சுப்புவின் சுறு சுறுப்பைக் கண்டு வியந்தார் விநோதன்.
வழக்கமாய் இங்குதான் லிஸ்ட்டைக் கொடுத்து ஸடேஷனரி பொருட்களை வாங்குவார்.
அங்கு பார்த்ததுதான் அவனை. ஏன்தம்பி இதைவிட அதிக சம்பளத்துல வேலை தர்றேன் வர்றியா? என்றார்.
சரி என்றான் சுப்பு. விநோதன் ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றின் மேனேஜர். பணம் வசூல் பண்ண, பணத்தை பேங்கில் கட்ட நேர்மையான சுறுசுறுப்பான பையன் தேவைப்பட்டான்.
சுப்புவைப் பார்த்ததுமே முடிவு செய்துவிட்டார். வேலை தருவது என்று. அடுத்த வாரம் பணியில் சேர்ந்து விடுவான். அந்த விஷயத்தை சொல்லிவிட்டு, ஸ்டேஷனரி வாங்கிப் போக வந்தார் விநோதன்.
நானூற்று ஐம்பது ரூபாய் பில். ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். மீதி முந்நூற்று ஐம்பது ரூபாயைக் கொடுத்தான் சுப்பு.
மீதிப் பணம் அதிகமா கொடுத்திருக்கியே தம்பி! என்றார்.
ஆமா சார்! முதலாளி இல்லை. எனக்கு உதவப்போகும் உங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை இது. வச்சுக்கங்க என்றான் சுப்பு.
அவன் மீது வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாமே நொறுங்கிச் சிதறியது.
சாரி தம்பி! அந்த வேலை உனக்கு கிடைக்காது என்ற விநோதன், அவனை திரும்பிப் பாராமல் நடந்தார்.
– தமழ்நாயகி (4-1-2012)