எண்ணங்கள் வித்தியாசமாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 4,268 
 

பதினைந்து வருடங்களுக்குள் மூன்று, நான்கு முறை நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்த நூல் தோப்பில் முஹம்மது மீரானின் “அஞ்சு வண்ணம் தெரு”

என் மனதின் ஓரத்தில் உறுத்தலாய் இருக்கும் கதாபாத்திரம் “மம்மதும்மா” அவள் தன்னை காப்பாற்றி கொள்ள போடும் வேஷமான, ஆங்கார கோபம், அதன் வெளிப்பாடு, அதே நேரத்தில் அவளின் உள்ளுக்குள் வெளி கிளம்பும் ஆசைகள், நிறைவேற முடியாமல் போகும் அமுங்கி போகும் நிலை.

(நாஞ்சில் நாட்டின் சிறு தெருவில் தறி நெசவு செய்யும் ஏழை முஸ்லீம்களின் கள்ளம் கபடமற்ற பாமர வாழ்வை நடைமுறை நிகழ்வுகளின் நிறை குறை, இவைகளை அவர்களின் மொழியிலேயே சொல்லும் பாங்கு)

அவரின் வாசகனாய் படைத்த மாரத்தாயி அதை ஒட்டிய கதை அவ்வளவுதான்.

அந்த தெருவிற்கு பெயர் என்னவோ “சாந்தலிங்க தெரு” அநேகமாக அந்த தெரு தோன்றி வளர்ந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் இருக்கலாம்.

இந்த நகரத்தின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். “வசதியை வைத்து” என்று நினைத்து கொள்ளாதீர்கள். வசதி குறைவான தெரு என்பதுதான் உண்மை.

“தெரு” தோன்றி பல வருடங்கள் கழித்து தோன்றிய தெருக்கள் எல்லாம் இன்று எல்லா வசதிகளையும் பெற்று அமோகமாக இருக்கும்போது இது தோன்றியபோது இருந்த சாக்கடை, தண்ணி பைப், பாதைகள், இவை எல்லாமே பெரும் இடைஞ்சலாகத்தான் போவோருக்கும் வருவோருக்கும் இருந்தது.

தெருக்களின் இரு பக்க வீடுகள் தெருவின் நிலைமையில்தான் இருந்தன. எல்லாமே பழைய பழைய வீடுகள், ஒரு சில தன் பற்களை (செங்கல்) காட்டியபடி நின்று கொண்டிருந்தன. வசிப்பவர்கள் கூட கிடைத்த வேலை செய்து வயிற்றை கழுவிக்கொண்டிருந்தவர்கள்தான்.

இவர்கள் மூலம் ஓட்டை பெற மட்டும் வந்து எட்டி பார்த்து விட்டு செல்லும் அரசியல்வாதிகள், அரசாங்கத்தை கைப்பற்றிய பின் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது

சரி நாம் கதைக்குள் வருவோம், அவளது பெயர் என்னவோ “மாரத்தாய்”. எப்பொழுது இங்கு வந்து சேர்ந்தாள் என்று இன்றைய இளந்தாரிகள் முதல் நடுத்தர வயது கொண்டவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த தெருவில் வீடுகள் பழையதாய் இருந்தாலும் திண்ணை கட்டிய வீடுகள்தான் குட்டி சுவர்களாய் ஆனாலும் உயிரை பிடித்து நின்று கொண்டிருந்தன. இவைகளில் ஏதோவொன்றில் ‘ஒண்டிக்கொண்டு’ அவள் குழந்தையையும் பத்து பனிரெண்டு வருசமாக வளர்த்து விட்டிருந்தாள்.

எல்லாம் சரி, அவள் எப்படி? என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அந்த தெருவே அவளது வாயை கண்டு பயந்துதான் இருந்தது. அந்த தெரு மட்டுமல்ல அக்கம் பக்கத்து தெருக்களில் எல்லாம் ” மாரத்தாய் தெரு” என்றுதான் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் என்றால் இவளது வாயின் நீளத்தை நீங்கள் கணித்து கொள்ளுங்கள்.

ஆளை பார்த்தால் அசந்து விடுவீர்கள். வாட்டசாட்டமாய், நடுத்தர வயதை சற்று தாண்டியிருக்கலாம், அவ்வளவுதான், இந்த தெருவிற்கு வந்தபோது இளமை குலுங்க, சிறு பெண்ணாய் குடித்தனம் செய்யத்தான் வந்திருந்தாள்.

போறாத நேரம் இவள் கணவன் முதல் குழந்தை பிறந்து நாலு வருசத்துக்குள் கண்ணை மூடிவிட்டான், விபத்து ஒன்றில்.

அதன் பின் மாரத்தாய் குடியிருந்த வீட்டை விட்டு வாடகை கொடுக்க முடியாமல் கை குழந்தையுடன் வெளியே வந்தவள், அக்கம் பக்கம் திண்ணையில் வாசம் செய்து, அவர்களால் சில நேரங்களில் விரட்டப்பட்டு, யாரையாவது பிடித்து ஒண்டி வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கிறாள்.

இப்பொழுது கூட பாருங்கள், யாரையோ உரக்க கத்தி கூப்பாடு போட்டு கொண்டிருக்கிறாள். அந்த தெருவில் இருந்த இரண்டு தெரு “பைப்புகளில்” இவளது இராஜ்யம்தான் கொடி கட்டி பறக்கும். யாரோ ஒருத்தி இவள் வைத்திருந்த குடத்தை நகர்த்தி வைத்து விட்டாளாம்.

“எவடி அவ சக்களத்தி” ஆரம்பித்த வசவுகள் அந்த தெருவை கதி கலங்க செய்து கொண்டிருந்தது.

இப்படியாக இவளது ஆர்ப்பாட்டங்கள் அளவுக்கு மீறி போய் கொண்டிருப்பதாக ஆண்கள் கூட்டம் ஒன்று கூடி இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று இதோ இவள் ஒண்டி கொண்டிருக்கும் திண்ணை வீட்டுக்காரனை சந்திக்க போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பெரிசு, பெரிசு, சத்தமாய் கூவுகிறான் வயசுக்காரன்.

திண்ணையை தாண்டி இருளாய் கிடக்கும் அந்த குகை போன்ற வீட்டுக்குள் இவர்களை பார்த்தபடிதான் அந்த பெரிசு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

யாருவே ? உட்கார்ந்தபடியே கூவுகிறார்.

வெளியே வாரும், உம்மோட பேசணும்,

வந்துட்டியில்ல, அங்கிருந்தே பேசும் எனக்கு காது கேக்குது.

கிழவனுக்கு குசும்பை பாரு, யோவ் பெரிசு இந்த மாரத்தாய, காலி பண்ண செய்யும், அதை சொல்லிட்டு போகத்தான் வந்திருக்கோம்.

யாரவே காலி பண்ண சொல்றீக,

அதுதான் உம்ம வீட்டு திண்ணையில உட்கார்ந்து இருக்காளே அவளைத்தான்.

அவ என்ன பண்ணா?

என்னவோய் இப்படி கேக்கறீரு? இந்த தெருவையே நாறடிச்சுகிட்டிருக்கா, ஒரு நல்லது கெட்டது இல்லை, வாயில வர்ற வார்த்தைய வீசுறா, பாவம் போக்கிடமில்லாதவன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆட்டம் காட்டறா, உடனே அவளை காலி பண்ணி தெருவை விட்டு போக சொல்லும்.

அவளை காலி பண்ண சொல்ல வந்திருக்கற கூட்டத்துல பொம்பளை ஆளுங்களையே காணலியே

என்னா பெரிசு நக்கலா, நாங்க வந்தா பத்தாதா? மனுச வாழறதா வேணாமா. காலி பண்ணுன்னு சொன்னா பண்ண வேண்டியதுதானே.

பெரிசு மெல்ல எழுந்து வெளியே வந்தார். கிழவி “ரேசனுக்கு” போயிருக்கிறாள். திண்ணையை ஒட்டி சின்ன அடுப்பு, தட்டு முட்டு சாமான், ஒரு தகர பெட்டி. இவைகள் மூலையில் இருந்தது. இரண்டு மூணு குடம். இவைகள் மாரத்தாய் சொத்து.

பெரிசு சிரித்தார், என்னவே இருக்குது இங்க, இதுகதான இருக்குது. இதுக இல்லாட்டி கூட அவ எங்கியாவது இருப்பா..

அது தெரியாது முதல்ல அவளை இங்கிருந்து அனுப்பும்.

பெரியவருக்கு சிரிப்பு அப்படியொரு சிரிப்பு, என்னா ஒரு அக்கறை இந்த மனுசனுகளுக்கு, போங்கலே போக்கத்தவனுங்களா..

இப்ப அவ இருக்கறதுனால உங்களுக்கு என்ன இடைஞ்சல்? அடுத்தவன் வீட்டுக்குள்ள போக முடியறதில்லை, இவ கண்டுபிடிச்சு தெருவுல நாறடிச்சுபுடறா, அப்படித்தாவே,

இங்க பாரு பெரிசு, நாங்க உன்னைய ஒண்ணு சொன்னா நீ வேற என்னவோ சொல்லிகிட்டிருக்க,

அவளை போக சொல்ல முடியாதுவே, இதுல நிக்கறவனுகள, இரண்டு மூணு பேரு அவ கிட்டே நூல் உட்டு பார்த்திருக்கீக, உண்மைதானடே, இல்லையின்னு சொல்ல சொல்லு.

ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள், இங்க பாரு பெரிசு, நீயா அனுப்பறயா, இல்லை நாங்களே அனுப்பவா.

முடிஞ்சா பாருங்கவே, உங்களுக்கெல்லாம் அவ இருக்கறது உங்க களவாணித்தனத்துக்கு இடைஞ்சலா இருக்குது,

அவ கத்தறவதான், எல்லா பொம்பளைக கூட தண்ணி புடிக்க சண்டை போடறவ, தெருவுல இராத்திரியெல்லாம் சத்தம் போட்டுட்டு இருக்கா, அவ்வளவுதானவே,

உண்மையை சொல்லுங்கடா, இந்த தெரு புள்ளைங்க எல்லாம் ஒழுங்கா வெளிய போயிட்டு வருதுன்னா இவ வாயிக்கு பயந்துதானடா, அதே மாதிரி நம்ம தெரு புள்ளைங்களை தொந்தரவு பண்ண அடுத்த தெருக்காரன் நினைக்கவே பயந்துக்கரான்னா இவளை பார்த்துதான. ஏன் நீங்களே இரண்டு மூணு முறை அவகிட்டே நூல் விட்டு நாறிப் போயித்தானே, அவளை காலி பண்ணறதுக்கு கூப்பாடு போடறீங்க.

அவ எதுக்கெட சண்டை போட்டு கத்திகிட்டு இருக்கா, அவளை காப்பாத்திக்

கறதுக்குத்தானடே, இல்லையின்னா உங்களை மாதிரி ஆளுங்க சும்மா இருப்பீங்களா?

இந்த தெரு பொம்பளைங்களுக்கு தெரியும், தன் வூட்டுக்காரன் அக்கம் பக்கம் பார்க்காம இருக்கான்னா, மாரத்தாயிக்கு பயந்துதான்னு, தெரு புள்ளைங்க, பசங்க ஒழுங்கா இருக்கான்னா இவ வாயிக்கு பயந்துங்கறதும் தெரியும்.

போங்கவே, அவங்கவங்க ஜோலிய பார்த்து போயிட்டே இருங்கடே.

அவர்களுக்குள் இப்பொழுது குழப்பமாய் ஆகிவிட்டது. யார் நமக்குள்ள அவகிட்டே நூல் விட்டு பார்த்திருப்பானுங்க? தங்களுக்குள் குசு குசுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தனர்.

எதிரில் மாரத்தாயி நடந்து வர தள்ளி நின்று வழி விட்டு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *