கண்ணதாசனின் கல்லறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 14,299 
 

முகுந்தனும் அவன் நண்பர்களும் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அவர்கள் பள்ளியில் கட்டாயம் கண்காட்சிக்கு செல்லவேண்டும், சென்றதற்கு அடையாளமாக நுழைவு சிட்டை வகுப்பாசிரியரிடம் காட்டவேண்டும் என்று அறிவித்திருந்தனர். அதனால் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் வந்திருந்தனர்.

முகுந்தனின் குடும்பம் குடிசை வீட்டில் இருந்து தளம் போட்ட வீட்டிற்க்கு வந்த முதல் தலைமுறையை சேர்ந்தது. அப்பாவிற்கு குடிநீர் வாரியத்தில் தொழிலாளி. அவருக்கு எழுத படிக்க தெரியும்.முகுந்தனை ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்க வைத்தவர், ஆறாம் வகுப்பிலிருந்து அரசாங்க பள்ளியில் சேர்த்துவிட்டார். இப்போது முகுந்தன் பதினோராம் வகுப்பு படிக்கிறான்.

புத்தக கண்காட்சிக்கு போகவேண்டும் என்ற போது தடையேதும் சொல்லாமல் முன்னூறு ருபாய் கொடுத்து அனுப்பி இருந்தார் அப்பா. ஆனால் நிறைய புத்தகங்கள் அதிக விலையாய் இருந்தன. மேலும் இவர்கள் பள்ளியில் படிக்கும் பாடங்களை பற்றிய புத்தகங்களே அதிகம் கண்ணில் தென்பட்டது. நண்பர்கள் கணித புதிர், படகதைகள் என்று வாங்கினர். முகுந்தன் தங்கைக்காக வண்ணம் தீட்டும் ஓவிய புத்தகம் ஒன்றை வாங்கினான். பின் நிரம்ப யோசித்து தந்தைக்கு பிடித்த எம்ஜியார்-ஐ பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கினான். அந்த புத்தகத்துடன் கண்ணதாசன் பற்றிய ஒரு புத்தகத்தையும் கூடவே தந்தார்கள்.

வீடு திரும்ப பேருந்தில் ஏறிய நண்பர்கள் ஜெமினியில் இறங்கி பெரம்பூர் செல்ல 29C பிடித்து காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்து அரட்டை அடித்தபடியே வந்தனர். முகுந்தனுக்கு கையில் இருந்த கண்ணதாசன் புத்தகத்தின் அட்டை பிடித்திருந்தது. அதை பார்த்துக்கொண்டே இருந்தவன், அட்டையை திருப்பினான். பின் இரண்டு பக்கங்கள் திருப்பி, முன்னுரையை படிக்க ஆரம்பித்தான்.

அதை படித்தபின் அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. நண்பர்களிடம் சொன்னான்.

டேய் கண்ணதாசன், எத பத்தி கேட்டாலும் ஒடனே பாட்டா எழுதுவாரான்டா. நாம்மால மத்தவங்க எழுதினதையே படிச்சி திரும்ப எழுத முடியல அவரால மட்டும் எப்டிடா முடிஞ்சிது?

நண்பன் பதிலளித்தான்.

மத்தவங்க எழுதுனத மனப்பாடம் பண்ணி திரும்ப எழுதுறது தான் கஷ்டம். நம்ம நினைக்கிறத எழுதுறது சுலபம் டா.

மற்றொருவன் சொன்னான்,

ஆனா எதபத்தின்னாலும் கற்பன பண்ணி பாட்டா எழுதுறது, அதுவும் ஒட்னே எழ்துறது முடியாத விஷயன்டா.

இதை பற்றி பேசியபடியே வீட்டிற்கு சென்றனர். இப்போது முகுந்தனுக்கு கண்ணதாசனை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்தது.

வீட்டிற்கு சென்றவுடன் முதலில் அந்த புத்தகத்தை படித்து முடித்தான். பாடப்புத்தகம் தவிர்த்து அவன் முழுமையாக படித்த முதல் புத்தகம் அது தான்.

அப்பா கேட்டார். இன்னாடா பாட புஸ்தகத்த படிக்கறதுக்கே யோசிப்ப, கண்காட்சியில வாங்கின புஸ்தகத்த உழுந்து உழுந்து படிக்கிறே.

பா, உங்கிட்டே கண்ணதாசன் பாட்டு CD இருக்கா?

எங்கிட்டே இருக்கற எம்ஜியார் பாட்டுல பாதி அவர் எழுதுனது தான்

முகுந்தன் அதிர்ச்சியாகி, அப்போ யேன் அத கண்ணதாசன் பாட்டுன்னு சொல்லாம எம்ஜியார் பாட்டுனு சொல்ற?

எல்லா படத்துக்கும் கவிஞர் யாருனா பாட்டு எழுதுவாங்க, பாடகர் யாருனா பாடுவாங்க, சினிமா பாக்கறப்போ அந்த நடிகர் பாடறா மாதிரி தானே தெரியும். அதனால தான். சின்னவயசுல இருந்தே பழகிடிச்சு. இப்போ நீங்க கேக்கற மாதிரி அப்போ எங்களுக்கு தோணல. கேட்டா சொல்றதுக்கும் ஆள் இல்ல. கண்ணதாசன் -எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாருக்கும் பாட்டு எழுதி இருக்கார். அவர் உயிரோடோ இருந்திருந்தா உன்னோட அஜித்தும், விஜயும் ஏன் இப்போயிருக்க எல்லாரும் அவர் பாட்டேழுதனும்னு அவர் வீட்டு வாசல்ல தவம் கேடந்திருப்பங்க, என்றார் அப்பா.

முகுந்தனுக்கு இதைபற்றி சற்று தெரியும். TV-ல் இளையராஜா இசை நிகழ்ச்சியெல்லாம் பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அவ்வளவாக உரைத்ததில்லை. மனசு கஷ்டமா இருக்குப்பா. என்றான்.

அப்பா இவனை பார்த்து சிரித்துக்கொண்டே, ஏன்டா நீங்கல்லாம் அஜித், விஜய்ய சினிமாலயோ, டிவிலயோ பாக்கும்போது இன்ன்னா ஆட்டம் போடுறீங்க. அத உடு. WWF பாக்கறப்போ உங்கம்மா ரிமோட்ட கேட்டா குடுக்ரியா. அவங்க சும்மா அடிக்கிற மாதிரி பாவ்லா காட்றாங்கன்னு சொன்னாலும் நம்பாம அதையே தான பாக்றே? என்று கேலிசெய்தார்.

முகுந்தன் அஜித் ரசிகன் அவன் நண்பர்களில் சிலர் விஜய்க்கும், தனுசுக்கும் ரசிகர்களாய் இருந்தனர். அவர்களின் படங்கள் வெளியாகும் போது சிலசமயம் நண்பர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பார்கள். ரசிகர்மன்ற அண்ணன்களோடு சேர்ந்து கட்அவுட் வைக்க உதவி செய்வார்கள்.

பா, கண்ணதாசன் சமாதி எங்கருக்குபா? முகுந்தன் திடீரென கேட்க,

இப்போது இவன் தந்தை இவனை அர்த்தமுடன் பார்த்தார். அது எனுக்கு தெரியாது. நமக்கு தெரிஞ்சதேல்லாம், எம்ஜியார் சமாதி தான். கவல படாத, யார்கிட்டயாச்சும் கேட்டு சொல்றேன், என்றார்

மறுநாள் முகுந்தன் நண்பர்களிடம் சொன்னான். நாம சொம்மாவே ஜோ காட்றவங்ளுக்குல்லாம் மால போடறோம், பால் உத்றோம். கண்ணதாசன் பத்தி அந்த புக்க பட்ச்சதுக்கப்றோம் அவருக்கு எதுனா செய்னோன்னு தோணுதுடா, என்றான்

இவன் புலம்புவதை பார்த்த நண்பர்களுக்கு பாவமாக இருந்தது, இன்னா செய்னோ சொல்லு. செய்லாம், என்றான் ஒரு நண்பன்.

அவர் செத்த நாள் அக்டோபர் 17, அன்னிக்கு நாம அவரோட சமாதிக்கு போய், மால போட்னோன்டா, என்றான் முகுந்தான்.

அதுன்னா பெரிய மேட்டரா? செரி, அவரு சமாதி எங்கருக்குனு உனுக்கு தெரிமா?

அது தெரில. அந்த புக்கலயும் போட்ல. அப்பாவுக்கும் தெரில. ஆனா அவர தமிழ்நாட்ல தெரியாதவங்களே இருக்க முடியாதுன்னு சொல்லறாங்க. யார்னா ஒத்ருக்காச்சும் தெர்ஞ்சிருக்கும். கண்டுபுடிக்ரது இசி தான், என்றான் முகுந்தன்.

செரி. வர்ற லீவு நள்ளல்லாம் சொம்மா சுத்தறதுக்கு பதிலா அத செய்லாம், என்று ஒரு நண்பான் சொல்ல மற்றவர்கள் ஆமோதித்தனர்.

அன்றில் இருந்து நண்பர்கள் இதே வேலையாய் அலைந்தனர். வாத்தியார்களுக்கு கூட அவர் சமாதியை பற்றி தெரியவில்லை. ஒரு வாத்தியார் சொன்னார்,

ஐஏஎஸ் எக்சாம்ல கூட இந்த கேள்விய கேக்லாம் போலருக்கே. ஒருத்தனுக்கும் தெரியாது.

தமிழ் வாத்தியார் சொன்னார். அவர் செத்தது அமெரிக்காவுல, ஆனா எங்க போதசாங்கன்னு தெரியல.

முகுந்தன் சந்தேகமாக கேட்டான். இந்துனா சிலசமயம் எரிக்றாங்களே?

இந்துக்களல சிலர் தலச்சன் பிள்ளைங்க இறந்தா எரிப்பாங்க. ஏன்னா மந்த்ரவாதிங்க தலச்சன் பிள்ளைங்களோட மண்டயோட்டதான் மந்திரம் செய்றதுக்கு பயன்படுந்துவாங்க அப்டின்ற பயம். ஆனா இவர் தலச்சன் பிள்ளை இல்லையே. கண்டிப்பா பொதச்சி தான் இருப்பாங்க. அவரோட சொந்த வூர்ல பண்ணாங்களா இல்ல சென்னைலையானு மறந்து போச்சு. என்றார்.

அவரின் நினைவு நாள் நெருங்கி கொண்டே வந்தது. மற்ற தலைவர்களின் சமாதிக்கு போய் அங்குள்ள காவலாளிக்கு தெரியுமா என்று கேட்டார்கள். எல்லோரும் உதட்டை பிதுக்க ஒருவர் சொன்னார், ராஜாஜி மண்டபம் போய் அங்க மாணிக்கம்னு ஒரு செக்யுரிட்டி இருகாரு. அவர் கிட்ட கேளு. ரொம்ப வயசானவரு, மெட்ராஸ்லேயே பொறந்து வளந்தவரு. இதுமாதிரி மேட்டரு எல்லாம் அவுர்க்கு நல்லா தெர்யும்.

ராஜாஜி மண்டபம் வந்து மாணிக்கத்தை பிடித்தார்கள். இவர்களை பார்த்து வியந்து சொன்னார், கண்ணுங்களா உங்கள மாதிரி பசங்கள பாக்றதுக்கு சந்தோசமாருக்கு. அவர மெட்ராஸ்ல தான் போதச்சாங்க. அப்போ வாத்தியார்தான் CM. அவரோட இறுதி சடங்கு அர்சு மரியாதையோட நட்ந்துது. பேப்பர்ல போட்டோல்லாம போட்டாங்க.

நண்பர்கள் முகமலர்ச்சியுடன் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.

எல்லாம் செரி. அவரோட சமாதி எங்கருக்குனு சொல்லுங்க, என்று அவசரபடுத்தினான் முகுந்தான்

முதியவரின் முகம் சட்டென்று வாடியது. நா அவரோட பாட்டெல்லாம் கேட்ட்ருக்கேன். அவரு சமாதிக்கு போனதில்லே. மத்தவங்க சொல்லி கேட்ருக்கேன். வயசாயிபோச்சா அத்தான் சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேங்குது, என்றார்.

முகுந்தனும் நண்பர்களும் ஏமாற்ற்றதுடன் தலையை தொங்கபோட்டனர்.

அவர்களை பார்த்த முதியவர், மயக்கமா தயக்கமா, மனதிலே குழப்பமா என பாட ஆரம்பித்தார். நண்பர்கள் அந்த பாடலை கேட்டு தலைநிமிர்ந்து அவரை பார்த்தனர். இந்த வயதிலும் எப்படி இவருக்கு முழு பாடலும் நினைவிருக்கிறது என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பாடி முடித்தவுடன் சொன்னார், இந்த பாட்டு அவர் எழ்துனது தான். இந்த பாட்ட கேட்டு எத்தனையோ பேரோட லைப் மாறியிருக்கு. சோந்து போவாதீங்க, எதுவுமே சுலுவா கெட்சிதுன்னு வெச்சிக்கோ நியே அத்த மதிக்க மாட்ட. அதே கஷ்டப்பட்டு கெட்சிது, அத்தோட மதிப்பே தனி.

முகுந்தன் கேட்டான், எப்டி?

இப்போ நீங்க வெயில்ல சுத்திட்டு வந்தப்போ தண்ணீ குட்சிங்க இல்ல. எப்டி இர்ந்துது. அதே சொம்மா வூட்ல இருக்கறப்போ தண்ணீ குட்சி பாரு சப்புனு இர்க்கும்.

தாத்தா நீங்க சோக்கா பேசறீங்க, என்ற ஒரு நண்பன், மற்றவர்களை தனியே அழைத்து வந்து,

டேய், இது ஆவர்தில்ல. இந்த மேட்டர இத்தோட உட்டுட்லாம். வூட்டுக்கு போய் கிரிகெட் ஆட்லான்டா, என்றான்.

சோர்ந்திருந்த மற்ற நண்பர்களும் தலையசைத்தனர். முகுந்தனும் மனம் தளர்ந்திருந்தான், எதோ பேச அவன் வாயெடுத்தபோது, பெரியவர் அவர்களை அழைத்தார். இப்போது பெரியவர் அருகில் புதிதாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். நண்பர்கள் அருகில் சென்றவுடன், புதியவரிடம் இவுங்க்ளுக்கு ஒரு டவுட். உங்ளுக்கு தெர்தா பாக்லாம். நண்பர்களை பார்த்து, ம் கேளுங்க, என்றார்.

நண்பர்கள் தயங்கினர். சட்டென முகுந்தன் அந்த கேள்வியை கேட்டான்.

சற்று அதிர்ந்த அந்த நபரின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. அவமானப்பட்டவர் போல் தலைகுனிந்த அவர் இருகிய முகத்துடன் இவர்களை பார்த்து, எதுக்கு கேக்ரிங்க? என்று பதில் கேள்வி கேட்டார்.

அவரோட நினைவு நாளுக்கு அங்க போய் மால போடனும் அதுக்குதான், என்றான் முகுந்தன்.

பதில் ஏதும் கூறாமல் இவர்களையே சற்று நேரம் உற்று பார்த்த அந்த நபரின் முகம் இப்போது மலர்ந்தது. எதையோ உணர்ந்துகொண்டவர் போல் நண்பர்களை உற்சாகத்துடன் அருகே அழைத்து அவர்கள் தோள் மேல் கை போட்டவர், புன்னகையுடன் சொன்னார், எனக்கு தெரியாது, ஆனா கண்டுபிடிச்சிடலாம்.

மறுநாள் சாலையில் வருவோர் போவோரிடமெல்லாம் முகுந்தன் தன் நண்பர்களுடன் அந்த கேள்வியை கேட்டான். அதை கண்ணதாசன் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சியாக வெண்ணிலா தொலைகாட்சியினர் படம் பிடித்துகொண்டிருந்தனார். நேற்று “கண்டுபிடிச்சிடலாம்” என்று சொன்ன அந்த நபர் அவர்களை இயக்கி கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *