”குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்சனை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே” என்றார் குரு.
“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே” என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர் இளைஞர்கள். மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, ‘தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க. பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.
இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை.
அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், ‘ என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சைப் போட்டிங்களா’ என்று. இளைஞார்கள் இல்லையென்று தலையசைத்தார்கள்.
‘அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்கு தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பாக்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.”
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)