கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 22,744 
 

முள் தோப்பு எங்கும் மல நாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மாதான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மணிக்கு எல்லாம் விழிப்பு வந்துவிடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே, பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும்.’பறவை கள் சத்தம் கேட்டால் பூச்சி, பொட்டெல்லாம் போய்விடும்’னு பெரியம்மா சொல்லும். தோட்டத்துக் கதவைத் திறந்து, முதல் ஆளாக பெரியம்மா, குப்பைப் பள்ளத்துக்குப் போகும். குப்பைப் பள்ளத்துக்கு முன்னாடியே உட்கார்ந்துவிடும். பெரியம்மா போன உடனே அடுத்தடுத்து அக்காக்கள் மூன்று பேரும் போவார்கள். கடைசியாக அம்மா.

நான் போகும்போது கால்வைக்க இடம் இருக்காது. கட்டை விரலை ஊன்றவைத்து எம்பிக் குதித்து, நல்ல இடம் தேடி உட்காருவதற்குள் போதும் என்று இருக்கும். அந்நேரத்துக்குள் எல்லோர் வீட்டுக் குப்பைப் பள்ளத்தையும் சுற்றிச் சுற்றி இருந்துவைத்து இருப்பார்கள். பன்றிகள் வரும் வரை கால்வைக்க முடியாது. நாற்றம் குடலை முறுக்கும்.

நான் குப்பைப் பள்ளத்துக்கு அருகில் உட்கார்ந்து போக மாட்டேன். எனக்குன்னு குப்பைப் பள்ளத்தைத் தாண்டி ஒரு முள்ளு மரம் குடை பிடிச்ச மாதிரி படர்ந்து இருக்கும். அந்த முள்ளு மரத்துக்குப் பின்னால் இரண்டு பேர்கூட உட்காரலாம். வெளிய தெரியாது. வேர் அவ்வளவு தடிமன். அந்த மரத்துக்குப் பின்னால் உட்கார்ந்து போனால்தான் பயம் இல்லாமல் இருக்கும். பின்னாடியும் நிறைய மரம் இருக்கும். யாருக்கும் தெரியாது. மரத்துக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டு, வேரின் ஓரத்தில் சாய்ந்து பார்த்தால், யார் வீட்டுத் தோட்டத்துக் கதவு திறந்து இருக்கிறது, யார் வெளியே வருகிறார்கள்… எல்லாம் பார்க்கலாம். 8 மணிக்கு மேல் போனால், ஆண்கள் மட்டும் வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு, குப்பைப் பள்ளத்துக்கு அருகில் நின்று இருப்பார்கள். எந்தப் பொட்டச்சி எந்த முள்ளு மரத்துக்குக் கீழ உட்கார்ந்திருக்கான்னு கண்ணு அலஞ்சிக்கிட்டு இருக்கும். வாயில் வைத்த பல்பொடி நுரை போய், பிறகு வெறும் எச்சிலைத் துப்பி, வராத சளியை காறித் துப்பிக்கொண்டு, கண்களால் முள் மரத்தை மேய்ந்துகொண்டு இருப்பார்கள். மூணாவது வீட்டு வடிவேலு அண்ணனுக்கு இதுதான் வேலையே.

சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டவுடன், தினமும் வீட்டுக்குள் பையைத் தூக்கிப் போட்டுவிட்டு நானும் சங்கரியும் நேராகத் தோட்டத்துக்கு ஓடுவோம். எனக்கு ஒரு மரம்; அவளுக்கு ஒரு மரம். பாவாடையை நல்லா சுருட்டிவிட்டுக்கொண்டு, மரத் தடியில் உட்கார்ந்துகொண்டு பேசுவோம். கையில் ஆளுக்கு ஒரு குச்சியை வைத்துக் கொண்டு பள்ளம் தோண்டுவோம். சின்னச் சின்ன நட்சத்திரம் வரைவோம். சில சமயம் குச்சியைப் போட்டுவிட்டு, மண்ணை அள்ளி, சின்னச் சின்ன நிலாக் கும்பல் வைப்போம். நிலாக் கும்பல் வைத்துக்கொண்டே நகர்வோம். அவள் என் பக்கம் நகர்வாள். நான் அவள் பக்கம் நகர்வேன். நிலாக் கும்பல் சுவாரஸ்யத்தில் நகர்ந்து வந்து முட்டிக்கொள்வோம். ‘அய்ய…’ என ஒரு அசட்டுச் சிரிப்பு. சங்கரி காலையில் என்னுடன் வர மாட்டாள். அவங்க அம்மா விட மாட்டாங்க.

காலையில், பெரியம்மா, அம்மா, பக்கத்து வீட்டு மீரா சித்தி யாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க மாட்டாங்க. அவசரத்துக்கு வெளிய போயிட்டு, வெள்ளெனத் திரும்பிடுவாங்க. சாயந்திரம் பேசுவதற்காகத்தான் குப்பைப் பள்ளத்துக்கு வருவார்கள். பக்கம் பக்கமாக உட்கார்ந்துகொண்டு குசுகுசு வெனப் பேசுவார்கள். அம்மாவும் மீரா சித்தியும் இருட்டினாத்தான் எழுந்து வருவார்கள். எழுந்து கொஞ்ச நேரம் நின்றுகொண்டு பேசுவார்கள்; நடந்து கொண்டு; வீட்டுத் தோட்டம் வந்து என பேசிக்கொள்வார்கள்.

தலையைச் சுற்றி கொசு மொய்க்கும். வாய்க்குள் ஒன்றிரண்டு பூச்சிகள் நுழையும். காறித் துப்பிக்கொண்டே, ‘கண்ணு, வாங்கடி போலாம், பொழுது போச்சி… பூச்சிபொட்டு வரும்’ என்று சொல்லிக்கொண்டே, தோட்டத்து வாசற்படியில் வைத்து இருக்கும் ஒரு டப்பா தண்ணீரில் கால் கழுவிக்கொள்ளும்.

மண்ணு வீட்டு கன்னியம்மா கிழவி நல்ல வெயில் நேரத்தில்தான் சுள்ளி பொறுக்கப் போகும். ‘கிழவிக்கு எந்த முள்ளு மரம் காஞ்சிருக்கு; எந்த மரத்தில் காய் பழுத்து விழற மாதிரி இருக்கு; வேர் பட்டுப்போன மரத்தை எப்படிப் பொளந்து கிட்டு வர்றது’ எல்லாம் தெரியும். எல்லா மரத்துக்குக் கீழேயும் யார் வெளிய போவாங்கன்னும் தெரியும். அந்தத் தெருவில் யார் யாருக்குத் தீட்டுன்னு, மதியத்துக்குள் குழாயடியில் கிழவி சொல்லி விடும்.

சங்கரி இரண்டு நாட்களாகப் பள்ளிக்கூடம் வரவில்லை. சாயந்திரம் வெளிய போகவும் வரவில்லை. அவள் வீட்டுப் பின் கதவைத் தட்டினேன். சங்கரி அம்மாதான் திறந்தார்கள். ”அக்கா, சங்கரியக் கூப்பிடுக்கா.” ”அவ இப்பத்தான்டி போயிட்டு வந்தா, நீ போயிட்டு வா.” கதவைச் சாத்திவிட்டுப் போய்விட்டார். நான் மட்டும் போனேன்.

நான்கைந்து நாட்களாக சங்கரி பள்ளிக்கூடமும் வரவில்லை. கண்ணிலும் பட வில்லை. ஒருநாள் சாயந்திரம் நான் மட்டும் வெளிய போகப் போனேன். சங்கரி வெளிய போகும் இடத்தில் நிலாக் கும்பல் வைப்பதுபோல் சின்னச் சின்ன மண் குவியல்கள். காலால் லேசாகக் கீறிப் பார்த்தேன். ரத்தமாக இருந்தது. அவளுக்கு உடம்பு சரியில்லைபோல் இருக்கிறது. அதான் என்கூட வெளிய போக வரவில்லை. அவளுக்கு உடம்புக்கு என்னன்னு பயமாக இருந்தது.

ராத்திரியானால் உருளைக் கிழங்கு விளையாட்டு விளையாடுவோம். சங்கரி அங்கும் வரவில்லை. போய்க் கூப்பிட்டேன். ”ஏய், அவளுக்கு பேதியாகுதுடி, அவ வர மாட்டா.” சங்கரியம்மா என்னை உள்ளேயே கூப்பிடவில்லை.

ஒரு வாரம் கழித்துத்தான் சங்கரி வெளிய போக வந்தாள். ”ஏம்ப்பா, இத்தனை நாள் வரலை”னு கேட்டவுடனே, ”எங்க அம்மா கிட்ட கேட்கக் கூடாது என்ன? நான் வயசுக்கு வந்துட்டன்டீ, எங்கம்மா சும்மான் னாலும் பேதியாச்சுன்னு சொன்னாங்க, யார்கிட்டயும் சொல்லாதப்பா…” என்றாள் சங்கரி.

சங்கரியைப் பார்த்தேன். முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். பாவாடையை நன்றாக விரித்து, முன்னால் கீழே இறக்கிவிட்டுக்கொண்டு இருந்தாள். பின்னால் இடக்கையால் பாவாடையை, பின்புறத்தை மறைக்குமாறு நீட்டிப் பிடித்துக்கொண்டு இருந்தாள்.

கைகள் பாவாடையை மெள்ள கீழே இறக்கின. சங்கரியின் மரத்துக்குப் பக்கத்தில் வெள்ளையாக ஒன்று அசைந்தது. சங்கரியின் மரத்தில் ஜோட்டான், ஜோட் டானாக மஞ்சள் காய்கள் தொங்கின. பச்சை மரத்தில் மஞ்சள் காய்கள். இடையில் வெள்ளையாக ஏதோ ஒன்று.

‘வீணான துணியை யாராவது தூக்கிப் போட்டு இருப்பார்கள். முள்ளில் மாட்டி காற்றில் ஆடிக்கொண்டு இருக்கிறது’- நினைத்துக்கொண்டே விரித்த பாவாடை யைச் சுருட்டிப் பிடித்தேன்.

குச்சியால் நட்சத்திரம் வரைந்துவிட்டு, சங்கரியின் மரத்தைத் திரும்பிப் பார்த்தேன். வெள்ளைத் துணியைக் காணவில்லை. ‘எங்கே போயிருக்கும்? கீழே விழுந்து இருக்குமோ?’ சமாதானத்துடன் எழுந்தேன்.

குப்பைப் பள்ளத்தில் கறுப்பு சிவப்பு கோடுடன் குச்சி போன்ற பொருள்கிடந்தது. குச்சியால் கிளறினேன். பென்சில். அட, இந்த பென்சிலைத்தானே இரண்டு நாட்களாகத் தேடிக்கொண்டு இருந்தோம்? அம்மாதான் பெருக்கி வாரிக் கொட்டிஇருக்கும். திட்டிக்கொண்டே பென்சிலை பீச்சாங்கையில் எடுத்தேன்.

தோட்டத்து வாசற்படியில் தண்ணீர் டப்பா இருந்தது. சங்கரி வீட்டில் இருக்கிற மாதிரி பிளாஸ்டிக் குவளை வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால், அம்மா காசு கொடுத்து குவளை வாங்காது. ஒவ்வொரு டப்பாவாக தொலையத் தொலைய, யார் வீட்டில் இருந்தாவது ஒரு பெயின்ட் டப்பா வாங்கி வந்துவிடும். பிடியும் இல்லாமல், மேலெல்லாம் பெயின்ட் ஊத்தி, வாந்தி எடுத்த மாதிரி இருக்கும். குளிக்க, தோட்டத்துக்குப் போக, கை கழுவுகிற தொட்டிக்கு எல்லாத்துக்கும் டப்பாதான்.

ஒரு டப்பா தண்ணீரில்தான் கால் கழுவ வேண்டும். அம்மா, பெரியம்மா, மீரா சித்தி எல்லாம் அந்த ஒரு டப்பாவில்தான் கழுவிக்கொள்வார்கள். வீட்டுக்கு உள்ளே போய், தொட்டித் தண்ணீரில் கையையும், காலையும் கழுவுவார்கள். எனக்கு மட்டும் எப்பவும் தண்ணீர் பற்றாது. அம்மா திட்டும். ‘அரிசி, பருப்பு செலவு செய்யற மாதிரிதான் தண்ணியையும் செலவு செய்யணும். காசு கொடுத்து வாங்கலேன்றதுக்காக, மானாவாரியா ஊத்தக் கூடாது.’

பென்சிலைக் கழுவினேன். அரை டப்பா தீர்ந்துவிட்டது. அரை டப்பா தண்ணீர்தான் மீதி இருந்தது. என்ன செய்வது? பத்தாதே! காலில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு, வெளி வாசலில் இருக் கும் தண்ணீர் தொட்டிக்கு நடந்தேன்.

அம்மா உள் வாசலில் பாத்திரம் தேய்த்துக்கொண்டு இருந்தது. அப்பா, தம்பி யாரும் இல்லை. வெளிவாசலை ஒட்டிஇருந்த பெரியம்மா வீட்டைப் பார்த்தேன். ஒருவரும் கண்ணில் படவில்லை. சட்டென்று தொட்டிப் பக்கத்தில் உட்கார்ந்து, நான்கைந்து டப்பாக்கள் தண்ணீர் மொண்டு கால் கழுவினேன். ”இப்படிப் போற வர்ற வழியில் கால் கழுவினா, நாங்கள்லாம் நடக்கிறதா இல்லயா? வெளிய போனா தோட்டத்தில் காலக் கழுவிட்டு வர வேண்டியதுதானே? சின்ன பப்பா பாரு? உள்ள வர?”- பெரியம்மா வாசல் கழுவித் தள்ளிய துடைப்பத்துடன் கூச்சல் போட்டது.

பக்கத்தில் பெரியம்மாவைப் பார்த்தது தூக்கிவாரிப் போட்டது. இதையட்டி அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடக்கப் போகிற சண்டையை நினைத்தேன். தாராளமாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவிய சந்தோஷம் போனது. உடம்பு ஆடியது.

அம்மா வெளியே வந்தது. சாமான் கழுவிக்கொண்டு இருந்த கையோடு என் முடியைக் கொத்தாகப் பிடித்தது. பெரியம்மா கையில் இருந்த துடைப்பத்தைப் பிடுங்கி முதுகிலும், காலிலும், தொடையிலும் என வசதியாக அகப்பட்ட இடங்களில் எல்லாம் அடி விழுந்தது. ”அய்யோ, அடிக்காதம்மா, அடிக்காதம்மா, இனிமே தோட்டத்துல கழுவுறம்மா, வலிக்குதும்மா”- கத்தினேன்.

”அவ அவ பல்லுக்கு நிக்காதன்னு சொன்னா, கேட்டாத்தானே, இங்கதான் எப்ப எப்பன்னு நிக்கறாங்களே? தண்ணிய ஊத்தினா ஒரு சண்ட, ஊத்தலன்னா ஒரு சண்ட, விடிஞ்சா ஒரு சண்ட, பொழுதுபோனா ஒரு சண்டனு, தெனம் ராமாயணம். போறாததுக்கு நீ வேற.”

”இப்ப என்னா சொன்னன்னு அந்தப் பொண்ணப் போட்டு இந்த அடி அடிக்கிற, வெளிய போயிட்டு வந்து காலக் கழுவுறா, பின்னாடியே கழுவிக்கிட்டு வர வேண்டியது தானேன்னு கேட்டதுக்கு இந்த அடி அடிக்கிற? போற வர்ற வழியில் மெறிச்சு மெறிச்சு நடக்கணுமா? தூங்கி எழுந்தா, நல்லா அவலை வறுக்கிற! நல்லாயில்ல சொல்லிட்டன்.”

”நானா அவல வறுக்கிறது? யார் வறுக்கி றாங்கன்னு அவங்கவங்களுக்குத் தெரியும்.”

வெற்றுடம்பில் தோளில் துண்டுடன் அப்பா உள்ளே வருவது தெரிந்தது. அம்மா துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு சாமான் தேய்க்கப் போனது. பெரியம்மா இறைந்துகிடந்த துடைப்பக்குச்சியை ஒவ்வொன்றாகப் பொறுக்கி துடைப்பத்துள் செருகியது.

வீட்டுச் சண்டை ஆம்பளைங்க வரைக்கும் போனால், பெரிசாகிவிடும். அம்மாவும் பெரியம்மாவும் என்ன சண்டைன்னாலும் அவங்களுக்குள் வைத்துக்கொள்வார்கள். காலையில் சண்டை போடுவார்கள். சாயந்திரம் திண்ணையில் உட்கார்ந்து யாரிடமோ பேசுவதுபோல் ஜாடையாகப் பேசிக்கொள்வார்கள்.

அப்பா செருப்புக் காலை ஒருக்களித்து வைத்து நடந்து வந்தார். தொட்டிக்கருகில் வந்தவுடன், செருப்பைக் கழட்டினார். ”டப்பா எடும்மா!” டப்பாவை நீட்டினேன். ”கருமம் நாய் கண்ட இடத்துல போய் வைக்குது!”- தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து, ஊற்றி செருப்புக்குள் காலைவிட்டு வேகவேகமாகத் தேய்த்தார். நாறியது. அம்மா சாமானைக் கழுவி தண்ணீரை ஊற்றியது. பெரியம்மா ஒரு நிமிடம் நின்று அப்பாவைப் பார்த்துவிட்டு தண்ணீரை வாசலில் விசிறி ஊற்றிவிட்டுச் சென்றது.

முதுகிலும் தொடையிலும் வீங்கிப் போயிருந்தது. தொட்டுப் பார்த்தேன். பாவாடையை லேசாகத் தூக்கிப் பார்த் தேன். வீங்கி இருந்தது. பென்சில் எங்கே? தேடினேன். தண்ணீர் போகும் சாக்கடை வாசலில் கிடந்தது. அப்பா செருப்பைக் கழுவிய தண்ணீர் தேங்கியிருந்தது’. ச்சீ ச்சீ… வேணாம்… தொடையைத் தேய்த்தபடி ஓடினேன். ஒண்ணாம் பெல் அடிச்சது. பையைத் தேடினேன். சாப்பிடவில்லை.

‘ஒண்ணுக்கு பெல் எப்ப அடிப்பாங் கன்னு தெரியலையே’ வயிறு கலக்கியது. காலையில் ஒழுங்காகப் போகவில்லை. முள்ளு மரத்தின் மேல் கிடந்த துணியைப் பார்த்து, பயந்த பிறகு வெளிய வரவே இல்லை. இப்ப கலக்குது. பத்து நிமிஷம் இருக்கும். அதுக்குள்ள ஓடிப் போய் வந்துரலாம். லேட்டானாலும் டிரில் டீச்சர் மொத கேட்லதான் நிப்பாங்க. நாம பின்னாடி பக்கமா உள்ள வந்துடலாம்.’

சங்கரியைப் பார்த்தேன். எழுதிக்கொண்டு இருந்தாள். கணக்கு வாத்தியார் போர்டில் எழுதிப்போட்டு இருந்ததை எழுதவில்லை. அவள் வாய்பாடு எழுதிக்கொண்டு இருந்தாள். தினம் வாய்ப்பாடு எழுதிவிட்டால் போதும். வாத்தியார் வேறொண்ணும் கேட்க மாட்டார். ‘வாய்ப்பாடு படிங்கடா, தானா கணக்கு வரும். என்னையப் பாருங்க, காலரிக்கா என்ன, அரையரிக்கா என்ன, ரெண்டையும் கூட்டினா என்ன, கழிச்சா என்ன, பெருக் குனா என்ன, எல்லாஞ் சொல்வேன்.யோசிக் கிற வேலையே கிடையாது. தண்ணியா வரும். நா பன்னெண்டு என்னன்னா ஒருத்தஞ் சொல்லு பார்ப்போம். ஒருத்தனும் சொல்ல மாட்டீங்க. மனப்பாடம் பண்ணத் தான் வணங்க மாட்டேங்குதே. பின்ன எப்படி கணக்கு வரும்?’னு தினம் சொல்வார்.

சங்கரியின் தொடையைச் சுரண்டினேன். ‘என்ன?’ கண்களால் கேட்டாள். ரெண்டு விரலைக் காட்டினேன். ”அய்யோ, இப்ப எப்படிப் போறது? நான் வரலை.”

”வயிறு வலிக்குதுப்பா, இப்ப வேணாம், பெல்லடிச்சப் பிறகு போகலாம். பத்து நிமிஷத்துக்குள்ள ஓடியாந்துடலாம், வாப்பா.”

”எங்க அம்மா பார்த்தா தொடப்பக்கட்டதான். கண்ட நேரத்துல எல்லாம் தோட்டத்துக்குப் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.”

”வயிறு வலிக்குதுப்பா.”

”இப்ப முள்ளு மரத்துக்குக் கீழ நிறையப் பேர் குடிச்சிட்டு சீட்டாடுவாங்க. அப்புறம் நம்ம குப்பப் பள்ளத்துக்கிட்ட இந் நேரத் துக்கு நிறையப் பன்னிங்க இருக்கும்.”

”எனக்கும் தெரியும். வெயில் வந்தா, முள்ளு மரத்துக்குக் கீழே கும்பல் வந்துவிடும். வாயில் பீடியைச் சொருகிக்கொண்டு, சீட்டு ஆட்டம் நடக்கும். மஞ்சள், சிவப்பு கலரில்தான் பனியன்போட்டு இருப்பார் கள். பனியன் கலரும் பீடி நாற்றமும் பயமாக இருக்கும். பகலில் யாருமே தோட்டத்துப் பக்கம் போக முடியாது. ‘ஏன்டா இங்க வந்து விளையாடுறீங்க?’ன்னு யாராவது கேட்டால்… அன்றைக்கு ராத்திரிக்குள் பொதை பொதையாய் இருக்கிற அவங்க முள்ளு மரத்தில் ஒரு சுள்ளி இருக்காது. அடி வேர் வரைக்கும் வெட்டி எடுத்துவிடுவார்கள். காலையில் பார்த்தால், மறைப்பே இல்லாமல் முழு வெளிச்சமாக இருக்கும் அவர்கள் தோட்டம்.

‘அந்தப் பொறம்போக்குக்கிட்டல்லாம் நம்மால பேச முடியாது. வேலையாப் போனமா, வந்தமான்னு நடந்துக்கங்க. அவன் சீட்டு வெளையாடுறான், சிகரெட் பிடிக்கிறான்னு சொல்லிக்கிட்டு இருக்காம, நம்ம வேலையைப் பாருங்க…’ சொல்லி விட்டுப் போய்விடுவார் அப்பா.

பகலில் முள்ளுக் காய்களுக்காகப் பன்றிகள் வந்துவிடும். பெரிய பெரிய பன்றிகள். பார்க்கவே பயமாக இருக்கும். ஒரு பன்றியின் காலில் மற்றொன்று காலைவிட்டு, அவை உருமிக்கொண்டு ஓடும் நேரத்தில், பயம் உச்சி மயிரைப் பிளக்கும்.

பன்றிகளுக்குப் பயமே இருக்காது. உட்கார்ந்து வெளிய போய்க்கொண்டு இருக்கிற நேரத்தில் பக்கத்தில் வரும். அம்மா பெரியம்மால்லாம் கையில் குச்சியை வைத்துக்கொண்டு, விரட்டிவிடுவார்கள்.

பன்றிகள் வராத பகல் நேரங்களில் மட்டுமே, நான் கூட்டாளிகளுடன் வெளிய போவேன். அவசரமா வந்தாலும் அம்மா வைக் கூப்பிட்டால் வராது. தறியைவிட்டு இறங்காது. கன்னிம்மா கிழவிதான் பகல் பூரா தோட்டத்துல நடமாடும். சீட்டாடு கிறவன், குட்டி போட்ட பன்றி… எந்தப் பயமும் கிடையாது. கிழவி இருக்கிற தைரியத்தில் வெளிய போனால், அடுத்த நாள் குழாயடியில் என் பேச்சுதான் நாறும்.

வயிறு கீழே இறங்கி வருவதுபோல் கனத்தது, சங்கரியை மீண்டும் சுரண்டினேன்.

”போப்பா, அம்மா திட்டும்ப்பா, வயசுக்கு வந்துட்ட பிறகு காத்து கருப்பு அண்டும். வெயில் நேரத்துல எங்கும் போகக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கு, இப்ப நான் வந்ததேன்னு தெரிஞ்சா, சாயந்திரம் துடைப்பம் பிச்சுக்கும்.”

நாமே போகலாம் என்று வெளியே வந்தேன். பீடி நாற்றமும், பன்றியின் உருமலும் கேட்டது. பயத்தில் நெஞ்சு அடைத்தது, ஒண்ணுக்கு பெல் அடிக்க பியூன் அண்ணன், மணிக் கட்டையை எடுத்துக்கொண்டு போனார்.

பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் போனேன். மஞ்சள் கனகாம்பரம் செடி மண்டிக்கிடக்கும் முள்ளுத் தோப்பு. முள்ளு கனகாம்பரம் பூவே எனக்குப் பிடிக்காது. தொடும்போதே விரல் முழுதும் மஞ்சளாய் மகரந்தம் அப்பிக்கொள்ளும். தலையில் வைத்தவுடன், தலை முழுக்க மஞ்சள் தூள் தேய்த்தது மாதிரி இருக்கும். முள்ளு கனகாம்பரம் புதருக்குள் பன்றி நிறைய இருக்கும். ஒரு பன்றிதானே இருக்கிறது என்று பார்த்தால், பெரிய பன்றி எழுந்தவுடன், அடியில் இருந்து பத்துப் பன்னி ரண்டு குட்டிகள் எழுந்து ஓடும். பன்றிக்காகவே முள்ளு கனகாம்பரம் புதர்ப் பக்கம் போக மாட்டேன்.

ஒண்ணுக்கு பெல் முடியறதுக்குள்ள போகணும், பயந்துகொண்டே புதர்களை விலக்கினேன். ‘முள்ளு கனகாம்பரப் புதருக்குள்ள கட்டாயம் பாம்பு இருக்கும்’ அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. உடல் வேர்த்தது. வயிற்று கனமும் அதிகமானது. கால் வழியே வந்துவிடும்போல் இருந்தது. மெள்ள நடந்தேன். வெளிச்சம் இல்லை. கண்கள் பழகி இருந்த குறைந்த வெளிச்சத்தில் இடம் தேடினேன். பயந்துகொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறையப் பேர் போய் வைத்திருந்தார்கள். காலை கவனமாகப் பார்த்துவைத்தேன். மிதித்துவிடப் போகிறோம் என்ற அருவருப்பு. உள்பக்கமாக நகர்ந்தேன். நல்ல இடமாகத் தேடியதில் புதரின் உள்ளே வந்துவிட்டு இருந்தேன். பெருக்கிவைத்ததுபோல் ஓர் இடம் இருட்டிலும் வெள்ளையாகத் தெரிந்தது. அப்பாடா… சட்டென்று உட்கார்ந்தேன்.

கண்களில் இருந்து நீர் வழிந்தது. வயிற்றின் கனம் குறைந்தது. இடது கையால் கண்ணைத் துடைத்தேன். வலது கையால் குச்சி ஒன்றை எடுத்து மண்ணைக் கீறினேன். பாவாடை

யைச் சுருட்டி இடுப்புக்கு மேல் ஏற்றிக்கொண்டேன்.

மண்ணைக் கீறி நட்சத்திரம் வரைந்தேன், சிறிய நட்சத்திரம், பெரிய நட்சத்திரம் என்று முள் காட்டில் நட்சத்திரங்கள் வரைந்தேன். நட்சத்திரங்களைச் சுற்றி வட்டம். வட்டத்துக்குள் அடைபட்ட நட்சத்திரங்கள். சின்னச் சின்ன நட்சத்திரங்களை மண்ணில் உருவாக்கிக்கொண்டு, மெள்ள நகர்ந்தேன். எழுந்திருக்காமலேயே நகர்ந்து சென்றுகொண்டு இருந்தேன். காலடியில் துவங்கி, முட்டி போட்டு, கை எட்டும் தொலைவு வரை நட்சத்திரங்கள் முளைத்தன. நட்சத்திர மண்டலமாக முள் புதர் ஒளிர்ந்தது.

முன்னும் பின்னும், இடமும் வலமுமாக நகர்ந்துகொண்டு இருந்தேன். மேகங்களுக்கு இடையில் நட்சத்திரங்களைத் தேடிப் பொறுக்கிக் குவித்து வைப்பதுபோல், உற்சாகத்துடன் தொடர்ந்தேன். கனமான மேகம் என்று நினைத்து கால்வைக்க, பஞ்சு பொதிபோல் உள் இழுத்தது ஒரு மேகம். கால் சறுக்கியது. லேசாக நினைவு இடற, பள்ளத்துக்குள் காலை விட்டிருந்தேன். பள்ளத்தில் கால்… மேட்டில் நான். நிதானித்தேன். சுற்றி அடர்ந்த இருள். நட்சத்திரம் வரைந்துகொண்டே முள் புதருக்குள் நிறைய தூரம் வந்துவிட்டு இருந்தேன். வயிறு கலங்கியது. அழுகை வந்தது.

இருட்டுக்குக் கண்ணைப் பழக்கினேன். குட்டையான அடர்ந்த முள்ளு கனகாம் பரம் செடியில், மஞ்சளாக அடர்ந்து பூக்கள் தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. சுற்றிப் பார்த்தேன். எழுந்து போகலாம். அசைந்தேன். பக்கத்தில் ‘உர்’ என்று உருமல். தூக்கிவாரிப் போட்டது. திரும்பிப் பார்க்க முடியாமல் கழுத்தைப் பிடித்துக்கொண்டதுபோல் இழுத்தது. மறுபடியும் ‘உர்’… கால்கள் நடுங்கின. கண்களை மட்டும் தோள்பட்டை வரை திருப்பி, பின்னால் பார்த்தேன். ”அம்மா…” சத்தமாகக் கத்தினேன். பெரிய பன்றி. மீண்டும் திரும்பினேன். பன்றி தலையை மட்டும் மெள்ளத் தூக்கி இருந்தது. பன்றி உடல் முழுவதும், மேலேறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் பத்துப் பன்னிரண்டு குட்டிகள். இரண்டு நாள்தான் ஆகியிருக்கும் – குட்டி போட்டு.

‘குட்டி போட்ட பன்றி, யாரையும் கிட்ட சேர்க்காது. விரட்டிக் கடிக்கும்’ அம்மா சொன்னது எல்லாம் முதுகில் அடியாக விழுந்தது. என்னால் அசைய முடியவில்லை.

பன்றி அரை மயக்கத்தில் என் அசைவைக் கவனித்தபடி அசையாது இருந்தது. நான் காலை நகர்த்த மெதுவாக அசையும்போது, பன்றியின் உடம்பு மெள்ள உயர்ந்தது. காது மடல்கள் நேராகி விரைத்து நின்றன. வேர்த்தது. நெஞ்சடைத்தது. தொடைகள் கனத்தன.

அழுகையாக வந்தது. சங்கரியைத் திட்டினேன். அம்மாவை வெறுத்தேன். கன்னியம்மா கிழவியின் கையைக் கடிக்க நினைத்தேன். இன்று பன்றியால் கடிபடப் போகிறோம் என்று தெரிந்துவிட்டது. ஒண்ணுக்கு பெல் அடிச்ச சத்தமே கேட்கவில்லை. கேட்டுத் தொலைச்சிருந்தா, அப்பவே போயிருக்கலாம். என்னைத் திட்டிக்கொண்டேன்.

பன்றி அசையாமல் இருந்தது. நான் அசைந்தால் அதுவும் அசைந்தது. யாராவது வருவார்களா இந்த முள் காட்டுக்குள், பார்வையால் துழாவினேன். பெரிய புதருக்குப் பின்னால் மஞ்சள் பூக்களுக்கு மத்தியில் சிவப்பாக ஒரு புள்ளி. இன்னும் பயம் கூடியது. அப்போது தான் பீடி நாற்றத்தை உணர்ந்தேன். ‘அய்யய்யோ… யாரோ ஆள் மறைஞ்சு இருக்கான்… நம்மைப் பார்த்துட்டு இருக்கான்… உயிர் நரம்பை உருவி எடுத்த தைப்போல் வாய்விட்டு அலறினேன். ”அம்மா…” சிவப்புப் புள்ளி லேசாக அசைந்து இடம் மாறியது. ”சங்கரி…” கத்தினேன். வார்த்தை என் தொண்டைக்கு உள்ளேயே முடிந்துபோனது.

திரும்பிப் பார்த்தேன். பன்றி அமைதியாகத் தலையைக் கீழே சாய்த்து இருந்தது. தேம்பித் தேம்பி அழுதேன். அழுது அழுது இப்போது சத்தம் மட்டும் வந்தது. கண்ணீர் வரவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. சாப்பாட்டு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. மணிச் சத்தம் கேட்டவுடன் வீட்டுக்கு ஓடிப் போக வேகமாக எழுந்தேன்.

சட்டென்று நான் எழுந்தவுடன், பன்றி உர்ரென்று உருமி, குட்டிகளை உதறித் தள்ளி எழுந்து நின்றது. என்னைப் பார்த்து சீறியது. வேகமாக எழுந்ததில் தலைமுடி முள்ளுச் செடியில் கொத்தாக மாட்டிக்கொண்டது. ”அம்மா…” என்று அலறியபடியே தலைமுடியைப் பிடித்துக்கொண்டேன்.

பயத்தில் எனக்கு சிறுநீர் வருவதுபோல இருந்தது. தலைமுடியை இழுத்துப் பார்த்தேன். முள்ளில் பின்னலோடு மாட்டி இருந்ததில் அசைக்க முடியவில்லை. பன்றி எதிரில் உருமியபடி நின்று இருந்தது. பாவாடை நனைந்தது.

‘ஒண்ணுக்குப் போயிட்டமோ?’ அம்மா விடம் பாவாடையை நனைத்துக்கொண்டு போய் உதை வாங்கப்போகிறோம் என்ற பயம் வந்தது.

தொடை இடுக்கில் ரத்தம் கசிந்துகொண்டு இருந்தது!

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

1 thought on “வெளிய

  1. எப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கிடையில் அச்சிறு பெண்! உருக்கும் தத்ரூபக் காட்சி… தாண்டித் தாண்டி … தீராத பள்ளங்கள்… பெண்ணென்று பிறந்து விட்டால்…. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *