கண்டடைதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,353 
 

இளநீல நிறத்தில் படிகம் போல தெளிந்த நீர், மர்மங்கள் ஏதுமற்று ஆழ்ந்த மோனத்தில் இருப்பதாகத் தான் இருந்தது. குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்திருந்தனர். ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவரின் மீது நீரின் விளிம்பு அவ்வப்போது பாம்பு நெளிவதான தோற்றம் கொண்டது. மேலிருந்து கதிர்களாய் கசிந்த சூரியன் அலைகளுடன் விளையாடி, ஒளியும் நிழலும் கலந்த ஜால விநோதங்களாய் பரவசப்படுத்தியது. ஒரு மலாய் குழந்தை தன்னுடைய கோதுமைக் கரங்களால் எட்டிப் பிரதிபலித்த ஒளிக் கோலத்தைத் தொட முயன்ற கணத்தில் கூட அடுத்த கணத்தின் உக்கிரம் தெரிய வில்லை. குழந்தையின் கைகளிலிருந்து மூன்று அடி தூரம்தான்… வெறி கொண்ட கரடி எம்பிப் பாய்ந்தது நீரைக் கிழித்தவாறு தலையைச் சிலுப்ப, திறந்த வாய், பற்களிலிருந்தும் உடலிலிருந்தும் வழிந்த எச்சில்.. வெறி நாயை நினைவு படுத்தியது. சட்டென நிகழ்ந்த நிகழ்வுகளின் முழு அர்த்தமும் புரியும் முன்னர் எழுந்த வேகத்தில் ‘சளப்’பென நீரில் ஆழ்ந்து மறைந்து போனது. குழந்தைகள் பயத்தில் கீச்சிட்டு அலறி ஓடினார்கள். அபிநயா ஓடிவந்து ஆதித்யனின் கால்களைக் கட்டிக் கொண்டாள். ஆதித்யனும் பயத்தில் சில தப்படிகள் தன்னையறியாமல் பின்னால் போயிருப்பதை அறிந்து வெட்கம் கொண்டான்.

சற்றுமுன் விலங்கியல் பூங்காவின் அறிவிப்புப் பலகையில் படித்த விவரங்களின் தொகுப்போ, கார்ட்டூனில் பார்க்கும் ‘பூ-பேரோ’ அல்லது அணைத்துக் கொள்ளத் தூண்டும் ‘டெடி பேரோ’ அல்ல. ராட்சஷக் காட்டு மிருகம்! பனிப்புலியின் தலையைத் தன் கரங்களினாலேயே நசுக்கி, சிதைத்து, உருக்குலைத்து அழித்துக் கொல்லும் திறன் கொண்ட விலங்கு. கண்களில் அந்நியமும் பகமையும் தெறிக்கும் மிருகம். ஆழத்தில் நீந்தி வந்து ஆக்ரோஷமாய் எம்பியிருக்க வேண்டும். கண் ணாடிச் சுவர் தந்த அபயத்தில் அவனின் ஆசுவாசம் மீண்டது.

ஃ ஃ ஃ

நேற்று நினைக்கக் கூட இல்லை. இன்று, இங்கே இப்படிக் கரடியைப் பார்த்தபடி பொழுது கழியுமென்று கடந்த ஒரு வாரகாலமாய் இலக்கின்றி கழியும் பகல் பொழுதுகளும் சஞ்சலத்தின் சகல பயங்களுடனும் அலைக்கழிக்கும் இரவுகளும் விரல் சுடும் சிகரெட்டுகளில் எண்ணிக்கை கூடிப் போனதும் பழகிக் கொண்டிருக்கிறது என்றாலும் கூட அலைச்சலில் அபிநயாவின் பிறந்த நாளை மறந்து போயிருந்தான். குழந்தை காலையில் ஏக்கமாய் முகத்தைப் பார்க்கையில் அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. இல்லாவிடில் இப்படியான ஒரு வார நாளின் புதன் கிழமை பகல் பொழுது, நெரிசலற்ற, பரபரப்பற்ற விட்டேத்தியான நாளாக இருந்திருக்குமா? இயந்திரத்தனமான பழக்கம் விட்டுப் போனதில் ஏதோ இனந்தெரியாத அரிப்பும், பயமும் விடாப்பிடியான குற்றவுணர்வாகி அவனின் இருப்பைத் துளைத்துக் கொண்டிருந்தது.

விலங்கியல் தோட்டத்திற்கு நுழைந்து இந்தக் காட்சி சாலைக்கு வந்ததும் கூட எதேச்சையானதுதான். அதாவது தன்னளவில் எதேச்சையானதாகத் தோன்றுவது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் ஏதேனும் அர்த்தமிருக்கும் என்றோ ஒரு பெரிய வரைபடத்தில் ஒரு சிறு பகுதிதான் இப்போதைய வாழ்க்கை என நம்புங்கள் என்றோ வாழ்க்கையே நிகழ்வுகளின் ஊடான கண்டடைதல் என்றோ யாரேனும் சொல்லியிருந்தால் இந்த நிலையிலும் அவன் சிரிக்கக் கூடும்.

நீண்ட தூரம் போகுமென நம்பிய பாதை அது. சட்டென ஒரு இடது புறத் திருப்பத்தில் முற்றாக முடிந்து போய்விட்டது. காங்கிரீட் கூரையமைந்த காட்சி சாலை தென்பட்டது. அதன் முடிவில் ஒரு மேடான புல்வெளிப் பகுதி. அதற்கு அப்பால் என்னவென யூகிக்க இயலாத வண்ணம் ஒரு முற்றுப் புள்ளியாய் இருந்தது. ஆதித்யன் தன் வாழ்க்கையைக் குறியீடாகக் காட்டிடும் ஒரு முற்றுப்புள்ளி என அம்மேட்டைக் குறித்து நினைத்துக் கொண்டான்.

தார்ச்சாலைச் சரிந்து குறுகிக் கொண்டே போய் காங்கிரீட் நடைபாதையாய் முடிந்தது. வானம் இருபுறமும் வாதாம், பலா, பனை, ஆல் என காட்டு மரங்களைக் கரையாகக் கொண்டு ஒரு நீல நதிபோல ஒழுங்கற்று பரவிக் கிடந்தது. அபிநயா எந்த விதக் கவலையுமற்று பொங்கி ததும்பிக் கொண்டிருந்தாள். விரல்கள் மெல்ல நெகிழும் தருணத்தில் கட்டவிழ்ந்த கன்றாய் துள்ளலோடு துள்ளிப் பிரிந்து ஓடி விடுகின்றாள். மிருகக்காட்சிச் சாலைக்குள் வந்து இரண்டு மணி நேரமாகிறது. அதே துள்ளல்!

ஆதித்யனுக்கும் இத்தகைய ஒரு தனிமை தேவையாயிருக்கிறது. நீண்ட சவுக்கின் நுனியென எண்ணங்கள் சுழன்று சுழன்று மனதினை விளாறுகிறது. ரணத்தினை விடாமல் ரத்தம் கசியும்படி சொறிந்து, சொறிந்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறது சுயபச் சாதாபம். ஹிம்சை. ‘என்ன செய்யப் போகிறாய்’, ‘என்ன செய்யப் போகிறாய்’ என்ற கேள்வியை அடக்க வழியறியாது தவித்துக் கொண்டிருக்கும் ஆதித்யனை அவநம்பிக்கை மெல்ல அறுத்துக் கூறு போட்டுக் கொண்டிருந்தது.

அபிநயாவின் குதிப்பு இப்போது நின்றுவிட்டது. மருதோன்றிச் செடியருகே துருதுருக்கும் தேன் சிட்டினைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் மனசு, மெல்லிய உடலின் அசைவுகளனைத்திலும் பிரதிபலித்து சந்தோஷத்தின் அதிர்வுகளை உடல் மொழியாக வெளிப்படுத்தியபடி இருக்கிறது. தன் மகள்தான் எனினும் முற்றிலும் வேறான குணவெளிப் பாடுகள் கொண்டவளாகத் தோன்றினாள் அபிநயா ஆதித்யனுக்கு. அதிலும் இப்போதைய மனோநிலையில், மகிழ்வின் இசையைச் சதா காட்சிப் படுத்திக் கொண்டு இருக்கும் அவளின் பருவத்திற்கு மீண்டும் போகமாட் டோமா என ஏக்கம் எழுந்தது ஆதித்யனுக்கு

ஃ ஃ ஃ

கண்ணாடிச் சுவர் வழியே உள்ளே பார்த்தான் ஆதித்யன். ஆழத்தில் இரு பெரிய பாறைப் படுகைகளைக்கிடத்தி இயற்கையான சூழலை ஏற்படுத்த முயன்றிருந் தார்கள். நீள் வட்டமான குளத்தில் தண்ணீர் பகுதி முடிவடையும் இடத்தில் சலவைக் கல்லாலான படிகள் இருந்தன. படிகள் மேலேறி முடியும் இடத்தில் மணல் மேடு ஒன்று பெரிய பாறைகள் இருந்த இடம் நோக்கிப் போனது. அதற்கும் அப்பால் அறை போன்ற இடம்.

‘இனுக்கா!’ எனப் பெயரிடப் பட்டிருந்த அந்தக் கரடி, அற்புதமான பசும்பொன்னின் சாயைகள் தென்பட பிரகாசமான வெண்ணிறம் கொண்டிருந்தது. தேவதைகளின் நிறம், கிரிஸ்மஸ் தாத்தாவின் தாடி… ஆதித்யனுக்கு அந்தக் கரடியைப் பார்க்க பொறாமையாக இருந்தது. மேலிருந்து அருவி போல அந்தத் தடாகத்தில் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் நீர் படிகம் போலத் தூய்மையாக இருந்தது. குளிர்பதனப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். அபத்தமாக இருந்தாலும் தன்னை அம்மிருகத்துடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்த முடியவில்லை அவனால். வெம்மையின் கசகசப்பில் அவனது உள்ளாடை முழுதும் நனைந்து விட்டிருந்தது. துடைப்பதற்கான டிஸ்யூ-தாளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டிருந்தான். முகத்திலும் கழுத்திலும் வியர்வை வழிந்து சலிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதோடு இருண்மை கொண்ட அவனது சிந்தனைகளின் கொடுக்குகள் அவனை ஓயாது கொட்டிக் கொண்டிருக்க எரிச்சல் ஆத்திரமாகவும் ஆத்திரம் எவர் மீதும் இலக்கு கொள்ள முடியாததால் வன்மமாகவும் அவனின் மேலேயே அனலாய்க் கவிழ்ந்து கொண்டி ருந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாகிறது, அவனின் தடுமாற்றமும் சினமும் இன்னமும் ஓயவில்லை. கவலையாகவும் பதற்றமாகவும் உருமாறி, அவனின் எல்லா செல்களிலும் புகுந்து கொண்டிருக்கிறது. அடச்சே! இவற்றிலிருந்து விடுபடத்தான் விலங்கியல் பூங்காவிற்கு வந்தோம், இங்கேயும் பொம்மலாட்ட பொம்மை போல உணர்வுகளில் தத்தளிக்கிறோமே..’ என நினைத்த போது நெஞ்சம் குமுறி ஆண்டவனை திட்டித் தீர்த்தான் ஆதித்யன்.

ஃ ஃ ஃ

ஹோ சிங் ஹி. மனிதவளப் பிரிவின் தலைவர் ஆதித்யனின் வந்தனத் திற்குப் பதிலாக இறுக்கம் நிறைந்த புன்முறுவல் ஒன்றைத் தந்தார் உதடுகள் பிரியாமல் நேராக விரிந்த விதம் அலுவலக சூழலில் இறுகி உறைந்தது. ஆதித்யன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சாம்பல் வண்ணச் சுவரில் அலங்காரமின்றி இருந்த வட்டச் சுவர்கடிகாரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. குளிர்பதனத்தின் ஹம்மைத் தவிர்த்து சப்தங்கள் ஏதுமில்லை. நீல நிற முழுச்சட்டையில் பொம்மை போல உறைந்திருந்த அவர் சட்டென உயிர் பெற்றார். “உட்காருங்க” என சம்பிரதாய ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போதே, கைகள் உயர்ந்து ஆதித்யன் உட்கார வேண்டிய இருக்கையைக் காட்டியது. அவரது இயக்கத்தில் இருந்த செயற்கைத்தன்மை ஆதித்யனைக் கலவரப் படுத்தியது. ஹோ சிங் ஹி கூப்பிடுகிறார் என்றாலே கொஞ்சம் சலிப்பும் கலவரமாகவும்தான் இருந்திருக்கிறது. ‘மிஸ்டர் ஆதித்யன்! உங்களோட ஆயுள் காப்பீட்டு படிவங்கள்ல தப்பிருக்கு..’, ‘ஆதித்யன் உங்க மருத்துவச் செலவிற்கான பில்லில் உங்களோட அடையாள எண் குறிப்பிடப் படவில்லை.’ இப்படி. ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் தொலை பேசியிலேயே முடிந்துவிடும். தேவையானவைகளை அவருடைய உதவியாளினி க்ளோரியாவிடம் சேர்ப்பித்து விட்டாலே போதும். இம்முறைதான் முக்கியமான விஷயம் குறித்து பேச, நேரில் வரும்படி அழைப்பு. மெத்தென்றிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தும் மௌனம் கலையவில்லை. சுவர்கடிகாரத்தின் வினாடி முள் ஒவ்வொரு வினாடிப் புள்ளியிலும் ‘சக் சக்’ கென குதித்து அதிர்ந்து, பலமுறை சுற்றி வந்து விட்டது. ஆதித்யன் மறுமுறை அவர் முகத்தைப் பார்த்த போது, ஒரு சட்டப் புத்தகத்தை வாசிக்கும் விதமாக ஆழ்ந்து தன்னை ஊடுருவி எடை போட்டுக் கொண்டிருந்த தையும், அவரது விழிகள் ஜடத்தன்மை பெற்று, ஒரு பிளாஸ்டிக் தன்மை கொண்டதாக மாறி இருந்ததையும் உணர்ந்து, ஆதித்யன் ஒருவித அமைதியின்மையை அடைந்தான். இடது கை தன்னிச்சையாக வலது கையின் நகவிளிம்பினை சுரண்டி பிய்க்க முயன்று கொண்டி ருந்தது. ஹோ சிங் ஹி மெல்ல அசைந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். தலைக்கு மேலிருந்த குழல் விளக்கின் ஒளி அவரின் வழுக்கைத் தலைக்கு மேல் ஒரு மங்கிய ஒளிப்புள்ளியாகப் பிரதிபலித்து அசைந்தது. அவரது சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் அகப்பட்ட பேனா காரின் வைப்பரைப் போல அரைவட்டமாக மேஜை மீதிருந்த கோப்பின் கெட்டித்தாளின் மீது அசைந்து கொண்டிருந்தது. ஆதித்யனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அதற்கிடையில் இங்கே வந்து காத்துக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தது. புதிதாக வந்திருக்கும் ஆட்கள் சிறுப்பிள்ளைகளாக இருக் கிறார்கள். வேலையிலும் கூட விளையாட்டுத் தனமாகவே இருந்தனர். தான் இல்லாவிட்டால் அடுத்த பேட்சுக்கான ‘ஹைட்ரோ-க்வின்’னை கூட நிரப்ப மாட்டார்கள். லோடிங் தாமதமானால், எம்.எம்.ஏ உற்பத்தியே கூடக் குறையக் கூடும். இன்றைய டார் கெட்டையே கூட எட்டாமல் போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

“ஏதேனும் விஷயம் உண்டா? ம்… அடுத்த பேட்ச் லோட் செய்ய வேண்டியிருக்கு” பணிவாக வினவி னான். ஹோ சிங் ஹி யின் கண்களில் ஒரு விதக் கபடத் தன்மை மின்னியதாகப் பட்டது ஆதித்யனுக்கு. தொண் டையைச் செருமிக் கொண்டார். மறுபடியும் அசைந்து உட்கார்ந்து, ஆதித்யனைப் பார்த்த போது கண்கள் கனிவாகச் சிரிப்புடன் இருந்தது. ஆதித்யனின் உள்ளம் ஆசுவாசம் கொண்டது.

“வேலையைப் பற்றி கவலைப்படாதீங்க! மத்த வங்க பார்த்துப்பாங்க.

ரிலாக்ஸ்… உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?”

“ஒரு மகள்- அபிநயா”.

“அப்படியா! என்ன வயது?”

“ஆறு வயது”.

“காலந்தள்ளி குழந்தை பெற்றுக்கிட்டீங்களா? உங்களுக்கு இப்போ நாற்பத்தி மூணு வயதாகுமே?”

“ஆமா ஸார்! கொஞ்சம் தாமதமாகத்தான் பொறந்தா” ஆதித்யனுக்கு வெட்கமாக இருந்தது.

விரைப்பாக உட்கார்ந்திருந்த ஆதித்யன், கால்களைக் கொஞ்சம் தளர்வாக நீட்டிக் கொண்டான்.

“உங்க மனைவி எங்கே பணிபுரியறாங்க?”

“எங்கேயும் வேலை செய்யலை, அவங்களுக்கு உடல்ரீதியாக சில மருத்துவக் குறைபாடுகள் இருந்ததால் வீட்டோடுதான் இருக்காங்க. முன்னாடி கொஞ்சகாலம் எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் வேலை பார்த்தாங்க, இப்போ சும்மாதான் இருக்காங்க. என் மகளுக்கு எப்பவுமே அம்மா கூட வேணும். அம்மா செல்லம்!”.

“முன்னாடி நீங்க ஒரு டோயோட்டா கொரல்லா காடி வைச்சிருந்தீங்க இல்லை?”

“ஆமா அதை ஸ்கிராப் பண்ணிட்டு, நிஸான் சன்னி வாங்கிட்டேன்லா!”

அதற்குப் பதிலா திரு.ஹோ, ஏதோ சொல்ல முற்படுவதற்குள் கதவு மெல்ல இருமுறை தட்டப்பட்டு திறந்தது.

“யா! யா!- கமின் மிஸ்டர் கெல்வின் சான். ஓய் ஸோ லேட்? மிஸ்டர் ஆதித்யனும், நானும் உங்களுக் காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார் ஹோ சிங் ஹி.

“மன்னிச்சிடுங்க! ஐ.எஸ்.ஓ 2000 ஆடிட்டிங் முடிய தாமதமாயிடுச்சு” என்றபடி, ஆதித்யனுக்குப் பின்புறமிருந்து உள்ளே நுழைந்தவர் ஆதித்யனின் மேலாளர். ஆதித்யனின் பக்கம் திரும்பி, “ஹவ் ஆர் யூ ஆதி?” என்றபடி தூக்கி வந்திருந்த இரண்டு கோப்புகளை மேஜையின் மீது வைத்தார். ஆதித்யன் காய்ந்திருந்த உதடுகளை அவசரமாய் ஈரம் செய்து கொண்டு, அவரை இங்கே காண நேர்ந்ததன் வியப்பு அகலாமலேயே மறுமொழிந்தான்.

இருவரும் மாண்ட்ரீனில் தந்தி போல ஒற்றை வரிகளில் பேசிக் கொண்ட போது, அடிவயிறு கலங்க ஏதோ தப்பிதமெனத் தோன்றியது ஆதித்யனுக்கு. ஹோ சிங் ஹி ஒரு சடங்கு போல கோப்பிலிருந்து ஒரு கவரை எடுத்து ஆதித்யனிடம் நீட்டினார். ‘ஏதோ மெமோ! இம்முறை கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காது’ என்ற நினைப்பு ஓடியதுமே, ஆதித்யனின் கைகள் மெல்ல நடுங்கவும் உடல் வியர்க்கவும் ஆரம்பித்து விட்டது. கை நடுக்கத்துடனே கடிதத்தைப் பிரித்து வாசிக்க முயன்றான். மூளை மரத்து கண்கள் வறண்டு எரிந்து கொண்டிருக்க, முதல்வரியைப் படித்தவுடனே முற்றிலுமாக நிலை குலைந்து மேலே படிக்க இயலாமல் கண்கள் தளும்பியது. அது அவனைப் பணி நீக்கம் செய்வதாய் அறிவித்த கடிதம். கண்ணீராகவும் ஆச்சரியமாகவும் அயர்வாகவும் மௌனமொழியால் ‘ஏன்?’ என்ற கேள்வி தொக்கி உறைந்தது.

அவர்கள் இருவரும் எதிர்பார்த்த எதிர்வினை யாய் அவனது நிலைகுலைவும் மௌனமும் இருந்திருக்க வேண்டும். கெல்வின் சான் பேச ஆரம்பித்தார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக, ஆதித்யன் எவவாறு அர்ப்பணிப்பு நோக்கம் கொண்ட திறமையான ஊழியராக விளங்கினான் என்பதையும் வேலையின் போது அவனுடைய ஊக்கம் எவ்வாறு மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தது என்றும், அவனுடைய திறமை, அனுபவம், பாதுகாப்பு குறித்த சிந்தனை எப்படி இக்கட்டான தருணங்களில் உதவியிருக்கிறது என்பதை ஒரு வருத்தம் தோய்ந்த பாவனையில் எடுத்துக் காட்டுகளுடன் கூறினார். அவனைப் போன்ற தொழிலாளியை இழப்பது, உண்மையில் இத்தொழிற் சாலைக்குப் பெரிய இழப்பு என்றார். மிகையில்லாத பேச்சு அவர் உண்மையைத்தான் கூறுவதாக ஆதித்ய னுக்குப் பட்டது. அது ஒருவகையில் உண்மைதான். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவன் மதிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் வந்திருக்கிறான். குறிப்பாக ஒரு முறை தரமற்றதால் எம்.எம்.ஏ’வைக் கழிவாக விற்க முடிவெடுத்தது நிர்வாகம். ஆதித்யனின் யோசனையை முயன்றதில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகாமல் தப்பியது. அதற்கு ஆயிரம் வெள்ளி பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கூட வழங்கினார்கள்.

கெல்வின் நிறுத்திய போது, ஒப்பனைக் கலைந்த நடிகை தன் முகத்தினை ஆடியில் பார்த்துக் கொள்ளும் போதான கணத்தை ஒத்த, ஒரு சங்கடமான மௌனம் எழுந்தது.

இம்முறை ஹோ சிங் ஹி, சடங்கார்த்தமான இறுக்கம் நிறைந்த குரலில் பேச ஆரம்பித்தார். “உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை பொருளியல் மந்த நிலையில் ஸ்திரப் படுத்திக் கொள்ள கடந்த இரு வருடங்களாக நிர்வாகம் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வந்திருக்கிறது. மரணக்குழியிலிருந்து தப்ப இதுதான் கடைசி முயற்சி. ஆள்குறைப்பு. நீங்கள் தனி ஆள் அல்ல. இப்போதைக்கு இன்னமும் குறைந்த பட்சம் முப்பது பேர் பட்டியலில் இருக்கிறார்கள். யாருமே இதற்கு விலக்கல்ல. தேவைப்பட்டால் நான் கூட விலகித்தான் ஆகவேண்டியிருக்கும். கம்பெனி இத்தகைய முடிவை எடுக்காமலிருக்க உங்களின் மேலாளரும் நானும் எவ்வளவோ முயன்றோம். குறிப்பாக உங்களைப் போன்ற சிறப்பான தொழிலாளர்களை இழந்து விடாதிருக்க மிஸ்டர் கெல்வின் சான் பலவழிகளில் மிகவும் முயன்றார். அதில் அவர் வெற்றி பெற முடிய வில்லை. வயதில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எடுப்பது, என்ற முடிவு நிர்வாக இயக்குனரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதிக சம்பளம் பெறும் நீண்ட நாள் ஊழியர்களை வேலையிலிருந்து எடுப்பதன் மூலம், ஓரளவிற்குத் தப்பி விட முடியும் என கம்பெனி கருதுகிறது.”

சிறிது இடைவெளி விட்டு குரலைச் சற்று உயர்த்தி இதுவரை பேசியதன் சாம் போல் ஹோ பேச ஆரம்பித்தார்.

“ஆதித்யன் உங்களின் வேலை இழப்பிற்கு காரணம் தகுதியின்மையோ, பணியில் நீங்கள் செய்ததவறுகளோ அல்ல. இது உங்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் என நம்புகிறேன். கடிதத்தில் குறிப்பிட்டபடி இழப்பு ஓய்வுதியங்களைத் தாராளமாய் தர கம்பெனி முன் வந்திருக்கிறது. நிர்வாகத்திற்கு உங்களின் குறைகளைத் தெரிவிக்கவோ சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவோ உங்களுக்கு நான்கு வார அவகாசம் தரப்பட்டுள்ளது. “சியர் அப் ஆதி, உங்களைப் போன்ற சின்சியரான ஆளுக்குப் பிரகாசமான எதிர்காலம் எப்பவுமே உண்டு. குட் லக் டு யூ!”

ஒரு கை குலுக்கலில் முற்றிலுமாக முறிந்து போய் விட்டது அவரது பதினைந்து வருட உறவு. வெளியேறி, தடுமாறி நின்ற ஆதித்யனை, “தானாக காரோட்டிக் கொண்டு போக இயலுமா? ஏதேனும் உதவி தேவையா?” என்று கெல்வின் கேட்டார். ஆதித்யன் மறுத்து வெளியேறும் முன்னர், எச்.க்யூ லோட் செய்யாமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. அதை மேலாளரிடம் கூறவும் செய்தான்.

ஃ ஃ ஃ

துருவக் கரடி ஒருவித வன்மத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் அரக்க உடல் விசையுடன் நீரைக் கிழிக்க இயந்திரத்தனமாய் வலிமையுடன் அதன் முடிவற்ற பயணம் அந்தப் பெரிய தொட்டியில். சலவைக் கல்லாலான படிகட்டிலிருந்து பெருத்த அலையெழும்ப முங்கி, ஆழ நீந்தி கற்படுகைகளை அடையும். அதில் சரிவான பாறையின் முதுகினில் கால் தட்டுப்படும் வரையான நீச்சல், பாறை மீதான நடையாக மாறுகையில் முக்கு, நீரின் மேலே தெரிய நீரின் கோட்டைக் கலைத்துக் கொண்டு தலை வெளிவரும். மெல்ல அது நடந்து சலவைக் கல்லை அடைகையில் அதன் இடுப்பு வரை வெளியே வந்திருக்கும். சிந்தனையற்ற இத்தொடர் நாடகம் மறுபடி மறுபடி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வட்டமும் முடிவடைகையில் புதியதொரு வட்டம் அதனினும் வேகமும் வலிமையும் கொள்வதாய் பட்டது ஆதித்யனுக்கு.

ஃ ஃ ஃ

அபிநயா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதற்குள் அவளுக்கு ஒரு சினேகிதி கிடைத்து விட்டாள் என்பது, இரண்டு குட்டிகளும் அவ்வப்போது கரடியைக் குறித்து வியந்து கொள்வதும் சிரித்துக் கொள்வதிலிருந்தும் தெரிந்தது. இரண்டு முறை கூப்பிட்டும் அவள் அந்த இடத்தை விட்டு நகரும் வழியாய்த் தெரியவில்லை. காற்று மொடமொடப்பாய் விட்டு விட்டு வீசியது. வெள்ளெலிக் குஞ்சின் சருமத்துடன் ஒரு வெள்ளைக்கார பெண் ஆதித்யனிடம் வந்தாள். அவள் கையில் பாதி திறந்தபடி ஒரு கோக் கேன் இருந்தது. நட்புடன் கச்சிதமாகச் சிரித்தாள். அழகான சிரிப்பும் நீலநிறக்கண்களும் துல்லியமான பற்களும் அவளைப் பேரழகியாய் காட்டியதை உணர்ந்தான் ஆதித்யன். இவள் என் ஓவியத்தில் இடம் பெறத் தக்கவள் என்று நினைத்தான். “நீங்களும் கரடிக்கு இறையிடுவதைக் காணக் காத்திருக்கிறீர்களா?” என்றாள். விவரப்பல கையில் பிற்பகலுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியாக ‘இறை போடுவதை’ குறித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வந்தது. தான் சாப்பிடுவதை மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தனக்கு மிகவும் கூச்சமாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது. அந்தக் கரடிக்கு இத்தகைய கூச்சங்கள் உண்டா என்பது தெரியவில்லை. அபிநயாவிற்கு புது அனுபவமாக இருக்கும் என்று அவனுக்குப் பட்டது. ‘ஆம்’ என்று தலையசைத்தான். “அது சிறப்பான நிகழ்ச்சி” என்று விவரப்பலகையில் படித்திருந்ததாகக் கூறினான். “பிற்பகல் 1.05க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும், இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பித்துவிடும் என நினைக்கிறேன்” என்றான்.

“ஆமாம் சிங்கப்பூரர்கள் காலம் தவறாதவர்கள்” என்று அந்தப் பெண் கூறினாள்.

அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஆதித்யனும் ஆமோதித்தான். அந்தப் பெண்ணிடம் விடைபெற்று, அரங்கம் போல ரசிப்பதற்கு வசதியாய் போட்டிருந்த வினைல் நாற்காலிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான். அபிநயாவும் வியர்வையில் நனைந்த முகத்துடன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஆதித்யனுக்குத் தன்னியல்பாய் தொடர்ந்து எழும் துர்-எண்ணங்களிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாக இருந்தது. வெளி விஷயங்களில் சிதறிய கவனம் மாறியதுமே ஒரு வலை போல, அவை மறுபடியும் மறுபடியும் அவன் மீது கவிழ்ந்து கொள்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் இடையறாது வெளிப்புறமாக புலன்களின் அசைவுகளில் மனதை வைத்து அலைந்து கொண்டிருக்கிறான். சதா புகைப்பதும் அயர்ந்து களைத்து விழும் வரை படுக்கையின் பக்கம் செல்லாமல் இருப்பதுவும் என தனித்து மனைவியிடம் பேசுவதைத் தவிர்க்க, காலையிலேயே கிளம்பி எங்கேனும் ஓடிப்போவதுமே இப்போதைக்கு அவனுக்குத் தெரிந்த வழியாக இருக்கிறது. பிரச்சனைகளைத் தீர்க்க யோசிக்கிறேன் என்று ஆரம்பிக்கும் அவனுடைய சிந்தனை எல்லா பயங்களையும் கற்பித்துக் கொண்டு நம்பிக்கையை ஊனப்படுத்தும் ஒரு பாவனை என்பது சமீபத்தில்தான் பிடிபட்டது. என்ன செய்யலாம்? ஏதாவது செய்தே தீரவேண்டும். இப்போதைக்கு செலவுகளை குறைக்கவேண்டும். காரை உடனடியாக விற்பதற்கு மனோகரனைப் பார்க்க வேண்டும். இப்போது விற்பதால் கட்டாயம் 10,000 வெள்ளியாவது நஷ்டம் வரத்தான் செய்யும். மெல்ல ஒரு விதமான ஏக்கம் போல ஏதோ ஒன்று அவனைக் கவ்வும். இந்தக் காரை வாங்குவதற்கு முன்னர் நிறைய ஷோரூம்களில் போய்ப் பார்த்திருக்கிறான். தொட்டுப் பார்ப்பான், காரின் பானட்டை மெல்லத் தடவிக் கொடுப்பான். அது ஏதோ நாய் போலவும், இவனது அன்பின் காரணமாய் நன்றி பொங்க அதுவே வீட்டுக்கு ஓடி வந்து விடும், என்று நம்புவதைப் போல வாஞ்சையாய் இருக்கும். விற்பனைப் பெண்கள் குட்டை உடையில் நளினமாய் சிரித்துப் பேச ஆரம்பிக்க, அது எதுவுமே அவனைத் தொடமுடியாத வசீகரிப்பின் மயக்கத்தில் காரின் முன்புற இருக்கையில் அமர்ந்து பார்ப்பான். ஸ்டீரிங்கை மெல்ல திருப்பிப் பார்ப்பான். காரின் கதவை மூடி, தன் ஆசையையும் கொஞ்ச நாளைக்கு அடைத்து வைப்பான். இந்தக் காரினை வாங்கிய காலத்தில் மிகவும் உற்சாகமாய் இருந்தான் நண்பர்களுக்கு விருந்து, கோலாலம்பூருக்கு அடிக்கடி குடும்பத்துடன் பயணம், என காரில் பார்த்துப் பார்த்து, புதுப்பித்த விஷயங்களுக்கான செலவை மீட்க இயலாது. காரில்லாமல் இருப்பதைக் குறித்து அவனால் யோசிக்க இயலவில்லை. ‘உலகப் போரில் ஜப்பான்காரன்வந்ததில் சொத்து முழுதும் இழந்து ரப்பர் தோட்டங்களில் திரிந்து அப்பா செத்ததைப் போல, கடைசி காலத்தில் அல்லல்பட்டுத்தான் அலைய வேணுமோ?’ என ஆதித்யனின் யோசனை திசை மாறும் கணத்தில், அவனின் பயங்கள் புற்றீசல்கள் போல வெளிக் கிளம்பி ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். ஷிப்யார்ட் விபத்தில் கண்கள் போன பின்னர், கோபாலன் நாயர் வீட்டை இழந்து, மனைவியும் விவாகரத்து பெற்று போன பின், தனியாய் ஓரறை வீட்டில் முடங்கிப் போனது நினைவுக்கு வரும். உதற உதற அந்த நினைப்பு வலிமை பெறும். தன் மேலேயே சலிப்பு வரும். உருப்படியாக இடையே வேறு கூடுதல் படிப்புகளையும் படித்திருக்கலாம். வேறு விதமான வேலைக்களுக்கேனும் முயற்சி செய்திருக்கலாம் என எண்ணமிடுவான். பாழாய்ப் போன ஓவியம் வரைவது மட்டுமே அவனுக்குத் தெரிந்த வேறு விஷயம். ‘சைத்ரீகம் தரித்திரம்’ன்னு படியேறி வந்த உறவுக்காரர் அவன் வரைந்து வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்துக் கூறியது நினைவுக்கு வந்தது ஆதித்யனுக்கு. மோட்கிளியானி, வான்கோ, சவ்டின்… முக்கால்வாசி ஓவியர்களின் வாழ்க்கை அப்படித்தான் முடிந்து போயிருப்பதைக் கசப்புடன் நினைவுக்கு வந்தது.

ஃ ஃ ஃ

திடீரென கரடியின் இயக்கம் ஓயாத அலைச்சலாய்ப் பட்டது ஆதித்யனுக்கு. இந்தப் பாழாய்ப் போன கரடி ஏன் இப்படி ஓயாமல் அலையணும்? வேளா வேளைக்குச் சாப்பிட்டு தண்ணியிலேயே நிம்மதியாய் வீழ்ந்து கிடக்கலாமில்லை? எதுக்காக இப்படி எதையோ தொலைச்சதைப் போல அலையணும்? ஆனந்தமாய் மணல் தட்டில் புரண்டு கிடக்கலாம். நிழலில் மத்தியான தூக்கமொன்றைப் போடலாம்.

வேலை முடிந்து, அயர்ந்து களைத்து வருகையில் ‘தினமும் வேலைக்குப் போய்த் தொலைக்கணுமே’ என்று இருக்கும் ஆதித்யனுக்கு. அப்போதெல்லாம் ‘சேர்ந்தார்ப் போல விடுப்பு கிடைக்காதா’ என ஏங்குவான். கிடைத்தால் அமைதியான ஏதேனும் ஒரு மூலைக்குப் போய் படம் வரையலாமென மனம் ஏங்கும். இப்போது அந்த உணர்வு அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவசரமாய் தவிர்க்க விரும்பி மறுபடி கரடியைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான் இந்தத் தவிர்ப்பு எதற்காக? கரடியை ஓயாமல் விரட்டுவது எது? தாய் தந்தயரைக் குறித்த நினைவுகளா? இழந்து போன காடு பற்றிய ஏக்கமா? சூழல் தப்பி வாழ நேர்ந்த அவலமா? தப்பிக்க வழியற்று பொறிக்குள் சிக்கிய விலங்காய் தோன்றியது. ‘எது பொறி?’ என்பதுதான் பிடிபடாத மாயம்! மறுபடியும் துருவக் கரடி கண்ணாடியின் குறுக்காக ஆழத்தில் நீந்தி இயந்திரத்தனமாய் படுகைகளின் மேலேறுவதைக் கூர்ந்து பார்த்தான். இப்போதும் பார்க்க ஆக்ரோஷமாகத்தான் தெரிந்தது. அதே சமயத்தில் யோசிக்கப் பாவமாய்ப் பட்டது ஆதித்யனுக்கு.

ஃ ஃ ஃ

பொடிக்கலரில் வட்டக் கழுத்தமைந்த டி-சர்ட்டும், அதன் மீது கரும் சாம்பலில் கையில்லாத மேலணியும் அணிந்திருந்த இந்திய வம்சாவளி இளைஞன், ஏற்ற இறக்கங்களுடன் இனுக்காவின் உயரம், எடை, உணவுப் பழக்கங்கள் என ஒயரற்ற மைக்கில் விளக்கிக் கொண்டிருந்தான். வட்ட வடிவத்தில் அமைந்த இரு பேட்சுகள் மேலணியுடன் இணைக்கப்பட்டிருந்தது. மேலணியிலிருந்த ஏராளமான பைகளில் அவன் விரல்கள் தன்னிச்சையாக உள் நுழைவதும் வெளிவருவதுமாக இருந்தது.

பின்புலத்தில் கரடியின் ஆர்பாட்டம் அதிகரித்து, பரபரப்படைந்தது. அது நீந்துவதை நிறுத்தி, தண்ணீரின் மீது தலையை ஆவலுடன் தூக்கி இயன்ற போதெல்லாம் கைகளை உயர்த்தியது. கூரையில் யாரோ நின்று கொண்டிருக்க வேண்டும். ஆதித்யன் அவர்களைப் பார்க்க முயன்றான். முடியவில்லை. நேர்மேலாக நின்று கொண்டிருக்க வேண்டும். பின்னர் பதைப்பும் பரிதாபமும் தொனிக்க அவசரமாய் கரையேறி, திட்டுபோல இருந்த இடத்திற்கு ஓடி ஏறியது. தலை அவர்கள் நின்றிருந்த திசையை விட்டகலவே இல்லை. மேலிருந்து மீன் துண்டங்கள் விழுந்தன. கரடி இப்போது ஒரு கழைக்கூத்தாடியின் பரிதாப நிலையை அடைந்தது. கோமாளி போல இரு கால்களில் நின்று கைகளால் சலாம் அடித்தது. வாய் திறந்து முன்புறம் நீண்டிருந்த இரு கோரைப் பற்கள் தெரிய, மூக்கும் கரிய இரு உதடுகளும் பரப்பரப்பாய் சுருங்கிக் கொண்டிருந்தன. தடையற்று ஜொள் வழிந்து கொண்டிருந்தது. இனுக்கா, அதன் கூரிய மோப்ப சக்தியை இப்படி விரயம் செய்து கொண்டிருந்தது. கூட்டம், கரடி இப்படி சாப்பாட்டுக்கு அலையும் செய்கையைப் பார்த்து வியந்தது. எட்டடி உயர ஆகிருதியான மிருகம் இப்படி மீன் துணுக்குகளுக்காக கூனிக் குறுகிக் கொண்டிருந்தது.

முற்றிலும் எதிர்பாராமல் நிகழ்ந்த, இந்த செய்கையை ‘ஆ’வென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன், அதிர்ச்சியும் மலைப்பும் அடைந்தான். கரடியைப் பார்ப்பதைத் தவிர்க்க திரும்பிய விழிகளில், விவரப்பலகை மறுபடியும் பட்டது. உண்மையில் வெண்ணிறம் அக்கரடியின் வெளித் தோற்றமே, முடிகளற்ற கரடி கருப்பான தோல் கொண்டதென போட்டிருந்தது. அவமானமும் வெட்கமும் தனக்கு ஏன் ஏற்பட்டதென அவனுக்குப் புரியவில்லை. கூட்டம் காட்சி முடிந்து போய் விட்டது. அற்ப ஜந்து கீழே இறைந்து கிடந்த துணுக்குகளை இன்னமும் முகர்ந்து முகர்ந்து தன்னுடைய நீலமும் ஊதாவும் கலந்த நீண்ட நாக்கால் நக்கிக் கொண்டிருந்தது. அதன் செய்கை தோரணை எல்லாம் ஒரு நாயைப் போலிருந்தது. அதன் வலிவும், திறனும், வேகமும், அலைக்கழிப்பும் உணவுக்கான கூழைக் கும்பிடா? நாற்றமெடுத்து அழுகிக் கிடக்கும் மீன் துண்டு அதன் வாழ்வை அலைக்கழித்து குறுக்குவதா? ஆழத்தில் ஏதோ ஒரு சங்கிலி உடைந்தது போல அவனது மார்புக் கூடு விரிந்து, விம்மி, காடுகளைத் தழுவி வந்த புத்திளம் காற்றை அள்ளி நுகர்ந்தது.

இனி எப்போதைக்குமே அங்கே பார்க்க ஏதுமில்லை என்று பட, அபிநயாவை அழைத்துக் கொண்டு போக எழுந்தான். கால்கள் தன்னியல்பாக மேட்டை நோக்கி நடை போட்டது. ‘அங்கே பாதை கிடையாது’ன்னு எதிர்பட்ட யாரோ சொன்னார். ‘தனியா பாதையில்லேன்னா போறதெல்லாமே வழிதான்!’ என ஆதித்யன் நினைத்துக் கொண்டான். மேட்டில் ஏறுகையில் அபிநயாவின் துள்ளல் ஆதித்யனிடமும் சேர்ந்து கொண்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *