அன்புள்ள தமிழ் தாய்க்கு ……!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 8,328 
 

அன்புள்ள அம்மாவுக்கு,

நான் சுகமாகவே இருக்கிறேன்!சொந்த மொழியும் கலாச்சாரமும் மறந்து வாழ்ந்தாலும் இந்த அயல்நாட்டு அமெரிக்காவில் நான் சுகமாகத்தான் இருக்கிறேன்.பட்டம் வாங்கி பறந்து வந்து 10 வருடம் ஆகிருச்சு,ஆனாலும் உன் ஆசை முகம் காணாமல் உள்ளம் பரிதவித்து போயிருக்கேன்.7 கோடி மக்களை ஈன்றெடுத்த தமிழ் தாய் நீ,என்னை இழப்பதால் என்ன கெட்டுவிடும் என்று தப்பு கணக்கு போட்டு தான் உன்னை விட்டு வந்தேன்!நீ ஆச்சரியம் கொண்டிருப்பாய்,அழுகை சிந்தியிருப்பாய் இத்தனை நாளாய் கண்டுகொள்ளாமல் இருந்த அன்பு மகனின் கடிதம் கண்டு!அம்மா,நேற்று இரவு நான் தூக்கத்தை தொலைத்தேன் என் சிந்தையை உன் நினைவுகள் சிறைபிடித்தன,உன் நினைவு இப்போது தான் என் இதயத்தை தொட்டது அதனால் தான் என் கடிதம் உன் கைகளை முத்தமிடுகிறது!

அன்னையே!நினைவுண்டா அன்றொருநாள் ஏழு கடல் தாண்டி உன்னை காண நான்அத்தி பூத்தாற்போல ஓடோடி வந்தேன்.உன்னோடு ஒருநாள் ,உனக்காக ஒருநாள் இருக்கையிலே என்னென்ன பேசவேண்டும் என்று ஆயிரம் ஆசைகள் நெஞ்சுக்குள்!வீதியெங்கும் தேடிப்பார்த்தேன் உன்னை காணவில்லை,தெருக்களில் தேடி பார்த்தேன் ஒய்யார கட்டிடங்கள் தவிர நான் ஓதும் முத்தமிழே உன்னை அங்கு காணவில்லையே.!ஆனால் ஒன்று மட்டும் நன்றாய் தெரிந்தது நான் இப்போது இருப்பது அமெரிக்கா அல்ல,தமிழ்நாடு தான்.மனம் பதைபதைத்தது என்னை பெற்றுடுத்தவளே எங்கு சென்றாய்?நாளெல்லாம் உன்னை தேடி தேடி அலைந்தேன் என் கால்களும் சோர்ந்து விட்டது,அந்தியும் சாய்ந்து விட்டது..!

அதோ ஒரு ஆலமரம்!அதன் நிழலில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று ஒரு அடி முன்வந்தேன்,தீடீரென்று ஒரு ஓலக்குரல்,நான் சற்று திரும்பி பார்த்தேன்,தூரத்தில் ஒரு உருவம்,அவள் முகம் நிலவாகத்தான் இருந்தது ஆனால் அது களங்கப்பட்டிருந்தது.யாரென அறிய அருகில் சென்றேன்,ஐயோ என் நாடி நரம்புகளெல்லாம் ஒரு நொடி ஸதம்பித்து போனது.என்னை பெற்றெடுத்த தமிழ் தாயே அது நீயன்றோ……!உன் சோகத்திற்கு காரணமறிய நான் உன் மைந்தன் என்று காட்டிக்கொள்ளாமல் உன் அருகில் வந்தேன்.

“யாரம்மா நீ?ஏன் அழுகிறீர்?” என்று உன்னையே வினவினேன்.நீ உரைத்த பதில் கண்டு கலங்கி நின்றேன்.நீ உரைத்தாய் “நானா!ஒரு காலத்தில் கம்பனையும் வள்ளுவனோடு தொல்காப்பியனையும் இளங்கோவையும் பாரதியையும் அவன் தாசனையும் பெற்றெடுத்ததனால் அழியாத புகழோடும்,மகிழ்ச்சியோடும்,கீர்த்தியோடும் இருந்தவள் தான் இன்று என் புதல்வர்கள் என்னை கைவிட்டதால் தனிமையில் நிற்கிறேன் என்றாய்.கைப்பேசி கவர்ச்சியிலும்,வெளிநாட்டு மோகத்திலும்,பணம் பண்ணும் வேள்வியிலும் என் 7 கோடி புதல்வர்கள் என்னை மறந்து போனார்கள்.எப்போதாவது என் நினைவு அவர்களுக்கு வரும் அப்போது அவர்களிடத்தில் நான் கொஞ்ச நேரம் வாழ்வேன்,ஆனால் எப்போதும் அல்ல!கொஞ்சி கொஞ்சி தாய்ப்பால் ஊட்டி வளர்த்த எனக்கு என் மக்கள் தருவது சவத்துனிதான் என்று சொல்லி மௌனம் காத்தாய்.”தாய் பாசத்தை மறந்த அவர்களெல்லாம் மனிதர்களா?அவர்கள் நாசமாகபோகட்டும் …!” என்று நான் உரைத்ததும் நீ சட்டென்று பதறி என் வார்த்தைகளை மறுத்தாய் “வேண்டாம்!என் புதல்வர்களை சபிக்காதே,என்ன இருந்தாலும் அவர்கள் என் புதல்வர்கள்,அவர்கள் வாழட்டும்,நன்றாக வாழட்டும் ..”என்று சொல்லி அழுதாய்.உன் அழுகையை காணமுடியாமல் உன்னை விட்டு சட்டென நான் மறைந்தேன்.

தங்க மகன் நானிருக்க,தரணி போற்றும் தமிழ் தாயே நீ அழுத காட்சியெல்லாம் என் கண் முன்னே நிக்குதம்மா!இனியும் உன்னை மறந்து இருந்தால் என் உள்ள குமுறல்கள் என்னை கொன்றுவிடும்!எனக்கு இந்த அயல்நாட்டு மோகம் வேண்டாம்,இந்த அண்டைநாட்டு கலாச்சாரம் எனக்கு வேண்டாம்!உன்னை காக்க தமிழ் தாயே நான் வருகிறேன்.இந்த கடிதம் உன் கைகளை முத்தமிடும் போதும் என் ராஜினாமா கடிதம் என் அலுவலகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்.ஓடோடி வருகிறேன் தாயே,உன்னை காக்க,சற்றே பொறுத்திரு..!இனி என் வாழ்வின் பணிகள் அனைத்தும் உனக்காகத்தான்….!

இப்படிக்கு,
உன் அன்பு மகன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *