அரசியல்வாதி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 6,210 
 

படிப்பு, நேர்மையான உழைப்பு எதுவுமே இல்லாமல் ஒரு மனிதன் பணம், பதவி, அதிகாரத்தோடு, தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏற்ற ‘தொழில்’ அரசியல் தான்!

அதற்கும் பொய்யை மற்றவர்கள் நம்பும்படி சொல்லும் ஒரு சாமார்த்தியம் வேண்டும்! அது ராமசாமிக்கு இல்லை. அதனால் தான் அரசியல்வாதி அன்பரசுவிடம் எடுபிடியாகவே கடந்த ஐம்பது வருஷங்களைக் கழித்து வருகிறான்.

ஐம்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு நாற்சந்தியில் ஒரு புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசை போட்டு, அதில் ஒரு டீக்கடை வைத்து குப்புசாமி தன் வாழ்க்கையை ஆரம்பித்த காலத்திலேயே, டீக்கிளாஸ் கழுவும் வேலைக்கு வந்து சேர்ந்தவன் தான் ராமசாமி!

டீக்கடையில் எந்த நேரமும் அரசியல் பேசுவான் குப்புசாமி. காலப் போக்கில் குப்புசாமி ‘அன்பரசு’ ஆக மாறி ஒரு கட்சியின் கிளைச் செயலாளராகவும் மாறி விட்டான். அந்தக் கட்சியும் அதன் பங்காளி கட்சியும் தான் மாற்றி மாற்றி அந்த மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தன. இரண்டு குதிரையிலும் சவாரி செய்யும் அதிபுத்திசாலி அன்பரசு. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியில் ஒர் பொறுப்பில் இருப்பான் அன்பரசு. அடுத்த முறை ஆட்சி மாறினால், அந்தக் கட்சிக்கு மாற மற்றவர்கள் நம்பும்படி தக்க காரணம் சொல்வதில் அன்பரசுவுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது!

கடந்த ஐம்பது வருஷங்களிலே அவனைப் போல் சுற்று வட்டாரத்தில் டீக்கடை வைத்திருந்தவர்கள், சலூன் வைத்திருந்தவர்கள், லாண்டரி வைத்திருந்தவர்கள் எல்லாம், இப்பொழுது கல்வி தந்தையாகவும், தொழிலதிபர்களாகவும், நான்கு சினிமாத் தியேட்டர்களுக்கு உரிமையாளர்களாகவும் மாறுவதற்கு அந்தக் கட்சிகள் உறு துணையாக இருந்தன!

அன்பரசு இப்பொழுது கோடீஸ்வரன். மிகப் பெரிய மருத்துவமனைக்கும், இரண்டு கல்லூரிகளுக்கு அதிபர். நினைத்தால் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர். கட்சியில் மாவட்டம். தினசரி நான்கு கார்களில் நகர் வலம் வருபவர்.

இன்றைக்கும் அவருடைய நம்பிக்கைக்குரிய அந்தரங்கச் செயலாளர் ராமசாமி தான்! அன்பரசு குடும்பத்தோடு திருப்பதி, திருச்செந்தூர் எல்லாம் போகும் பொழுது கூட ராமசாமியும் போவார்!

எல்லாக் கோவில்களிலும் சாமி தரிசனம் இரண்டு நிமிடம். தீபாராதனையைத் தொட்டுக் கும்பிட்டு ஐயருக்கு கணிசமான காணிக்கையைப் போட்டு விட்டு ஐந்து நிமிடத்தில் நகர்ந்து விடுவார். எந்த கோவிலிலும் தரையில் விழுந்து அன்பரசு சாமி கும்பிட்டதை ராமசாமி பார்த்ததில்லை!

ஆனால் கட்சித் தலைவர் தங்கள் ஊருக்கு வந்து விட்டால், விமான நிலையத்திலேயே ஒரு முறை கீழே விழுந்து காலைத் தொட்டுக் கும்பிடுவார்.

கட்சிப் பொதுக் கூட்ட மேடையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக அன்பரசு விழுந்து கும்பிட்டால் எழுவதற்கு பதினைந்து நிமிடங்களாவது ஆகும்! இதுதான் நீண்டகாலமாக ராமசாமிக்குப் புரியவில்லை!

ஒரு முறை அன்பரசு குஷி மூடில் இருக்கும் பொழுது ராமசாமி அதைக் கேட்டு விட்டார்.

“ அண்ணே!….நீங்க எந்த கோவிலுக்குப் போனாலும் கீழே விழுந்து கும்பிட்டு, நான் பார்த்ததில்லை! ஆனா நம்ம கட்சித் தலைவர் நம்ம ஊருக்கு வந்தா……. போவதற்குள் இரன்டு முறையாவது காலில் விழுந்து கும்பிடறீங்க!….அது தான் எனக்கு இன்னும் புரியலே!..”

அன்பரசு வாய் விட்டு சிரித்தான்.

“கோவிலில் இருக்கும் எந்த சாமியாவது நான் ஒரு கும்பிடு போட்டா எனக்கு பத்து லட்சம் தர முடியுமா?….ஆனா நம்ம தலைவர் அப்படி இல்லே!..நான் இரண்டு கும்பிடு போட்டா…எனக்கு காண்ட்ராக்ட் அல்லது ஏதாவது வேறு வழியிலே எனக்கு இருபது லட்சம் கிடைக்க வழி செய்திட்டுப் போயிடுவாங்க….வேறு எந்த சாமியடா அப்படி எனக்கு லட்ச லட்சமா கொடுக்க முடியும்?”

அடேயப்பா!..கும்பிடு போடுவதில் கூட இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா?…ராமசாமிக்கு இதெல்லாம் தெரியாம தான் இன்னும் தொண்டனாகவே இருக்கிறான்!

– மே15 2016 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *