உபதேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 11,659 
 

டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து ரணமும் சீழுமான பகுதியைத் துடைத்துத் தொட்டியில் போட்டார். “நர்ஸ், ஊசி” என்றார். பக்கத்தில் ஸ்டெரிலைஸ் செய்த ஊசியை நர்ஸ் கொடுக்க, டாக்டர் கை மடமடவென்று சக்கிலியத் தையல் போட ஆரம்பித்தது.

கிளாஸ் மேஜையில் கிடத்தப்பட்டிருக்கிற வியாதியஸ்தன் சிறிது முனகினான்; பிரக்ஞை வருவதின் முன்னணி சமிக்ஞை!

“டாக்டர் வில்க்கின்ஸன், இன்னும் கொஞ்சம் குளோரபாரம்… ஒரு நிமிஷம் போதும்… ஹும் வெற்றிதான், என்று நினைக்கிறேன்” என்று பேசினில் ஊசியைப் போட்டுவிட்டு, கை உறைகளையும் முக மூடியையும் கழற்றி விட்டுக் கைகழுவ பேசினிடம் சென்றார் விசுவநாதன். “வியாதியஸ்தனுக்கு பிரக்ஞை வந்துவிட்டது; ஆனால், அளவு கடந்த முயற்சி. ஒரு மணி நேரம் கழித்துக் கொஞ்சம் குளுக்கோஸ் கொடுங்கள்…” என்று சொல்லிக்கொண்டே வாயில் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு, ஆப்பரேஷன் தியேட்டரை விட்டு, டாக்டர் வில்க்கின்ஸன் தொடர இறங்கி நடந்தார். இவரது நரைத் தலையில் சூரிய ஒளிப் பிரகாசம் விழுந்தது. இவர் முகத்திற்கு ஒரு விபரீதமான தேஜஸைக் கொடுத்தது.

விசுவநாத்துக்கு பல மேல்நாட்டுச் சர்வகலா சாலைகளின் பட்டம். நிறபேதம் பாராட்டும் பிரிட்டிஷ் வைத்தியக் கௌன்ஸில் இந்திய வைத்தியக் கௌன்சில்கள் இவரது அபாரமான கற்பனை முறைகளைக் கண்டு பிரமிக்கும். ரண சிகிச்சை என்றால் டாக்டர் விசுவநாத் என்று அர்த்தம். சென்னை வாசிகள் அகராதிக்கு மட்டுமல்ல. யூகோஸ்லாவிய இளவரசருக்கு வந்த விசித்திரமான வீக்கத்திற்குச் சிகிச்சை செய்த நிபுணர்களில் இவரும் ஒருவர். மண்டையில் வீக்கம். மற்றவர்கள் கத்தி எடுத்தால் பிராணஹானி ஏற்படுமோ என்று பயப்பட்டார்கள். ஏனென்றால், ஆப்பரேஷன் வெற்றியடைவது, அதைச் சீக்கிரம் செய்து முடிப்பதைப் பொறுத்தது. ஒரு வினாடி அதிகமானால் இளவரசருக்குப் பிரேதப் பெட்டியை ஆர்டர் செய்ய வேண்டியதுதான்… ஆனால், விசுவநாத் கைகள், வேலையை குறைந்த நேரத்திற்கும் பாதியளவிலேயே செய்து முடித்தன. இப்பொழுது, அவர் சௌகரியமாகப் பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருப்பதற்கு டாக்டர் விசுவநாத்தான் காரணம்.

சென்ற ஜெர்மன் சண்டையில் பேஸ்காம்புகளில் உழைத்ததினால், ஆப்பரேஷன் கத்தியை வைத்துக் கொண்டு யமன் வரவைத் தடுக்க, டாக்டர்கள் தப்பு வழி என்று சொல்லக்கூடிய முறைகளில் எல்லாம் பரிசீலனை செய்ய இவருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது.

டாக்டர் வில்க்கின்ஸன் இவரது சகா. அவரது அந்தரங்க அபிப்பிராயம் மற்ற இந்தியர்களைப் பற்றி என்னவாக இருந்தாலும், டாக்டர் விசுவநாத்திடம் கருப்பன் என்ற பிரக்ஞை யில்லாமலே பழகி வந்தார். நாஸ்திகத்தின் பேரில் இருவருக்கும் இருந்த அபார பக்தி இந்த நெருக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம். முப்பத்து முக்கோடி கருப்புத் தேவாதி தேவர்களும், மூன்றே மூன்று வெள்ளைத் தெய்வங்களும் இவர்களது கிண்டல்களை இரண்டு நாட்கள் கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்தால், இவர்கள் கண் எதிரிலேயே தூக்குப் போட்டுக் கொள்ளும். ரூபமற்ற தெய்வங்களுக்கு அப்படிப்பட்ட அடி!

அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு வரப்பட்டவன் ஒரு ஹடயோகி; விஷயங்களையும் கண்ணாடிச் சில்லுகளையும் கண் எதிரிலும் தின்று சாகாதவன். சித்தாந்தச் சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள் முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்.

அவன் ஏதோ திடீரென்று பிரக்ஞையற்றுக் கிடக்கிறான் என்று தகவல் கிடைத்ததும், ஆம்புலன்ஸ் காரை அனுப்பி சத்திரத்திலிருந்து அவனை எடுத்து வரச் செய்ததும் இவர்தான். ஹடயோகியின் உட்புறம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க இருவருக்கும் இருந்த ஆசை அளவில்லை. எக்ஸ்ரே பரீக்ஷையில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில் குத்திக் கொண்டிருந்ததே. ஹடயோகி ஏதோ முறை தப்பிச் செய்ததின் விளைவு.

சித்தாந்தச் சாமிக்கு இரண்டு ஸ்பெஷல் நர்ஸ்கள்; மூன்று மணி நேரத்திற்கு ஒரு தரம் டாக்டர் பரிசோதனை எல்லாம்…!

மறுநாட் காலையில் டாக்டர் வில்க்கின்ஸன் கேட்ட செய்திகள் அவரைத் திடுக்கிட வைத்தன. ஒன்று, ஆஸ்பத்திரியில் கிடத்தப்பட்டிருந்த சித்தாந்த சாமியைக் காணோம் என்பது. மற்றொன்று, டாக்டர் விசுவநாத் காஷாயம் வாங்கிக் கொண்டார் என்பது. முதல் விஷயத்தில் டாக்டர் வில்க்கின்ஸனுக்கு அவ்வளவு சிரத்தையில்லை; அது போலீஸ் கேஸ். டாக்டர் விசுவநாத்திற்கு மூளைக் கோளாறுதான் ஏற்பட்டிருக்குமென்று முதலில் நம்பி, அதற்கு வைத்தியம் செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

உடனே, தமது மோட்டார் காரில் டாக்டர் விசுவநாத் பங்களாவிற்குச் சென்றார். தலைமொட்டை; இடையில் ஒரு காவி வேஷ்டி; காலில் குப்பிப்பூண் பாதக்குறடு; இந்த அலங்காரத்தைக் கண்டதும் டாக்டர் வில்க்கின்ஸனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “எப்படியானாலும் இந்தியர்கள் இந்தியர்கள்தான்” என்று நினைத்துக் கொண்டார்.

“என்ன டாக்டர்! இது என்ன ஜோக்? என்றைக்கு உமது தெய்வங்கள் உம்மை பேட்டி கண்டன? தவடையில் கொடுத்து ஏன் அனுப்பவில்லை” என்று சிரித்தார்.

“வில்க்கின்ஸன்! சிரிக்காதே; இது ஒரு புதிய பரிசீலனை. எனது சித்தாந்தம் ஒரு முடிவு கட்டப் படவில்லை. பரிசீலனை செய்துதான் பார்க்க வேண்டும்” என்றார் டாக்டர் விசுவநாத். இவர்களிடத்தில், பாசறை ஆஸ்பத்திரி வாழ்க்கையில் தோன்றிய வெறி காணப்பட்டது.

டாக்டர் வில்க்கின்ஸனுக்கு ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. ‘வெல்! குட்லக்!’ என்று சொல்லிவிட்டுத்தான் திரும்ப முடிந்தது.

ஐந்து வருஷங்கள் கழித்து கைலாச பர்வத சிகரயாத்திரைக் கோஷ்டியில் டாக்டர் வில்க்கின்ஸனும் ஒருவராகச் சென்றார். அப்பொழுது, பிளான் போடப் பட்ட பாதையே புதிது. இதுவரை யாரும் அந்த வழியில் சென்றதில்லை. திபேத்திய சர்க்கார் கொஞ்சம் தில்லு முல்லு செய்ததால் யாத்திரைக் கோஷ்டித் தலைவர் கடைசி நேரத்தில் வகுத்தது. கோஷ்டியில் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், யாத்திரைக்காரர்கள் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் ஒத்துக்கொண்டனர்.

யாத்திரை ஆரம்பித்து இருபதாவது நாள். ஒன்றும் முளைக்காத உறைபனிப் பாலைவனத்தின் வழியாகச் செல்லுகின்றனர். மணல் பாதைதான். அருகில் அரை மைல் தூரத்தில் பனிச் சிகரம்.

கோஷ்டியின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த டாக்டர் வில்க்கின்ஸனுக்குச் சிந்தாந்தச் சாமியாரின் அடையாளங்களுடன் ஒரு மனிதன் பனிக்கட்டி உச்சியில் நிற்பதுபோலத் தெரிந்தது.

“அதோ பாருங்கள் அந்த மனிதனை! அவனை எனக்குத் தெரியும். அவன் ஒரு சாமியார்” என்று தனக்கு முன்னே செல்லுபவரிடம் சொன்னார்.

முன்னே சென்ற ஜேக் ஆல்பர்ட்ஸன், ஆல்ப்ஸ் கிளப் நிரந்தர அங்கத்தினர். தூரதிருஷ்டிக் கண்ணாடியைத் திருப்பி வைத்துப் பார்த்து, “மனிதன் மாதிரித் தான் தெரிகிறது… ஆனால்…” இவர் பேசி முடிக்குமுன் வில்க்கின்ஸன், பக்கத்திலிருந்த பாறையில் தாவி, பனிச் சிகரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஜேக் ஆல்பர்ட்ஸனும் துணிந்தவர்; அவரைப் பின்பற்ற முயற்சிக்கையில் கோஷ்டித் தலைவர் தடுத்து, “இருட்டி விட்டது; அங்கு போய்த் திரும்புவதென்றால் காம்ப்புக்குப் போய்ச் சேர முடியாது” என்றார். “அந்த மனிதன் தனியாகப் போகிறான்; அவனைச் சாக அனுப்புவதா?” என்று கோபித்துக் கொண்டார் ஆல்பர்ட்ஸன். அப்பொழுதுதான், வில்க்கின்ஸன் போனது கோஷ்டித் தலைவருக்குத் தெரிந்தது.

வேறு வழியின்றி, “அடையாளத்திற்குத் தீ வளர்த்து வைக்கிறோம்; சீக்கிரம் வாருங்கள்” என்று சொல்லிவிட்டுக் கோஷ்டியை அழைத்துச் சென்றார் தலைவர்.

ஜேக் ஆல்பர்ட்ஸனும் பாறைகளில் தாவித் தாவி வில்க்கின்ஸனைத் தொடர்ந்து சென்றார். பனிப் பாறை நெட்ட நெடுகலாக செங்குத்தாக இருந்ததால், அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் பொழுது உச்சி தெரியாது. இரண்டு பாறைகளின் இடுக்கு. அதைத் தாண்டி எதிரில் நீட்டிக்கொண்டிருக்கும் உறைபனிக் கட்டி மீது கால் வழுக்காது எட்டி வைத்து நின்று கொண்டால், அதன் வழியாகவே பனிச் சிகரத்தின் உச்சியை அடைய முடியும். ஜேக் ஆல்பர்ட்ஸனும், வில்க்கின்ஸனும் ஒருவர் பின் ஒருவராக இடுக்கு வழியாக நுழைந்தனர். அந்த இடுக்குக்கு அப்புறம் பாதாளம். ஒரே குதியில்தான் பனிப்பாறை மீது குதிக்க வேண்டும். வில்க்கின்ஸன் மூச்செடுத்துத் தாவினார். கால் வழுக்கப் பார்த்தது. நல்ல காலம், ஐஸ் கோடரியை ஊன்றிக் கொண்டார். “நாரோ சேவ்” என்று சொல்லிக்கொண்டு, (மயிரிழை தவறினால்… என்று அர்த்தம்.)

ஜேக் பின் தொடர்ந்தார்.

இருவரும் பனித்தளத்தின் மீது வளைந்து செல்லும் பாதையில் நடக்கலாயினர். பனிக்கட்டிக்கிடையில் செங்குத்தாகக் கருங்கல் லிங்கம் போல் செதுக்கியிருந்தது. அதன் தலையில் காஷாய வஸ்திர மூட்டை!

ஜேக், அதை எடுத்துப் பிரிக்கையில், “வில்க்கின்ஸன்!” என்று கூறினார்.

வில்க்கின்ஸன் திரும்பிப் பார்த்தார். செங்குத்தாக சுவர் போல் நிற்கும் உறை பனிக்கட்டிக்குள் மனித உருவம்; டாக்டர் விசுவநாத்! பத்மாசனமிட்டு நிஷ்டையில் உட்கார்ந்த பாவனையில்.

“அய்யோ பாவம், இவருக்கு இந்த முடிவா? பெரிய டாக்டர்,” என்று தலையைக் குனிந்து வணங்கினார்.

பின்பு மூட்டையைப் பிரித்தார். அதில் ஒரு தோல்ப் பர்ஸ், டைரி, அதைத் திறந்ததும்…

“நண்பன் வில்க்கின்ஸனுக்கு,

நீ இங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். நான் சாகவில்லை; நீ என்னை எந்த நிலையில் பார்த்தாலும் சாகவில்லை என்று நம்பு. நமது உயிர் நூல் சாஸ்திரங்களைக் கிழித்தெறிந்து விட்டு, வேறு மாதிரியாக எழுத வேண்டும். அஸ்திவாரமே தப்பு.

இப்பொழுது வெளியில் சொல்லாதே. நீ பயித்தியக்காரனாக்கப்படுவாய்… அந்தச் சாமியார் லேசான ஆசாமியல்ல…” என்றிருந்தது. மூடையைக் கட்டி பழையபடி வைத்துவிட்டு, “ஜேக், திரும்புவோமா?” என்றார் டாக்டர் வில்க்கின்ஸன்.

“பின், வேறு என்ன செய்வது?” என்றார் ஜேக்.

– ஜோதி, ஜுன் – 1938

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *