வரமா ??? சாபமா ???

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 4,590 
 

கனகா என்ற கனகவல்லி போட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கிறாள் …..

பெரிய ரோஜாப்பூ மாலை ….. !!கனகாவுக்கு பிடிக்குமாம் ….!!!!

இன்றைக்கு சுபசுவீகாரம் ! இனிமேல் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கலாம் !!
இலை போட்டு சாப்பாடு……!!

“கனகா குடுத்து வச்சவ ! சுமங்கலியா போய்ச் சேந்துட்டா…நம்பாத்திலேயே காமு பாட்டிக்கப்புறம் கனகாதான் பூவோடயும் பொட்டோடயும் போயிருக்கா …”

மூத்த நாத்தனார் மங்களத்தின் புகழாரம் …..!!!

“கனகாவுக்கு ரொம்ப பிடிச்ச மாங்கா பச்சடி கண்டிப்பா இருக்கணும்னு சொல்லிட்டேன்!!”இது மாமியார் !!

எண்பது வயதாகியும் நாக்கு ருசி விடவில்லை ……!

கனகாவின் கணவர் எப்போது வாயைத் திறந்தார் ???….இப்போது திறப்பதற்கு ….???

மூன்று பந்தி சாப்பாடு ! போனவர் வந்தவர் எல்லாம் ஒரேமாதிரியாய் ‘

“பஞ்சாபகேசன் ஜமாய்ச்சுட்டார் ! அதுவும் அந்த ஜாங்கிரி இன்னும் வாயிலேயே நிக்கறது! கனகா மனசு போல திருப்த்தியா நடந்துடுத்து”என்று சொல்வதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது !!

எத்தனை பரிவு .. எத்தனை அன்பு !! எனக்கு திருப்த்தியாம் ! என் மனசு நல்லதாம் …. என்ன வேஷம்…….??? எத்தனை பொய்கள் ….???

என்ன முழிக்கிறீர்கள் ???

நான்தான் கனகா என்ற கனகவல்லியாய் பதிமூன்று நாட்கள் முன்பு வரை பூமிக்கு பாரமய் இருந்தவள் !!

சித்திரகுப்தன் லிஸ்ட்டில் பேர் சேர்த்துவிட்டதால் இப்போது பூலோகத்திலிருந்து மேலோகத்துக்கு டிரான்ஸ்ஃபர். !!!

கனகா என்ற பெயரிலிருந்து விடுதலை !!!

அம்மா மட்டும் சாப்பிடப் போகாமல் பிழிய பிழிய அழுது கொண்டிருக்கிறாள் !

அண்ணா தியாகுவும் மன்னி மாலுவும் வாடின முகத்துடன் சாப்பிடாமல் ….!!!

“மாமி ! நிறைய அழுதாச்சு ..போறும்…இனி சுப காரியம் நடக்கணும் … என்ன குறை கனகாவுக்கு ….நிறஞ்ச சுமங்கலியாத்தானே போயிருக்கா

…வாங்கோ சாப்பிட…மாலு …தியாகு… அம்மாவ கூட்டிண்டு வாங்கோ … அவா முடிச்சுட்டு போகணும் ….!!!

சின்ன நாத்தனார் அதட்டும் குரலில் கூறினாள் …

நான் இப்போது யாருக்கும் எதற்கும் கட்டுப்பட்டவளில்லை !! சொல்லப்போனால் “சுதந்திர பறவை..”

அதற்காக வெள்ளை நைலான் புடவையில் மேகக் கூட்டங்கள் நடுவில் ‘ யார் நீ ??… ஜெயலலிதா மாதிரி ‘ நானே.. வருவேன்..’ என்று பாடிக்கொண்டிருப்பேன் என்று எதிர் பார்த்தால் ஏமாந்து போவீர்கள் !!

மின்சார தகனத்தில் என்உடல் சாம்பலாகிய உடனே அண்ட சராட்சரத்திலுள்ள கோடானுகோடி அணுக்களில் ஒன்றாக கலந்து விட்டேன் !

எனக்கு உங்களை நன்றாகப் பார்க்க முடியும்! கேட்க முடியும் !

இது வரமா ???…..சாபமா ????

சீக்கிரமே புரிந்து கொள்வீர்கள் !!! பயமாய் இருக்கிறதா ????…….

***

என் கதை சுருக்கம்……..

கனகா என்ற கனகவல்லியாய் இருந்த என்னுடைய பூர்வீகம் மாயவரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமம் …

வெங்கடேச சர்மாவுக்கும் சுந்தரவல்லிக்கும் மகளாய் பிறக்க புண்ணியம் பண்ணியிருந்தேன்!

அப்பாவைப்போல் ஒரு சத்தியசந்தனைப் பார்க்க முடியாது ! வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது ….

அம்மா பரம சாது…. அண்ணா தியாகு அம்மாவைப் போல..!!!

இரண்டு பேருமே மாயவரம் பள்ளியில் படித்து முடித்ததும் அப்பா கும்பகோணத்திற்கு ஜாகை மாற்றினார்.

P.U.C . படித்ததுமே வரன் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
முதல் வரனே என் கணவராயிருந்த சாம்பசிவம் தான் !!

மதுரையில் பெரிய கூட்டுக் குடும்பம் !! மாமனார் , மாமியார் , கல்யாணம் ஆகாத இரண்டு நாத்தனார் , மச்சினர் , மாமனாருடன் கூடப் பிறந்த விதவை தமக்கை என்று வீடு நிறைய மனுஷர்கள் ……!!!

ஆரம்பத்தில் அனுசரித்து போக முடியாமல் திணறினேன் !

மாமியார் , நாத்தனார் வாயிலிருந்து எப்போது என்ன வார்த்தை வரும் என்று யூகிக்க முடியாது …..

இவர் வாயைத் திறந்து பேசுவதற்கே அம்மா முகத்தை பார்ப்பார் …..

அத்தை வீட்டிலேயே விதி விலக்கு தனியாய் இருக்கும் போது என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து எனக்கு தைரியம் சொல்வார் ….

மாங்காய் பச்சடி கதை சொல்லியே ஆக வேண்டும்….!!!!!!

சித்ரா வயிற்றில் மூன்று மாதம் … மாங்காய் பச்சடி என்றால் எனக்கு உயிர்.. அம்மாவுக்கு தெரியாதா ..!! !!!!

என்னைப் பார்க்க வரும்போது பெரிய பாட்டில் நிறைய மாங்காய் பச்சடி….

மாமியார் கையில்தான் தந்தாள் …

“என்னம்மா !! அதுக்குள்ள அம்மாக்கு தூது போயாச்சா ???.. எங்களுக்கெல்லாம் பண்ணத் தெரியாதா ??… என்ன அழுத்தம்….?? பாக்க சாது மாதிரி இருந்துண்டு .????

‘ அவ ஒண்ணுமே சொல்லலியே….. அவளுக்கு பிடிக்கும்னு நானேதான்….’

“போறும் ! அவளுக்கு பிடிச்சதெல்லாம் பாத்து பாத்து பண்ணி என்ன கண்டோம்….??”

உள்ளே போன மாங்காய் பச்சடியில் ஒரு வாய் மாதிரிக்கு சாப்பிட்டதோடு சரி…

“கனகாவுக்கு பிடிச்ச மாங்கா பச்சடி கண்டிப்பா இருக்கணும்னு சொல்லிட்டேன்””

மாமியார் சொன்னது என் காதுகளில் நாராசமாய் ஒலித்தது .

***

மாயவரத்தில் வீட்டின் முன்னால் இருந்த இடத்தில் சின்னதாய் ஒரு தோட்டம் ….குழந்தையிலிருந்தே எனக்கு ரோஜாப்பூ பைத்தியம்..

வித விதமான கலரில் ரோஜாக்கள் … நானேதான் பார்த்துக் கொள்வேன் !

ஒற்றை ரோஜாவை கிளிப் வைத்து தலையில் ஒரு பக்கம் வைத்துக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போவேன் …!!!

கல்யாணம் ஆகி ஆறு மாசம் இருக்கும் !

வாசலில் பூக்காரி….நல்ல சிவப்பு ரோஜாக்கள்…சுவாமிக்கு வழக்கமாய் வாங்கும் மல்லிகையுடன் அதையும் வாங்கிக் கொண்டேன் …

சாயங்காலம் விளக்கேற்றி விட்டு ஒரு பூவை ஸ்லைடில் குத்தி வைத்துக் கொண்டேன் …

“இது என்ன இல்லாத புது வழக்கம் ???… காலேஜ் பொண்ணுன்னு நினப்பா …? வேணும்னா ஒரு முழம் மல்லிக வச்சுப்பாளா ? அத விட்டுட்டு …!!

பிரசவத்துக்கு வந்த மூத்த நாத்தனார் …!!!

இப்போது எனக்கு பிடிக்குமாம் … பெரிய ரோஜாப்பூ மாலை …..!!!!!!

***

எனக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது !! உண்மையிலேயே என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் ?? முதலில் என்னை நினைத்துப் பார்க்கக்கூட நேரம் இருக்குமா ????….. பார்த்தால் என்ன என்று தோன்றியது ….!

முதலில் வாயே திறக்காத என் கணவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது ……

கணவரும் மாமியாரும் அதே வீட்டில்…. மாமியார் நடக்க முடியாமல் தள்ளாமை வந்திருக்கிறது.

மூச்சுக்கு முன்னூறு தடவை ‘ சாம்பு ….சாம்பு…’ என்று கூப்பிட்ட வண்ணமாய் பாவம்…!!!

இரண்டு நாள் நிசப்த்தமாய் ….. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை…

இன்றைக்கு காலையில் சீக்கிரமாய் குளிக்கிறார் !! நெற்றி நிறைய திருநீறு வைத்துக் கொண்டு …

“அம்மா ! நா கோயிலுக்கு போய்ட்டு வரேன்….”

“என்ன சொன்ன ..??”

காது சரியாகக் கேட்கவில்லை….”

“கோயிலுக்கு போய்ட்டு வரேன்னேன்…. ”
சத்தமாய் சொன்னார் …..

“என்னடா ? இன்னிக்கு என்ன விசேஷம் ???..”

“கனகா பொறந்த நாள் !! அறுபத்தஞ்சு வயசாறதும்மா !!!!….”

“சரி ! சரி ! மகராஜி ..அவ போய்ச்சேந்துட்டா … உன்னையும் என்னையும் தவிக்க விட்டுட்டு ….சட்னு போனோமா ..வந்தோமான்னு வந்து சேரு..

உனக்கும் வெயில்ல அலஞ்சா ஆக மாட்டேங்கறது !!. கூட்டமாயிருந்தா வெளிலேர்ந்து கன்னத்தில போட்டுண்டு வந்து சேரு….”

“அம்மா ! என்ன பேசற..பொறந்தநாள்னு சொல்றேன்…அர்ச்சனையெல்லாம் பண்ணிட்டு தான் வருவேன்.. எவ்வளவு லேட்டானாலும் சரி……”

“சாம்பு …நீ மாறிண்டே வர ….”

அட…இவரா பேசறது…?? கைதட்டணம் போல இருந்தது !!!..
இவ்வளவு ஆசையை என் மேல் வைத்துக் கொண்டு ஏன் தலையாட்டி பொம்மை மாதிரி ….. ???

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வரது…. லேசில் மறக்குமா …..??

திருமணமாகி ஒரு வருஷம் எங்கேயும் போகவில்லை ! வீட்டுக்குள் சுத்தி வந்து அலுத்து விட்டது ! சாம்பு என்னிடம் கொஞ்சம் நெருங்கியிருந்தார் ! “

“நாம் எங்கேயாவது ஒரு வாரம் வெளியூர் போலாமா….??

“நாம்பனா ??? அம்மா அப்பா எல்லாரும் தானே …???

எனக்கு சிரிப்பு வந்தது !
“நாம்பன்னா நானும் நீங்களும் மட்டும்… கொடைக்கானலுக்கு அம்மா அப்பா எல்லோருமா…??”

“கொடைக்கானலா …..? அங்கெல்லாம் போனதேயில்லை …”

“அதான் போலாங்கறேன் …”

“அம்மா என்ன சொல்வாளோ ….???

“முதல்ல டிக்கெட் புக் பண்ணிடுங்கோ .. அப்புறம் சொல்லிக்கலாம்..’

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் நான் சொன்னபடியே செய்து விட்டார். .. !

“என்னது ..? கொடைக்கானலா …? என்னவோ புதுசு புதுசா நடக்கிறது …..நம்பாத்தில இப்படி தனியா போணம்னு யாருமே நின்னதில்லயே …

அடுத்த வாரம் எல்லாருமா சேந்து குலதேய்வம் கோவிலுக்கு போறதா வேண்டிண்டாச்சு!! முதல்ல டிக்கெட்ட கேன்சல் பண்ற வழியப் பாரு….. ! அவதான் சொன்னான்னா உனக்கும் புத்தி போறதே..! “

ஒரு வார்த்தை பேசணுமே .. என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கிளம்பி விட்டார் …!!!!

அன்றைக்கு மட்டும் இப்போ பேசின மாதிரி பேசியிருந்தால் என் வாழ்க்கையே எப்படியோ மாறியிருக்கும் !!!

இப்போ கனகான்னு உருகி என்ன பிரயோஜனம் !!

சித்ராவையும் பவித்ராவையும் பார்க்க ஆசையாயிருந்து !! என்னுடைய பெண்கள் !!!Iஇரண்டு பேரும் அமெரிக்காவில் ….

***

எனக்கென்ன பாஸ்போர்ட்டா ..??? விசாவா… ?? இமிக்ரேஷன்… செக்யூரிட்டி செக் ஒன்றும் வேண்டாமே ……!!!

சித்ரா நல்ல புத்திசாலி …சுருசுருப்பு ….படி என்று அவளை சொல்லவே வேண்டாம் ..

அவளுக்கு வரன் பாத்த போது ‘ பக்கத்திலேயே பாரு’ என்று மாமியார் சொல்லி விட்டதால் மறு பேச்சு இல்லை !

ஆனால் அமைந்ததென்னவோ கலிபோர்னியா மாப்பிள்ளை !!

பெரிய வீடு !!! பின்னாடி தோட்டமே ஏக்கர் கணக்கில் இருக்கும்! நடுவில் அழகான சின்ன வீடு ….. முன்னால் பூச்செடிகள் !!! எனக்கு பிடித்த ரோஜா செடிகள் !!

சித்ரா …..பான்ட்..ஷர்ட்டில்.. !! எத்தனை அழகாய் இருக்கிறாள்…

“மாயா….be careful dear…..!!!!!

மாயா என்னுடைய பேத்தி….. மூன்று வயசு இருக்கும் …. நான் படுக்கையில் இருக்கும் போது ஒரு வயது குண்டு பாப்பா…!!!!

ஓடிப் போய் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது …..

ஒரு வாரமாகி விட்டது …..

பிஸி…பிஸி…பிஸி… !!!!

எதற்கும் நிற்க நேரமில்லாத வாழ்க்கை…. என்னைப் பற்றின பேச்சே வரவில்லை….

சனிக்கிழமை…காலைநேரம்….! !!!!

அருணும் சித்ராவும் மாயாவுக்கு கார்ட்டூன் போட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தார்கள் …

“Mom ! Do I have a grandma ???…”

“You had two grandmas… Not anymore…”

“Why ?? What happened …..???

“I want a grandma….”

குழந்தை ஓடிப்போய் ஒரு போட்டோவைக் கொண்டு வந்தாள்…..

“Who is in this photo with me ….???”

மாயா என் மடியில் ஒரு வயது குழந்தையாய் ….. என் தலையில் ஒற்றை ரோஜா ….

“Does grandma like roses ????.”

“Yes !

பாட்டிக்காகத்தான் இத்தனை ரோஜாப்பூ …மாயாக்குட்டி….”

“I want my grandma…..!!!!!”

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி……

என் கண்ணில் நீர் வழிந்திருக்கும்…..கனகாவாயிருந்திருந்தால்……..

பவித்ரா இருப்பதோ அந்தக் கோடி …மான்ஹாட்டனில் ஒரு ‌ அபார்ட்மெண்ட் ! எனக்கு ஒரு கணம் கூட ஆகவில்லை ….

தனியாகத்தான் இருக்கிறாள் போலிருக்கிறது !!

நுழைந்தவுடன் சென்டர் டேபிள் மேல் நானும் அவளும் சித்ராவும் சிரித்துக் கொண்டு …. மதுரையில் எடுத்தது ….

இப்போது நடந்த மாதிரி இருக்கிறது…..

மதுரையில் தான் என்னுடைய திருமண வாழ்க்கை ….!!!!

சித்ரா , பவித்ரா பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம்….

மூன்று பேரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய் விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம்…

மேலாவணி மூல வீதியில் ஜுபிடர் ஸ்டூடியோவைப் பார்த்தவுடன் பவித்ரா நின்று விட்டாள்!

“அம்மா ! வாம்மா! மூணு பேரும் சேந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம்…”

“ஏய் ! என்ன உளர்ற !! நாம மூணு பேர் மட்டும் போட்டோ எடுத்துண்டோம்னு தெரிஞ்சா பாட்டி கொன்னுடுவா…. ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி …”

“பின்ன ! உன்ன மாதிரி … அம்மா மாதிரி .. தினம் பயந்து செத்துப் பிழைக்க என்னால் ஆகாது…”

அப்போது எடுத்த போட்டோ…. .. அதை மறைக்கப்பட்ட பாடு. …..

பவித்ரா வேலைக்கு கிளம்புகிறாள் போலிருக்கிறது ..

என் படத்தை கையில் எடுக்கிறாள்…

“லவ் யூ மாம் ”

வைத்து விட்டு கிளம்பி விட்டாள் …

அவள் இப்போது கொலம்பியா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடிக்கப் போகிறாள்…. ”

“எனக்கொண்ணும் கல்யாணமே வேண்டாம் …….!!!!!!”

அவள் அடிக்கடி சொன்ன வார்த்தைகள்…….!!!

சொன்னபடிசெய்து விடுவாளோ ….???”

***

திருமணமாகி நான்கு வருஷம் ஆகியிருந்தது…. குழந்தை இல்லையென்று எங்களைவிட வீட்டிலிருந்த மற்றவர்களுக்குத் தான் ஒரே கவலை !!

சொல்லி வைத்தாற்போல் இவருடைய இரண்டு தம்பிகளுக்கும் திருமணமாகி பத்து மாசத்திலேயே அடுத்தடுத்து சீமந்தம் , வளைகாப்பு , தொட்டில்….

கொஞ்ச நாள் சும்மா யிருந்த வாய் மறுபடியும் முணு முணுக்க ஆரம்பித்தது …..

“இவா குடும்பத்திலேயே இந்த குடுப்பினை இல்லையோ என்னமோ …??

அவ அண்ணாக்கும் கல்யாணமாகி ஏழெட்டு வருஷமாச்சே….ஒண்ணையும் காணமே…

கனகா …நீ போய் ஒரு மாசம் ஊர்ல இருந்துண்டு எல்லா செக்கப்பும் பண்ணிண்டு வா… அம்மாகிட்ட உடம்பையும் அப்பிடியே தேத்தி அனுப்ப சொல்லு !!!..

“இதுக்காக ஊருக்கு எதுக்கு ??? மதுரையில இல்லாத ஆஸ்பத்திரியா ….????”

இவர் கேட்டிருக்க வேண்டிய கேள்வி …. ஆனால் கேட்கவில்லையே…!!!!

கும்பகோணம் வந்து ஆறுமாசமாச்சு … யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை….

என் மன்னி மாலுவைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும்…. அவளைப் போன்ற பொறுமைசாலியைப் பார்த்திருக்க
முடியாது…..

அப்பா போனபின் அம்மாவை கண்ணில் வைத்துப் பார்த்துக் கொள்கிறாள்…

குழந்தை இல்லை என்று தப்பித்தவறி கூட அம்மா வாயிலிருந்து வராது…

நடுவில் மாமனார் திதி வந்ததால் கணவர் என்னைத் திரும்பி அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம்…

இரண்டு மாதத்தில் சித்ரா வயிற்றில்.. அடுத்த ஒன்றரை வருஷத்தில் பவித்ரா..

“இரண்டும் பொண்ணாப் போச்சு !!! பாவம்…சாம்பு பாடு கஷ்டம்தான்…!!!!

இந்த வார்த்தைகளைக் கேட்டு கேட்டு வளர்ந்தவள் பவித்ரா…

ஒரு நாள் பொறுக்க முடியாமல் சொல்லி விட்டாள்….

“பாட்டி …அப்பா என் கல்யாணத்துக்கு பணம் சேக்கணும்கற கவலை உங்களுக்கு வேண்டாம்… நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லை ….நிம்மதிதானே…”

சித்ரா கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு மேற்படிப்பிற்கு வெளிநாட்டுக்கு போக ஆசைப்பட்டாள்.

ஆனால் கல்யாணம் பண்ணிதான் அனுப்பவேண்டுமென்ற மாமியாரின் உத்தரவை சிரமேற்கொண்டார் என் கணவர்.

அவளுடைய அதிர்ஷ்டம் அவள் ஆசைப்படி திருமணத்துக்கப்புறம் Caltech ல் MS முடித்து விட்டு கோபியுடன் அங்கு செட்டில் ஆகியிருந்தாள்.

அக்காவைப் தொடர்ந்து தங்கையும் கிளம்பி விட்டாள்…

ஆனால் தனியாக… அவளிடம் மாமியாரின் பாச்சா பலிக்கவில்லை….!!!!!

பெரிய நாத்தனாரை பார்க்க வேண்டும்!! படுத்த படுக்கையாய் இருக்கிறார்…

ஒருவரையும் பக்கத்தில் காணம் !!

“முரளி… முரளி… எவ்வளவு நேரமாக கத்தறேன் … கொஞ்சம் தண்ணி எடுத்து குடுப்பா…”

“அம்மா ..இப்போதானே குடிச்ச… எனக்கு ஆயிரம் ரூபா வேணும் … எங்க வச்சிருக்க…?

நாத்தனார் குழந்தைகளில் முரளிக்கு மட்டும் படிப்பு ஏறவில்லை !

சித்ராவும் அவனும் ஒரே வயசு ! லீவுக்கு மதுரை வந்து விடுவான்.. படிப்பு வரவில்லையே தவிர ரொம்ப பாசம்..

சித்ராவும் அவனும் நல்ல நண்பர்கள்.. !! எவ்வளவோ சொல்லியும் படிப்பில் அக்கறையே இல்லை..

நாத்தனார் ஏதோ முணுமுணுக்கிறாள்…

“முரளி…..முரளின்னு.. சித்ரா உருகுவாளே…..!!!

அமெரிக்கால அவளும் தங்கையும் கோடி கோடியாக சம்பாதிக்கறதுகளே..முரளிய கூப்ட்டுக்க கூடாது ….??

சொந்தக்காரான்னு எதுக்கு இருக்கு ??? கனகா சொல்லி வச்சுட்டு போயிருப்பா …கிட்ட அண்ட விடாதிங்கோன்னு….”

இவள்தான் நான் நிறஞ்ச சுமங்கலியாக போனேன் என்று சிலாகித்து பேசினவள்!!!!

அம்மாவையும் பார்த்துவிட்டு போய்விடுகிறேனே !!

அம்மாவை குளிக்க வைத்து கட்டிலில் உட்கார வைக்கிறாள் மாலு …

“கனகா !! சாப்பிட்டியாம்மா ?? உனக்கு பிடிச்ச பாவக்கா பிட்ல பண்ணியிருக்கேன் … குழந்த தூங்கும்போதே நீயும் சித்த படுத்துக்கோ….!!”

மறதி வந்துவிட்டது …

“கனகா சாப்பிடுவாள்… நீங்களும் டிபன் சாப்பிடலாம்…

வாங்கோம்மா…”

மாலு சமாதானப் படுத்துகிறாள்….
தீடீரென்று அம்மா அழுகிறாள்…

“கனகா…. என்னையும் கூட்டிக்கொண்டு போம்மா … இன்னும் எத்தனை நாளைக்கு … உன்னைப் பாக்கணும்….”

“அம்மா …நீ பயப்படாமல் வா… நான் உன்னை நன்னா பாத்துப்பேன்……”

***

எனக்கு முதல்முதலில் உடம்புக்கு வந்த நாள்…..!!!

இத்தனை வருஷமாய் எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து ஓடிக் கொண்டிருந்த இதயம் ஓய்வெடுக்க நினைத்திருக்கும்….!

மாரடைப்பு…!!! எந்த வித அறிவுப்பும் இல்லாமல்.

இந்த முறை தப்பித்து விட்டேன் !!

ஒரு மாசம் சித்ரா தான் வந்து பார்த்துக் கொண்டாள்… குழந்தை மாயாவுடன்…

ரொம்பவே ஒட்டிக் கொண்டாள் குழந்தை….

அவள் ஊருக்கு போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை….இந்த முறை மாஸிவ் அட்டாக்…!!!!

இப்போது கனகா போட்டோவில் மட்டும் நிரந்தரமாய் சிரித்துக் கொண்டு…. தீர்க்க சுமங்கலியாய்….. அவளுக்குப் பிடித்த ரோஜாப்பூ மாலையுடன்…..!!!!!!!!!!

இப்போது சொல்லுங்கள்..எனக்கு கிடைத்த இந்த அனுபவம் வரமா … .??? சாபமா. . . .?????

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *