ஒரு நடிகையின் கதை….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,058 
 

“ஹலோ சுகுமாரன், பூஜாஸ்ரீ பேசுறேன், என் கதையை படமாக்கனும், நீங்கதான் டைரக்டர், யாருகிட்டேயும் இதுபத்தி சொல்ல வேண்டாம், தேவையில்லாத குழப்பங்கள் வரலாம். இன்று மாலை 5 மணிக்கு என்னை வந்து பாருங்கள்,தேங்க்ஸ்,பை” துண்டிக்கப்பட்ட தொலைபேசியை கீழே வைக்காமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் சுகுமாரன்.

அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? தமிழகத்தின் நம்பர் 1 நடிகையாக,கனவுக்கன்னியாக திகழ்பவராயிற்றே பூஜாஸ்ரீ! அவர் கடித்த கொய்யாபழத்தை ஏலம்விட்டு தங்கள் அன்பை காண்பித்தார்களே தமிழக ரசிகர்கள்!!

இயக்குனராக வேண்டும் என்கிற என் பத்துவருட கனவு நிஜமாகப் போகிறதா!! பூரித்து நின்றான் உதவி இயக்குனராக பணிபுரியும் சுகுமாரன்.

அவர் கதையை படமாக்க வேண்டும் என்றாரே! எத்தனை ஹீரோக்களின் தூக்கம் கெடப்போகிறதோ தெரியவில்லை! எத்தனை நிஜங்கள் வெளியே தெரியப்போகிறதோ தெரியவில்லை!

பூஜாஸ்ரீ கவர்ச்சியில் மின்னும் நடிகைதான் என்றாலும் தைரியசாலி! பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது ரசிகன் ஒருவன் கிண்டல்செய்ததற்காக அவனை ஓட ஓட செருப்பால் அடித்து விரட்டியவர்!

அவர் கதை என்றால் கண்டிப்பாய் அந்த நான்கெழுத்து இளம் நடிகரை பற்றி சொல்லாமலா போய்விடுவார்! இருவரும் காதலித்தது
இந்தியாவே அறியுமே!

அவரைப் பற்றி ஒரு கிசு கிசு வந்தாலே போதும், பத்தே நிமிடங்களில் அந்த பத்திரிக்கை விற்றுத் தீர்க்குமே! அவருடைய கதையை படமாக எடுத்தால்!
தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கும் படமாக அல்லவா அமையும் இந்தப் படம்! சூப்பர் ஹிட்டாக படம் ஓடும்…நம்பர் 1 இயக்குனராக நான் வருவேன்!

கலர் கலராய் கனவுகள் விரிய சந்தோஷத்தில் குதித்தான் சுகுமாரன்.

மாலை 4.30 மணி.

பூஜாஸ்ரீயின் பங்களாவின் வரவேற்பரையில் காத்திருந்தான் சுகுமாரன்.

4.55க்கு படியிறங்கி வந்தது தமிழகத்தையே தன் விழியில் வைத்திருக்கும கனவுதேவதை.

“வணக்கம் மேடம்”

“வணக்கம், உட்காருங்க, மிஸ்டர். சுகுமாரன் எனக்கு சுத்தி வளைச்சு பேசறது
பிடிக்காது,நேரா விசயத்துக்கு வர்றேன். என் கதையை படமாக்கனும், இனிமேலும் எந்த ஒரு நடிகைக்கும்,பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது,தெரு நாய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு
காட்டணும், ரெண்டே மாசத்துல முடிச்சு ரிலீஸ் பண்ணனும், நீங்க சுறுசுறுப்பா இயங்குறத பலபேர் சொல்லி கேள்விபட்டிருக்கேன். அதனாலதான் உங்கள செலக்ட் பண்ணினேன், வாட் டூ யூ சே?” படபடவென்றுபேசினாள்.

“என்மேல நம்பிக்கை வச்சதுக்கு தேங்ஸ் மேடம், கண்டிப்பா சீக்கிரம் படத்தை முடிக்கலாம்..கதை டிஸ்கசன் எப்போ வச்சுக்கலாம் மேடம்”

“குட்,இப்படித்தான் வேகமா இருக்கணும், இப்பவே கதை சொல்கிறேன்,
தெருவில் சுற்றித்திரியற நாய்களால் சமீபத்துல பெங்களூருல ஒரு இளம்நடிகை கொல்லப்பட்டதை மையமா வெச்சு இந்தக் கதையை எழுதி இருக்கேன்…. தெருநாய்களை ஒழிப்பதை பத்திதான் கதை…என்று சொல்ல ஆரம்பித்தாள் பூஜாஸ்ரீ.

சிரிக்கவா அழவா என்று புரியாமல் சிலையாக கதைகேட்டுக்கொண்டிருந்தான் சுகுமாரன்.

ஒரு நடிகையின் கதை என்று பெரியதாய் விளம்பரம் கண்டு அடித்துப்பிடித்து அந்த பிரபல வாரப்பத்திரிக்கையை வாங்கி இந்தக் கதையை படித்துவிட்டு நானும் பத்து ரூபாய் செலவானதை எண்ணி சிரிக்கவா அழவா என்று புரியாமல் நிற்கிறேன்.

– சர்வேசனின் ‘நச்சென்று ஒரு கதை’ போட்டிக்கு எழுதப்பட்ட சிறுகதை
– Monday, December 3, 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *