கழுதை வண்டிச் சிறுவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,288 
 

புத்தாயிரம் நெருங்க நெருங்க, என் பதற்றம் அதிகரித்தது. இனி வரும் வருடங்களில் நினைவுகூரும் விதமாக அதைக் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டேன். திங்கள் முடிந்து செவ்வாய் பிறப்பது, பங்குனி சித்திரையாக மாறுவது, ஒரு வருடம் கழிந்து இன்னொரு வருடம் பிறப்பது எல்லாம் வழமை போல நடப்பதுதான். ஆனால், ஆயிரம் வருடங்கள் முடிந்து இன்னொரு ஆயிரம் வருடங்களுக்கான தொடக்கம் என்பது எவ்வளவு அபூர்வமானது! ஆகவே, அந்த இரவு என்றென்றைக்குமே மறக்க முடியாத ஒன்றாக அமைய வேண்டும் என்று நான் விரும்பியதில் ஆச்சர்யமில்லைதானே!

நான் நமீபியாவைத் தெரிவு செய்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றிருந்த அந்த நாட்டில், எனக்கு இரண்டு விஷயங்கள் ஆர்வமூட்டின. ஒன்று, உலகத்திலேயே அங்கேதான் ஆப்பிரிக்கச் சிறுத்தைக்கு ஒரு காப்பகம் அமைத்திருந்தார்கள். லோர்ரி மார்க்கர் என்கிற அமெரிக்கப் பெண்மணி அதை நடத்தி வந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கே போனால், எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறும். இன்னொரு காரணம், அங்கே வாழும் ஒருவகைத் தாவரம். அதைப் பற்றிப் பிறகு பேசலாம்.

லோர்ரியின் சிறுத்தைக் காப்பகம் 17,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. நிர்வாகத்துக்குப் பொறுப்பான ரொஸாலியோ என்னும் நமீபிய இளம் பெண் என்னை வரவேற்று, புல்லினால் வேய்ந்த ஒரு குடிசையை ஒதுக்கித் தந்தாள். என்னைப் போலப் பல விருந்தினர்கள் ஏற்கெனவே வந்திருந்தார்கள். இரவு விருந்துக்குச் சரியாக ஏழு மணிக்கு வந்துவிடும்படி சொல்லிவிட்டு, அந்தப் பெண் ஒரு சிறுத்தை போல் திரும்பி மறைந்தாள்.

ஆப்பிரிக்கச் சிறுத்தை மெலிந்து, நீண்டு, இடை சிறுத்து, பார்க்க அழகாக இருக்கும். உலகத்து விலங்குகளில் அதுவே அதிக வேகம் கொண்டது. சிறுத்தையின் உடல்வாகு வேகத்துக்கென்றே படைக்கப்பட்டதால், அதனால் சண்டை போட முடியாது. வேட்டையாடும் இரையை எளிதில் பிடித்து, பிடித்ததுமே உண்ணத் தொடங்கிவிடும். இல்லாவிடில் சிங்கமோ, கழுதைப்புலியோ அதைப் பறித்துவிடும். அநேக சமயங்களில் சிறுத்தை வேட்டையாடுவது, மற்ற மிருகங்களின் பசியைப் போக்குவதற்குத்தான். அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டாலும், நமீபியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 2,500 ஆகக் குறைந்துவிட்டது. சிறுத்தைகள் பண்ணைகளில் புகுந்து மாடுகளைக் கொல்ல ஆரம்பித்துவிட்டதால், மாட்டுப் பண்ணைக்காரர்கள் சிறுத்தைகளைக் கண்ட இடங்களில் சுட்டுத் தள்ளினார்கள். லோர்ரியின் காப்பகம் இதைத் தடுத்தது. பண்ணைகளுக்குள் நுழையும் சிறுத்தைகளைப் பொறிவைத்துப் பிடித்து, பராமரித்து, திரும்பவும் அவற்றைக் காட்டுக்குள் கொண்டுபோய் விடுவதுதான் அவர்களின் வேலை.

அங்கே வேலை செய்தவர்களில் ஒரு பெண்மணி, ரஷ்யாவில் இருந்து வந்தவர். வயது 26 இருக்கும். கண்களை நீளமாக்கிய ஒப்பனை. சிறிய இடையும், பெரிய தொடையுமாக இருந்தார். எப்படி அங்கு வந்து சேர்ந்தார் என்று கேட்டேன். சிறு வயதிலிருந்து காட்டு விலங்குகளுடன் பழகவேண்டும் என்று ஆசைப்பட்டதால், லோர்ரியிடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாகச் சொன்னார். விமான டிக்கெட்டுக்கு காசு சேமிக்கத் தனக்கு நாலு வருடங்கள் பிடித்தன என்றார். ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு பொறியாளரும் அங்கே வேலை செய்தார். வயது 40 இருக்கும். அங்கிருந்த எந்திரங்களையும், ரேடியோ கருவிகளையும் அவரே பராமரித்தார்.

நான் நமீபியாவைத் தேர்ந்தெடுத்ததற்கான இரண்டாவது காரணம் நிறைவேறவில்லை. இந்த உலகில் நமீபியா பாலைவனத்தில் மட்டுமே காணப்படும் விநோதமான தாவரம் ஒன்று உண்டு. தாவரவியலாளர்கள் இதைத் தங்கள் வாழ்நாளில் இறப்பதற்கு முன் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று விரும்புவார்கள். இதன் பெயர் வெல்விட்ஷியா (Welwitschia). இரண்டே இரண்டு இலைகள் கொண்ட இந்தத் தாவரம் தன் இலைகளை உதிர்ப்பதே இல்லை.

தாவரத்தைப் பார்ப்பதற்கு முன்கூட்டியே அனுமதி பெறவேண்டுமாம். இது தெரியாததால், நான் அதைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அலாஸ்கா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தாவரவியல் பேராசிரியர் ஒருவர் அங்கு வந்திருந்தார். நீண்ட தாடி வைத்த, மெலிந்துபோன உருவம். முப்பது வருடங்களாகக் காத்திருந்து, அந்தத் தாவரத்தை தான் பார்க்க முடிந்ததைப் பற்றி, ஒரு சிறுவனின் மகிழ்ச்சியுடன் வர்ணித்தார். அந்த அபூர்வமான தருணம் எப்படி இருந்தது என்று கேட்டேன். அவர் பதில் கூறவில்லை. தன் பர்ஸைத் திறந்து, அதற்குள் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு புகைப்படத்தை உருவிக் காட்டினார். அது ஒரு பழைய பத்திரிகையிலிருந்து வெட்டப்பட்ட வெல்விட்ஷியா தாவரத்தின் படம். தன் பத்தாவது வயதிலிருந்து அந்தப் படத்தைத் தான் பாதுகாத்து வருவதாகக் கூறினார்.

”நான் பார்த்த தாவரத்துக்கு வயது 2,000 வருடங்களுக்கும் மேலே! இயேசு பிறந்த சமயம், அந்தத் தாவரம் துளிர்விட்டிருந்தது. பாலைவனத்தில் என் வருகைக்காகக் காத்திருந்தது போல அது இத்தனை வருடமும் தனியாக நின்றிருந்தது. நிலத்தில் ஒருவகை நச்சுத் திரவத்தை அது பரப்புவதால், அதன் அருகில் வேறு தாவரம் வளர முடியாது. 12 அடி நீளமுள்ள இரண்டு இலைகளும், பாலைவனக் காற்றில் கிழிந்து நூலாகிவிட்டன. ஆனால், அந்தத் தாவரம் இன்னமும் உயிர் வாழ்கிறது. அதைப் பார்த்தபோது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இயேசு எனக்கு முன்னால் நடந்து போயிருந்தால் எப்படி இருந்திருக்கும்… அப்படி இருந்தது!”

அன்று புத்தாயிரத்தைக் கொண்டாடும் முகமாக, ஒரு சிறுத்தையை விடுதலை செய்து, காட்டுக்குள் அனுப்பினார்கள். ரேடியோ வளையம் அணிவித்த சிறுத்தை, கூண்டைவிட்டு வெளியே வந்து, சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றது. எப்படியோ, சுதந்திரமான காற்றை நுகர்ந்து பார்த்ததும், அது ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தது. ”ஒவ்வொரு சிறுத்தையும் ஒரு தனவான் பெயரில் விடுதலையாகும். அவர் வழங்கும் பணம் காப்பகத்தை நடத்துவதற்கு உதவும்” என்று லோர்ரி விளக்கினார்.

அன்று பின் நேரம், நான் விருந்துக்குப் புறப்படும் சமயத்தில், எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.

கழுதை வண்டியை ஓட்டியபடி ஆப்பிரிக்கச் சிறுவன் ஒருவன் வந்தான். தோள்கள்கூட முளைக்காத சின்னப் பையன்! பால்குடம் வண்டியில் இருந்தது. வண்டியை விட்டுக் கீழே இறங்கி, ஒரு லிட்டர் பாலை எடுத்து நடந்து வந்தான். அவனுடைய ரப்பர் செருப்பு, அடியிலே பிய்ந்துபோய் இழுபட்டது. அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துப் பாலை வாங்கினேன். அடுத்த நாளும் நான் அங்கே தங்குவேனா என்று விசாரித்தான். ‘இருக்கலாம்’ என்றேன்.

”அப்ப, இரண்டு லிட்டராக வாங்கிக்கொள்ளுங்கள், சேர்!” என்றான்.

”ஏன்?” என்றேன்.

”நாளைக்கு நான் வர முடியாது!”

”ஏன்?”

”என் அம்மா செத்துவிடுவார்!”

”யார் சொன்னது?”

”டொக்ரர் (டாக்டர்) சொன்னார்” என்றான்.

”அம்மாவை யார் பார்த்துக்கிறது?”

”என்னுடைய தங்கச்சி!”

”எத்தனை வயசு?”

”ஆறு!”

”அம்மாவுக்கு என்ன சுகவீனம்?”

”தெரியாது, சேர்!”

விருந்து ஆரம்பித்துவிட்டது. திறந்த வெளியில் ஆப்பிரிக்க வானத்தின் கீழ் மேசை போட்டு, இருபது விருந்தினர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அன்றைய விருந்தில் பரிமாறிய அத்தனை வகை உணவும் அங்கே உண்டாக்கியவை. மரக்கறி, கிழங்குகள், பழங்கள், மூன்று வகை இறைச்சி… ஜெர்மன்காரர் பிளேட் பிளேட்டாகச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். மாடுகளுக்கு இருப்பது போல அவருக்கும் நாலு வயிறு என்று யாரோ சொன்னார்கள். ரஷயப் பெண்ணும் அவரும் காதலர்கள் என்பது அப்போது எனக்கு வெளிச்சமானது. அவள் நீண்ட மென் சிவப்பு உடையில், அந்த நட்சத்திர வெளிச்சத்தில் ஒரு வனதேவதை போலவே தோன்றினாள். விருந்து தொடங்கிய நேரத்திலிருந்து, அவள் தொடை மேல் வைத்த கையை ஜெர்மன்காரர் எடுக்கவே இல்லை.

என்னை வரவேற்ற ரொஸாலியோ பெண், ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் ஒரு பாத்திரம் போல தன்னை அலங்கரித்திருந்தாள். நூறு வருடத்துக்கு முந்தைய ஆங்கிலேயர் அணிந்ததுபோல நீண்ட ஆடையும், பொங்கிய கைகளும், தொப்பியுமாக, முறுவலைச் சிந்தியபடி அவள் தோன்றியபோது, மிதந்து வருவது போலவே பட்டது. அவள் நடந்துபோகும் இடம் எல்லாம் அவளுடைய ஆடை சரசரவென்று ஒலி எழுப்பியது. 12 மணி நெருங்க நெருங்க, ஆரவாரம் அதிகமாகியது. சுற்றிவர எரிந்த பந்தங்களில் இருந்து வந்த வெளிச்சம், அனைவருடைய முகங்களிலும் பிரதிபலித்தது. இந்தச் சமயத்தில், ஆகாயத்திலிருந்து இரண்டு நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் உதிர்ந்து விழுந்தன. எல்லோரும் நிமிர்ந்து பார்த்தார்கள். அதனால், அடுத்த ஆயிரம் வருடங்களின் தொடக்கத்தைக் காண முடியவில்லை.

ரஷ்யப் பெண்ணின் கூந்தலில் இருந்து ஒரு தங்க முடி பிரிந்து, அவள் உதடுகளின் மேல் விழுந்து கிடந்தது. ஜெர்மன்காரர் அந்த முடியையும் சேர்த்து அவளுடைய இதழ்களை முத்தமிடத் தொடங்கினார். அது நீண்டுகொண்டே போனது. 20ம் நூற்றாண்டில் ஆரம்பித்த முத்தம் 21ம் நூற்றாண்டில்தான் முடிவுக்கு வரவேண்டும் என்பது போல அவர் பாடுபட்டார். ‘அவர்களுடைய முத்தம் இரண்டு உள்ளங்களை மாத்திரம் அல்லாமல், இரண்டு கண்டங்களை மாத்திரம் அல்லாமல், இரண்டு நூற்றாண்டுகளையும் இணைக்க வேண்டும். விரைவில் மணம்புரியப்போகும் காதலர்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று லோர்ரி எழுந்து நின்று, ஷாம்பெய்ன் கிண்ணத்தைத் தூக்கினார். அவர்களுக்காகவும் நாங்கள் இன்னொரு மிடறு அருந்தினோம்.

நேரம் 12 மணியை நெருங்க, ரொஸாலியோ பதற்ற நிலையை அடைந்தாள். அன்று அவள் விசேஷமாகத் தெரிந்ததற்குக் காரணம், அவள் பச்சைக் கண் ஒட்டியிருந்ததுதான். 12க்குச் சில விநாடிகள் இருந்தபோது, அவளுடைய ஒட்டுக்கண்ணாடிகளில் ஒன்று கழன்று, புல் தரையில் விழுந்துவிட்டது. பத்துப் பேர் முழங்காலில் தவழ்ந்து, பந்தங்களின் ஒளியில் அதைத் தேடினார்கள். புத்தாயிரத்துக்குச் சில விநாடிகள் இருக்கும்போது, ஒருவர் அதைக் கண்டுபிடித்தார். சரியாக 12 மணி அடித்தபோது, அவளுடைய ஒரு கண் கறுப்பாகவும், மற்ற கண் பச்சையாகவும் இருந்தது. பச்சைக் கண்ணாடியை ஒரு கையால் தூக்கிப் பிடித்தபடி, அங்கு இருந்த அத்தனை விருந்தினருக்கும் முத்தம் கொடுத்தாள். பேராசிரியர் முறை வந்தது. அவர் முத்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இரண்டு கண்களும் பச்சையாக உள்ள பெண்தான் தனக்கு முத்தம் தர வேண்டும் என்றார். அவள், அவர் சொல்லைக் கேட்காமல் எட்டிப் பாய்ந்து, தாடியில் மறைத்து வைத்திருந்த அவரது வாயை உத்தேசமாகக் கண்டுபிடித்து முத்தம் கொடுத்தாள்.

முத்தம் கிடைத்ததும், பேராசிரியர் மாறிவிட்டார். அதே கால்கள்; ஆனால், நடை வேறு! தான் பாட வேண்டும் என்று அடம் பிடித்தார். அலாஸ்காவில் இருந்து வெல்விட்ஷியா தாவரத்தைப் பார்க்க வந்த பேராசிரியரை யார்தான் தடுக்க முடியும்! பழுதுபட்ட முடி உலர்த்தியின் சத்தம் போல இருந்த அவருடைய குரலை யாரும் சட்டை செய்யவில்லை. தாலாட்டுப் போல ஆரம்பித்த பாடல், ஒரு கவிதை போன்ற முடிவை எட்டியது. தன்னை விட்டுச் சொந்தப் புருஷனிடம் திரும்பிப் போன காதலியைப் பற்றிய பாடல் அது. பாடலின் முடிவில், விட்டுப்போன காதலிக்கும் சேர்த்து ஒரு வாய் ஷாம்பெய்ன் பருகினார். நாங்களும் பருகினோம். இரவு மூன்று மணி அளவில் விருந்து முடிவுக்கு வந்தபோது, தாறுமாறாகக் கவிழ்ந்திருந்த நாற்காலிகள், மேஜைகள், விளக்குப் பந்தங்களுக்கு நடுவே சில மனித உடல்களும் கிடந்தன.

மறுநாள், மதிய நேரம் மீண்டும் நான் பயணப்பட்டேன். ஆப்பிரிக்க இருட்டு, சொல்லாமல் கொள்ளாமல் இறங்கியது போல, மனதிலும் இருள் நிறைந்து கிடந்தது. பிளேன் பல மணி நேரம் தாமதித்து உருண்டு திடீரென்று எழும்பியபோது, என் வலது பக்கத்து வானத்தில் இருந்த நட்சத்திரங்கள் எல்லாம் பொலபொலவென்று கொட்டின.

திட்டமிட்டது போல அந்தப் புத்தாயிரத்து இரவு அமைந்ததா என்று இப்போது, சரியாக எட்டு வருடங்கள் ஓடிய பிறகு, யோசித்துப் பார்க்கிறேன். இன்றுகூட அந்த ரஷ்யப் பெண்ணும், ஜெர்மன்காரரும், அந்த நீண்ட முத்தமும், வெல்விட்ஷியா தாவரமும், ஆப்பிரிக்க வானம் உதிர்த்த இரட்டை நட்சத்திரங்களும் ஞாபகத்துக்கு வருகிறார்கள். தாடிப் பேராசிரியரும், ஒட்டுக்கண்ணியும் மறக்கவில்லை. ஆயிரம் டாலர் கொடையில், இன்றும் காட்டில் சுதந்திரமாக உலவும் சிறுத்தையின் நினைவு வருகிறது.

என்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்ற வாகன ஓட்டி, கடந்த இரவு கழுதை வண்டிச் சிறுவனின் தாயார் இறந்துபோனதைச் சொன்னார். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, அந்தத் தாயார் எந்த நூற்றாண்டில் இறந்துபோனார் என்பதை நான் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை என்பது ஞாபகத்துக்கு வருகிறது.

– 26th மார்ச் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *