காலம் உனக்கொரு பாட்டெழுதும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 8,437 
 

வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர்.

இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை விரித்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தெரிந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எரிந்துபோகிற புகை கதம்பமாய் மணத்தது.

அருளுக்குத்தான் முதலில் ஐடியா வந்தது. சட்டென எழுந்துபோய் சேட்டைக் கூட கழற்றாமல் தலைவழி நீர் சொரியுமாறு குத்துக்காலிட்டு உட்கார்ந்து விட்டான். எல்லாரும் கோணாமலையைத் திரும்பிக் கேள்வியோடு பார்த்தார்கள். கோணாமலைக்கு ஏன் எந்தநேரமும் சிவந்தே போயிருக்கின்றன கண்கள்? இறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள் எப்போதும் கோபமும் ரோஷமும் ஒளிந்திருப்பதாகத் தோன்றும். முகம் கருங்கல்லு மாதிரி விசித்திரமானதொரு பளபளப்புடன் கடினமாகவிருக்கும்.

கோணாமலை இன்று காலை சிவந்த கண்களால் சிரித்தான். ‘பொளபொள’ வெனப் பாய்கின்ற நீர்த்தாரையில் ஒருசிறு குழந்தை மாதிரி தலையை உதைத்துக் கொண்டிருந்த அருளை ஒரு தந்தையின் கனிவுடன் பார்த்தான்.

“ஓராள் கடைசியிலை குளிக்கலாம்”

அப்பா! இது என்ன குரல்? பேசாதவாய் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லிலும் மிகுந்த அழுத்தம் தெரிகின்றது.

மைக்கேல் உட்கார்ந்தான்.

கோணாமலை, கேதாரி, பெரியண்ணன், பெருமாள், யோசேப் அன்பரசன். பிறகு இவன்… எல்லோரும் உறுமிக்கொண்டிருந்த வாட்டர்பம்பை நோக்கிப் போனார்கள்.

மைக்கேல் செய்திகளைச் சேகா¢க்க உட்கார்ந்திருந்தான்.

சனங்கள் இவர்களை ஒருதரம் நிமிர்ந்து பார்த்தார்கள். பிறகு தலையைக் குலுக்கிக் கொண்டு தம்பாட்டில் வேலையில் ஆழ்ந்தார்கள். பத்தோ பன்னிரண்டோ வயதிருக்கும், ஒரு சிறுபையன் கையில் சோப்புப்பெட்டி குலுங்க இவர்களை நெருங்கி ஓடிவந்தான். நீட்டியபடியே நின்றான். இவர்கள் சட்டை செய்யாதவர்களென உடம்பைத் தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.

கோணாமலை நிமிர்ந்து பார்த்தான். பையனின் விழிகள் “வாங்கிக்கொள்…வாங்கிக்கொள்” எனக் கெஞ்சும் பாவனை காட்டின.

“அருள் சோப்பை வாங்கு”.

அருள் தலை, தோள், தொப்புள், தொடை, பாதம் எங்கும் சோப்புநுரை பொங்கி வழிய இளிக்க வாரம்பித்தான். அருள் கொஞ்சம் குஷாலான பேர்வழி. இவனுக்கு அந்தரங்கம் எல்லாம் சொல்லுவான். ஒருமுறை இவனும் அருளும் சைக்கிளில் டபிள் அடித்துக் கொண்டு அவசர அலுவலாகப் போனார்கள். சீமைக்கிழுவை மரங்கள் பூத்திருந்த ஒரு உயரவேலிக்குப் பின்னே கம்பீரமாக உயர்ந்து தெரிந்த ஒரு வீட்டுக்கு முன்னால் போகையில் அருள் இவன் விலாவில் இடித்தான்.

“என்ரை ஆளின்ரை வீடு…” எனக்காதினுள் கிசுகிசுத்தான்.
‘……….”
“எப்பிடி வீடு….?”
“வீடு…நல்லாத்தான் இருக்கு…..”
“ஆளை நீ பார்க்கயில்லை…பாத்தாலெல்லோ தெரியும்!…”
“…….”
“ஹ¤ம்….எல்லாம் நல்லபடியா முடிஞ்சு…..நானும் உயிரோட இருந்தா….”
“இருந்தா?…..”
“ஹ¤ம்”

இவன் திரும்பி அருளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். லோக செளந்தர்யங்கள் யாவும் அருளின் இறுகிய முகத்தில் ஒரு வினாடி பூத்திருக்கக் கண்டான். இவனும் அருளுக்காக ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.

ஒரு கணம் தான்!

பிறகு அருள் மாறிவிட்டான். கண்களில் பழைய இறுக்கம் பரவியது. கால்கள் கனவேகமா சைக்கிளை உழக்க வாரம்பித்தன. ஒரு உண்மையான ஊழியன்!


வெகு காலத்திற்குப்பிறகு, இன்று அருமையான சாப்பாடு. எந்த மகராசி கைகளோ! மணக்கிற சமையல். அருள் கைகளை வழித்து வழித்துச் சூப்பியபடி இவனைப் பார்த்து கண்களைச் சிமிட்டி இளித்தான்.

ஒவ்வொரு பெண் கைச்சமையலுக்கும் ஒவ்வொரு ருசி இருக்கிறது. என்றாலும் அம்மாவின் எளிமையான சமையலின் ருசி வேறெவருக்கும் வாய்க்காது. அம்மா கையால் வெந்நீர் தந்தாலே அதற்குத் தனி ருசி இருக்கும். மெல்ல இருள் சூழும் போதுகளில் அம்மா கோவிலால் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளைச்சேலை உடுத்தி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. அம்மா தலை முழுகி, ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து போட்டபடி ஒவ்வொரு நாள் மாலையிலும் கூந்தலிலிருந்து நீர் சொட்டிச் சொட்டி வெள்ளைச்சேலையின் பின்புறம் நனைந்தபடி தோற்றம்காட்ட, அம்மன் கோயில்களைத் தேடிப்போக ஆரம்பித்தாள். திரும்பவரும்போது அம்மா மேனியில் கற்பூர வாசனை வீசும். அம்மா போ¢ல் அம்மன் குடியேறி வருவாள் போல, பார்க்க பயமாகவும் அழகாகவும் இருக்கும்.

அம்மா மச்சம், மாமிசம் சேர்ப்பது கிடையாது. இருட்டிய பிறகு தனியாக செங்கல் அடுப்பைமூட்டி தனிச் சமையல். ஒரு நேரம் மட்டுமே கொஞ்சம் போலச் சாப்பிடுகிற அம்மாவால் எவ்வாறு இப்படி பம்பரமாகச் சுழன்று காரியம் பார்க்கமுடிகிறது! மிகவும் குழைந்து போய்க் கஞ்சிப் பசையுடன் சோறும், ஏதோ ஒரு காயை வதக்கி வறட்டலாக ஒரு குழம்பும், கடித்துக்கொள்ள அப்பளம் உண்டு கட்டாயமாக.

நொடிக்குள் சமைப்பாள் அம்மா. இவன் நாவில் நீர் சொட்டச்சொட்ட காத்திருப்பான். அம்மா இவன் தோளளவு உயரமிருப்பாள். வெள்ளா¢ப்பழத்தைப் பிளந்து வைத்திருக்கிற மாதிரி ஒரு நிறமும் குளுமையும் அம்மாவுக்கு. அம்மா அந்தக்காலத்தில் பேரழகியாக இருந்திருக்க வேண்டும். அதுதான் நிறையக் குழந்தைகள் பெற்றாளோ! தோல்வற்றி நடை மெல்லத் தளர்கிற இந்த வயதிலும் அம்மா கண்கள் ஜோதியென ஜொலிக்கின்றன.

இவன் நிமிர்ந்து வீம்பாக நிற்பான், கண்களால் அம்மாவப் பார்த்து கனியச் சிரித்தபடி. அம்மா அண்ணாந்து இவன் நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள்.

“அம்மாளே!…” ஆத்மார்த்தமாக வேண்டுகிற அம்மா குரலில் இவன் கரைந்து போய் விடுவான். கற்பூரம் எரிந்த மீதியின் வாசனையும் சூடுமாக ஈரலிப்பாக அம்மா நெற்றியைத் தீண்டுகிற போது வாசனை நாசியை நிரப்ப இவன் சிலிர்ப்பான். அம்மா மூச்சு ஒருகணம் இவன் மார்பில் பட்டுவிலகும். இவனுக்கு உடனே பசியெடுத்துவிடும்.

சுலோசனா அக்கா அவசரச் சமையல், இவளுக்கு எதிலும் அவசரம், என்னத்தைக் கண்டாளோ இந்த அத்தானிடம். மகுடி கேட்ட நாகம்போல மயங்கிக் கிடக்கிறாள். அக்கா நிறையக்கறிகள். வைத்திருப்பாள், நிறையக் குழந்தைகளைப் பெற்றது போலவே, ஒன்றுக்கு உப்புக்கூடினால் இன்னொன்றில் உப்பே இருக்காது. மீன்குழம்பு மட்டும் அசலாக வைத்திருப்பாள். எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்துவிட ஒரு அபூர்வ ருசி பிறக்கத்தான் செய்கிறது.

சுலோ அக்கா வீட்டுக்கு இவன் கடைசியாகப் போனநாளே மறந்துவிட்டது. அத்தான் முணுமுணுத்தபடி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போனான். இந்த அத்தான் ஒரு சா¢யான ‘சேற்று எருமை’ ‘காட்ஸ்’ அடிக்கிறதையும், கடமைக்காக ஏதோ வேலைக்குப் போவதையும், மீதி நேரமெல்லாம் ஒரே குடியையும் தவிர இவன் எதைத் சாதித்தான்? சுலோ அக்காவை வருஷம் தவறாமல் அம்மாவாக்குகிறதில் மட்டும் படுசமர்த்தன். சுலோ அக்கா இதழ்கள் வெடித்து மார்பு வற்ற வதங்கிய கத்தா¢க்காய் போல ஆகிவிட்டாள். அத்தான் மீண்டும் ஏதோ வாய்க்குள் ‘கசமுச’ என்றான். போனால் போகட்டுமே! இவன் அக்காவைப் பார்க்கத் தானே வந்தான்.

“இருக்கிறதுகளுக்கும் வீண் கரைச்சல்…”

அத்தான் வெளிப்படையாகவே கொக்கா¢க்க ஆரம்பித்தான். அக்கா நாக்கை கடித்தபடி இவனைக் குசினிக்குள் இழுத்துப் போனாள் இவன் கைகளை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டேயிருந்தாள்.

“சாப்பிடுகிறியடா…” தளதளக்க கேட்டாள். இவன் நிமிர்ந்து பார்க்க சக்தியற்றுப் போனதால் மெளனமாக உட்கார்ந்தான். அக்கா மளமளவென்று சாப்பாடு போட்டாள். பிசைந்து பிசைந்து இவன் கைகளில் கொடுக்க ஆரம்பித்தாள்.

அக்கா மூக்கை உறிஞ்சுவது கேட்டது.

“அம்மா கோயிலுக்குப் போவதை விட்டுட்டா….”

“……”

“அம்மா கோயிலுக்குப் போறதையும் விட்டுட்டா…”

“……”

‘அம்மா கோயிலுக்கு….” அக்கா குரல் உணர்ச்சிவேகத்தில் உடைந்து கீச்சிட ஆரம்பித்தது.

இவன் கையை உதறிவிட்டு வேகமாக வெளியே போக ஆரம்பித்தான்.

“கையைக் கழுவவிட்டு போடா…” அக்கா கடைசியில் அழுகை வெடிக்கிற குரலில் அழைத்தாள். இவன் திரும்பிப்பார்க்க விருப்பமில்லாமல் உள்ளங்கைகளை இறுகப் பொத்தியபடி காற்றைக் குத்தியபடியே போனான்.

அக்கா குமுறிக் குமுறி அழைத்தபடி இவன்பின்னே வரும் அரவம் கேட்டது. காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

“இனிமேல் ஒரு வீட்டுக்கும் போக மாட்டேன்” இவன் காற்றுக்கு சபதம் செய்து கொடுத்தான்.

ஒருதரம் நான்கு மெயின் ரோட்டுகளுக்கும் உள்ள பெரிய பாலங்களை உடைத்துவிட்டுப் போய்விட்டார்கள்!

கோணாமலை ஆட்களைப் பிரித்துப் பிரித்து விட்டான். இவனுக்கு வடக்கு ரோட்டு, டிராக்டர்களில் மண்ணையும் கல்லையும் கொண்டுவந்து குழிகளைச் சனங்கள் பீதியால் பரபரத்தபடி நிரப்பினார்கள்.

இவன் காவல்! ‘ரெடி’யாக நின்றான், சுறுசுறுப்பும் பொறுப்பும் மிக்கவனாக சுற்றுமுற்றும் பார்த்தபடி, வான்களும் பஸ்களும் பாரத்தைக் குறைத்துப் பள்ளத்தில் மெதுவாக இறங்கி இறங்கிப் போயின.

யாரோ இவன் முழங்கையில் இதமாகப் பற்றினார்கள்.

திரும்பிப்பார்த்தான்.

சுந்தா¢யக்கா!

விந்தி விந்தி நடக்கிற சுந்தா¢யக்கா! உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்குப் போய் மாலை மயங்கி இருள்சூளும் நேரங்களில் வீட்டுக்குப் போய்ச்சேர்கிற சுந்தா¢யக்கா! அம்மா பதைபதைப்புடன் வாசலைப் பார்த்தபடியே நிற்பாளோ! இந்த விந்தல் கால் மட்டும் இல்லாவிட்டால் இந்திரன், சந்திரன் எல்லாரும் கந்தா¢யக்கா பின்னால் வா¢சையாக காத்து நிற்க மாட்டார்களோ! உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்குப்போய் இருட்டியபிறகு வீட்டுக்குப் போய்ச்சேர உறுதியுடன் பழக்கப்படுத்திக் கொண்டாள் சுந்தா¢யக்கா.

சுந்தா¢யக்கா இவனையே பார்த்தபடி நிற்க…, இவன் பராக்குப் பார்ப்பவன் போல வேறெங்கோ பார்த்தான். பஸ் மெல்ல பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. சுந்தா¢யக்கா மேலும் இவனை நெருங்கி நின்றாள். கைப்பையைத் திறந்து சில நோட்டுகளை இவன் பொக்கெற்றுக்குள் திணித்தாள். இவன் திரும்ப அவள் கைகளுக்குள் திணிக்க… ஆற்றாமையுடன் இவனையே பார்த்தாள்.

“வச்சிரன்ரா…”

“வேண்டாம்…எனக்கொண்டும் வேண்டாம்.”

சுந்தா¢யக்கா இவனை மேலும் கீழுமாக பார்த்தான். பறட்டை பற்றிப்போன தலைமுடியிலிருந்து வெயிலும் மழையிலும் அலைந்து திரிந்த கால்வரை செம்புழுதி படிந்திருந்தது. சாறனை உயரத்தூக்கி தொடை தெரியுமளவுக்கு முடிச்சுப்போட்டு இருந்தான். சேட் தோள்மூட்டில் பிரிந்திருந்தது-

“ஒரு சேட்டாவது வாங்கலாமெல்லே…”

“…..”

“வச்சிரன்ரா…”

“அக்கா….பார்…பஸ் வெளிக்கிடப் போகுது…”

“பெரிய கண்கள் சுந்தா¢யக்காவுக்கு. இவனை உறுத்துப்பார்த்தாள். கண்களுக்குள் இவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு போய்விடும் உத்வேகத்துடன் பார்த்தாள். கன்னங்களை நனைத்துக் கொண்டு பாயுமாறு இரு வைரச்சொட்டுகள் உருக வழிவதென சிந்தினாள்.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சுந்தா¢யக்கா போனாள். கடைசி ஆளாக விந்தி விந்திப் போய் பஸ்ஸில் ஏறினாள். பின்புறக் கண்ணாடியூடாக இவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். இவன் தற்செயலாக திரும்புபவனென அந்தப்பக்கம் பார்த்தான்.

பின்புறக்கண்ணாடி முழுவதும் விசாலித்தபடி சுந்தா¢யக்காவின் பெரிய கண்களைக் கண்டான். இவன் சட்டென்று மறுபுறம் திரும்பிக்கொண்டான்.

“சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்”
காற்றிடம் சபதம் செய்தான்.


இன்று எல்லாம் அசாதாரணமான புதியதோற்றம் காட்டின. திளைத்துக் குளித்த மேனியை குளிர்காற்று தழுவிக்கொண்டு போயிற்று. இவன் வானத்தை நிமிர்ந்து நோக்கினான். ‘பளிச்’ செனும் நீலவானில் பஞ்சுப் பொதிகள் மிதப்பதன்ற அழகிய சித்திரைவானம் இன்றில்லை. மழைக்கோலம் காட்டிற்று. காற்று இறுக்கமாக இருந்தது. மெல்லமெல்ல கிழக்கு மூலையிலிருந்து இருண்டமேகங்கள் பரவிக் கொண்டிருந்தன.

மைக்கேல் சேதி சொன்னான்!

“தெற்கு றோட்டாலை சாமான் வருகுதாம்…நாங்கள் இடையிலே மாத்திக் கொண்டு வரவேணுமாம்….”

கோணாமலை விருட்டென எழுந்தான். படபடவென சில உத்தரவுகளைப் போள்ளான்.

“தெற்கு றோட்டுத்தானே!…பயமில்லை…..கனசாமான் வேண்டாம்….ஆளுக்கொண்டு போதும்…..”

“பெருமாள் வெகிக்கிளை எடு….மழைவரும்போல கிடக்கு…சாமான் நனையாமல் கவனமாக மாத்தவேணும்….”

“யோசேப் இஞ்சேயே இருக்கட்டும்….”

பெருமாள் ஒரு அருமையான ட்ரைவர், ரோட்டுகளை ஒவ்வொரு அங்குல அங்குலமாகப் படித்து வைத்திருந்தான். குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டுகளிலே கியரை மாற்றாமலே ஒடித்து வெட்டியபடி பறந்து செல்ல முடியும் பெருமாளால்.

பெருமாளுக்குப் பக்கத்தில் கோணாமலை தாவி ஏறினான். அவனுக்குப் பக்கத்தில் பெரியண்ணன்.

இவன் ….கேதாரி…அருள்….அன்பரசன்…..மைக்கேல்…. பின்புறம் புகுந்து கொண்டார்கள். இவன் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். பெருமாளைத் தவிர எல்லோருடைய உள்ளங்களிலும் பொத்தியபடி ‘சாமான்’ இருந்தது. ‘ரெடி’யாக இருந்தார்கள்.

செம்புழுதியைக் கிளப்பியவாறு பாய்ந்து செல்ல வாரம்பித்தான் பெருமாள், வானம் ஒருமுறை பெரிதாக உறுமிற்று.

இன்னும் கொஞ்ச தூரத்தில் மெயின்ரோட்டில் ஏறிவிடலாம். சட்டென்று செங்கோணத்தில் திரும்பவேண்டும். பெருமாள் கியரை மாற்றுவதற்க ஆயத்தமானான். சந்திக்கும் இடத்தில் கிழட்டு ஆலமரத்தின் நிழலில் சனங்கள் கூடிநின்றார்கள். பெருமாள் வேகத்தைக் குறைத்துக் கொண்டான்.

கண்கள் பெரும் ஒளிவெள்ளத்தில் கூசின. உச்சியிலிருந்து கீழ்வானம் நோக்கி படர்கிற ஒரு கொடியாக மின்னல் பளபளத்த படி இறங்கிற்று. வானம் மீண்டும் ஒருதரம் வஞ்சனையுடன் கனைத்தது. பெருமாள் தடுமாறினான். ஒரு கணம் நிதானித்தான்.

படபடவென ஏதோ முறிந்து விழுகின்ற பெரியகிளையன்று ‘ஓ’வென அலறியபடி பூமியை அறைந்தது.

சனங்கள் முகத்தில் பெருங்குழப்பம் பரவிற்று. கோணாமலை “முன்னேபோ” என்றான். பெருமாள் கிளச்சை ஊன்றி மிதித்தான்.

கோழை வழிகின்ற ஒரு திரைத்த கிழவன் கைகளை ஆட்டிக்கொண்டே முன்னே வந்தான்.

“மக்காள்…”

கோணாமலை என்ன என்பவனெனப் பார்த்தான்.

“ஆல் முறிஞ்சு விழக்கூடாது மக்காள்…போறபயணம் ஆபத்து மக்காள்.”

அருள் கெக்கெலி கொட்டிச் சிரிக்கவாரம்பித்தான்.

“எங்களுக்கு ஒவ்வொரு நிமிசமும் ஆபத்துத் தானேணே அப்பு!….”

கிழவன் பரிதாபமும் பச்சாத்தாபமும் வழிய இவர்களைப் பார்த்தான்.

பெருமாள் லாவமாக திரும்பியபடி மெயின் ரோட்டில் ஏறினான். மீண்டும் ஒரு மின்னல் அடிவானம் நோக்கி இறங்கிற்று. காற்று மிகவும் கனமாக இறுக்கிக்கொண்டே போனது. என்ன இது? இன்று எல்லாம் அசாதாரணமாக மாறிவிட்டன. தென்கிழக்கு மூலையிலிருந்து, இது சித்திரைமாதம் என்பதை மறந்துபோய், படுவேகத்தில் ஊதல்காற்று வீசிக்கொண்டிருந்தது.

“பெருமழை வரப்போகுது பெருமாள்…கெதியா…”பெருமாள் பலங்கொண்டமட்டும் மிதித்தான்.

சனங்கள் பரபரத்தவாறு வீடுகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள். பருவந் தப்பிப் பெய்யும் மழையை ஆச்சா¢யமும் ஆவலுமாக வரவேற்கும் பாவம் அவர்கள் முகங்களில் தெரிந்தது. இவர்களின் வான் உறுமிக்கொண்டே செல்வதை வாசல்களில் நின்று கவனமாகப் பார்த்தார்கள்.

கனத்த பெருந்துளிகளாக மழை இறங்க ஆரம்பித்தது. கண்ணாடி மங்கத் தொடங்கிற்று. கனவில் தெரியும் தோற்றமென ரோட்டும் மரங்களும் விசித்திரத் தோற்றம் காட்டின. பெருமாள் வைப்பரை’ப் போட்டான்.

வேலை செய்யவில்லை….!

பெருமாள் இலகுவில் சளைத்து விடுபவனல்ல. கும்மிருட்டை ஊடுருவி பூனையைப் போல பார்க்க இவர்கள் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். கூர்ந்து பார்த்துக் கொண்டே போனான்.

என்ன மாதிரி ஒரு மழை! இவன் தனது வாழ்நாளில் காணாத மழை. புழுதி அடங்கிப் போகிற வாசனை மிகுந்தது. இவன் நாசி நிறைய வாசனையை வாங்கி அனுபவித்தான். காலைத்தூக்கி முன்சீட்டில் இலகுவாக வைத்துக்கொண்டான்.

சட்டென்று ரோட்டு வெறிச்சோடிப் போகிறது. ஏனோ? சனங்கள் எவரும் இல்லை. மழைதான் காரணமோ என்னவோ? எதிரே ஒரு வாகனம் கூட வரவில்லை. கொட்டும் மழையில் சளைக்காமல் நனைந்தபடி ஆடி ஆடிப்போன ஒரு கிழட்டு எருதைத்தவிர, வெறிச்சோடும் ரோட்டு.

மூர்க்கத்தனமாக பூமியை மூழ்கடிக்கும் ஆவேசத்துடன் அம்புகளாக மழை வீழ்ந்துகொண்டிருந்தது. வானம் எச்சா¢க்கிறமாதிரி அடிக்கடி பெருமிடிகளைக் கொடுத்தது. கூடவே உச்சியிலிருந்து கீழ்வான நோக்கி வானத்தை கூறுகளாகப் பிரிக்கும் கூர்வாளென பாயும் மின்னல்.

இவர்கள் எல்லோருக்கும் ஏனோ மயிர்க்கால்கள் குத்திட ஆரம்பித்தன. இதைவிட குருதியை உறையவைக்கும் குளிரை தாங்க இவர்கள் பழகிக்கொண்டவர்கள். ஆனால் இன்று என்னவாயிற்று? எலும்புக் குருத்துக்குள் ஊடுருவிப் புகுந்து கொள்கிற குளிர்.

அருள் கைகளைத் தேய்த்து சூடாக்கினான். நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டான். இவனைப் பார்த்து இயல்பான தோழமையுடன் சிரித்தான். அருள் இன்று ஏனோ வழமையை விட அதிகமாக இளிக்கிறான். முகத்தில் ஒரு விசித்திரமான ஒளி பிறந்தது அருளுக்கு.

இவனுக்கு ஏனோ திடீரென அம்மா, சுலோ அக்கா, சுந்தா¢ அக்கா, எல்லோரும் உதித்தார்கள்.

மழையுடன்சேர்ந்து அம்மா மேனியில் மணக்கிற கற்பூரவாசனை வீசிற்று. மழையில் கற்பூரத்தை கரைத்தவன் எவன்?

சுந்தா¢யக்காவின் பெரியகண்கள் முன்னே தோன்றின. இரு கனத்த வைரத்துளிகளைச் சிந்தின. சுந்தா¢யக்கா இதமாக இவன் கைகளைத் தொடுவது போலிருந்தது. சுந்தா¢யக்கா இந்த மழையிலும் வேலைக்குப் போயிருப்பாள்!

சுலோ அக்காவின் கீச்சுக்குரல் பேய்க் காற்றில் கலந்து வந்தது. இவனை, ஆதங்கமும் பொறுக்க முடியாமல் பீறிடுகிற அன்புமாக சுலோ அக்கா அழைத்துக்கொண்டு தொண்டைக்குழியைப் பிளந்துகொண்டு ஒரு நாகமென வெளிவந்தது.

இவன் கண்களைத் திறந்தான். பெருமாள் ஒரு வளைவில் வேகத்தை மாற்றாமலே லாவகமாகத் திரும்பிக் கொண்டிருந்தான். சூரன்தான்! ஒரு நூறுயார் தூரத்துக்கப்பால் பார்வை புலப்படாதபடிக்கு கனத்த திரைகளாக மழை விழுந்துகொண்டிருக்க, வைப்பர் வேலைசெய்யாமலே படுவேகமாக வானைச் செலுத்திப் போகிறான்! வேறு எவனால் இப்படி முடியும்? அசகாயசூரன்தான்!

ரோட்டு நேரே கோடுபோட்டதெனச் செல்கின்றது. பெருமாள் கிழித்துக்கொண்டு போனான்.

ஏன்?…ஏன்…? என்ன…?

பெருமாள் சடக்கென்று பிறேக் போட்டான். எதிரே ஏதோ பிசாசுத்தனமாக நெருங்கிக் கொண்டிருந்ததாக எல்லோரும் உணர வாரம்பித்தார்கள்.

பெருமாள் கோணாமலையைத் திரும்பிப் பார்த்தான். கோணாமலை இறுகிய முகத்தவனாய் “முன்னேபோ” என தலையைக் குலுக்கினான். எல்லோருக்கும் வேகமாக மூச்சு வாங்கவேண்டும் போலிருந்தது. உள்ளங்கையை இறுகப் பொத்திக் கொண்டார்கள்.

பெருமாள் நிதானமாக முன்னே போனான். தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்த்துக்கொண்டே போனான். எல்லா வீடுகளும் தெருவாசலைப் பூட்டியபடி மெளனமாய் மழையில் கொட்டக் கொட்ட நனைந்து கொண்டிருந்தன.

எதிரே ஒரு சிறிய ரோட் மெயின் ரோட்டில் கலக்கும் அந்தச் சந்தியில் ஏதோ கள்ளத்தனத்துடன் வஞ்சகம் புரிய ஒளிந்திருப்பதாகப் பட்டது. பெருமாள் கொட்டும் மழையில் வெளியே தலையைப் போட்டான்.

பெரிய வாகனம் ஒன்று, தனது பூதாகரமான உடலை மறைக்கப் பெரும் பிரயத்தனம் செய்தவாறு நின்றுகொண்டிருந்தது!

…பெருமாள் கொடுப்புகளை இறுக நெறுமினான்…முகம் சட்டென கறுத்து வீங்கிப் போனது.

கோணாமலைபுரிந்து கொண்டான். கண்கள் இரத்தம் கொட்டுபவையெனச் சிவந்தன. இவர்கள் எல்லோருக்கம் புரிந்துவிட்டது. மண்டைக்குள் ஒரே ‘விறு விறு’, மிக வேகமாக மூச்சுவந்தது. உடல் தகிப்பதெனச் சுட்டது.

“ரெடி…ரெடி…ரெடி…” என இதயம் துடித்தது. உத்தரவுகளைப் பெற ஆயத்தமாக இருந்தார்கள். ஒவ்வொரு அங்கமும் துடிக்கவாரம்பித்தது.

கோணாமலை பரபரத்தான்.

“அம்பிட்ட கையழுங்கையுக்குள்ளை விடு… உடைச்சுக்கொண்டு தப்பவேண்டியதுதான்… எங்கெங்கையெல்லாம் நிக்கிறாங்களோ?… வளைச்சுப்போட்டான்களோவும் தெரியாது…. சனியன் பிடிச்ச மழை!…”

பெருமாள் வேகமாக பின்னே போக ஆரம்பித்தான். இவன் பின்னால் பார்த்தான். பின்புறமிருந்தும் ‘வாகனம்’ ஒன்று பிசாசு மாதிரி நெருங்கிக்கொண்டிருந்தது!

பக்கத்திலே ஒழுங்கைமாதிரி ஒரு ஓடை தெரிந்தது. பெருமாள் பெரும் பிரயத்தனத்துடன் உள்ளே நுழைய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் முந்திக்கொண்டார்கள். நெருப்பை உமிழ்ந்த படி இருபுறமிருந்தும் அச்சமும் அவதானமுமாக நெருங்க ஆரம்பித்தார்கள். மழை அவர்களுக்க வாழ்த்துச் கூறிக்கொண்டிருந்தது. வானம் இவர்களைப் பார்த்து இடிஇடியெனச் சிரித்தது. மின்னல் பழிப்புக் காட்டுவதென அடிக்கடி பளபளத்துக் கண்சிமிட்டியது.

ஒவ்வொரு நொடியும் மிகப் பெறுமதியானதென இவர்கள் உணர்ந்தார்கள். தோல்வி படுவேகமாக இவர்களை நோக்கி வாயைப் பிளந்தபடி வந்தது. தோற்று விடுவார்களோ இலகுவில் என்ன?….அருள் மிகப் பரபரத்தான்…. தலையை அப்படியும் இப்படியும் குலுக்கினான். உணர்ச்சி வேகத்தில் கிடுகிடுவென நடுங்கினான்….ஏதாவது செய்…அவசரமாக…கெதியாக…

வாயில் கிளிப்பைக் கடித்து இழுத்தான். ஐயோ! இடது கை…இடதுகை…வழமில்லை! இழுபட மாட்டேன் என்கிறது.

இவனுக்கு துரதிர்ஷ்டவசமான தப்பு ஒன்று நிகழ்வது நன்றாகவே தெரிந்தது.

தொடைகளிலும், கணுக்காலிலும் குதிரைபலம் சேர்ந்தது. கால்விரல்களில் முழுபலத்தையும் சேர்த்துக்கொண்டே உந்தி எழுந்தான். பேய்த்தனமாக ஊதிக்கொண்டிருந்த காற்றிலும், பெரு அம்புகளாகத் துளைக்கும் மழையிலும் ஒருகணம் ‘ஜிவ்’வெனப் பறந்து மழையில் நனைந்து சொசொதவென அனங்கிக்கொண்டிருந்த சகதியில் விழுந்தான். அவசர அவசரமாக நாலைந்து சுற்றுக்கள் புரண்டு தூரவிலகினான்.

இவனுக்கு புரிந்துவிட்டது….அவ்வளவுதான்…இன்னும் ஒரு நொடிதான்…அருள்! அடமுட்டாளே!…அவசரப்பட்டுவிட்டாயே!

தொடைகளில் இலேசாக அடிபட்டிருக்க வேண்டும். நொண்டிக்கொண்டே எழுந்தான். கால்போன திக்கில் ஓட ஆரம்பித்தான். செம்மண் நிறத்திலே கணுக்கால்வரை உயர்ந்து கனவேகத்துடன் வெள்ளம் ஒழுங்கைகள் வழியே பாய்ந்துகொண்டிருந்தது. ‘சளசள’ என்று இவன் கனத்த காலடிகளைத் தாங்கமாட்டாமல் வழிவிட்டுக் கொடுத்தது.

பெரும் இடிபோல முதல் தரம் வெடித்தது. வான்ஒருதரம் பெருகக் குலுக்கிற்று. தொடர்ந்து ஒன்று…இரண்டு…மூன்று…நாலு…ஐந்து…ஆறு…

அவர்கள் அஞ்சி நின்று விட்டார்கள் நிலையாக!

இவன் ஒடிக்கொண்டே ஒருதரம் திரும்பிப்பார்த்தான். பெரும் புகைமண்டலமொன்று மழையை விலக்கிச் செல்லும் கரும் பூதமென மேலெழுந்து கொண்டிருந்தது. மூச்சுத் திணறும் கந்தகநெடி எங்கும் சட்டெனப் பரவிற்று.

இவன் மூளை செயலற்றுப் போய்விட்டது. கண்கள் நேரே வெறித்தன. கால்கள் மட்டும் தம்பாட்டில் இவளை கனவேகமாக எங்கோ இழுத்துச்சென்றன.

கோணாமலை!…பெருமாள்!…கேதாரி….பெரியண்ணன்!….கைக்கேல்!…அன்பரசன்!….

அவ்வளவுதான்!…இனியென்ன?…அவ்வளவுதான்…துண்டு துண்டாகப் போயிருப்பார்கள்.

இனி?

இவன் செய்யவேண்டியது என்ன? எப்படியாவது தெற்கு ரோட்டுக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும். ‘சாமான்’ வரும். அவர்களைத் திசை திருப்பி விடவேண்டும். வருகிறவர்களுக்குச் செய்தி தெரிந்து திரும்பிப் போயிருப்பார்களோ?….செய்தி சொல்லுவது யார்? இந்தக் காற்றும் மழையுமா?

இவன் தெற்கு ரோட்டுக்குப் போய்ச்சேரவேண்டும்! சனியனே! மழையே! நீ நிற்க மாட்டாயா!…..

வானம் கடைசித்தடவையாக பெருமிடியன்றைக் கொடுத்து ஓய்ந்தது. மழைவேகம் குறைய ஆரம்பித்தது, இவனுக்கு பன்னீர் தெளிப்பதென மெதுவாக தூற்றல்களைப் போட்டது.

இவன் வெகுதூரம் ஓடிவந்து விட்டான். இனிப் பயமில்லைப் போல் இருந்தது. இவன் பெருநடையாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் மூன்று மைல்களாவது கடக்க வேண்டியிருந்தது. இவன் கடந்துவிடுவான்…எப்படியாவது!

மழை முற்றாக ஓய்ந்தது. மயான அமைதி நிலவிற்று மரங்கள் மழையில் நடுங்கி அஞ்சிப்போய் ஆடாமல் அசையாமல் கண்ணீர் சிந்தின. வெள்ளம் மட்டும் இவனுடன் கூட வந்தது.

ஒழுங்கைகள் வலை பின்னிக் கிடப்பதென திக்குமுக்காட வைத்தன.

சனங்கள் வீட்டு வாசல்களில் நின்றார்கள். இவனை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஆஜானுபாகுவான ஒரு வித்தியாசமான இந்த இளைஞன், கொட்டும் மழையில் நனைந்து விட்டு எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறான்!

ஆறிப்போகலாமே, கொஞ்சம் இளைப்பாறிப் போகலாமே!…அல்லது போகலாமே விட்டுவிட்டால் என்ன…. இன்னும் என்ன என்ன விபா£தங்களும் நிகழக் காத்திருக்கின்றனவோ இன்று!

இவன் போகாமலே விட்டால் என்ன?

சனங்கள் இவனை விசித்திரமாகவும், ஆவலாகவும் புதினம் பார்த்தார்கள். அவர்கள் கண்களில் ஒருவிதமான பயமோ….அன்றிப், பக்தியோ….தெரிந்தது. சிலர் கண்களில் அடக்கமாட்டாமல் பீரிடுகின்ற நட்பு தெரிந்தது.

ஜன்னல்களில் நிலவு முகங்கள் தோன்றின. கொஞ்சம் விழிகளால் இவன் முகத்தைத் துளைத்தன.

“போகாதே….போகாதா….” எனக் கெஞ்சுவதுபோல் இருந்தது அவர்களின் பார்வை.

இவன் விரும்பினால் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஓய்வெடுக்கலாம்.

இவன்தான் ஒரு வீட்டுக்குள் போகமாட்டானே? இவனுக்கு இவன்வேலை பெரிது. தெற்கு ரோட்டுக்கு விரைவில் போய்ச் சேரவேண்டும். ஓழுங்கைகளை விட்டுப் பிரிந்து ஒரு ரோட்டில் ஏறி விடுவிடென நடக்க ஆரம்பித்தான்.

கொஞ்சம் வயல்கள் இடையில் இவனைக் கண்டன. மழை நீரை ஆவலாக உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தன. வருணதேவனோ இவன் என, நன்றியுடன் இவனை மெளனமாகப் பார்த்தன.

இவன் தாண்டிப்போனான்.

ஒரு மாதா கோயில் தெரிந்தது. கன்னிமோ¢ ஒரு கையில் குழந்தை ஏசுவை ஏந்தியபடி இவனைக் கனிவுடன் பார்த்தாள். மறுகளை காற்றில் தூக்கி இவனுக்கு ஆசிர்வாதங்களை அனுப்பினாள்.

இவன் தாண்டித் தாண்டிப் போனான்.

கோயில் ஒன்று வந்தது. விசித்திரம் தான்! ஊரிலிருந்து கொஞ்சம் விலகி தனியே இருந்தது. சில பனைகளுடன் சல்லாபித்தபடி. வெறுமையாக கதவுகளைத் திறந்து போட்டபடி இவனை ஆதங்கத்துடன் அழைப்பது போல இருந்தது. வானோக்கி உயரும் மணிக்கோபுரம் இவனை “வா” என அழைப்பதெனத் தோற்றம் காட்டிற்று.

இவன் விரும்பினால் கோயிலுக்குள் சற்று நேரம் படுத்து இளைப்பாறலாம்!

இவன் ஆறமாட்டான். இவனுக்கு வேலை பெரிது. தெற்கு ரோட்டுக்கு கூடிய விரைவில் போய்ச்சேர வேண்டும். தனியாக நடந்ததோ….அல்லது…ஓடியோ….

மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

இவனுக்கு சற்றுக் களைப்புத் தெரிந்தது. அதிர்ச்சியும் ஓட்டமும்….சற்றுக்களைத்துத்தான் போனான். வான் ஏதாவது போகுமெனில் தொற்றி விடுவான். விரைந்து போய்ச் சேரலாம்….

சற்றுத் தூரே தெற்கு ரோட்டை போய்ச் சந்திக்கிற பாதை இவன் வழியை செங்குத்தாக வெட்டிப்போவதைக் கண்டான். பழைய காலத்து வான் ஒன்று நிறைந்த சுமையுடன் முக்கி முனகிப்போய்க் கொண்டிருந்தது. கையைத்தட்டினால் கேட்குமா? நிற்பாட்டுவார்களா? இவனையும் தங்களுடன் அழைத்துப் போவார்களா?

கையைத் தட்டினான். திரும்பத் திரும்பத் தட்டினான்.

“வரட்டோ?…நானும் வரட்டோ!….”

மெல்ல ஓடிக்கொண்டே கேட்டான்.

“வா…வா…ஓடி வா!…” விசித்திரமான வேற்றுப் பாணியில் ஒரு குரல் கூப்பிட்டது.

இவன் நெருங்கிக் கொண்டிருந்தான். வெற்றுடம்புடன் சிலபேர் இருந்தார்கள். எல்லோரும் ஆண்கள். எங்காவது கோயிலுக்கு போய் வருகிறார்களோ?

இவன் மிகவும் நெருங்கிவிட்டான்.

வான் நின்றுவிட்டது. பழகாத புதிய முகங்கள் போலும்! வேறு புறம் திரும்பி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லை….இல்லை…இல்லவே இல்லை! சட்டென்று சொல்லி வைத்தாற்போல இவன் முகம்பார்த்து எல்லாரும் திரும்பினார்கள். கண்களில் சொல்லொனா வன்மம் தொனித்தது.

ஒரே சமயத்தில் குதித்தார்கள். கைகளில் ‘பளபள’ எனக் குத்தீட்டிகளுடன் துப்பாக்கிகள் மின்னின. இவன் இதயம் சடக்கென நின்றுவிட்டது ஒருகணம்.

தொலைந்தான்! இவன் எதிர்பார்க்கவில்லை….கனவில் கூட….”அவர்கள்” இப்படி ஒரு கோலத்தில் தந்திரமாக உலாவுவார்களென!

துப்பாக்கிகள் இவனை பசியுடன் நெருங்கிச் சூழ்ந்தன. மார்பை நோக்கி ஒரு இடி இறங்கிற்று. பிறகு தொடைகளில் நடுவே குறிபிசகாத ஒரு உதை.

சுருண்டு விழுந்தான். தலைமயிரைப் பற்றி இழுத்து வானுக்குள் எறிந்தனர்.

இரத்தமும் நிணமும், குமட்டும் வாசனையைப் பிறப்பித்துக் கொண்டிருக்க சிதறிப்போன தசைத்துண்டுகளாக…..

கோணாமலை! கேதாரி!….பெருமாள்!…..பெரியண்ணன்!….மைக்கேல்!….அன்பரசன்…..

எல்லையற்ற அந்தகாரம் இவனைச் சூழ்ந்தது.

– மோகவாசல் – ரஞ்சகுமாரின் சிறுகதைகள் (நன்றி: http://www.projectmadurai.org/)

– மோகவாசல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1995, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *