காதறாக் கள்ளன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,611 
 

முன்னுரை

சில ஆண்டுகளுக்கு முன்னால் திசையெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். (மாவட்டம் என்பது ஜில்லாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை. தமிழ் வளர்த்த திருநெல்வேலியாதலால் ‘மாவட்டம்’ என்ற சொல்லை போட்டு வைத்தேன்) சாலைகள் வெகு மனோரம்யமாகயிருந்தன. வழியில் தோன்றிய ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு கால்வாயும் ஒவ்வொரு ரஸமான கதை சொல்லும் எனத் தோன்றிற்று. ஆனால் ஊரில் காற்றெனக் கடுகிச் சென்று கொண்டிருக்கையில் கதை கேட்பதற்கு நேரம் எங்கே?

நல்ல வேளையாக, சிற்றாறு ஒன்று எதிர்ப்பட்டது. அதற்குப் பாலம் கிடையாது. நதியில் இறங்கித்தான் போக வேண்டும். டிரைவர் சிற்றாற்றின் கரையில் வண்டியை நிறுத்தினான். அங்கே ஒரு விசாலமான மருத மரத்தின் அடியில் முறுக்கு வடையும், வெற்றிலை பாக்கும் விற்கும் ஒரு பெண் பிள்ளை தம் கூடைக் கடையுடன் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பெண் பிள்ளைக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் வீற்றிருந்தார். அவருடைய பெரிய மீசை நரைத்திருந்த போதிலும் நன்றாக முறுக்கிவிடப்பட்டிருந்தது. அவர் அப்பெண் பிள்ளையிடம் முறுக்கு வாங்கிக் கையினால் அரைத்துத் தூளாக்கி அதை வாயில் போட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்தபடியே எங்களில் ஒருவர், “ஏன் ஐயா, ஆற்றில் தண்ணீர் அதிகமா? கார் போகுமா?” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “தண்ணீர் கொஞ்சந்தான்; முழங்காலுக்குக் கூட வராது” என்றார்.

இதைக் கேட்ட டிரைவர் வண்டியை ஆற்றில் இறக்கினான். பெரியவர் சொன்னது சரிதான். தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஆகையால் கார் சுலபமாகத் தண்ணீரைக் கடந்து போய்விட்டது. ஆனால் தண்ணீருக்கு அப்பால் நெடுந்தூரம் பரந்து கிடந்த மணலை காரினால் தாண்ட முடியவில்லை. சில அடி தூரம் போனதும் காரின் சக்கரங்கள் மணலிலேயே நன்றாய்ப் புதைந்து விட்டன. காரின் விசைகளை டிரைவர் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். பயங்கரமான சத்தங்கள் உண்டாயின. மணலும் புகையும் கலந்து பறந்தன. முதலில் சிறிது நேரம் சக்கரங்கள் இருந்த இடத்திலேயே சுழன்றன. அப்புறம் சுழலவும் மறுத்துவிட்டுப் பூரண வேலை நிறுத்தம் செய்தன. வண்டிக்குள் இருந்தவர்கள் இறங்கி வெளியே வந்தோம். எங்களாலேதான் வண்டி நகரவில்லை என்று நினைத்தானோ என்னமோ டிரைவர் நாங்கள் இறங்கியதும் மறுபடி ஒரு முறை பிரயத்தனம் செய்தான். அதுவும் பலிக்கவில்லை.

பிறகு டிரைவரும் காரிலிருந்து கீழே இறங்கினான். சிறிது நேரம் காரைச் சுற்றிப் பிரதட்சணம் வந்தோம். எங்களில் ஒரு ஹாஸ்யக்காரர் காருக்கு முன்னால் நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டு “அப்பா! காரப்பா! சரணம்! சரணம்!” என்றார். அதனாலும் அந்தக் கார் அசைந்துக் கொடுக்கவில்லை.

1

வெயிலில் சுடுகிற மணலில் என்னால் நிற்க முடியாது என்று நான் கோபமாய் சொல்லிவிட்டு ஆற்றின் தண்ணீரைத் திரும்ப காலினால் நடந்தே கடந்து கரைக்கு வந்தேன். மருத மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த பெரியவர் பக்கத்தில் சென்று மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தேன்.

“ஏன் ஐயா! இப்படிச் செய்யலாமா? கார் ஆற்றைக் கடக்காது என்று சொல்ல வேண்டாமா?” என்றேன்.

“அழகாயிருக்கிறது! தண்ணீர் முழங்கால் வரை கூட வராது என்று சொன்னேன். அப்படியேயிருந்ததா, இல்லையா? உங்கள் ஓட்டை மோட்டார் மணலிலே போகாது என்பது எனக்கு எப்படித் தெரியும்? நல்ல கதை! காதறாக் கள்ளன் மரகதவல்லியைக் குதிரையிலே ஏற்றிக் கொண்டு வந்ததனாலே தப்பிப் பிழைத்தான்! உங்கள் மாதிரி மோட்டார் காரிலே வந்திருந்தால் அகப்பட்டுக் கொண்டு விழித்திருப்பான்!” என்றார்.

நான் அப்போது அடைந்த குதூகலத்துக்கு அளவில்லை. “ஆற்று மணலில் கார் அகப்பட்டுக் கொண்டதே நல்லதாய்ப் போயிற்று; நமக்கு ஒரு நல்ல கதை கிடைக்கப் போகிறது” என்று எண்ணி உற்சாகம் அடைந்தேன்.

“அது என்ன கதை? காதறாக் கள்ளன் என்றால் யார்? அப்படி ஒரு கள்ளனா? நான் கேள்விப்பட்டதில்லையே!” என்றேன்.

“நீங்கள் கேள்விப்படாத காரியங்கள் எத்தனையோ இருக்கலாம்! அதற்கு நானா பொறுப்பாளி?” என்று சொன்னார் அந்தப் பெரியவர்.

“கோபித்துக் கொள்ளாதீர்கள்! கதையைச் சொல்லுங்கள்!” என்றேன்.

நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அருமையான கதை ஒன்று கிடைத்தது. ‘அருமையான கதை’ என்று எனக்குத் தோன்றியதைத்தான் சொல்லுகிறேன். கேட்டுவிட்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

பெரியவர் சொன்ன கதை

அதோ, ஆற்றைக் கடந்ததும், அப்பால் ஒரு கிராமம் தெரிகிறதல்லவா? அதன் பெயர் என்னவென்று தெரியுமோ? ‘பரி உயிர் காத்த நல்லூர்’ என்று பெயர். ஆமாம்; திருநெல்வேலிச் சீமையில் ஊரின் பெயர்கள் கொஞ்சம் நீளமாகத் தான் இருக்கும். சிலர் ‘பரி உயிர் நீத்த நல்லூர்’ என்று சொல்லுவதுண்டு. இந்தக் கிராமத்துக் கோயிலில் உள்ள கல்வெட்டு சாஸனங்களில் ‘பரி உயிர் காத்த நல்லூர்’ என்று தான் இருக்கிறது. அதுதான் சரியான பெயர் என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இந்தக் கிராமத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்ற கதையைத் தான் இப்போது சொல்லப் போகிறேன்.

சற்று நீங்கள் வந்த வழியைத் திரும்பிப் பாருங்கள் அதோ ஒரு ‘பொத்தை’ தெருகிறதல்லவா? உங்கள் நாட்டில் என்ன சொல்வீர்களோ தெரியாது. இந்த நாட்டில் சிறிய மொட்டைக் குன்றுகளுக்குப் ‘பொத்தை’ என்ற பெயர். அந்தப் பொத்தைக்கு அப்பாலே ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ, தெரியாது. காரில் பறந்து வருகிறவர்கள் எங்கே பார்க்கப் போகிறீர்கள்? நான் சொல்லுகிறதை நம்ப வேண்டியதுதான். அங்கே ஒரு புளியமர தோப்பு இருக்கிறது. எனக்கு வயது நாற்பது ஆகியிருந்த போது அங்கே புளியஞ்செடி நட்டார்கள். இப்போது மரங்களாகியிருக்கின்றன. இந்த நாளிலே ஒருவரும் மரம் நடுகிறதில்லை. அந்தந்த வருஷத்திலே பயன் தருகிற விவசாயமே செய்கிறார்கள். இப்போதுள்ள புளியமரமெல்லாம் போய்விட்டால், நம்முடைய சந்நதியில் வரும் ஜனங்கள் புளிக்கு என்ன செய்வார்களோ தெரியாது. ஒரு புளியம் பழம் ஒரு ரூபாய்க்கு விற்கும் காலம் வந்தாலும் வரும்! நல்ல வேளை அப்படிப்பட்ட காலத்தை பார்ப்பதற்கு இருக்க மாட்டேன்.

அந்தப் பொத்தைக்குப் பக்கத்தில் இப்போது புளியந்தோப்பு இருக்கும் இடத்தில் அறுபது வருஷத்துக்கு முன்னாலும் ஒரு புளியந்தோப்பு இருந்தது. ஒரு நாள் பௌர்ணமியன்று சாயங்காலம் அந்தப் புளியந்தோப்பில் ஆள்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். ஆள்கள் என்றால் இந்தக் காலத்து மனிதர்களைப் போல் நோஞ்சைகள் அல்ல. ஆறு அடி உயரம், ஆஜானுபாகுவான ஆள்கள். அவர்களில் சிலர் கையில் தடி வைத்திருந்தார்கள். சிலர் கத்தி, கபடா, வேல், ஈட்டி முதலிய ஆயுதங்களும் வைத்திருந்தார்கள். அவர்கள் வாள்களையும் வேல்களையும் விளையாட்டாக ஒன்றோடொன்று மோதவிட்டபோது டணார் டனார் என்று சத்தம் எழுந்தது. தடிகளோடு தடிகள் முட்டிய போது சடமடா என்ற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் ஒருவரோடொருவர் பேசிய வீர வாதங்கள் பாபநாசத்து அருவி விழும் ஓசையைப் போல் பேரிரைச்சலாகக் கேட்டது.

சூரியன் மேற்கே அஸ்தமித்தது. அஸ்தமித்ததற்கு அடையாளமாக மேற்கு வானத்தில் சில சிவப்புக் கோடுகள் மட்டும் தெரிந்தன. அப்போது கிழக்கே பூரண சந்திரன் திருமாலின் கையில் சுழலும் சக்கரத்தைப்போல் தகதகவென்று உதயமானான். அதே சமயத்தில் குதிரைகள் வரும் காலடிச் சத்தம் கேட்டது. உடனே அந்தப் புளியந்தோப்பில் பேச்சு அடங்கி நிசப்தம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் காதோடு “மகாராஜா வருகிறார்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

சற்று நேரத்துக்கெல்லாம் ஏழெட்டுக் குதிரைகள் வந்தன. ஒவ்வொரு குதிரையின் மேலும் ஒரு வீரன் வந்தான். எல்லோருக்கும் முதலில் வந்தவன் அவர்களுடைய தலைவன். அவன் பெயர் தில்லைமுத்துத்தேவன். அவனைத்தான் “மகாராஜா” என்று அந்த வீரர்கள் அழைத்தார்கள். தில்லைமுத்துத்தேவன் ஒரு பெரிய பாளையக்காரன். அறுபது கிராமங்களுக்கு அதிபதி. அவன் சொல்லிவிட்டால், எந்த நேரமும் ஆயிரம் ஆட்கள் வந்து விடுவார்கள். சண்டையில் உயிரைக் கொடுக்கத் தயாராக வருவார்கள்.

பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் புளியந்தோப்புக்கு வந்ததும், தோப்பில் இடைவெளியிருந்த ஒரு இடத்தைப் பிடித்து அங்கே குதிரையிலிருந்து கீழே இறங்கினான். மற்றவர்களும் இறங்கினார்கள். முன்னமே தயாராக வைத்திருந்த ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு வந்து போட்டார்கள். அதன் பேரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தில்லைமுத்துத்தேவன் உட்கார்ந்தான்.

அவனுடைய மதிமந்திரியான நல்லமுத்துத்தேவன் உடனே வெற்றிலை பாக்குப் பெட்டியை எடுத்துப் பாக்கும் வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தான்.

பாளையக்காரன் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டே “நல்லமுத்து! உனக்கு என்ன தோன்றுகிறது? கருடாசலத்தேவன் சொல்லி அனுப்பியபடி ராஜி பேசுவதற்கு வருவான் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

“கட்டாயம் வருவான், மகாராஜா! அவன் தலை என்ன இரும்பா? அப்படி வராவிட்டால் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாதா” என்றான் நல்லமுத்துத் தேவன்.

“அவன் வராவிட்டால் என்ன நடக்கும்? உன் உத்தேசம் என்ன?” என்று பாளையக்காரன் கேட்டான்.

“முதல் ஜாமம் முடிவதற்குள் அவன் இங்கே வந்து மகாராஜா சொல்கிறபடி நடக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் நம்முடைய காரியத்தை நடத்த வேண்டியதுதான்!…”

“நம்முடைய காரியம் என்றால்…”

“கருடாசலத்தேவனின் அரண்மனை, சவுக்கண்டி களஞ்சியம், வைக்கற்போர், மாட்டுக் கொட்டகை குதிரைலாயம் எல்லாவற்றையும் அக்னி தேவனுக்கு இரையாக்க வேண்டியதுதான்!”

“அட பாவி!…”

“மகாராஜா! யார் பாவி? இருபது வயதான மருமகப் பெண்ணை யாருக்கும் கட்டிக் கொடுக்காமல் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கிறானே, அவன் பாவியா? நான் பாவியா? பெற்று வளர்த்த பிள்ளையைக் கொஞ்சங்கூட மனத்தில் ஈவிரக்கமில்லாமல் வீட்டைவிட்டு விரட்டியடித்தானே அந்த மனுஷன் பாவியா? நான் பாவியா?”

“அது எல்லாம் சரிதானப்பா! கருடாசலத்தேவன் மேல் இரக்கப்பட்டு நான் ஒன்றும் சொல்லவில்லை. அரண்மனைக்கு தீ வைத்துக் கொளுத்தினால் அந்தப் பெண் மரகதவல்லிக்கும் ஒரு வேளை ஏதாவது ஆபத்து வரலாம் அல்லவா?”

“வந்தால் வந்ததுதான்! அதற்காக நாம் என்னத்தை செய்கிறது? அந்தக் கிழவனுக்கல்லவா அதைப் பற்றிக் கவலையாயிருக்க வேண்டும்?”

“இருந்தபோதிலும் என்னுடைய யுக்தி பலித்தால் ஒரு ஆபத்தும் இல்லாமல், ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் காரியம் கைகூடிவிடும் அல்லவா?”

“அதிலே என்ன இலாபம்? மகாராஜா இரத்தம் சிந்துவதற்குப் பயப்படும்படியான காலம் இப்போது என்ன வந்துவிட்டது? போயும் போயும் மகாராஜா ஒரு கள்ளப் பயலிடம் நம்பிக்கை வைத்து ஒரு காரியத்துக்கு ஏவுகிறதென்பது எனக்குப் பிடிக்கவில்லை…”

“நல்லமுத்து! அவன் சாதாரணக் கள்ளன் இல்லை. உலகமெல்லாம் சொல்லுகிறார்களே! கள்ளனாயிருந்தாலும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். சொன்ன சொல் தவறமாட்டான்…”

“இதெல்லாம் பெண் பிள்ளைகள் கட்டிவிட்ட கதை ‘காதறாக் கள்ளன்’ என்ற பட்டம் அவனுக்குப் பெண் பிள்ளைகள் கொடுத்ததுதானே? அதை எஜமானரும் நம்புகிறீர்களே?”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது புளியந்தோப்பை நெருங்கி ஒரு ஒற்றைக் குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. தோப்பில் கூடியிருந்த ஆட்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் கசு முசு வென்று பேசத் தொடங்கினார்கள்.

“அந்த ஆள் தான் போலிருக்கிறது” என்றான் பாளையக்காரன்.

நல்லமுத்துத்தேவன் எழுந்து நின்று கழுத்தை வளைத்துப் பார்த்துவிட்டு, “ஆமாம்; அவன் தான் போலிருக்கிறது. நீங்கள் ஆச்சு; உங்கள் காதறாக் கள்ளன் ஆச்சு; எப்படியானும் போங்கள். நான் விலகிக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிவிட்டு அப்பாற் போனான்.

2

‘காதறாக் கள்ளன்’ என்பவனைப் பற்றி உங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே பெண் பிள்ளைகள் காதிலே பெரிய தொளைகளைப் போட்டுக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்பதாகத் தங்கத் தோடுகளையும் முருகுகளையும் தொங்கவிட்டுக் கொள்வார்கள். இப்போது கூட வயதான பெண் பிள்ளைகளின் காதுகள் அப்படித் தொங்குவதை நீங்கள் பார்க்கலாம். அறுபது வருஷத்துக்கு முன்னால் இது ரொம்பவும் அதிகமாயிருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையின் இரண்டு காதிலும் சேர்த்து கால்வீசை தங்கத்துக்குக் குறையாமல் இருக்கும். அந்த நாளில் இங்கேயெல்லாம் கள்ளர் பயம் அதிகமுண்டு. அதோ தெரிகிறதே, அந்த மாதிரி பொத்தைகள் சாலையில் இருந்தால், கட்டாயம் அங்கே கள்ளர்கள் ஒளிந்திருப்பார்கள். கால் நடையாகவோ, ஒரு வண்டி, இரண்டு வண்டியிலோ யாராவது பெண்பிள்ளைகள் போனால் வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் போக வேண்டும். காதிலே தொங்கும் தங்கத்துக்காக காதை அறுத்துக் கொண்டே போய்விடுவார்கள். இதனால் அந்த நாளில் காது அறுந்த மாதர் பலரை இந்தத் திருநெல்வெலிச் சீமையெங்கும் காணும்படியிருந்தது.

இப்படியிருக்கும் நிலைமையில் ஒரு அதிசயமான பக்காத் திருடன் கிளம்பினான். அவன் மற்றத் திருடர்களைப்போல் கூட்டம் சேர்த்துக் கொண்டு வருவதில்லை. தனி ஆளாகக் குதிரையில் ஏறிக் கொண்டு வருவான். முகத்தில் கீழ்ப் பாதியை, வாய் வரையில், கறுப்புத் துணியைக் கட்டி மறைத்திருப்பான். கையிலே கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்திருப்பான். சாலையிலே ஒற்றைக் குதிரைச் சத்தம் கேட்டாலே பிரயாணிகள் நின்றுவிடுவார்கள். அவன் ஒருவனாக வந்து, குதிரை மேலிருந்து இறங்கி, எல்லாரையும் மடியை அவிழ்த்துக் காட்டச் சொல்லுவான். மூட்டைகளைப் பிரித்துப் பார்ப்பான். அவனுக்கு இஷ்டமான பொருள்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு குதிரையில் ஏறிப் போய் விடுவான். பெரும்பாலும் அவன் ஏழைகளை ஒன்றும் செய்யமாட்டான். பணக்காரர்களிடமிருந்துதான் பணத்தைப் பறிப்பான். பணக்கார ஸ்திரீகளிடமிருந்து நகைநட்டுகளைப் பறித்துக் கொள்வான். ஆனால் மற்றத் திருடர்களுக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஸ்திரீகளின் கழுத்திலும் கையிலும் உள்ள நகைகளைக் கழற்றிக் கொள்வானே தவிர, காதை அறுக்க மாட்டான். இது காரணமாக அவனுக்குக் ‘காதறாக் கள்ளன்’ என்று பட்டப் பெயர் ஏற்பட்டது. முக்கியமாக, மாதர்கள் இந்தப் பட்டப் பெயரை எங்கே பார்த்தாலும் பிரபலப்படுத்தினார்கள். அவனிடம் நகைகளைப் பறிகொடுத்த ஸ்திரீகள்தான் அவனைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள். ‘நகை போனால் போகட்டும்; காது தப்பியதே!’ என்று அவர்களுக்குச் சந்தோஷம். பெண் புத்தி பேதைப் புத்தி என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? அது மட்டுமல்ல; முட்டாள் ஜனங்கள் இன்னும் என்னவெல்லாமோ அந்தக் கள்ளனைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அவன் பணக்காரர்களிடம் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு ஒத்தாசை செய்கிறான் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். என்ன விசித்திரம் பாருங்கள்! செய்கிறது திருட்டுத் தொழில்! அதிலே தான தர்மம் செய்து ‘தர்மப் பிரபு’ என்ற பட்டம்.

அவன் பிறந்த வேளை அப்படி! வேறு என்னத்தை சொல்லுகிறது? அவனைப் பிடித்துக் கொடுப்பதற்கு யார் யாரோ முயற்சி செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஏன்? பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் கூடக் காதறாக் கள்ளனைப் பிடிக்கப் பார்த்தான்; முடியவில்லை. இப்போது அந்தக் கள்ளனைத் தன்னுடைய காரியத்துக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று வரவழைத்தான்.

காதறாக் கள்ளன் வந்து பாளையக்காரனுக்கு முன்னால் நின்றதும், பாளையக்காரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.

“கள்ளா! உன் தைரியத்தை மெச்சினேன்!” என்றான்.

துணியால் மூடியிருந்த வாயினால் கள்ளன் பேசியது கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது.

“என்னுடைய தைரியத்தை மெச்சும்படியாக நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லையே” என்றான் கள்ளன்.

“என்னுடைய ஆட்கள் இருநூறு பேருக்கு நடுவில் நீ தன்னந்தனியாக என் முன்னால் வந்து நிற்கிறாயே அதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!” என்றான் தில்லைமுத்துத்தேவன்.

கள்ளன் இலேசாகச் சிரித்துவிட்டு, “ஆமாம்; அந்த தைரியத்தை மெச்ச வேண்டியதுதான்! ஆனால், இதற்காக, – என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காக – மட்டுமே என்னை வரவழைத்தீர்களா? வேறு ஏதாவது காரியம் உண்டா!” என்று கேட்டான்.

“காரியம் இருக்கிறது; அதிலே உன்னுடைய தைரியத்தோடு சாமர்த்தியத்தையும் பரிசோதிக்க உத்தேசம்!”

“சொல்லுங்கள். கேட்கிறேன்.”

“இங்கிருந்து அரைக்காத தூரத்தில் கருடாசலத் தேவரின் அரண்மனை இருக்கிறதே உனக்குத் தெரியுமா?”

கள்ளன் சிரித்துவிட்டு, “மேலே சொல்லுங்கள்!” என்றான்.

“என்ன சொன்னாலும் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாயே? அதற்கு அர்த்தம் என்ன?” என்றான் பாளையக்காரன்.

“அது என் சுபாவம். மேலே சொல்லுங்கள். கருடாசலத்தேவரின் அரண்மனையை எனக்குத் தெரிந்தால் என்ன, தெரியாமற்போனால் என்ன? அங்கே உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.”

“சரி, சொல்லுகிறேன், கேள்! கருடாசலத் தேவர் இரவு இரண்டாம் ஜாமத்தில் இங்கே என்னைப் பார்ப்பதற்காக வருவார். அநேகமாக இதற்குள் அரண்மனையை விட்டுப் புறப்பட்டிருப்பார். உன்னைப் போல் அவர் தனியாக வர மாட்டார். அவருடைய முக்கியமான ஆட்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வருவார். அரண்மனையில் அச்சமயம் காவல் காப்பதற்கு அதிகம் பேர் இருக்க மாட்டார்கள் தெரிகிறதா…?”

“நன்றாகத் தெரிகிறது. அச்சமயம் நான் என்ன செய்யவேண்டும்?”

“இங்கிருந்து நீ சாலை வழியாகப் போகாமல் வேறு குறுக்கு வழியாகப் போக வேண்டும். கருடாசலத்தேவருடைய அரண்மனையை நெருங்கவேண்டும். உன்னுடைய புகழ்தான் எங்கும் பரவியிருக்கிறதே? உன்னைப் பார்த்தவுடனேயே அரண்மனையைக் காவல் காப்பவர்கள் நடுங்கிப் போவார்கள். பிறகு, உன்னுடைய சாமர்த்தியத்தினால் அரண்மனைக்குள் எப்படியாவது புகுந்துவிட வேண்டும். அங்கே கருடாசலத்தேவரின் மருமகள் மரகதவல்லி இருப்பாள். அவளைக் கருடாசலத்தேவர் ஐந்து வருஷமாகச் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார். அவளை விடுதலை செய்து கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்துவிடவேண்டும். கள்ளா, என்ன சொல்கிறாய்? உன்னால் இது முடியுமா?”

கள்ளன் சற்று மௌனமாயிருந்தான். பிறகு “எதற்காக மரகதவல்லியைக் கொண்டுவரச் சொல்லுகிறீர்கள்? அந்தப் பெண் விஷயத்தில் உங்களுடைய நோக்கம் என்ன?” என்று கேட்டான்.

“நோக்கம் என்னவாயிருக்கும்? நீதான் ஊகித்துக் கொள்ளேன். மூன்று வருஷத்துக்கு முன்னால் மரகதவல்லியை எனக்குக் கட்டிக் கொடுக்கும்படி கருடாசலத் தேவரைக் கேட்டேன். அவர் கண்டிப்பாக ‘முடியவே முடியாது’ என்று சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் ஒன்றில் மனதைச் செலுத்திவிட்டால், அதை இலேசில் விட்டு விடுவேனா? பலாத்காரமாக அவருடைய அரண்மனையில் புகுந்து மரகதவல்லியைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். அதற்கு இன்றைக்குத்தான் நாள் குறிப்பிட்டிருந்தேன்…”

“பின்னே, என்னை எதற்காகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்? இத்தனை ஆட்களோடு நீங்கள் போய்ச் செய்ய முடியாத ஒரு காரியத்தை…”

“செய்யமுடியாத காரியம் என்று யார் சொன்னது? நான் படையெடுப்புக்கு ஆயத்தம் செய்வதைக் கருடாசலத்தேவர் அறிந்து கொண்டு ஆள் மேல் ஆள் விட்டார். கடைசியாக, இன்றைக்கு இந்தப் புளியந்தோப்பில் ராஜி பேச வருவதாகச் சொல்லி அனுப்பினார். நானும் சம்மதித்தேன். அவர் என்ன ராஜி பேசப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மனுஷர் மூன்று வருஷமாக என்னைக் காக்கவைத்து இழுத்தடித்ததற்குப் பழி வாங்க வேண்டாமா? அவரும் நானும் இங்கே ராஜிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கும் போது, நீ அந்தப் பெண்ணைக் கைப்பற்றி இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்தால் அவருக்கே நல்ல புத்தி புகட்டினதாயிருக்குமல்லவா? வீணில் இரத்தச் சேதம் ஏற்படாமல் தடுத்தபடியாகவும் இருக்கும்.”

“அப்படி இரத்தச்சேதம் ஏற்பட்டாலும் அது இந்த கள்ளனுடைய இரத்தமாயிருக்கட்டும் என்று உங்கள் உத்தேசமாக்கும்?”

“அப்படியானால் உனக்கு இஷ்டமில்லையா? பயப்படாதே! மனதில் உள்ளதைச் சொல்லிவிடு.”

“நீங்கள் சொல்லுகிறபடி செய்து முடித்தால், எனக்கு என்ன லாபம்?”

“இன்று இராத்திரி மரகதவல்லியை இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்து விட்டாயானால் அப்புறம் என்னுடைய ஆட்கள் உன்னைத் தேட மாட்டார்கள். நானும் உன்னுடைய வழிக்கே வரமாட்டேன்…”

“நீங்கள் சொல்லுகிற காரியத்தை நான் செய்யாவிட்டால்?…”

“இன்றைக்கு இங்கிருந்து நீ பத்திரமாய்ப் போய்விடலாம். நாளை முதல் நீ என் விரோதி. என் ஆட்கள் உன்னைத் தேடுவார்கள். நீ எந்த மலைக்குகையிலோ அல்லது மேக மண்டலத்திலோ போய் ஒளிந்து கொண்டாலும் உன்னைப் பிடித்துப் போலீசாரிடம் கொடுத்து விட்டுத்தான் நான் மறுகாரியம் பார்ப்பேன். நல்லது, இப்போது என்ன சொல்கிறாய்?”

கள்ளன் சற்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு, “ஆகட்டும், போய்ப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் காரியத்தில் வெற்றி பெறுவேனோ என்னமோ?” என்றான்.

“நீ வெற்றி பெறாவிட்டால் நான் இருக்கிறேன். என் ஆட்கள் இருக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை” என்றான் தில்லைமுத்துத்தேவன்.

காதறாக் கள்ளன் குதிரைமேல் தாவி ஏறி விரைவாகச் சென்றான்.

3

இந்தச் சமயத்தில் கோழிகூவாப் புத்தூர் கருடாசலத்தேவரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். கருடாசலத்தேவர் ஒரு காலத்தில் தில்லைமுத்துத்தேவரைப் போலவே செல்வாக்கு வாய்ந்தவராயிருந்தார். ஆனால் வயது காரணமாக அவர் உடம்பு தளர்ந்து போயிருந்தது. அதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் ஏற்பட்டு அவர் மனம் இடிந்து போயிருந்தது. முக்கியமாக ஐந்து வருஷத்துக்கு முன்னால் அவருக்கும் அவருடைய ஏக புதல்வனுக்கும் சண்டை உண்டாகி பையன் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அற்ப விஷயத்தில் மன வேற்றுமை உண்டாயிற்று. தந்தை, மகன் இருவரும் பிடிவாதக்காரர்களாதலால் அந்த வேற்றுமை முற்றி விபரீதமாகி விட்டது. குடி மயக்கத்திலிருந்த கருடாசலத்தேவர் சொன்னபடி மகன் ஏதோ செய்யவில்லை என்பதற்காக நாலு பேர் இருக்கும்போது அவன் மீது செருப்பை விட்டெறிந்தார். ரோஸக்காரனாகிய மகன் “இனி உங்கள் முகத்தில் விழிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து கிளம்பிப் போனவன் தான்; திரும்பி வரவே இல்லை.

அருமை மகன் வீட்டை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் தேவரின் மனைவி அந்த ஏக்கத்தினாலேயே படுத்த படுக்கையாகி உயிர் துறந்தாள். ஆனால் தேவர் வஜ்ரத்தைப் போன்ற இதயம் படைத்தவர். அவர் கொஞ்சமாவது மகனுக்காக வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மனையாள் இறந்ததைப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. எங்கேயோ மதுரைக்குப் பக்கத்திலே இருந்த அவருடைய தங்கையையும் தங்கை மகளையும் அழைத்து கொண்டு வந்து வீட்டிலே வைத்துக் கொண்டார். இரண்டு வருஷத்துக்கு முன்னால் தங்கையும் காலமாகி விட்டாள். பிறகு மரகதவல்லி மட்டும் கருடாசலத் தேவரின் பிரமாண்டமான அரண்மனையில் தன்னந்தனியாக வசித்து வந்தாள். அவளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாகப் பாளையக்காரன் கேட்டதற்கு “முடியாது” என்று கருடாசலத்தேவர் பதில் சொல்லிவிட்டார். நயத்தினால் முடியாததைப் பயத்தினால் சாதித்துக் கொள்ள எண்ணித் தில்லைமுத்துத்தேவன் ஆள் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்தான். உயிர்ச்சேதம் வேண்டாம் என்று கருதினால் புளியந்தோப்பில் வந்து தம்மைச் சந்திக்கும்படி சொல்லியனுப்பினான். கிழவரை இவ்விதம் தருவித்துவிட்டு, அந்த சமயத்தில் கள்ளனை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வந்து விடச் செய்யலாம் என்று தில்லைமுத்துத்தேவன் யுக்தி செய்திருந்தான்.

அந்த யுக்தி அநேகமாகப் பலித்துவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் கருடாசலத்தேவர் தம்முடைய முக்கியமான ஆட்களையெல்லாம் தன் துணைக்கு அழைத்துக் கொண்டு தில்லைமுத்துத்தேவனைச் சந்திப்பதற்கு வந்து சேர்ந்தார். கள்ளன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் வந்து விட்டார். தில்லைமுத்துத்தேவன் அவரைத் தக்கப்படி வரவேற்று மரியாதை செய்தான். முக்கியமான விஷயத்துக்கு வருவதற்கு முன்னால் ஊரை வளைத்து என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தான். கள்ளன் தான் ஒப்புக் கொண்ட காரியத்தைச் செய்வதற்குப் போதிய சாவகாசம் கொடுக்க வேண்டும் என்பது பாளையக்காரனின் எண்ணம்.

4

கள்ளன் போன இடத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாய்த் தானிருக்கும். அதை இப்போது சொல்கிறேன். கோழிகூவாப் புத்தூர் அரண்மனையிலிருந்து கருடாசலத்தேவன் ஆட்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார் என்பதைக் கள்ளன் வழியிலேயே தெரிந்து கொண்டான். ஆகையால் ஊருக்குள்ளே தைரியமாக நுழைந்து போனான். வருகிறவன் காதறாக் கள்ளன் என்பதை ஊரார் அறிந்து கொண்டு பயந்து கதவைச் சாத்திக் கொண்டார்கள். அரண்மனையின் வாசலில் வந்ததும் கள்ளன் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு வெடி தீர்த்தான். ஏற்கெனவே பயந்திருந்த காவற்காரர்கள் சிதறி ஓடிப் போனார்கள். முன் வாசல் திறந்திருந்தபடியால் திருடன் அரண்மனை முன் கட்டில் பிரவேசித்தான். ஆனால் இதற்குள் விஷயம் தெரிந்துகொண்டு வேலைக்கார ஸ்திரீகள் பின் கட்டுக் கதவுகளைத் தாள் போட்டார்கள். கள்ளன் முற்றத்தின் நடுவில் நின்று இன்னொரு வெடி தீர்த்தான். கதவுகளையெல்லாம் உடனே திறக்கும்படியும் இல்லாவிட்டால் அதாஹதம் செய்துவிடுவேன் என்றும் கள்ளன் சத்தமிட்டுக் கூவினான். அரண்மனைப் பின் கட்டின் மச்சிலேயிருந்து மரகதவல்லியும் அவளுடைய தாதிப் பெண்களும் இந்தக் காட்சியைப் பார்த்தார்கள். அச்சமயம் கள்ளன் தன் முகத்தின் கீழ்ப் பாதியை மறைத்துக் கட்டியிருந்த துணி தற்செயலாக அவிழ்ந்து விழுந்தது. அப்போது அவனுடைய முகம் பூரண சந்திரனுடைய நிலா வெளிச்சத்தில் நன்றாய்த் தெரிந்தது. தாதிப் பெண்களில் ஒருத்தி ஆச்சரியத்தினால் அலறினாள். மரகதவல்லியின் காதில் ஏதோ சொன்னாள். கள்ளனுடைய அட்டகாசம் இதற்குள்ளே இன்னும் அதிகமாயிற்று. அரண்மனைப் பின் கட்டின் கதவு சீக்கிரத்தில் திறக்கப்பட்டது. மரகதவல்லியும் தாதிப் பெண்ணும் நிலா முற்றத்திற்கு வந்தார்கள்.

கள்ளன் இதற்குள்ளே தன் முகத்தின் பாதியை மூடி மறைத்துக் கொண்டான். அதனால் அவனுடைய உருவம் கோரமாகத்தானிருந்தது. ஆயினும் மரகதவல்லி சிறிதும் அஞ்சவில்லை.

“கள்ளா! ஏன் இப்படிக் கூச்சல் போட்டுத் தடபுடல் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

நிலவின் வெளிச்சத்தில் மரகதவல்லியின் முகத்தை பார்த்த கள்ளன் ஒரு நிமிஷம் தயங்கி நின்றான். அவனுடைய இரும்பு மனமும் இளகிப் போய்விட்டது.

மறுபடியும் மரகதவல்லி “இங்கே ஆண்பிள்ளைகள் யாரும் இல்லை. பெண்பிள்ளைகள் இருக்கிறோம். இங்கே வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? நகை நட்டுகள் வேண்டுமானால் கழற்றித் தந்து விடுகிறோம். வாங்கிக் கொண்டு பேசாமல் போய்விடு!” என்றாள்.

கள்ளனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தயங்கித் தயங்கி “எனக்கு உன் நகை நட்டுகள் வேண்டாம்” என்றான்.

“வேறு என்ன உனக்கு வேண்டும்?” என்று மரகதவல்லி கேட்டாள்.

5

“நீ என்னோடு புறப்பட்டு வரவேண்டும்!” என்றான் கள்ளன்.

“இப்போதே வர வேண்டுமா? அல்லது மாமா வருகிற வரையில் காத்திருக்க முடியுமா? மாமா வந்ததும் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டால் நிம்மதியாயிருக்கும்.”

கள்ளனுக்கு மேலும் திகைப்பு உண்டாயிற்று. “என்னை ஏய்க்கவா பார்க்கிறாய்? அதெல்லாம் முடியாது. உடனே புறப்பட்டு வருகின்றாயா, அல்லது உன்னைப் பலாத்காரமாய்த் தூக்கிக் கொண்டு போகட்டுமா?” என்று கர்ஜித்தான்

“உனக்கு அவ்வளவு கஷ்டம் வேண்டாம். நானே இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மரகதவல்லி அவனுக்கு முன்னால் நடந்தாள்.

கள்ளன் அடங்காத வியப்புடன் அவளை அழைத்துக் கொண்டு அரண்மனை வாசலுக்குச் சென்று முதலில் அவளைக் குதிரை மேல் ஏற்றினான். பிறகு தானும் தாவி ஏறிக் கொண்டான். குதிரையை மெதுவாகவே செலுத்தினான்.

மரகதவல்லி அவ்வளவு சுலபமாகத் தன்னுடன் வரச் சம்மதித்தது கள்ளனுக்குச் சொல்ல முடியாத ஆச்சரியத்தை உண்டாக்கியிருந்தது. ஆகையால் கோழிகூவாப் புத்தூரைக் குதிரை தாண்டிச் சென்றதும், “பெண்ணே! என்னுடன் வருவதற்கு உனக்குப் பயமாயில்லையா?” என்று கேட்டான்.

“எனக்கு என்ன பயம்? நீ ‘காதறாக் கள்ளன்’ என்பது எனக்குத் தெரியும். பெண்களுக்கு எவ்விதத் தீங்கும் நீ செய்யமாட்டாய் என்று உலகமெல்லாம் தெரிந்ததுதானே? ஆகையால் எனக்கு என்ன பயம்?” என்றாள் மரகதவல்லி.

“உலகம் சொல்லுவதை நம்பியா நீ கள்ளனோடு புறப்பட்டாய்?”

“உலகம் வேறுவிதமாய்ச் சொல்லியிருந்தாலும் நான் கிளம்பித்தானிருப்பேன். ஐந்து வருஷமாகக் கூண்டிலே கிளி அடைபட்டிருப்பது போல் அடைப்பட்டிருந்தேன். அப்படி அடைபட்டுக் கிடப்பதைக் காட்டிலும் கள்ளனோடு வெளியே புறப்படுவது கூட நல்லது தான் என்று தோன்றியது.”

“பெண்ணே! உன்னை உன் மாமன் அவ்வளவு கஷ்டப்படுத்தி வந்தாரா!”

“ஐயோ! பாவம் அவர் என்னை கஷ்டப்படுத்தவே இல்லை. என் பேரில் உயிராயிருந்தார். ஆனாலும் எனக்கு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தது கஷ்டமாகத்தானிருந்தது. அந்தக் கடும் சிறைச்சாலையிலிருந்து என்னை நீ விடுதலை செய்தாயே! உனக்கு நான் எந்த விதத்தில் கைமாறு செய்யப் போகிறேன்?”

“அசட்டுப் பெண்ணே! அதிகமாகச் சந்தோஷப்பட்டு விடாதே!…”

“ஏன்? நான் அதிகமாகச் சந்தோஷப்படுவது உனக்குப் பொறுக்கவில்லையா?”

“உன்னை நான் எதற்காக அழைத்துப் போகிறேன் என்பதை தெரிந்து கொண்டு அப்புறம் சந்தோஷப் படு! பாளையக்காரர் தில்லைமுத்துத்தேவர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ஆமாம்; அந்த மனுஷர் என்னைக் கல்யாணம் கட்டிக் கொள்ள ஆசைப் படுவதாகக் கேள்விப்பட்டேன்.”

“அவரிடம் உன்னைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறேன். அதற்காகவே உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்.”

“அடபாவி!”

6

“ஏன் என்னைத் திட்டுகிறாய்? தில்லைமுத்துத்தேவர் ரொம்பப் பெரிய மனிதர். அவரிடமுள்ள பணத்துக்கு கணக்கே கிடையாது. அவருடைய எல்லைக்குள் அவர்தான் ராஜா. நீ அவரை கலியாணம் செய்து கொண்டால் ராணி மாதிரி இருக்கலாம்.”

“சீச்சீ! நான் எதற்கு ராணியாகிறேன்? ஐயையோ இப்படியா செய்யப் போகிறாய்? இது தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேனே!”

“அதனாலேதான் அவசரப்பட்டுச் சந்தோஷப்படாதே என்று சொன்னேன். இப்போது தெரிகிறதா?”

“கூண்டிலிருந்து கிளியை விடுதலை செய்து காட்டுப் பூனையிடமா ஒப்புவிக்கப் போகிறாய்? இந்த மாதிரிப் பாவம் யாராவது செய்வார்களா?”

“பாவமாவது? புண்ணியமாவது! பெரிய பாவத்தை நான் தடுத்தேன். நான் வந்து உன்னை இப்படி அழைத்துப் போகாவிட்டால் தில்லைமுத்துத்தேவர் இருநூறு ஆட்களோடு வந்திருப்பார். உன் மாமனின் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். ஊரே பற்றி எரிந்திருக்கும். எத்தனையோ பேர் செத்துப் போயிருப்பார்கள். இவ்வளவு பாவங்களையும் தடுப்பதற்காகவே நான் வந்தேன்.”

“ஐயையோ! என்னாலேயா இவ்வளவு சங்கடம்? மாமா சாயங்காலம் ஐம்பது ஆட்களோடு புறப்பட்டுப் போனாரே? எங்கே போனாரோ தெரியவில்லையே?”

“எனக்குத் தெரியும் சொல்லுகிறேன். அதோ கொஞ்ச தூரத்தில் ஒரு பொத்தை தெரிகிறதல்லவா?”

“ஆமாம், அதோ தெரிகிறது.”

“அதற்குப் பக்கத்தில் ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. அதில் தில்லைமுத்துத்தேவரும் அவருடைய ஆட்கள் இருநூறு பேரும் திரண்டு இறங்கியிருக்கிறார்கள். உன்னுடைய மாமன் அங்கேதான் போயிருக்கிறார்.”

7

“ஐயோ! அங்கே இரண்டு கட்சிக்கும் சண்டை வந்திருக்குமோ?”

“வந்திராது. சண்டை நடவாமல் தடுப்பதற்காகத் தான் நான் உன்னைக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். தில்லைமுத்துத்தேவர் இப்போது உன் மாமாவுடன் சமாதானமாகப் பேசிக் கொண்டிருப்பார்.”

“என்னை அங்கே கொண்டு போய் விட்டால் அப்புறம் என்ன ஆகும்?”

“நீ பாளையக்காரரைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாகச் சொன்னால் சண்டை ஒன்றும் வராது. உன் மாமாவும் ஒத்துக் கொள்வார்.”

“உயிர் போனாலும் நான் அதற்குச் சம்மதிக்க மாட்டேன். நான் சம்மதித்தாலும் என் மாமா சம்மதிக்க மாட்டார். சம்மதிக்கிறவராயிருந்தால் இத்தனை நாள் காத்திருப்பாரா?”

“பெண்ணே! உன் மாமாவின் உத்தேசந்தான் என்ன? உன்னை எப்போதும் கன்னிப் பெண்ணாகவே அவருடைய வீட்டில் வைத்திருக்க உத்தேசமா?”

“இல்லை, இல்லை, அவருக்கு ஒரு பைத்தியக்கார ஆசை இருந்தது.”

“அது என்ன பைத்தியக்கார ஆசை?”

“மாமாவின் மகன் ஆறு வருஷத்துக்கு முன்னால் கோபித்துக் கொண்டு ஓடிப்போய் விட்டானாம். அவன் என்றாவது ஒரு நாளைக்குத் திரும்பி வருவான். அவனுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கலாம் என்று அவருக்கு ஆசை. கள்ளா! இது பைத்தியக்கார ஆசைதானே?”

கள்ளன் இதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாயிருந்தான். குதிரை இரண்டு பேரைத் தாங்கிக் கொண்டு சாலையில் மெள்ள மெள்ளப் போய்க் கொண்டிருந்தது. கள்ளனும் அதை விரட்டவில்லை. அவனுடைய மனம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. புளியந்தோப்பும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்கெல்லாம் மரகதவல்லி, “கள்ளா! என்ன யோசனை செய்கிறாய்?” என்று கேட்டாள்.

“என்னமோ யோசனை செய்கிறேன். உனக்கென்ன அதைப்பற்றி?”

“அதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் உன்னை ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்” என்றாள்.

“என்ன கேள்வி? சீக்கிரம் கேட்டுத் தொலை! அதோ புளியந்தோப்பு நெருங்கி வந்துவிட்டது.”

“கள்ளா! நீ ஒன்றும் உனக்காகத் திருடுவதில்லை. மற்ற ஏழை எளியவர்களுக்காகவே திருடுகிறாய் என்று உலகத்தார் சொல்லுகிறார்களே, அது உண்மையா?”

“உண்மையாயிருக்கலாம்; அதற்கு என்ன இப்போது?”

“இன்றைக்கு ஒரு நாள் உனக்காகத் திருடலாமே என்று சொல்கிறேன்.”

“எனக்காக என்னத்தைத் திருடச் சொல்கிறாய்? நீ நகை நட்டுக் கூட அதிகமாகப் போட்டுக் கொள்ளவில்லையே? எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு வந்திருக்கிறாயே?”

“சே! உன்னைப் போய் நகை திருடும்படி நான் சொல்வேனா?”

“பெண்ணே! வேறு என்னத்தைத் திருடும்படி சொல்கிறாய்?”

“தெரியவில்லையா உனக்கு! உன்னைப்பற்றி என்னவெல்லாமோ பிரமாதமாக்ச் சொலுகிறார்களே? இவ்வளவு புத்தி கட்டையான மனுசனா நீ? அந்தப் பாளையக்காரனுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு நீயே என்னைத் திருடிக் கொண்டு போகும்படிதான் சொல்லுகிறேன்.”

இந்த வார்த்தைகளைக் கேட்டக் கள்ளனுடைய உடம்பு சிலிர்த்தது. குதிரையை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு முன்னால் பார்த்து உட்கார்ந்திருந்த மரகதவல்லியைத் தன்னைப் பார்க்கும்படி திரும்பி உட்கார வைத்துக் கொண்டான். இருபுறமும் மரமடர்ந்த அச்சாலையில் அந்த இடத்தில் இடைவெளியிருந்தது. வெண்ணிலாவின் வெளிச்சம் அவளுடைய முகத்தில் பட்டது. கள்ளன் தன் முகமூடியையும் நீக்கிக் கொண்டான். மரகதவல்லியின் முகத்தைத் தூக்கிப் பிடித்துக் கனிவுடன் உற்றுப் பார்த்தான்.

“பெண்ணே! நீ சொல்வது இன்னதென்று தெரியாமால் சொல்லுகிறாய். நான் வீடுவாசல் இல்லாதவன். மலையிலும் காட்டிலும் அலைந்து திரிகிறவன். அரண்மனையில் சுகமாக வாழ்ந்த நீ என்னோடு எப்படி வாழ்வாய்?”

8

“கள்ளா! உன்னுடைய அரண்மனையே எல்லாவற்றிலும் பெரிய அரண்மனை! பூமியே உன் வீட்டின் தரை, ஆகாசமே கூரை. இதைக்காட்டிலும் பெரிய மாளிகை ஏது? அந்தப் பாளையக்காரனை ஒரு தடவை நான் பார்த்திருக்கிறேன். அன்று இராத்திரியெல்லாம் தூக்கத்தில் பயந்து உளறினேன். அவனிடம் என்னை நீ ஒப்புவித்தால் உடனே உயிரை விடுவேன். ஸ்திரீஹத்தி தோஷம் உனக்கு வரும். உன்னோடு வெளிக் கிளம்பிய பிறகு, மாமா வீட்டிற்குத் திரும்பிப் போகவும் முடியாது. கள்ளா! என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போ!”

“பெண்ணே! என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க ஏற்கனவே பலர் பிரயத்தனம் செய்கிறார்கள். இன்று முதல் பாளையக்காரரின் இருநூறு ஆட்களும் நம்மை வேட்டையாடுவார்கள்.”

“வேட்டை நாய்களைக் கண்டால் நான் கொஞ்சங்கூடப் பயப்படுவதில்லை. கள்ளா! உனக்குப் பயமா?” என்று கேட்டாள் அந்த மரக்குலத்து மங்கை.

அங்கே புளியந்தோப்பில் பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவனும் ஜமீன்தார் கருடாசலத்தேவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தில்லைமுத்துத்தேவன் கருடாசலத்தேவர் மீது பல புகார்களைச் சொன்னான். தன்னை அவமதித்துப் பேசியதாகவும் தன்னுடைய கிராமங்களில் மாடுகளை விட்டு மேய்த்ததாகவும் குற்றம் கூறினான். அதற்கெல்லாம் கருடாசலத்தேவர் சமாதானம் கூறினார். இப்படிக் கொஞ்ச நேரம் போக்கிய பிறகு பாளையக்காரன் கடைசியாக முக்கியமான விஷயத்துக்கு வந்தான். “உம்முடைய மருமகள் மரகதவல்லியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுங்கள். மற்றக் குற்றங்களையெல்லாம் மறந்து விடுகிறேன்!” என்றான்.

“என்னுடைய ஜமீனில் பாதி கேட்டாலும் கேள்; கொடுத்து விடுகிறேன்; என் மருமகளை மட்டும் கேட்காதே” என்றார் கருடாசலத்தேவர், “அது என்ன பிடிவாதம்? யாருக்காவது கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே? என்னைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை உமக்கு எங்கே கிடைக்கும்?” என்று தில்லைமுத்துத்தேவன் பச்சையாகக் கேட்டான். “எனக்கோ வயதாகிவிட்டது. வேறு யாரும் உற்றார் உறவினர் இல்லை. அவளும் இல்லாவிட்டால் வீடு பாழடைந்து போகும்” என்றார் ஜமீன்தார். “அதெல்லாம் வெறும் ஜால்ஜாப்பு! நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்றான் பாளையக்காரன். கடைசியாக ஜமீன்தார் தம் மனதில் உள்ளதை வெளியிட்டுச் சொன்னார். “ஒரு நாளைக்கு என் மகன் திரும்பி வருவான் என்று ஆசை வைத்திருக்கிறேன். மரகதவல்லியை அவனுக்கென்று உத்தேசித்திருக்கிறேன்!” என்றார். பாளையக்காரன் சிரித்தான். “ஆறு வருஷமாக வராதவன் இனிமேல் வரப்போகிறானா? உமக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கப் பார்க்கிறீர். அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது!” என்றான்.

இப்படி ஜமீன்தாருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே பாளையக்காரனுடைய காது கவனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. சாலையில் குதிரை வரும் சத்தம் கேட்கிறதா என்றுதான். ஏறக்குறைய சந்திரன் உச்சி வானத்துக்கு வந்தபோது சற்றுத் தூரத்தில் குதிரை காலடிச் சத்தம் கேட்டது. உடனே பாளையக்காரன் எழுந்தான். “நீர் ஏதோ உமது மருமகளைப் பத்திரமாய் அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். நீர் இல்லாத சமயம் என்ன நடக்கிறதோ என்னமோ! வயது வந்த பெண் எத்தனை நாளைக்கு உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்டிருப்பாள்?” என்று சொன்னான். இதைக் கேட்டதும் ஜமீன்தாருக்கு இரத்தம் கொதித்துக் கண்கள் சிவந்தன. “நீயும் ஒரு மனிதனா? உன்னிடம் பேச வந்தேனே?” என்று எழுந்தார். “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும். குதிரையில் யார் வருகிறதென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தில்லைமுத்துத்தேவன் சாலையை நெருங்கிச் சென்றான். அவனுடைய ஆட்கள் ஜமீன்தாரைச் சூழ்ந்து கொண்டு அவர் போவதைத் தடுக்கும் பாவனையாக நின்றார்கள். “இப்படிப்பட்ட இக்கட்டில் நாமே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டோ மே? இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது?” என்று கருடாசலத்தேவர் யோசனையில் ஆழ்ந்தார்.

தில்லைமுத்துத்தேவன் சாலையருகிலே போய் நின்றான். குதிரை புளியந்தோப்பை நெருங்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. ரொம்பக் கூர்மையான காது உள்ளவனாதலால், வருகிற குதிரை மேல் இரண்டு பேர் ஏறி வருகிறார்கள் என்பதைக் குதிரைக் காலடிச் சத்தத்திலிருந்து தெரிந்து கொண்டான். அவனுடைய உற்சாகம் எல்லை கடந்தது. தன்னுடைய மனோரதம் நிறைவேறி விட்டதென்றே நம்பினான். இவ்வளவு சுலபமாக, உயிர்ச்சேதம் எதுவுமின்றி, காரியம் கைகூடி விட்டதை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.

குதிரை மேலும் நெருங்கி வந்தது. இதோ வந்து விட்டது! அதன் மேலே இரண்டு பேர் இருப்பதும் நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் நின்ற இடத்துக்கு நேரேயும் வந்தது. அதற்கு அப்பாலும் சென்றது. “நில்! நில்!” என்று கத்தினான். ஆனால் குதிரை நிற்கவில்லை. புளியந்தோப்பையும் அதையடுத்து நின்ற பொத்தையையும் தாண்டி மின்னல் மின்னும் நேரத்தில் இராமபிரானுடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய பாணத்தைப் போல குதிரை போயே போய்விட்டது!

9

அப்புறந்தான் தில்லைமுத்துத்தேவன் விழித்துக் கொண்டான். கள்ளன் தன்னை ஏமாற்றிப் பெண்ணை அடித்துக் கொண்டு போகிறான் என்று தெரிந்து கொண்டான். உடனே “கொண்டு வா குதிரையை!” என்று அலறினான். அவனுடைய குதிரை வந்ததும் தாவி ஏறிக் கொண்டான். “மடையர்களே! என்னோடு வாருங்கள்!” என்று கத்தினான். மற்றும் ஏழு குதிரைகளிலும் ஆட்கள் ஏறிக் கொண்டார்கள்.

முன்னால் சென்ற கள்ளனுடைய குதிரையைத் தொடர்ந்து பாளையக்காரனுடைய எட்டுக் குதிரைகளும் பாய்ந்து சென்றன. குதிரைகளுக்குப் பின்னால் காலாட்களும் தலை தெறிக்க ஓடினார்கள்.

ஜமீன்தார் கருடாசலத் தேவருக்கு இது ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டுத் தம்முடைய ஆட்களைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

காதறாக் கள்ளனுடைய குதிரை வாயுவேக, மனோ வேகமாகப் பறந்து சென்றது. ஆயினும் அக்குதிரை ஏற்கெனவே வெகு தூரம் பிரயாணம் செய்திருந்ததல்லவா? அதோடு இரண்டு பேரைத் தன் முதுகில் சுமந்து கொண்டிருந்தது. ஆகையால் பின்னால் வந்த குதிரைகள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தன.

கடைசியாகக் கள்ளனுடைய குதிரை இந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தது. ஆறு இன்றுபோல் அன்றில்லை. வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு போயிற்று. ஆறு அடி உயரமுள்ள ஆளுக்கும் நிலை கொள்ளாது. பிரவாகத்தின் வேகமோ அதிகம். திரும்பிப் போகவோ மார்க்கமில்லை. ஆற்றங்கரையில் தயங்கி நின்றால் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். வேறு வழியில்லாமல் கள்ளன் குதிரையைத் துணிந்து ஆற்றில் இறக்கினான். குதிரை அவர்கள் இரண்டு பேரையும் சுமந்து ஆற்றில் இறங்கி வெள்ளத்தின் வேகத்தைச் சமாளித்துக் கொண்டு நீந்திச் சென்றது. கள்ளனிடம் அந்த வாயில்லாப் பிராணி அவ்வளவு விசுவாசம் வைத்திருந்தது.

எப்படியோ தட்டுத்தடுமாறி அக்கரையை நெருங்கியது. ஆனால் துறையில் போய்ச் சேராமல் கொஞ்சம் அப்பால் சென்றுவிட்டது. அங்கே கரை செங்குத்தாயிருந்தது. குதிரை முன்னங்காலை வைத்துத் தாவி ஏற ஆனமட்டும் முயன்றது; முடியவில்லை. கள்ளன் பார்த்தான், மறுகரையிலோ பாளையக்காரனுடைய குதிரைகள் வந்துவிட்டன. பாளையக்காரன் அதட்டும் குரல் கேட்டது. சில குதிரைகள் ஆற்றில் இறங்கிவிட்டன. இந்த நிலைமையில் கள்ளன் ஒரு யோசனை செய்தான். கடவுள் அருளும் இருந்தது. மரகதவல்லியைத் தன் இரு கைகளினாலும் தூக்கிக் கரையில் விட்டெறிந்தான். அவள் கரையில் பத்திரமாய் விழுந்ததைப் பார்த்ததும் தான் குதிரை மீதிருந்து குதித்தான். இரண்டு எட்டில் நீந்திக் கரையேறினான். பிறகு, குதிரையையும் கரை சேர்ப்பதற்காகத் திரும்பிப் பார்த்தான்! ஐயோ! பாவம்! அந்தக் குதிரையின் சக்தி அத்துடன் தீர்ந்து போய்விட்டது. எஜமானனை அக்கரை சேர்ந்ததும் அது வெள்ளத்துடன் போராடும் ஊக்கத்தையும் இழந்துவிட்டது. வெள்ளம் அதை அடித்துக் கொண்டு போய்விட்டது. கள்ளனுடைய நெஞ்சு பிளந்துவிடும் போலிருந்தது. ஆயினும் குதிரைக்காகத் துக்கப்பட்டுக்கொண்டு அங்கே நின்றால் தன் காதலியையும் இழக்க நேரிடும். அதற்குள்ளே மரகதவல்லியும் எழுந்து நின்று அவனருகில் வந்தாள். இருவரும் கைகோத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாகச் சென்றார்கள். ஆற்றங்கரையை அடுத்திருந்த காட்டுக்குள் புகுந்து அந்தச் சமயத்துக்குத் தப்பித்துக் கொண்டார்கள்.

பாளையக்காரனுடைய குதிரைகளில் ஒன்றாவது பாதி ஆறு கூடத் தாண்டவில்லை. நாலு குதிரைகள் ஆற்றோடு போய்விட்டன. கள்ளனைப் பிடிக்க முடியாமல் பாளையக்காரன் ஏமாந்து திரும்பினான்.

ஜமீன்தார் கருடாசலத்தேவர் தம் அரண்மனைக்குத் திரும்பிப் போனதும் அங்கே மருமகள் இல்லை என்பதை அறிந்தார். ஆனால் அவளை அழைத்துக் கொண்டு போனவன் தம்முடைய மகன் தான் என்று தாதிப் பெண்கள் மூலமாக அறிந்து திருப்தி அடைந்தார்.

அதோ, ஆற்றுக்கு அக்கரையிலே உள்ள ஊருக்கு ‘பரி உயிர் காத்த நல்லூர்’ என்ற பெயர் வந்த காரணம் என்னவென்று இப்போது தெரிகிறதல்லவா?

பின்னுரை

மேற்கண்ட கதையை அந்தப் பெரியவர் சொல்லி முடித்தார். இதற்குள்ளே எங்கள் மோட்டார் வண்டியைப் பத்து முப்பது ஆட்கள் வந்து சேர்ந்து தள்ளி அக்கரையிலே கொண்டு சேர்த்திருந்தார்கள். என்னை வரும்படி சொல்லி மோட்டாரின் குரல் அலறியது.

“கதை ரொம்ப நன்றாயிருக்கிறது” என்று சொல்லி கிழவனாரிடம் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தேன்.

அவர் அதை வாங்கி மடியில் செருகிக் கொண்டே, “கதை இல்லை, ஐயா! உண்மையாக நடந்தது!” என்றார்.

“உண்மையாக நடந்ததென்று எப்படிச் சொல்கிறீர்? நீர் பார்த்தீரா?” என்று கேட்டேன்.

“ஆமாம் பார்க்கத்தான் பார்த்தேன்!” என்று கிழவர் சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“ஓகோ! கள்ளன் தப்பித்துக் கொண்டு போவதற்கு நீர் ஒருவேளை உதவி செய்தீரா?” என்று கேட்டேன்.

“இல்லை, ஐயா! நான் அவனுக்கு உதவி செய்யவில்லை. எனக்குத்தான் அவனால் ரொம்ப உதவி ஏற்பட்டது. காதறாக் கள்ளன் உயிரோடிருக்கும் போதும் எத்தனையோ பேருக்கு உதவி செய்தான். இறந்த பிறகும் ஒரு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். அவன் புண்ணியவான்!” என்றார் பெரியவர்.

“உமக்கு அவன் என்ன உதவி செய்தான்?” என்று கேட்டேன்.

பெரியவர் தம்முடைய மடியில் வைத்திருந்த ஒரு பழைய நைந்த காகிதத்தை எடுத்துப் “பாருங்கள்!” என்று சொல்லிக் கொடுத்தார். அதில் இங்கிலீஷில் பின் வருமாறு ‘டைப்’ எழுத்தில் எழுதிச் சர்க்கார் முத்திரையும் பதிந்திருந்தார்.

“காது அறுக்காத கள்ளன் என்று இந்தப் பக்கங்களில் பிரசித்தி பெற்றிருந்த முத்து விஜய சேதுத்தேவன் என்னும் பக்காத் திருடனைப் பிடிப்பதற்கு உளவுகூறி ஒத்தாசை செய்த கொள்ளை முத்துத்தேவனுக்கு இந்தப் போலீஸ் சர்டிபிகேட்டும் மாதம் பதினைந்து ரூபாய் வீதம் ஜீவிய காலம் வரையில் பென்ஷனும் காருண்ய பிரிட்டிஷ் துரைத்தனத்தாரால் அளிக்கப்படுகிறது.”

இதைப் படித்ததும் அந்தப் பெரியவரை கொஞ்சம் அருவருப்புடன் பார்த்துவிட்டு எழுந்தேன்.

“அந்தப் புண்ணியவானுக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். சென்ற ஐம்பது வருஷமாக அவனால் என்னுடைய குடும்பம் பிழைத்து வருகிறது. அவனுக்கு நான் ஏழு தலைமுறையும் கடமைப் பட்டவன்!” என்று சொன்னார் பெரியவர்.

வேகமாக ஆற்றைக் கடந்து அக்கரையில் நின்ற மோட்டாரைப் பிடித்து ஏறிக் கொண்டேன். அந்தக் கிழவனார் இருந்த இடத்திலிருந்து சீக்கிரத்தில் போனால் போதும் என்று இருந்தது.

பாரத தேசம் குடியரசுப் பதவியை அடையப் போகும்நாள் நெருங்கும் சமயத்தில் எனக்கு அந்தக் கிழவனார் சொன்னக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. காதறாக் கள்ளனை காட்டிக் கொடுத்து நன்மையடைந்த அக்கிழவனார் அந்தக் கள்ளனை இன்றுவரை நினைத்துக் கொண்டு அவனிடம் நன்றியோடாவது இருக்கிறார்.

பாரதத்தின் மக்களாகிய நாம் நமக்கு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலையளித்த காந்தி மகாத்மாவை யமனிடம் காட்டிக் கொடுத்துவிட்டோம்! அவரை நன்றியோடு ஞாபகம் வைத்துக் கொண்டாவது இருக்கப் போகிறோமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *