கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 6,783 
 

மீனலோச்சனிக்கு இருபத்திநான்கு வயது. கல்யாணம் ஆனவுடன் கணவனுடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம், எவரையும் தெரியாது…எப்படிக் குடித்தனம் நடத்துவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது அறிமுகமானவள்தான் பக்கத்துவீட்டு காயத்ரி.

காயத்ரிக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். சிரித்தமுகத்துடன் சுறுசுறுப்பாக இருந்தாள். அவளின் அளவான சிரிப்பைப் பார்த்து மீனலோச்சினிக்கு அவளை ரொம்பப் பிடித்துவிட்டது. தானே போய் அறிமுகப் படுத்திக்கொண்டு காயத்ரியிடம் ஈஷிக் கொண்டாள். ஒரு சின்ன சந்தேகம் என்றாலும் அடிக்கடி அவள் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தாள்.

இருவருக்கும் நல்ல புரிதலுடன் நட்பு உண்டானது. காயத்ரிக்கு பள்ளிக்குச் செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். காலையில் அதுகளை எழுப்பிவிட்டு, பல்தேய்ச்சு குளிக்கச்செய்து, தலையைப் படிய படிய வாரி பின்னல்போட்டு, யூனிபார்ம் அணிவித்து, தேடாமல் சாக்ஸ் போட்டுவிட்டு, ஷூ அணிவித்து… இதற்கு நடுவில் மால்கோ ஆபீஸுக்கு கிளம்பும் அவள் கணவனையும் கவனித்துக்கொண்டு, பிரேக்பாஸ்ட் தயார்பண்ணி, பரபரன்னு அவள் செயல்படும் அழகே தனி. ஒரு நாளும் இதுகுறித்து அவள் அலுத்துக்கொண்டதில்லை.

ஒரு பகல் பொழுது மீனலோச்சனி “எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு நீங்க எப்படி இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்க?” என்று காயத்ரியிடம் கேட்டாள். .

“நான் அப்படி ஒன்றும் நினைத்ததில்ல லோச்சி. யாருக்காக இந்த சுறுசுறுப்பு? என் கணவர் குழந்தைகளுக்குத்தானே…! அவர்கள் மூவரும்தானே என் உயிர்மூச்சு? என்ன கொஞ்சம் யோசித்து ஆர்கனைஸ்டா இருந்தா எல்லாம் ஈஸியாக இருக்கும். முந்தையநாள் இரவே நான் குழந்தைகளின் ஹோம்வொர்க்கை முடிக்கச் சொல்லி, யூனிபார்ம், கர்சீப், சாக்ஸ் எடுத்து வைத்து, மூன்று பேரின் ஷூவையும் பாலீஷ் போட்டு வைத்துவிடுவேன். எல்லோரும் பத்து மணிக்கு படுத்துக்கொண்டு விடுவோம். அடுத்தநாள் காலை நான் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து இரண்டு பாத்ரூம் கீசரையும் போட்டுவைத்து, அவர்களை எழுப்பிவிட்டு, வரிசையாக அனைவரையும் குளிக்கச் சொல்லி விரட்டுவேன். அவர்கள் குளிக்கும்போது பிரேக்பாஸ்ட் ரெடி…. அவ்வளவுதான்.” வரிசையான பற்களில் அழகாக சிரித்தாள்.

அதைக்கேட்ட மீனலோச்சனிக்கு காயத்ரிமீது நட்பையும் மீறி ஒரு பிரமிப்பு கலந்த மரியாதை ஏற்பட்டது.

மூன்று மாதங்கள் சென்றன. மீனலோச்சினியின் வீட்டு வேலைக்காரி தவமணி விதவிதமான காரணங்கள் சொல்லி அடிக்கடி லீவு போட்டு அவளை சிரமப் படுத்தினாள். நல்ல வேலைக்காரி கிடைப்பது ரொம்ப அதிர்ஷ்டம் போலும் என்று நினைத்துக் கொண்டவள், காயத்ரியிடம் இதுபற்றி ஒரு ஐடியா கேட்டால் என்ன என்று தோன்ற, உடனே பக்கத்து வீட்டிற்கு சென்றாள்.

காயத்ரி, தோய்த்து வெயிலில் உலர்த்திய குழந்தைகளின் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

இவளைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே “வா லோச்சி, உட்காரு” என்றாள்.

“எங்க வீட்டு வேலைக்காரி தவமணி அடிக்கடி லீவு போடறா. வேற யாராவது நல்ல வேலைக்காரி தெரிந்தா சொல்லுங்களேன் இவளைக் கழட்டிவிட்டுடலாம்.”

“உனக்கு தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக ஆகிவிடும். எல்லா வேலைக்காரிங்களும் அப்படித்தான். இதுக்குதான் நான் வேலைக்காரிகளை வைத்துக் கொள்வதில்லை. இவளுகளை நம்பிக்கொண்டு நான் சோம்பேறியாக போயிடுவேன். வேணும்னா இன்னோவேட்டிவா ஒண்ணு பண்ணு. நீ இப்ப மாச சம்பளம்தான அவளுக்கு தர?”

“ஆமாம் மாசம் இரண்டாயிரத்து ஐநூறு தரேன். ஜஸ்ட் வீட்ட பெருக்கி, பாத்திரம் தேச்சா போரும். துணிகளை நான் ரெகுலரா வாஷிங் மெஷினில் போட்டுருவேன்.”

“இனிமே அவளுக்கு மாசம் மூவாயிரம் கொடு.”

“என்னது மூவாயிரமா?”

“ஆமாம் ஆனா மாசா மாசம் அல்ல…தினசரி நூறு ரூபாய். அவ வேலைக்கு வந்த அன்னிக்கி கைல நூறு ரூபாய் கொடு. வராதன்னிக்கு ஒன்றும் கிடையாதுன்னு சொல்லிடு….அப்புறம் பாரு. என்ன நடந்ததுன்னு என்னிடம் வந்து சொல்லு.”

மீனலோச்சனி தவமணியிடம் சம்பளம் ஐநூறு கூட்டப் படுகிறது என்றும் ஆனால் அது தினசரி நூறு ரூபாயாக வழங்கப்படும். வேலைக்கு வராத அன்றைக்கு ஒன்றும் கிடையாது என்றும் தெளிவாக சொல்லிவிட்டாள்.

என்ன ஆச்சரியம், தவமணி ஒழுங்காக தினசரி வேலைக்கு வந்து சுத்தமாக வேலை செய்து தினமும் நூறு ரூபாய் கையில் வாங்கிக்கொண்டு போனாள். ஒரே ஒருநாள் அவளுக்கு உண்மையிலேயே காய்ச்சல். அவள் வரவில்லை. ஆனால் அவளுக்கு பதிலாக அவளின் அக்காமகள் அதேநேரம் வந்து வேலை செய்தாள்.

கடந்த மூன்று மாதங்களாக, ஒரே ஒரு நாள்கூட வேலைக்காரி வராமல் மீனலோச்சனி அவதிப்படவில்லை. அவள் பூரித்துப் போனாள்.

காயத்ரியிடம் “எப்படிக்கா நீங்க இந்த ஐடியா குடுத்தீங்க? இத்தனைக்கும் நீங்க வேலைக்காரி வைத்துக்கொள்ளவில்லை” என்றாள்.

“சும்மா கொஞ்சம் மாத்தி யோசித்தேன். அவ்வளவுதான்.”

ஆறு மாதங்கள் கடந்தன. அன்று மாலை ஏழு மணிக்கு மால்கோ ஆண்டுவிழா. கணவர்கள் சீக்கிரம் கிளம்பிச்சென்று விட்டனர். மீனலோச்சனியும், காயத்ரியும் ஒன்றாக கிளம்பிச் செல்வதாக ஏற்பாடு.

மீனலோச்சனி ஆறு மணிக்கே வீட்டை பூட்டிக்கொண்டு, அழகான புடவையில் கிளம்பி பக்கத்துவீட்டிற்கு சென்றாள்.

வீட்டில் காயத்ரி தன் வாட்ரோபைத் திறந்து வைத்துக்கொண்டு, அதில் அடுக்கி வைத்திருந்த புடவைகளில் ஒரு நல்ல புடவையை தேர்வு செய்து அணிவதற்காக பார்த்துக் கொண்டிருந்தாள்.

திறந்திருந்த வாட்ரோபைப் பார்த்த மீனலோச்சனி கண்கள் விரிய ஆச்சரியத்துடன், “வாவ்…அக்கா தினுசு தினுசா எத்தனை புடவைகள் ! எங்க காட்டுங்க பாக்கலாம்.” என்றாள்.

அதில் அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு புடவைக்கும் நடுவே, அது எங்கு எந்தத் தேதியில், எந்த நிகழ்வுக்காக வாங்கப் பட்டது என்கிற குறிப்பு சீட்டுகள் அழகாக எழுதி வைக்கப்பட்டிருந்தன.

மீனலோச்சினி சொக்கிப் போனாள்.

“இதில் பெரும்பகுதி உற்றார், உறவினர், நட்பு வட்டங்கள், திருமணம், சீமந்தம், காதுகுத்தல், பிறந்தநாள் மற்றும் மணநாள் ஆகிய சந்தர்ப்பங்களில் எனக்கு பரிசாக வைத்துக் கொடுக்கப் பட்டவை.

“………………………”

“எந்த உறவினர் வீட்டுக்கு நான் சென்றாலும், அவர்கள் பரிசாக வைத்துக் கொடுத்த இந்த புடவைகளை, இந்தக் குறிப்புகள் மூலம் தேர்ந்தெடுத்து அணிந்து செல்வேன். ‘ஞாபகம் இருக்கா, இந்த தேதியில் இந்தப் புடவை நீங்கள் பரிசாக கொடுத்தது’ என்று நான் சொன்னவுடன், அவர்கள் கண்கள் மின்ன, நான் சொன்னதை ஒரு மிகப் பெரிய மரியாதையாக எடுத்துக்கொண்டு சந்தோஷத்தில் திளைப்பார்கள். அப்புறம் என்ன நான்தான் அன்று அவர்களுக்கு விஐபி கெஸ்ட்.”

“எப்டிக்கா உங்களுக்கு இப்டில்லாம் தோணுது?”

“இது ஒண்ணும் பெரிய விஷயமில்ல லோச்சி. நம் வாழ்க்கையில் நாம சின்ன சின்ன விஷயங்களைக்கூட ஒரு ரசனையுடன் செய்தால் அதன் ஏகாந்தமே அலாதி. நாம் ஈடுபடும் செக்ஸில் தொடங்கி கட்டும் ஷிப் பில்டிங் வரை இந்த ரசனை எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆர்வமில்லாத இஷ்டமில்லாத எதையும் நாம் செய்யக்கூடாது, அதுதான் நம் வாழ்க்கையின் தாத்பர்யம்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *