இறந்த காலத்தின் ஓசைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 5,982 
 

1
நான் பேசுகிறேன்

“சன்னாசி! சன்னாசி! வௌங் குதா இல்லயா? அந்தக் கதவ சாத்துடி. கண்ணு கூசுது. தொறந்து போட்டினா அப் படியே போயிருவியே. அத சாத்தி வைப் போம்னு யோசன இருக்காதுடி ஒனக்கு”

“சன்னாசி! சன்னாசி! எங்க போயி தொலைஞ்சிட்டா? பெரிய பங்களாலெ இருக்கற மாதிரிதான். எங்க கொள்ளப் பக்கம் போயிட்டியா? இந்தக் கதவ சாத்துடி வெளிச்சம் இப்படி அடிக்குது”

பிளாஸ்டிக் கயிற்று நாற்காலி அவ்வளவு இதமாக இல்லைதான். கால் களை நீட்டிக் கொள்ள மட்டும் நாற்காலி யின் பிட்டத்திலிருந்து இன்னொரு சின்ன வாங்கை தேவைப்படும் போது உருவிக் கொள்ளலாம். அந்தக் குட்டி பிளாஸ்டிக் வாங்கின் கால்களைச் சரியாக நிமிர்த்தி வைக்கவில்லையென்றால், அதுவும் அடிக் கடி சரிந்து கொள்ளும். டமாரென்று கால் கள் தரையில் ஓங்கி அடித்துக் கொள்ளும் போது பாதி உயிர் சன்னாசி அலட்சியமாக அலட்டிக் கொண்டிருக்கும் கொள்ளப் பக்கமாகப் போய்விடும் போல.

“சன்னாசி! என்னாடி நாக்காலி இது? கால் ஒழுங்கா நிக்க மாட்டுது”

பழைய நாளிதழ்களைச் சேகரித்து ஓர் உப்பியச் சுருளாகச் செய்து கொண் டேன். இந்த நாளிதழ்களைத் தேடி எடுக் கவே அரை மணி நேரம் ஆனது. பின்கதவின் ஓரத்திலுள்ள எலி பொந்திலிருந்து கொஞ் சம் நாளிதழ் துண்டுகளையும் தேடி எடுக்க வேண்டியதாகப் போயிற்று. வீட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் மூக்கை ஒரு கையால் அடைத்துக் கொண்டுதான் போய் பழகியிருந்தேன். எங்கிருந்தாவது கருப் பெண்ணைக் கறைகள் வீட்டின் எலி பொந் திலிருந்து வெளியேறி வழிந்தோடிக் கொண் டிருப்பது போல இருக்கும்.

“சன்னாசி! சுருக்கா ஒடியா.. வீட்டுக்குள்ள கருப்பெண்ணெ ஊத்துதுடி,
நாறி போச்சு போ”.

மீண்டும் கயிற்று நாற்காலியில் நாளிதழ் சுருளுடன் அமர்ந்திருந்தேன். சற்று முன்பு எந்தப் பொந்திலிருந்து கருப்பெண் ணை வழிந்தோடியது என்று குழப்பமாக இருந்தது. கையில் எலிகளின் எச்சில்பட்ட நாளிதழ் சுருள்கள் உப்பிக் கொண்டு ஏதாவது ஒரு பொந்தை அடைப்பதற்குத் தயாராக கிடந்தன.

“சன்னாசி! வந்து இங்க குனிஞ்சி பாருடியம்மா! எந்தப் பொந்திலேந்து எலி வருதுனே தெரில, அது என்னா எலியா இல்ல கருப்பெண்ணையா? சரியா தெரிலடி… இங்குட்டு வந்து பாரேன்.

2
சன்னாசி பேசினாள்

“யேங்க! அந்த நாக்காலி காலு தான் அப்படி உழுந்து தொலையுத. அத யேன் வெளிய நீட்டுறிங்க? கால் வலிச்சா எடுத்து மடக்கி வச்சுக்குங்க. இல்லன்னா தரைதான் நல்லா சிலுசிலுனு இருக்கே. அப்படியெ படுத்துச் சுருண்டுகிட்டா நல்லா தூக்கம் வரப்போது. அத உட்டுட்டு”…

சன்னாசி கிழவி ஜன்னல் கதவு களைத் திறந்துவிட்டாள். அவளுக்கு வெளிச்சம் என்றால் விருப்பம். வீட்டிலிருக்கும் இரண்டு ஜன்னல்களும் வழக்கமான காலை வெயிலையும் மாலையின் மஞ்சள் வெயிலையும் வீட்டின் நடுப்பகுதிவரை அனுமதித்திருக்கும்.

“யேங்க. யாரோ வந்துருக்காங்க. என்னய்யா சைக்கிள் டீயூப்பா?”

“யேங்க! சைக்கிள் டீயூப்பு வேணு மாம். போய் எடுத்துக் கொடுங்க. என் னப்பா, இங்கனயே செய்யனும்னு தோனலயா? வாங்கிட்டுப் போய் சொந்தமா செஞ்சுக்குவிங்களோ?”

சன்னாசி பின்கதவைத் திறந்து கிணற்றுப் பக்கமாகச் சென்றாள். மாவு டின்னைதான் கிணற்றுக் கயிற்றில் கட்டியி ருந்தாள். அதையெடுத்துக் கிணற்றின் அடை யாளத்தை நோக்கி தூக்கி எறிந்தாள். மேலே தெரிந்த அவளுடைய சுருங்கிய தேகத்தின் நிழல் கிணற்று நீரில் தெரிய வில்லைதான். அந்த டின்னை கிணற்று நீரில் சாவகாசமாக அலசிவிட்டு, கயிற்றைப் பலமாக மேலே இழுத்தாள்.

அகண்ட தக்கரில் அந்த நீரை நான்கு ஐந்து முறை ஊற்றி நிரப்பிவிட்டுக் குளிப்பதற்குத் தயாராகினாள். முன்வாசலில் சைக்கிள் சத்தங்களும் இரும்பு சத்தங்களும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தன. பின்வாசல் கதவுக் கொஞ்சம் குதர்க்க மானதுதான். எத்தனைமுறை சாத்தி வைத் தாலும் காற்றின் சிறு சலனத்திற்கே திறந்து கொள்ளும். பழைய சட்டைத் துணியைக் கதவின் அடிப்பாகத்தில் சொருகிவிட்டு, கிணற்றோரம் மறைந்து கொண்டு கிழவி குளிக்கத் தொடங்கும் நேரம் பார்த்து, யாரோ அழைக்கத் தொடங்குகிறார்கள். கிழவி பதற்றத்தோடு எழுந்து ஓடுகிறாள்.

3
நான் பேசுகிறேன்

“சன்னாசி! “சன்னாசி! அடியே. இந்தக் கதவெ கொஞ்சம் சாத்துடி! வெளிச்சம் கண்ண கூசுது.”

பிளாஸ்டிக் கயிற்று நாற்காலி கடைசி மகன் வாங்கிப் போட்டதுதான். இரண்டு வருடத்திற்கு முன்பு எப்பொழுதோ வந்தான். ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு பொழுதில்தான் குடும்பத்தோடு வந்து தொலைந்தான்.

இங்கிருந்த மூன்று மணி நேரத்தில், என் பாக்கெட்டில் எதையோ திணிப்பதும் வீட்டின் வசதிகளை விமர்சிப்பதும் என் நிலை குறித்து ஆசுவாசமடையாமல் முரண்பட்டுக் கொள்வதுமாக இருந்தான். சிறிது நேரத்தில் இந்தப் பிளாஸ்டிக் கயிற்று நாற்காலியையும் காரிலிருந்து எடுத்துப் போட்டான். பிறகு காணாமல் போய்விட்டான். இது வருவதற்கு முன்? கதவோரம் படுத்துக் கிடக்கும் சன்னாசியின் பலகை வாங்குதான். “அடியே சன்னாசி வௌங்குதா இல்லயா? காலெல்லாம் கொடையுதுடி. அந்த வௌக்கெண்ணையெ சுட வச்சி எடுத்துட்டு வானு சொல்றேன் காதுலெ வாங்கிக்க மாட்டுறெ? கெணத்துகிட்ட போயிட்டியா? அப்படியெ உள்ள உழுந்திறாதெ”

கிணற்றடியிலிருந்து எந்தச் சலனமும் இல்லை தான். அல்லது காலங்களின் சலனங்களையெல்லாம் கடந்து விட்ட ஒரு மகா பொழுதில்தான் அமர்ந்திருக்கி றேனா? இப்பொழுது கிணற்றுக் கயிறு அசைந்து கொண்டிருக்கிறது. மதிய வெயில் வீட்டின் பாதிவரை வளர்ந்திருந்தது.

“பாத்துப்பா, வௌக்குப் போச்சுனா ராத்திரில எங்காச்சம் போய் மோதிக்காதே. நல்ல பல்ப்பா போட்டுக்க”.

“யேங்க அந்த மரத்துல மாட்டி வச்சிருக்கிங்களெ அந்த டியூப்லாம் மறுபடியும் பாய்க்கப் போறீங்களா?”

“இந்த நெல்லிக்கா மரம் என்னா பாவம் பண்ணுச்சோ? உங்ககிட்ட வந்து மாட்டிகிச்சு. கருக்க வச்சிட்டிங்க”.

உள்ளே நுழைந்தவுடன் வாங்கில் துணிகளைக் குவித்துவிட்டு சாமி விளக்குப் பற்ற வைக்க நடுத் தடுப்புக்குப் பக்கத்திலுள்ள சாமி மேடை பக்கமாக நடந்து கொண்டிருந்தாள் கிழவி. பின்கதவை நிரந்தரமாக அடைத்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. இது நடந்து கொண்டிருப்பது வெகு சமீபத்தில்தான். எழுந்து நின்று அதைத் தடுக்க முடியாத இயலாமை. பிளாஸ்டிக் கயிற்று நாற்காலி அவ்வளவு இதமாக இல்லைதான்.

“சன்னாசி, முன்னால கதவையாச்சும் அடைச்சி வையுடி! பாக்கவெ முடியில. வெளிச்சம்! கண்ணுலாம் கூசுது”

வெளியில் யாரோ இருளைத் தவிர்ப்பதற்காகக் கைலாம்பின் ஒளியைப் பாய்ச்சியபடி நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதுவும் மங்கலாகத்தான்.

4
சன்னாசி பேசினாள்

“யேங்க! பக்கத்து வீட்டுல கொஞ்சம் எண்ணெ வாங்கிட்டு வந்துர்றேன்.. திடிர்னு தீந்து போச்சு, சமைச்சி முடிக்கல”.

ஒரே நிமிடத்தில் பக்கத்து வீட்டு ஆச்சி மகள் குசுனிக் கதவோரம் போய் நின்றுவிடலாம்தான். தளர்ந்த நடை. வெளுத்தக் கைலி கால் முட்டிக்கும் அடிப் பாதத்திற்கும் நடுவில் ஒழுங்கில்லாமல் சுருங்கிக் கிடக்கும். உள்ளே அணிந்திருக்கும் நீல நிற உள் பாவாடை கைலிக்குக் கீழாக இறங்கியிருப்பதும் சன்னாசிக்கு அசௌகரிமாக இல்லைதான். மீண்டும் வரும் போது கையில் வைத்திருக்கும் சிவப்பு மூடியில் ஆச்சி மகள் வீட்டு எண்ணை நிரம்பியிருக்கும்.

“யேங்க, முன்னுக்கு வச்சிருக்கிங்களெ அந்த டப்பாலேந்து கருப்பெண்ணைலாம் வீட்டுக்குள்ள வந்துருது. எனக்கு இதே பாடுதானா? எத்தன தடவதான் தொடைச்சி வைக்கறது, இந்த 60 வயசுலயும் கொஞ்சம் நிம்மதி இல்லனா எப்படி? அத அப்படி மரத்துக்கிட்ட ஓரமா போட்டு உங்க வேலலாம் முடிஞ்சோன”

உள்ளே நுழைந்ததும் அடுப்படியில் சுழன்று கொண்டிருப்பாள். இருமலும் ஊதாங்குழலின் ஓசையும் ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.

“இந்தப் பெரியவரு தொல்ல தாங்கலங்க, அட்ட காசமா இருக்கு”

“பெரியவருனு சொன்னேனெ முழிக்கிறிங்க. அதான் பெரியவருங்க! எலிதான். அத பேர சொல்லிப்புட்டா அவ்ளதான். நம்ப துணிமணிலாம் கடிச்சிக் கொதறி வச்சிரும். அங்குட்டு ரெண்டு எலி பொந்து இருக்கு. குசுனில ஒரு பொந்து இருக்குங்க. அத கொஞ்சம் அடைச்சிருங்க”

பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி சேகரித்து வைத் திருக்கும் பழைய நாளிதழ்களைக் கண்ணில் படும்படி எடுத்து வைத்துவிட்டு கொடிக் கம்பியில் உலர்ந்து காற்றில் சலனித்துக் கொண்டிருந்த துணிகளை எடுத்து வைப்பதற்கு வெளியே ஓடினாள். காற்று பலமாகத்தான் வீசிக் கொண்டிருந்தது. எதிரிலே செட்டி தாத்தாவின் மகள்கள் குஞ்சுமணி வீட்டு விளையாட்டுத் திடலிலிருந்து ஓடி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிழவி. காற்றில் அவர்களுடைய பாவாடைகள் கலைந்து மேலே பறந்து கொண்டிருந்தன. “கசுமாலம் பிடிச்சதுங்க. 10, 11 வயசாவுது. உள்ளுக்கு ஏதாச்சம் போட்டுத் தொலையுதுங்களானு பாரு. வெக்கங்கெட்டதுங்க. தோல உறிச்சிதான் இதுலாம் கத்துத் தரணும் போல”.

துணிகளையெல்லாம் தோளில் சாத்திக் கொண்டு உள்ளே நுழைவதற்கு முன்பு மாலை வெளுத்துக் கொண்டிருக்கும். மூன்றாம் லயத்து மாரியம்மன் கோவிலின் மணியோசை ஒலிக்கத் துவங்கும். “என்னப்பா! போன வாரம்தான் சைக்கிள் ரிங் மாத்திட்டுப் போன. இப்ப என்னா மறுபடியும்?”

5
நான் பேசுகிறேன்

நெல்லிக்காய் மரம் தூரமாகத் தெரிவது போல வெளியில் ஒரு காட்சி. கதவை யார் திறந்தார் என்று மறதியாக இருந்தது. ஆனால் திறக்கும் போது யாரோ கதவோரம் நின்று கொண்டிருந்ததும் அதையும் கடந்து அகலமான ஓர் ஒளி உள்ளே நுழைந்து கொண்டிருந்ததையும் நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது.

“சன்னாசி! யாரோ வந்துருக்காங்க பாரு. யாருப்பா வேணும்?”

“அடியே சன்னாசி! இந்தக் கதவெ சாத்தச் சொல்லுடி, கண்ணுலாம் கூசுது. யாருப்பா வேணும்?”

யாருமே இல்லாததைப் போலத்தான் தோன்று கிறது. நெல்லிக்காய் மரம் இப்பொழுது மிக நெருக்கத்தில் தெரிந்தது. அது மரத்தின் நிழலாகக் கூட இருக்கலாம். சூன்யமான வெளியின் அசைவுகள், அவ்வளவு நுணுக் கமாக எதையும் அனுமானிக்க முடியவில்லை.

“சன்னாசி! இந்த நெல்லிக்கா மரத்தெ என்னா பண்ணே? டீயூப்புலாம் மாட்டுறேனு வெட்டி சாச்சிட்டியா? இங்க வந்து பாரு! உன்ன தேடித்தான் யாரோ வந்துருக்காங்க போல”

சந்தேகமாகத்தான் இருந்தது. கதவோரம் நின்று கொண்டிருப்பது நெல்லிக்காய் மரத்தைப் போலத்தான் தோன்றியது. தலைவிரி கோலமாய் கைகளில் பழைய சைக்கிள் டீயூப்புகளைச் சுமந்து “சன்னாசி! சுருக்கா ஓடியாடி… கண்ணுலாம் மங்குது.. அடியெ என்னாடி பாவம் செஞ்சோம்? எதுக்கு இந்தப் பாவ மூட்டெ?”

யாரோ அந்த நெல்லிக்காய் மரத்தையும் கடந்து உள்ளே ஓடி வருவது தெரிந்தது. அந்த உருவத்தில் எந்த ஒளியும் ஊடுருவவில்லைதான். வெளியின் நிழலாக யாரோ வந்து பக்கத்தில் நின்று கொண்டு முகத்தைப் பாசாங்குத்தனமாக பார்ப்பது போல தோன்றுகிறது. பிறகு ஏதோ சில கேள்விகள். “எனக்கொன்னுமில்லெ. நீ யாரு? அடியே சன்னாசி! யாரோ வந்துருக்காங்க பாரு”.

6
சன்னாசி பேசினாள்

“யேங்க! யேன் எப்பப் பாத்தாலும் இந்தப் பின்னால கதவ அடைச்சியெ வைக்க சொல்றீங்க? எனக்குக் கடுப்பா இருக்கு. சும்மா சும்மா சாத்திகிட்டும் தொறந்துகிட்டும்”.

கதவின் இடுக்கில் சொருகியிருந்த பழைய நாளிதழ்களை எடுத்து வெளியில் போட்டாள். இவ்வளவு நாள் பின்கதவின் ஓரமாக இருந்த அம்மிக் கல் இன்றுதான் வீட்டின் உட்புறமாக மாற்றப்பட்டிருந்தது.

“இந்த மேட்டு வீட்டுப் பையனுங்களாம் தீம்பா ருக்கு வெளையாட போயி அதுல ஒரு பையன் நம்ப 5ஆம் நம்பர் ஆத்துல உழுந்து செத்துட்டானாங்க.. பாவம் அந்த மாரிமுத்துக் கிழவிக்கு இருந்ததெ ஒரே பேரந்தான்”.

வீட்டின் நடுத்தடுப்புக்குப் பக்கத்தில் இருந்த சாமி மேடை பல நாட்களாக சுத்தம் செய்யப்படாததை உணர்ந்ததும், சன்னாசியின் புலம்பல் உச்சத்தில் போய் நின்றது. அந்த நடுத்தடுப்புக்கு எதிர்புறத்திலிருந்த அறையில் சைக்கிள் சம்பந்தப்பட்ட உபரிப் பாகங்கள், சைக்கிள் டீயூப்புகள், சைக்கிள் சக்கரங்கள் பிறகு தேவையான பழுதுப் பார்க்கும் உபகரணங்கள் என்று நெருக்கிக் கொண்டு கிடந்ததை அன்றுதான் வெறுப்போடு பார்ப்பது போல பார்த்துவிட்டு அரற்றிக் கொண்டி ருந்தாள்.

“இருந்ததே இந்த ஒரு ரூம்புதான். அதயும் இப்படி நாசம் பண்ணிட்டிங்க. என்னதான் செய்றீங் களோ. சொன்னா என்னா கேக்கறிங்களா?”

அந்த அறையின் இருட்டு அவளுக்கு பயத்தை ஏற் படுத்தியிருக்கலாம்தான். மழை பெய்யத் தொடங்கியதும் பின்கதவை அடைத்துவிட்டு, நடுத்தடுப்பில் ஒழுகத் தொடங்கும் மழைச் சாரலைச் சேகரிப்பதற்காக வாளிகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். அன்றைய மழை செம்மண் வாசனைகளைக் கொஞ்சம் அதிகமாகத்தான் சுமந்திருந்தது.

“யேங்க எவனோ வரான் பாருங்க சைக்கிளை தள்ளிக்கிட்டு. மழ நேரத்துலயும் ஊர் மேஞ்சிக்கிட்டுதான் இருக்கானுங்க”.

“பக்கத்துல ஆச்சி மகளுக்கு ஒரே வயித்து வலியாம்… பாவம் பிள்ள கெடந்துகிட்டுத் துடிக்குதுங்க. நேத்து ராத்திரிலாம் ஒரே சத்தம்தான்”.

கிழவி ஜன்னல் கதவுகளை இலேசாகத் திறந்து பக்கத்து வீட்டைப் பார்த்தாள். மழை பெய்துவிட்டு ஓய்வதற்கு தயாராகும் ஓர் இடைவெளி. ஜன்னல் கம்பிகளின் நீர்த்துளிகள் உயிர் பெற்று வீடு முழுவதும் பறக்கத் தொடங்கின. மெல்லிய ஈரக் காற்று. அதையும் கடந்து ஆச்சி மகளின் வயிற்று வலி பிதற்றல். முன்கதவைத் திறந்து கொண்டு கிழவி ஓடுகிறாள் ஆச்சி வீட்டுப் பக்கமாக.

7
நான் பேசுகிறேன்

“சன்னாசி! சன்னாசி! பெரியவரு காலெ சொரண்டுறாரு. ஓடியாடி சீக்கிரம்”.

“என்னாடி முழிக்கறயா அங்கன கதவான்டெ நின்னுகிட்டு? அதான் எலிய பெரியவருனுதானெ சொல்லணும்?”

கால்களை உதறிவிட்டுப் பிளாஸ்டிக் நாற்காலி யின் விளிம்பில் வைத்துக் கொண்டே பின்கதவை நன்றாகப் பார்க்க முடிந்தது. நிழலாக ஏதோ ஒன்று அல்லது ஏதோ ஒன்றாக ஒரு நிழல். “இந்தக் கதவெலாம் சாத்தி வையுன்னா, கேக்கவே மாட்டுறெ”.

முன்வாசல் கதவோரம் யாரோ வந்து அமர்வது தெரிகிறது. கைகளை நீட்டி எதையோ கேட்கும்படியான முகத் தோற்றம். அந்த முகத்தை எப்பொழுதோ பார்த்துச் சம்பாஷனை செய்ததாக ஞாபகம்.

“சன்னாசி! கதவுகிட்ட உக்காந்துருக்காங்க. யாருனு பாரு”.

“யாரு தர்மலிங்கம் அண்ணனா? அந்த வாங்குக் குக் கீழ பொட்டி இருக்கும் பாருங்க. பெட்ரோல் போத் தல்லாம் காலியா ஆச்சுண்ணே”.

பலகை வாங்கு அந்த இடத்தில் இருப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. மீண்டும் கண்களைச்சிரமப்பட்டு நகர்த்தி கதவோரம் பார்க்கையில், நெல்லிக்காய் மரத்திலிருந்து யாரோ சைக்கிள் டீயூப்புகளை சேகரித்து எறிந்து கொண்டிருப்பது போல தெரிகிறது. கொஞ்சம் மஞ்சள் இலைகள் திட்டு திட்டாக வாசல் வெளியில் சிதறிக் கிடப்பதும் தெரிகிறது.

“டீயூப்பு டீயூப்புனு உயிர வாங்கறானுங்க. என்னா லாபம் கெடைக்குது இதுலெ? சன்னாசி! சன்னாசி! இந்த எலி பொந்தையெல்லாம் அடைக்கணும், அந்தக் கதவுக்கிட்ட பழைய பேப்பருலாம் இருக்கும், எடுத்துக்கிட்டு வா”.

இந்தப் பிளாஸ்டிக் நாற்காலி அவ்வளவு இதமாக இல்லதான். யாரோ முன்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து நெருங்குகிறார்கள். கையில் சாப் பாட்டுத் தட்டு.

“எனக்கு ஒன்னுமில்ல. சன்னாசி! யாரோ வந்துருக்காங்க பாரு”.

8
சன்னாசி பேசினாள்

“யேங்க ஒடம்பு இப்படிச் சோர்ந்து போவுது… செத்துருவனா?”

“ஆச்சி மகக்கிட்ட ஏதோ நாட்டு வைத்தியம் இருக்காமெ, அங்க போயி பார்க்கச் சொல்றாங்க. போலாமா? முடிலைங்க. தொண்டலாம் காஞ்சி போவுது”.

“யேங்க! யேங்க! என்னாங்க ஒன்னுமெ பேச மாட்டுறீங்க? எழுந்திரிக்கக் கூட முடிலைங்க. கண்ணு லாம் இருட்டிக்கிட்டுப் போதுங்க. மயக்கமாவெ இருக்கு”.

“யேங்க! அந்தக் காலி ரூம்புலெ யாருங்க அது? நல்லா தெரியுது. யாரோ ஒளிஞ்சிருக்காங்க. போய் பாருங்க. அம்மா! எழுந்திரிக்கக்கூட முடிலைங்க”.

“யாருங்க அது? யாரோ வந்து நிக்கறாங்க வாசல் கிட்ட. யேன் இப்படி இரும்பி சாவருன்னு கேக்கறாங்க. என்னாங்க சொல்றது?”.

“என்னாங்க! மண்டைலாம் சுத்துதுங்க. முடிலெ. எங்க அக்கா வந்துருக்காங்க போல”.

“யேங்க! நம்ப பிள்ளைங்களெல்லாம் ஒரு எட்டு வந்துட்டுப் போவ சொல்லுங்க.. முடிலைங்க”.

“யேங்க, சந்துரு வந்துருக்கான் போல.. வாசல்ல பாருங்க. அவன் மாதிரிதான் இருக்கு.. வாயா”.

” யேங்க! நெல்லிக்காய் மரம் யேன் அழுதுகிட்டு இருக்கு? ஐயோ பாவமா இருக்குங்க”.

அன்று இரவு வீட்டிலிருந்த ஒரேயொரு அறையில் யாரோ நடமாடிக் கொண்டிருப்பது போன்ற பிரமையில் படுத்தவள்தான் கிழவி. அசந்து போய்விட்டாள். மறுநாள் அவள் விழித்ததும் உலகம் அவளுக்காக விழித்துக் கொள்ள மறந்திருந்தது.

“யேங்க.. யேங்க! யேன் இருட்டாவெ இருக்குங்க?”

9
அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

“அப்பா! அப்பா! ஏஞ்சிருங்கெ. கவிதா, அந்தக் கொவளைல தண்ணீய எடுத்துட்டு வா”.

“எங்கெ என்னா இருக்குனு ஒன்னுமெ தெரியமாட்டுது, எல்லாம் இருட்டாவெ இருக்கு. இதுல எங்கேந்து போய் தண்ணீய தேடுறது”.

அவர்கள் ஓட்டி வந்திருந்த சொகுசு கார் அந்த இடத்திற்கு அவர்களைப் போலவே தொடர்பில்லாமல் நின்றிருந்தது. மூத்த மகன் கணேசனும் அவள் மனைவி கவிதாவும்தான். சாத்தியிருந்த வீட்டுக் கதவைத் திறக்கும் போதே அவர்களுக்குச் சந்தேகம்தான்.

“எப்படிங்க? இந்த மாதிரி. எத்தன தடவ கூப் பிட்டு பாத்தாச்சு. யேன் இந்தப் பிடிவாதம் இவருக்கு?”

“நம்ப என்னா பண்ண முடியும்? அதுக்குனு இவருக்கூட இங்கயா வந்து இருக்க முடியும்? இவரு நடைமுறைக்கு சம்பந்தம் இல்லாத மனுசன். என்னா பண்றது?”

“அப்பா! அப்பா! சாப்ட்டிங்களா? ஆச்சி மக என்னா கொடுத்தா? நீ பாத்துக்கிட்டு இரு. நான் போய் ஆச்சி மகக் கிட்டெ மூனு மாசம் சாப்பாட்டுக் காசு கொடுத்துட்டு வந்துர்றேன். அப்புறம் அவளும் தெரியாத மாதிரி இருந்தற போறா”.

வெளியில் வந்து நின்ற போது நெல்லிக்காய் மரம் இருந்த இடம் காலியாகக் கிடந்ததைப் பார்த்தான்.

“போன தடவெ வந்தப்பெ மரம் இருந்துச்சு, அதயும் ஆளக் காணம்?”

“வெட்டிட்டாங்க, அத வெட்டின பொறவுதான் தாத்தா ரொம்பவே பொலம்ப ஆரம்பிச்சிட்டாருப்பா. இப்பத்தான் வந்தியா? பாவம் மனுசன், பாத்ரூம்புக்கு மட்டும் எப்படியோ கஸ்டப்பட்டு எழுந்து தடுமாறியாவது போயிடுறாரு, மத்தப்படி நாக்காலிதான். கொஞ்சம் செரமமாதான் இருக்கு”.

“கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க ஆச்சி. நானே அடுத்த மாசம் வந்து தூக்கிக்கிட்டுப் போயிர்றேன். இனிமெ இவரு பேச்சுல்லாம் கேட்டுக்கிட்டு உட்டுட்டு போவ முடியாது. அம்மா இருந்தவரைக்கும் சரி. அதுக்கப் பறமும் யேன் இவரு இங்க கெடந்து இப்படித் தனியா கஸ்டப்படணும்?”.

“ஐயா, இன்னோனு சொல்லணும். அடிக்கடி பின்னால கதவப் பாத்து ஒங்கம்மா பேர கூப்டுறாருயா. நெனைச்சாலே பயமா இருக்கு.” கட்டையைப் பயன்படுத்தி அந்தக் கதவை அடைத்துவிட்டுச் சென்றான். மனம் மட்டும் இலேசாகக் கனத்துக் கொண்டிருந்தது அங்கிருந்து சொகுசுக் காரில் விடுபடும்வரை.

10

மங்கலாகத் தெரிந்தாலும் யாரோ இருவர் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு நுழைந்து வெளியேறுவது மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஏதும் பேச முடியாத ஒரு சோம்பல். பகல் நேரமா அல்லது இரவுப் பொழுதா என்பதில் கூட பிரக்ஞையற்ற ஒரு நிலை.

“சன்னாசி! யாரோ ரெண்டு பேரு வந்துருக் காங்க பாரு. கணேசன் மாதிரியே இருக்கு”.

குரலின் ஓசைகள் யாருக்கும் கேட்டதாகத் தெரியவில்லை. எப்பொழுதோ இறந்துவிட்ட ஓசைகளா? அல்லது நிகழ்காலத்தில் ஓசைகளின்றி வெறும் உணர்வுகள் மட்டும்தான் பிதற்றிக் கொண்டிருக்கிறதா?

அவர்கள் இருவரும் கதவை அடைத்துவிட்டு வெளியில் போய் கொண்டிருந்த நேரம் பின்வாசல் கதவைத் திறந்து கொண்டு சன்னாசி வருவது மட்டும் மிக சமீபத்தில் தெரிகிறது. எல்லாம்… எல்லாமும் உருவமற்று ஓசைகளாக மாறுகின்றன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *