வீம்பும் வீராப்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 2,850 
 

ஒரு ஊர்ல – ஒரு பண்ணையாரு இருந்தாரு. அவருக்கு நெறயா நெலங்க. நெலத்ல வேல செய்ய, ஒருத்தன வச்சிருக்காரு. அவ சின்னப் பிள்ளயில இருந்து, பண்ணயில வேல செஞ்சுகிட்டு இருக்கா.

இருக்கயில – பெரியாளாயிட்டார். பெரியாளாகவும் -, பண்ணயாரு, இவனுக்கு, கல்யாணம் பண்ணணும்ண்டு நெனச்சாரு. நெனச்சு, ‘ஒரு பொண்ணப் பாத்து, கல்யாணஞ் செஞ்சு வச்சுட்டாரு. கல்யாணம் பண்ணி வச்சிட்டு, தவசந் தானியத்தக் குடுத்து, தனிக்குடித்தனம் வச்சுட்டாரு.

கல்யாணமாகி, தனிக்குடித்தனம் நடத்துன அண்ணக்கிருந்து, வேலைக்குப் போகாம, வீட்ல ஒக்காந்து திண்டுட்டுருக்காங்க. இருக்கயில, தவசந்- தானியம் தீந்துபோச்சு. தீந்து போகவும், பண்ணயாருகிட்டப் போயி கேட்டா. கேக்கவும் -, பண்ணயாரு இல்லண்டு சொல்லிட்டாரு.

குடுக்கயில, வேலக்கிப் போகாம வீட்ல ஒக்காந்துகிட்டுத் திண்டாங்க. அது தீந்துபோச்ச. தீந்து போகவும் கஞ்சிக்கில்லாமப் போச்சு. சும்மா போயிக் கேட்டா பண்ணயாரு குடுப்பாரா? குடுக்கல்ல. குடுக்காம இருக்கவும், இவங்களும், எத்தன நாளாக்கி பட்னியா கெடப்பாங்க.

இப்டி -, இழுத்துக்க – பரிச்சுக்கண்டு இருக்கயில, நல்ல நாள் வந்திருச்சு. நல்ல நாளக்கி, நெல்லு வேணும்ண்ட்டு , ரெண்டுபேரும், நெல்லு பெறக்கப் போகணும்ண்டு நெனக்கிறாங்க.

அப்ப-, நிய்யி போயி, நெல்லு பெறக்கிட்டு வா. நா போயி, எண்ண கொண்ட்டுட்டு வரே. நல்ல நாளாக்கி, பணியாரஞ் சுடலாம்ண்டு, புருச சொல்றா. சொல்லவும், சரிண்ட்டு, ரெண்டு பேரும் போறாங்க.

இவ போயி, அறுத்த வயல்ல, ஒண்ணொன்னாப் பெறக்கி, ரெண்டு படி நெல்லு கொண்ட்டு வந்திட்டா. எண்ணக்கி – அவ ராத்ரில போயி, கோயில்கள்ல எரியிற வௌக்குகள அமத்திட்டு, சட்டிகள்ல இருக்ற எண்ணய வடுச்சு – வடுச்சு, ஒரு படி எண்ண கொண்டுட்டு வந்திட்டா.

அப்ப – நல்லநா வருது. நெல்லக் குத்தி; ஆட்டி பணியாரத்துக்குப் போட்டாங்க. போட்டு, விடியங்காட்டில எந்திரிச்சு பணியாரஞ் சுடுறா. சுட்டு – கிட்டு வட்டில அடுக்கி வச்சிருக்கா.

வச்சிட்டு, ரெண்டு பேரும் திங்கப் போகயில, ரெண்டு பேருக்கும் சண்ட வந்திருச்சு. நாந்தான நெல்லு கொண்டு வந்தே. நா நெல்லு கொண்டு வரலேண்டா பணியாரஞ் சுட முடியுமா? அதுக்கு, எனக்கு ரெண்டு பங்கு பணியாரம் வேணும்ண்டு பொண்டாட்டி சொல்றா. அதுக்கு -, நாந்தான எண்ணை கொண்டு வந்தே. எண்ண யில்லண்டா பணியாரஞ்சுட முடியுமா? அதுனால எனக்குத்தா ரெண்டுபங்கு வேணும்ங்றா, புருசெ.

இப்டி – இரண்டு பேருக்குள்ள சண்ட வந்து ரெண்டு பேருமே பணியாரத்த திங்காம இருக்காங்க. அப்ப -, ரெண்டு பேருமே, ஆரு மொதல்ல பேசுறாங்களோ அவங்களுக்கு, ஒரு பங்கு பணியாரம், போசாம இருக்கவங்களுக்கு ரெண்டு பங்கு பணியாரம்ண்டு பேசி, ரெண்டு பேரும் பேசாம இருக்காங்க.

பணியாரம் சுட்டுக்கெடக்கு. ரெண்டு பேரும் ஆளுக்கொரு மூலையில் ஒக்காந்திருக்காங்க. பேசுனாத்தே – பணியாரம் போச்சே. அவ மொதல்ல பேசட்டும்ண்டு இவ நெனக்கிறா. அவ மொதல்ல பேசட்டும்ண்டு இவ நெனக்கிறா. இப்டி, நெனச்சுக்கிட்டு இருக்காங்க. எங்க பேசப் போறாங்க? பேசுனாப் பணியாரம் போச்சே.

இப்டி இருக்கயில – அடுத்த வீட்டுக்காரி திய்யி எடுக்க வந்தா. வரயில -, ரெண்டு பேரும் பேசாம ஒக்காந்திருந்தாங்க. கூப்ட்டுப் பாத்தா. ஒருத்தரும் பேசல. தொட்டு அசச்சுப் பாத்தா. அப்பவும் பேசல. நறுக்கா – நாப்பது பணியாரத்த எடுத்து வட்டில வச்சு திங்கிறா.

திங்கயில -, புருச சத்தம் போடட்டும்ண்டு பொண்டாட்டி இருக்கா. பொண்டாட்டி சத்தம் போடட்டும்ண்டு புருச இருக்கா. ரெண்டு பேரும் பேசல. அடுத்த வீட்டுக்காரி, வகுத்துக்குப் பணியாரத்த திண்ட்டு, வெளில போயி, எல்லாருகிட்டயும் சொல்லிட்டா. எல்லாரும் ஓடியாந்து சத்தம் போட்டுக் கூப்ட்டாங்க. ஏ… இன்னாரு!! ஏ… இன்னாரு பொண்டாட்டி!! எந்திரிங்க! எந்திரிங்கண்டு சத்தம் போட்டாங்க. அப்பவும் எந்திரிக்கல.

எந்திரிக்காம இருக்கவும் -, ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்களேண்டு பேசிக்கிட்டு, பாடயக் கட்டுறாங்க. குளுப்பாட்டி – கிளுப்பாட்டி பாடயில தூக்கி வச்சாங்க.

அப்பயும் எந்திரிக்காம இருக்கவும், சுடுகாட்டுக்குத் தூக்கிக்கிட்டுப் போறாங்க.

சுடுகாட்டுக்குக் கொண்டுபோயி; வெறகுகள அடுக்கி, அது மேல ரெண்டு வேரயும் தூக்கி வக்கிறாங்க. அப்பவும் ரெண்டுவேரும் பேசமாட்டேங்குறாங்க. பேசுனாத்தா பணியாரம் போச்சே. பணியாரங் கூடக் கெடைக்கணும்ண்டு பேசாம இருக்காங்க. புருசனும் – பொண்டாட்டியும் பணியாரத்த நெனச்சுக்கிட்டிருக்காங்க. ஊருக்காரங்க, செத்துப் போனாங்கண்டு எரிக்கப் போறாங்க.

என்னன்னா செஞ்சாலும் எந்திரிக்காம, பேசாம இருக்கவும் திய்ய மூட்டுவோம்ண்ட்டு , திய்ய மூட்டுனாங்க. மூட்டுன திய்ய நல்லா எரியது.

திய்யி எரியவும் -, இவங்களுக்கு பயம் வந்திருச்சு பொம்பள பேச மாட்டா போலிருக்கு: நம்ம ஏ… வீனா சாகணும்ண்டு நெனச்சு, சத்தத்தப் போட்டு எந்திரிச்சா. அப்படிப் பொம்பள பேசாமப் படுத்துக் கெடக்கா. திய்யி எரியுது. மேல பொசுக்கவும் அலறியடிச்சு எந்திரிச்சா. எந்திரிக்கவும், அவள், ஆள் ஆளுக்கு வஞ்சு – பேசி, வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டாங்க.

பொம்பளக்கி எம்புட்டு அரங்கத்தளம் விம்பு – வீராப்பு, இப்டிப் பொம்பளய என்னா செய்யுறது. பெறகு, இவள என்னா செய்யுறதுணட்டு, கூட்டி வச்சுப் பொச்சானாம்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *