார்த்து அதற்குத் தயாராக இருந்தான். ஆனால் அவனுக்கான சோதனை வேறு உருவத்தில் வந்தது.

அவர்களிடம் தண்டர்போல்ட் என்று ஒரு குதிரை இருந்தது. உயர்ந்த ஜாதிக் குதிரை. ஒரு நல்ல ரேஸ் குதிரையாக அதற்குப் பயிற்சி கொடுக்கலாம் என்று எசமான் சொல்லியிருந்தார். ஒருநாள் பயிற்சியின்போது அது காலை உடைத்துக் கொண்டது. எசமான் குதிரையைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார். மார்ட்டின் வேலை பார்த்த அத்தனை வருடங்களிலும் அவர்கள் ஒரு குதிரையைக்கூடக் கொன்றதில்லை. சுடுவதற்கு தொம்ஸன் மறுத்துவிட்டான். ‘இரண்டு நிமிட வேலை அது. நீயே செய்’ என்றான். கடந்த மூன்று வருடங்களாக மார்ட்டின்தான் இந்தக் குதிரையைப் பராமரித்தவன். தண்ணீர் காட்டியவன். அதன் உடம்பை மினுக்கியவன். எத்தனையோ தடவை அதன்மீது சவாரி போயிருக்கிறான். இவன் வேறு வழியில்லாமல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போய் அதன் முன்னால் நின்றான். ஒரு காலை நொண்டிக்கொண்டு குதிரை இவனையே பார்த்தது. வளைந்து அதன் நெற்றியில் முத்தமிட்டான். குதிரைக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. அதன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கிக் குழாயை வைத்து அதை அழுத்த முடியாமல் நீண்ட நேரம் நின்றான். பின்னர் விசையை அழுத்தினான். பெரிய சத்தம் எழுந்தது, ஆனால் குதிரை ஒன்றுமே செய்யாமல் நின்றபோது அவன் திகைத்துப் பின் வாங்கினான். ஒலி எழுப்பாமல், காலை அசைக்காமல், வாலை ஆட்டாமல் அப்படியே பக்கவாட்டில் சரிந்து குதிரை விழுந்தது. அந்தக் காட்சி அவனுக்கு ஆயுளுக்கும் மறக்க முடியாததாகிவிட்டது. தன் வாழ் நாளில் ஆக நீண்ட இரண்டு நிமிடம்.

தொம்ஸன் நீண்ட நோயில் படுத்ததும் குதிரைகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டிய கடமை மார்ட்டின்மேல் விழுந்தது. குதிரைகளுக்கு வைக்கோல், ஓட்ஸ், தண்ணீர் காட்ட வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும். அவற்றின் குளம்புகளை அடிக்கடிப் பரிசோதிப்பதற்குத் தவறக் கூடாது. இன்னொரு முக்கியமான கடமை தடுப்பூசி போடுவது. அத்துடன் லாயத்தில் குளவி கூடுகட்டி இருக்கிறதா என்பதைத் தினம் சோதிப்பான். குதிரைக்குப் பிரதான எதிரி குளவி. இத்தனை பிரச்சினைகள் போதாதென்பதுபோல இந்தச் சமயத்தில்தான் எசமானின் மகள் அலிஸியாவுக்கு மார்ட்டின்மேல் காதல் ஏற்பட்டது. நீலக்கண் அழகி அவள். மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். மிக நுட்பமான அறிவு அவளுக்கு என அவளுடைய ஆசிரியைகள் புகழ்ந்தார்கள். பெற்றோருக்கு ஒரே புத்திரி. மார்ட்டினோ பெரிய படிப்பு ஒன்றும் இல்லாமல் கூலிக்கு வேலைசெய்பவன். அவனுக்கு வயது 21; அவளுக்கு 17. அதுதான் சங்கதி.

பெரிய காரியங்கள் எல்லாம் சின்ன விசயங்களில்தான் ஆரம்பமாகும். மான்களில் அதி உயரமானதும் எடை கூடியதும் மூஸ்மான்தான். அது ஒருநாள் வேலியை உடைத்துப் பண்ணைக்குள்ளே வந்துவிட்டது. இந்தச் செய்தியைக் கொண்டுவந்தது அலிஸியா. மூஸ்மானைக் கண்டதும் மார்ட்டின் திகைத்துவிட்டான். அவன் சவாரிசெய்த குதிரையிலும் பார்க்க அது பெரியது; 1500 றாத்தல் எடையிருக்கும். காட்டுக்காளான் போலப் பக்கவாட்டில் படர்ந்திருக்கும் கொம்புகள். இரண்டு மூன்று மணிநேரமாக அதைத் துரத்தித் துரத்திப் பண்ணைக்கு வெளியே கலைத்தான், வேலியைச் செப்பனிட்டுவிட்டு வியர்வை உடம்பில் வழிய லாயத்துக்குத் திரும்பினான். அவர்களிடம் அப்போது நாற்பது குதிரைகள் இருந்தன. அலிஸியா குதிரைச் சவாரிக்கான உடுப்பு அணிந்து கம்பீரமாக அவளது குதிரை மேல் ஆரோகணித்திருந்தாள். திடீரென்று முதல் நாள் இரவு ஏதோ அவளுக்கு நடந்து விட்டது போல வித்தியாசமான பெண்ணாகத் தெரிந்தாள். இரண்டு கைகளாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஆடையை பிடித்து இழுத்து உடம்பிலிருந்து விடுவித்துக்கொண்டாள். அது அவனை என்னவோ செய்தது. ‘ஏ பிலிப்பினோ, என்னோடு சவாரிப் போட்டிக்கு வா’ என்றாள். அவனை அவள் பெயர் சொல்லி அழைத்ததே கிடையாது. அவளுடையது அதிவேகமான குதிரை. இவன் தரையைப் பார்த்தபடி பேசாமல் நின்றான். ‘என்ன பயந்துபோய் விட்டாயா?’ என்று சீண்டினாள். மார்ட்டின் வழக்கமாக ஏறும் குதிரை வேகத்துக்குப் பேர் போனது அல்ல, ஆனால் நாளுக்கு 100 மைல் தூரம் களைப்பில்லாமல் ஓடக்கூடியது. அதில் ஏறினான். அவள் தன் குதிரையை முடுக்கிவிட்டாள்.

மார்ட்டின் நிதானமாகப் பின் தொடர்ந்தான். அவளோ குதிரையின் முதுகோடு வளைந்து படுத்துக்கொண்டு அதன் ஓர் அங்கமாகவே மாறி குதிரையை வேகமாக ஓட்டினாள். நீண்ட நேரத்துக்குப் பின்னும் அவனது குதிரை களைப்பு தெரியாமல் ஒரே வேகத்துடன் ஓடியது. மிகச் சமீபமாக வந்துவிட்டான். இன்னும் சில நிமிடங்களில் அவளை முந்தி விடலாம். கடைசி நிமிடத்தில் குதிரையை இழுத்துப் பிடித்து வேகத்தைக் கட்டுப்படுத்தினான். எசமானின் மகளிடம் தன் திறமையைக் காண்பிப்பதற்கு? அவனுக்கு என்ன பைத்தியமா ‘என்ன, பிலிப்பினோ, நீ எனக்கு விட்டுக் கொடுத் தாயா?’ என்றாள். அவன் ‘இல்லையே’ என்றான். ‘சரி சரி பேசாதே. நீ இரண்டாவதாக வந்ததற்கு உனக்கு ஒரு பரிசு தர வேண்டும்’ என்று சொல்லியபடி அவனை அணுகிக் குதிரை மேல் அமர்ந்தபடியே அவனுக்கு ஒரு முத்தம் தந்தாள். அன்று அவன் லாயத்துக்குத் திரும்பிய பின்னர் ஒன்றுமே செய்யவில்லை. சாப்பிடவில்லை. குதிரைகளைக் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் வைக்கோல் மெத்தையில் படுத்தபடி அவள் இரண்டு கைகளாலும் உடுப்பை இழுத்து உடம்பிலிருந்து விடுவித்ததைத் திருப்பி திருப்பி நினைவுக்குக் கொண்டுவந்தபடி தூங்கிப்போனான்.

அப்படித்தான் அவர்கள் காதல் ஆரம்பமானது. தினம் தினம் சந்தித்துக் கொண்டார்கள். அவள் குதிரைச் சவாரிக்கான உடுப்பில் இருப்பாள். இவன் என்ன வேலை செய்துகொண்டிருந்தானோ அந்தக் கோலத்தில் புறப்படுவான். அவன் பயத்தில் நடுங்கிக் கொண்டே அவளிடம் வருவான். ‘பிலிப்பினோ, பிலிப்பினோ’ என அவனை அழைத்து ஆணையிடுவாள். ‘என்னை விட்டுவிடு. இது சரியாக வராது’ என அவன் கெஞ்சுவான். ‘ஏ பிலிப்பினோ, உனக்கு இரண்டு காதுகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் காதுகளுக்கு நடுவில் மண்டையில் உனக்கு ஒன்றுமே இல்லை’ என்பாள். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ‘எசமானிடம் குதிரை சுடும் துப்பாக்கி இருக்கிறது’ என்பான். ‘முட்டாள், உன்னைத் திருத்த முடியாது. அஸ்பென் மரம்போல நீ எப்பவும் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்’ என்பாள்.

ஒருநாள் அவன் கேட்டான். ‘எதற்காக அஸ்பென் மரம் நடுங்குகிறது?’ அவள் சொன்னாள். யூதாஸ் இஸ்காரியத் யேசுவின் 12 சீடர்களில் ஒருவன். அவன் முப்பது வெள்ளிப் பணத்துக்காக ஒரு துரோகச் செயலைச் செய்தான். மதகுருமார்களுடன் யேசுவைத் தேடி படை வீரர்கள் வந்தபோது யேசுவின் கன்னத்தில் முத்தமிட்டு யூதாஸ் அவரை அடையாளம் காட்டிக் கொடுத்தான். யேசுவைப் படை வீரர்கள் பிடித்துக்கொண்டு போன உடனேயே தன் குற்றத்தை உணர்ந்து யூதாஸ் வெள்ளிப்பணத்தை மதகுரு மார்களிடம் வீசி எறிந்துவிட்டு, துக்கம் தாளாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டான். யேசு சிலுவையில் அறையப்படு முன்னர் அவன் இறந்துபோனான். யூதாஸ் தூக்கில் தொங்குவதற்குத் தேர்வு செய்தது அஸ்பென் மரம். அந்தக் கணத்திலிருந்துதான் அஸ்பென் மரம் நடுங்குகிறது என்பது பரம்பரைக் கதை.’

அலிஸியா அந்தக் கதையைச் சொல்லிவிட்டுத் தன் இரண்டு கைகளாலும் மார்ட்டினின் கன்னத்தைத் தொட்டுப் பிடித்துக்கொண்டு. ‘மரம் நடுங்குவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் உனக்கு நான் இருக்கிறேன்’ என்றாள். அவள் சொன்னதை நம்புவதற்கு அவனுக்குப் பெரிய ஆசை. அந்த வீட்டில் அவள் ஓர் இளவரசி போலத்தான் வாழ்ந்தாள். ஒரே செல்லப் பெண். சின்ன வயதில் இருந்து அவள் வைத்ததுதான் சட்டம். அவளை மீறி வீட்டிலே ஒன்றும் நடந்தது கிடையாது. மார்ட்டினை மணமுடிக்கப் போவதாகப் பிடிவாதமாக, திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். தகப்பன் எவ்வளவோ முயன்று பார்த்தார். ஒரு நாள் மனைவியிடம் சொன்னார். ‘குதிரைவால்போல இவள் வளர வளர இவளுடைய புத்தி கீழே போகிறதே. இவளை என்ன செய்வது?’ தாயாருக்கு மகளின் குணம் தெரியும். அவர் கணவரிடம் சொன்னார். ‘இழு என்று எழுதியிருக்கும் கதவைத் தள்ளித் திறக்கப் பார்க்கிறீர்கள். அவளை உங்களால் மாற்ற முடியாது. அவள் விருப்பத்துக்குவிடுங்கள்.’ இறுதியில் ஒருநாள் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. பல வருடங்கள் அவர்களுக்குப் பிள்ளையே பிறக்காமல் கடைசியில் ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ‘ஹனிதா’ என்று பெயர் சூட்டினார்கள்.

***

அந்த உணவகம் பிரதான சாலையிலிருந்து ஒதுங்கியிருந்தது. மங்கிய வெளிச்சமும் பழசாகிப்போன தரை விரிப்பும் அது வசதியானவர்கள் செல்லும் உணவகம் அல்ல என்பதை நினைவூட்டியன. மேசைகளும் நாற்காலிகளும் தரையிலே பூட்டப்பட்டிருந்தன. விவசாயிகளும் குடியானவர்களும் அங்கங்கே அமர்ந்து ஏதோ பானம் அருந்தினார்கள். சுவரிலே மாட்டியிருந்த டிவி பதினெட்டு நாள் தொடர் புரட்சிக்குப் பின்னர் பதவி பறிபோன எகிப்து அதிபர் முபாரக்கைத் திருப்பித் திருப்பி காட்டியது. டிவிக்கு முன் இருந்தாலும் அதை நிமிர்ந்து பார்க்காமல் அந்தப் பெண் உட்கார்ந்திருந்தார். அவர் உணவுக்கு ஆணை கொடுக்கவில்லை. யாருக்காகவோ காத்திருப்பது தெரிந்தது. ‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன். ‘நான்தான் ஹனிதா’ என்றார். அவருக்கு முப்பத்தோரு வயது இருக்கும். அந்த வயதில்தான் ஒரு பெண் அவருடைய அழகின் உச்சத்தில் இருக்கிறார் என்று ஆராய்ச்சி சொன்னது. அந்த ஆராய்ச்சி முடிவு சரியானதுதான். கறுப்பு முடி. உடலை இறுக்கிய உடை. அதற்கு மேல் குளிர்கால அங்கி அணிந்திருந்தார். முழங்கால் வரை உயர்ந்து நின்ற கறுப்பு பூட்ஸ்கள். கழுத்தைச் சுற்றி மெல்லிய ஸ்கார்ஃப். ஒரு சிறிய நாட்டின் இளவரசி போன்ற அழகான தோற்றத்தோடு அவர் அந்த உணவகத்தில் சற்றும் பொருத்தமில்லாமல் அமர்ந்திருந்தார்.

‘உங்களுடைய சிறுவயது ஞாபகம் என்ன?’ என்று கேட்டேன். ‘நான் பிறக்கும் முன்னரே என்னுடைய தாத்தாவும் பாட்டியும் இறந்துவிட்டார்கள். எனக்குத் தெரிந்தது என் அம்மாவும் அப்பாவும்தான். என் அம்மா சாதாரண குதிரைக்காரனான அப்பாவைக் காதலித்துப் பிடிவாதமாக மணந்துகொண்டார். அவர் சொல்லித்தான் எனக்கு அது தெரியும். ஆனால் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தியதை ஒருநாளாவது நான் கண்டது கிடையாது. அம்மா என் அப்பாவை ‘ஏ பிலிப்பினோ’ என்றுதான் இறுதிவரை அழைத்தார். என் தகப்பனும் கணவன் போல நடக்காமல் ஒரு கீழ்ப்படிதலான வேலைக்காரன் போலவே நடந்தார். வீட்டு நாயை அதட்டுவது போலவே அம்மா அப்பாவுடன் பேசுவார். அம்மாதான் பண்ணைக்கு முதலாளி. அப்பா ஒரு சேவகன். ஒரேயொரு மாற்றம் என்னவென்றால் மணமுடித்த பின்னர் அப்பா அம்மாவின் படுக்கையறையைப் பகிர்ந்துகொண்டதுதான்.

‘உங்களுடைய அம்மா அவ்வளவு மோசமானவரா?’ ‘அப்படிக்கூடச் சொல்ல முடியாது. அவருடைய புத்திக் கூர்மையும் வியாபாரத் தந்திரங்களும் அதிசயிக்கவைப்பவை. பண்ணையை முற்றிலுமாக மாற்றி அமைத்தார். அவர் சிந்திப்பார், அப்பா அதற்குச் செயல்வடிவம் கொடுப்பார். மாடுகள், ஆடுகள், பன்றிகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டுக் குதிரையில் மட்டுமே முதலீடு செய்தார். இன்றைக்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட உயர் ஜாதிக் குதிரைகள் இருக்கின்றன. உயர்ஜாதிக் குதிரை வேண்டுமானால் எங்களிடம்தான் வர வேண்டும். அப்படி ஒரு பெயர். இந்தப் பெரிய வெற்றிக்கு அம்மாவுடைய அயராத உழைப்புதான் காரணம். இருபது வருடங்களாகப் பாடுபட்டு ஒரு புதுஜாதிக் குதிரையை அம்மா உருவாக்கியிருக்கிறார். சொக்கலட் நிறம். மணிக்கு எட்டு மைல் வேகத்தில் நீண்ட தூரம் நடக்கக் கூடியது. அமெரிக்காவின் குதிரை இனப்பெருக்க வரலாற்றில் அம்மாவுக்கு இடம் உண்டு. அம்மா இறந்த பிறகு பண்ணை நிர்வாகம் என் கைக்கு வந்தது. பண்ணையை இன்னும் விரிவாக்கி, கோடை விடுமுறையில் சிறுவர் சிறுமியருக்குக் குதிரையேற்றத்தில் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறேன். என்னுடைய சின்ன வயது ஆசை இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது.’

‘உங்கள் அப்பா பற்றிச் சொல்லவில்லையே?’ ‘ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அப்பா பண்ணைக்கு வந்த அன்று ஒரு அஸ்பென் மரத்தை நட்டார். அன்றிலிருந்து அந்த மரத்தில் அவருக்கு ஒரு பற்று. அஸ்பென் மரம் விதையிலிருந்து முளைப்பதில்லை. வாழைமரம்போலக் கிழங் கிலிருந்து தானாகவே முளைத்துப் பெருகும். அதை அழிக்க முடியாது. ஒருமுறை காட்டிலே தீப்பிடித்த போது பல மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால் அஸ்பென் மரம் மறுபடியும் கிழங்கிலிருந்து முளைத்து எழுந்துவிட்டது. சங்கிலிபோல அதன் சந்ததி ஆயிரமாயிரம் வருடங்கள் தொடரும். இன்று எங்கள் பண்ணையில் எண்ணுற்றுக்கு மேற்பட்ட அஸ்பென் மரங்கள் நிறைந்து கிடக்கின்றன. மாலை வந்துவிட்டால் அப்பா வராந்தாவில் சாய்மனைக் கதிரையில் அமர்ந்து இந்த மரங்களைப் பார்த்தபடி தன் பொழுதைக் கழிப்பார்.

‘நீங்கள் திருமணம் செய்யப் போவதில்லை என்று பேசுகிறார்களே. அது உண்மையா?’ ‘அப்படியெல்லாம் இல்லை. அப்பாவின் சந்ததி என்னுடன் முடிவுக்கு வராது. சங்கிலிபோல அது தொடரும். அதற்கு முன்னர் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. என்னிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அப்பாவுக்காகச் செலவழிப்பது என்று தீர்மானித்திருக்கிறேன். என் அப்பாவை நினைத்து நான் கலங்காத நாள் இல்லை. எங்கேயோ பிறந்து இங்கே வந்து வேலைக்காரனாகவே தன் வாழ்நாளைக் கழித்துவிட்டார். ஐம்பது வருடங்களாக அவர் பண்ணையை விட்டு வெளியே போனதில்லை. அவரிடம் அன்பு செலுத்துவதற்கு வீட்டிலே ஒருவர்கூடக் கிடையாது. அறியாத வயதில் நானும் அவரைக் கேவலமாக நடத்தினேன். தினம் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் நான் என் சப்பாதுக்களை உதறிக் கழற்றி அப்படியே காலால் எற்றிவிடுவேன். அப்பா அவற்றை எடுத்துவைப்பார். ஒரு நாள்கூட என்னைக் கண்டித்தது கிடையாது. இப்போது நான் வெட்கப்படுகிறேன். அவருக்குப் பார்கின்ஸன் வியாதி. அவரால் தானாக ஒன்றும் செய்ய முடியாது. கைகளும் தலையும் நடுங்கியபடி இருக்கும். அவருடைய கடைசிக் காலத்தை மகிழ்ச்சியாக ஆக்குவதுதான் என் ஒரே கடமை.’

‘அவருக்கு உங்களை அடையாளம் தெரியுமா?’ ‘சில வேளைகளில் தெரியும். அடிக்கடி கண்கள் வெளியே பார்க்காமல் அவர் மண்டைக்குள் திரும்பிவிடும். அவர் வாய் ஓரங்களில் துப்பல் காய்ந்து வெள்ளையாகத் தெரியும். எப்போது சாப்பிட்டார் என்பது மறந்துபோகும். திடீரென்று பிலிப்பினோ மொழியில் எதுவோ சொல்வார். இத்தனை வருடங்களில் அவர் அந்த மொழி பேசியது கிடையாது. இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பி வெளியே போவதற்கு கையைக் காட்டுவார். அவரைச் சக்கர நாற்காலியில் உட்கார்த்தித் தள்ளி வராந்தாவில் விடுவேன். அவர் நட்ட அஸ்பென் மரம் பெரிதாக வளர்ந்து அங்கே நிற்கும். அதைச் சுற்றி இன்னும் நூற்றுக்கணக்கான மரங்கள். நடுங்கும் இலைகளைப் பார்த்தபடியே அவர் நெடுநேரம் இருப்பதை நான் சிறுமியாக இருந்தபோது அவதானித்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு வித்தியாசம். அஸ்பென் இலைகள் நடுங்கும். அவருடைய கைகளும் தலையும் நடுங்கும். கூர்ந்து பார்க்கும்போது அங்கே பெரிய உரையாடல் நடைபெறுவது தெரியவரும்.’

சலசலவென ஓடிய ஆறு திடீரென்று உறைந்ததுபோல மௌனம் கூடியது. ஹனிதா குனிந்து, கலையழகுடன் கூர்மையாக்கப்பட்ட அவருடைய கை நகங்களை நோக்கினார். பின் எழுந்து நின்றார். இரண்டு கைகளாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஆடையைப் பிடித்து இழுத்து உடம்பிலிருந்து விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து கண்களைச் சுழற்றி அந்த மலிவான உணவகத்தை பார்த்தார். அவர் கண்கள் போய் நின்ற இடங்களில் அமர்ந்திருந்த ஏழை விவசாயிகள் ஒவ்வொருவராக எழுந்து கைகளை நெற்றியில் தொட்டு வணக்கம் சொன்னார்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “குதிரைக்காரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *