விருந்து முடிந்து வீடு திரும்பிய வினய் சற்றே பதற்றமும், சமாளிக்கும் சிரிப்புமாய் மனைவியை அழைத்தான்,
‘விஜி……… எங்கேடா இருக்க? என் செல்ல பொண்டாட்டியே…..’
அடுக்களையில் இருந்து வெளிப்பட்ட விஜியின் முகத்தில் எப்போதும் ஒளிரும் புன்னகை இல்லை.
திடுக்கிட்டாலும் காட்டிக்கொள்ளாது அவளருகே வந்தான் வினய்.
‘என்னடா செல்லம் நிறைய வேலையா ? ரொம்ப சோர்வா இருக்கியே …..’ என கேட்டவாறு
தோளை தொட்டவனை சுட்டெரிப்பது போல் பார்த்தாள் விஜி. அய்யய்யோ தெரிஞ்சிருக்குமோ …. என மனதுள் பதறியவன், புன்னகை மன்னனாய் மனைவியிடம்,
‘சாப்டியா செல்லம்….’ என வழிந்தான்.
‘நான் சாப்பிடுவது இருக்கட்டும். நீங்க நல்லா சாப்ப்டுட்டு வந்திருக்கீங்க போல…’ ஒரு மாதிரி குரலில் அவள் கூறினாள். முகம் சட்டென அதிர்வை காட்ட, ‘உனக்கு எப்படி…’ என வாய் தன்னை அறியாமல் கேள்வி கேட்டது.
‘ம்….. உங்க நண்பர் சிவா சொன்னார்’ என உரைத்தவள் சட்டென கோபம் பொங்க,
‘எத்தனை தடவை சொல்லி இருப்பேன்… விட்டுடுங்க விட்டுடுங்கன்னு…. எவ்ளோ பட்டும் புத்தி வரலையே…… நீங்க…’ கோபத்தில் துவங்கியவள் கண்ணீரில் முடித்தாள். மனைவியின் கண்களில் கண்ணீரை கண்டதும் கணவனின் மனம் சட்டென நெகிழ்ந்தது.
‘சாரிடா கண்ணா … இனி இல்ல… ‘
‘அதுவும் எவ்ளோ உள்ள போகுதுன்னு கணக்கே இல்லாம ….’
‘விஜிமா நானும் எவ்ளவோ கண்ட்ரோலா தாண்டா இருக்கேன். ஆனாலும் …..’
‘அப்போ சத்தியம் பண்ணுங்க…..’
‘சரி’
‘உங்க மேல இல்ல …. என் மேல பண்ணுங்க…..’
ஒரு நிமிடம் தயங்கியவன் விஜியின் கண்களில் உறுதியை கண்டு,
‘என் அன்பு பொண்டாட்டி மேல சத்தியமா…..’
‘ம் சொல்லுங்க…..’
‘ஓகே …… சத்தியமா நான் ஸ்வீட்டே தொட மாட்டேன்…..’ என சூளுரைத்தான் சர்க்கரை நோயாளியான வினய்.
விஜியின் முகத்தில் புன்சிரிப்பை கண்டு, ‘ விஜி எனக்கு ஒரு டவுட்’
‘என்னங்க?’
‘நீ ரொம்ப ஸ்வீட்டாச்சேமா உன்னை தொடலாம்ல….’ குறும்பாய் கண்ணடித்து வினவியவனை, ‘ச்சீ ‘ என செல்லமாய் மார்பில் குத்தினாள் விஜி. சட்டென அவளை இழுத்து இறுக அணைத்தான் வினய்.