கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,568 
 

கூரியர் ஆள் கொண்டு வந்து கொடுத்த திருமண அழைப்பிதழைப் படித்ததும், அகமகிழ்ந்தார் நாராயணன்.
“”கனகா… கனகா… இத பார்… யார் பத்திரிகை அனுப்பி இருக்காங்கன்னு,” என்று மனைவியை அழைத்து, அவளிடம் அந்தப் பெரிய பளபளப்பான திருமண அழைப்பிதழை நீட்டினார்.
“”யாருங்க… உங்க உறவா, இல்ல எங்க பக்கமா?” என்று கேட்டபடி பத்திரிகையை வாங்கி கண்களை ஓடவிட்ட கனகம், புருவங்களை நெரித்தாள்.
“”யார் இது… உங்க ஆபீஸ்காரங்களா? எனக்குத்தான் உங்க ஆபீஸ் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் அநேகமாகத் தெரியுமே?” நாராயணன் உற்சாகம் குன்றாதவராய், “”இல்லை… ஆபீஸ் ப்ரண்ட்ஸ் எல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமாக பேரைப் பார்… அப்புறம் ஊரைப் பார்,” என்றார்.
மாற்றங்கள்கனகத்திற்கு இன்னமும் விளங்கவில்லை.
“”ம்… யாராக இருக்கும்? பேரு பாலகிருஷ்ணன் நாராயணன்னு போட்டிருக்கு… பையன் பேர் என்னவோ பிரதீப். பெண் பேர் சுவாதி. அதெல்லாம் இந்த காலத்துப் பேர். அதை வச்சு என்ன கண்டு பிடிக்க முடியும்? ஊர் பெயர் திருநெல்வேலின்னு இருக்கு. ஆமா, அது உங்க ஊர். அப்ப உங்க ஊர்க்காரர், அப்படித்தானே! உங்க பேர் வேற… தெரிஞ்சவங்களா, இல்லை…” என்று இழுத்தாள்.
“”அதான்… அதான்… கிட்ட நெருங்கிட்ட… சொல்லு,” என்று ஒரு இளைஞனைப் போல உற்சாகப்படுத்தினார்.
“”ம்… உங்க உறவா?”
“”ஆமாம்!”
“”யாருங்க… என்ன உறவு. நான் கேள்விப்பட்டதில்லையே… ஏதோ,”ரியல் எஸ்டேட்’ பிசினஸ்ன்னு போட்டிருக்காங்க?”
“”உறவுதான்… ஆனால், நேரடியா இல்லை.
எப்படி தெரியுமா? எங்களோட பேமிலி ட்ரீ… அதாவது, ஆலமரம் மாதிரி, பரந்து விரிந்த எங்கள் மூதாதையர்களின் வாரிசுகள். அவர்கள் எங்கங்க இருக்காங்கன்னு கொஞ்ச நாளா நானும், என் தூரத்து சித்தப்பா பையனும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோமில்ல… அதில் சிக்கின உறவு இது!”
“”அப்படியா… இவங்க அப்பா யாரு?”
“”இவரோட எள்ளுத் தாத்தாவும், என்னோட எள்ளுத் தாத்தாவும் அண்ணன் தம்பிகளாக்கும்,” என்றார் நாராயணன் பெருமிதமாக.
“”எள்ளுத் தாத்தாவா… அப்படீன்னா?”
“”தெரியாதா… அப்பாவோட அப்பா யாரு… தாத்தா இல்லையா?”
“”ம்… ஆமா..”
“”தாத்தாவோட அப்பா?”
“”கொள்ளுத் தாத்தா… ”
“”சரி… கொள்ளுத் தாத்தாவோட அப்பா… எள்ளுத்தாத்தா.”
“”சரிதான் போங்க. என்னவோ, வேடிக்கையா இருக்கு… அங்க உங்களை யாருக்கு தெரியும்?”
“”ஏன்… இந்த மணமகனோட அப்பாவத்தான் போன முறை திருநெல்வேலி போயிருந்தப்போ சந்திச்சுப் பேசினோம். விலாசம் எல்லாம் கொடுத்துட்டு வந்தோம். அதான் ஞாபகமா பத்திரிகை வச்சிருக்கிறார். சென்னைலதான் கல்யாணம். கட்டாயம் போறோம்,” என்று உற்சாகமாக கூறினார் நாராயணன்.
“”அதெல்லாம் சரி… ரொம்ப பெரிய எடமா இருக்கும்போல தோணுதே… ராஜேசுவரி கல்யாண மண்டபம்ன்னு இல்ல போட்டிருக்கு,” என்று கூறினாள் கனகம்.
“”அதனாலென்ன… அவங்க வசதியானவங்க… அங்க செ#றாங்க. என்னை நினைவு வச்சு பத்திரிகை அனுப்பி வச்சிருக்காங்க இல்ல… அதை மதிக்க வேண்டாமா? அதோட எங்க பேமிலி வேற,” என்றார் நாராயணன்.
ஒரு வினாடி மவுனமாக இருந்தாள் கனகம்.
“”அதெல்லாம் சரி… இப்ப எல்லாருமே நேரில அழைக்கறதில்லை. பெரும்பாலும் பத்திரிகைதான் அனுப்பறாங்க. முடிஞ்சா போன்ல ஒரு அழைப்பு… அதுல ஒண்ணுமில்ல… ஆனால், ரொம்பப் பெரிய இடமா இருக்குமே… அதோட, நமக்கும் அவரைத் தவிர வேறு யாரையும் தெரியாதேன்னு பார்க்கிறேன்,” என்றாள் யோசனையோடு…
“”இத பாரு கனகம்… இப்ப எந்த கல்யாணத்துக்குப் போனாலும், என்ன பண்றோம்… நேரா வரிசைல நின்னு, மணமக்களை வாழ்த்திட்டு, போட்டோக்கு போஸ் கொடுத்திட்டு, வீடியோக்காரங்களுக்காகச் சிரிச்சிட்டு, டைனிங் ஹால்ல போய் சாப்பிட்டுத்தானே கிளம்பறோம். அதே தான் இங்கயும்… இருந்தாலும், பாலகிருஷ்ணன் மூலம், இன்னும் ஓரிரு கிளைகளை – எங்கள் குடும்பத்தின் சொந்தங்களைத் தெரிந்து கொள்ளலாமில்ல?” என்றார் நாராயணன்.
“”என்னவோ போங்க. கொஞ்ச நாளா, குடும்ப மர பித்துப் பிடிச்சு அலையறீங்க… அதுதான் எனக்குத் தெரியுது,” என்றாள் கனகம். பக்கத்து அறையில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் பேஸ் புக்கில், தன்னுடைய நண்பர்களிடமும், நண்பிகளிடமும், “சாட்’ செய்து கொண்டிருந்த நாராயணனின், 24 வயது மகன் ஸ்ரீதர், இவர்கள் உரத்துப் பேசும் சப்தத்தால் ஈர்க்கப்பட்டு, “”அய்யோ… கொஞ்சம் மெதுவாகப் பேசுங்களேன் உங்கள் குடும்ப கதையை… சுத்த போர், ஷிட்!” என்றான்.
நாராயணனுக்கு, “சுர்’ரென்று கோபம் வந்தது.
“”ஏண்டா… நாங்க பேசறது உனக்கு இம்சையா இருக்கோ… நீங்க என்ன பெரிய ஆராய்ச்சியா செய்துகிட்டிருக்கீங்க… பேஸ் புக் அப்லோடிங், சாட் தானே… அது மட்டும் என்ன?” என்றார் சூடாக.
“சட்’டென்று திரும்பிப் பார்த்தான் ஸ்ரீதர்.
“”ஆமாம்பா … நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்… ஆனா, ஒண்ணு புரிஞ்சுக்குங்க… நான் சாட் பண்றதெல்லாம் இப்ப என்னோட ப்ரண்ட்சா இருக்கறவங்களோட… புரியுதா?” என்றான்.
“”ஏன்… நீ கூடத்தான் கொஞ்ச நாட்கள் முன்னால, உன்னோட ஸ்கூல் நண்பர்களையெல்லாம் பேஸ்புக்ல தேடிக் கண்டுபிடிச்சு
பேசினேன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுனியே… எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு,” என்றார் நாராயணன்.
“”உண்மைதான். ஆனா, ரெண்டு மாசத்துக்குள்ளயே எனக்கு இன்னோர் மகத்தான உண்மை புரிஞ்சிடுச்சு…” என்றான்.
“”என்ன அந்த, மகத்தான உண்மை?” என்றார் நாராயணன் நக்கலாக.
“”நம்பர் ஒன் – தேடிக் கண்டுபிடிக்கறதில இருக்கற, “த்ரில்’ பேசினப்பறம் இல்லை; நம்பர் டூ – அவங்களும், நம்ம மாதிரியே ரொம்ப, “யங்கா’ இருப்பாங்கன்னு சொல்ல முடியாது; நம்பர் த்ரீ – நம்ப பழைய ப்ரெண்ட் ரொம்பவே மாறி இருப்பான். அவனுக்கும், இவனுக்கும் சம்பந்தமே இருக்காது,” என்று தெளிவாக சொன்னான் ஸ்ரீதர்.
“”என்ன பேசற நீ… ப்ரண்ட்ஸ் என்னிக்குமே ப்ரண்ட்ஸ் தான். எப்படிடா மாறுவாங்க?” என்றார் நாராயணன் கோபமாக.
“”ஐயோ அப்பா… ப்ரண்ட்ஸ் எப்பவுமே ப்ரண்ட்ஸ் தான்பா… ஆனால், இரண்டு பேருக்கும் இடையில ஒரு, “மீட்டிங் பாய்ன்ட்’ அதாவது, சந்திக்கும் புள்ளி இருக்கணும்பா… அது, பல சமயங்களில் மிஸ் ஆயிடும். புரியலை?”
“”நிச்சயமா புரியலை.”
“”நான், ஸ்கூல்ல படிக்கறச்ச இருந்த ஸ்ரீதர் இல்லப்பா இப்ப… அதே போலப் பார்த்தா, நான் காலேஜில படிச்சப்ப இருந்த ஸ்ரீதரும் இல்லை. நிறைய மாறி இருக்கேன். இந்த வேலைல சேர்ந்த மூன்று வருஷத்தில, என்னோட சம்பந்தப்பட்ட பல ரசனைகள், பார்வைகள், பேசற முறை எல்லாமே மாறியிருக்கு. சரி… முதல்ல, நீங்க சின்ன வயசில இருந்தாப்பலேயே இப்ப இருக்கீங்களா?” என்றான் ஸ்ரீதர், சிரித்தபடி.
யோசித்தார் நாராயணன். ஸ்ரீதரின் கேள்வி சரிதான். ஒவ்வொரு மனிதனும், காலப் போக்கில் மாறிக் கொண்டே தான் இருக்கிறான். முக்கியமாக, வேலையில் இருந்து சென்ற வருஷம் ஓய்வு பெற்றபின் தான், நாராயணனுக்கே இந்த பழைய உறவு @பான்றவற்றை, புதுப்பிக்கணும்ன்னு தோன்றியது.
அது கூட எதனால்?
சபரிமலை சென்ற @பாது, அவருடன், புதிதாக வந்து சேர்ந்த மற்றொரு நண்பர் குசலம், ஊர், பேர் விசாரிக்க ஆரம்பித்த போது, அது எங்கெங்கோ சுற்றி, அவரை நாராயணனின் தூரத்து சொந்தம் என்று தெரிய வந்தபோது தான், இரண்டு பேருமாகச் சேர்ந்து, இந்தப் புதுத்தேடுதலைத் துவங்கினர்.
“”அட போங்கடா… நீங்க மாடர்ன் ஜெனரேஷன். உறவுன்னா என்னன்னு தெரியாதவங்க. நாங்க அப்படியில்லை. பழங்காலத்து மனுஷங்க. எங்களுக்கு உறவின் மதிப்பு தெரியும்,” என்றார் நாராயணன் வீராப்பாக.
“”சரி… தெரியட்டும். நான் சொல்றது சரின்னு நீங்களே ஒருநாள் புரிஞ்சிப்பீங்க,” என்று புன்னகையுடன் சொல்லி, தன் கம்ப்யூட்டருக்குள் புகுந்தான் ஸ்ரீதர்.
திருமண மண்டம் மிகவும் கோலாகலமாக இருந்தது. நாராயணனுக்கும், கனகத்துக்கும், “நாம் ஏதோ ஒரு சம்பந்தமில்லாத
இடத்திற்கு வந்து விட்டோமோ…’ என்ற எண்ணம் கூட தோன்றியது.
அவருடைய மாருதி காரை, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., ஆடி இவைகளுக்கு நடுவே, “ஐயோ பாவம்!’ என்பதைப் போல், “பார்க்’ செய்ய வேண்டி இருந்தது.
பெண்கள் ஜாய் ஆலுக்காஸ், ஜி.ஆர்.டி., மலபார் ஜுவல்லரி மற்றும் ஆர்.எம்.கே.வி., சென்னை சில்க்ஸ், நல்லி, போத்தீஸ் கடைகளின் விளம்பரப் பெண்களைப் போல, “ஜிலுஜிலு’த்தனர்.
கனகம் கூட, “”என்னங்க… நாம சரியான எடத்துக்குத்தானே வந்திருக்கோம்… உங்களுக்கு எவரை@யனும் தெரியுதா?” என்று ரகசியமாகக் கேட்டாள்.
நாராயணனுக்கும் தன் நடுத்தர குடும்ப அடையாளம், இந்த மேல்தட்டு மனிதர்களுக்கு நடுவில் சற்று அந்நியமாகத் தோன்றினாலும், தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டார். நல்ல வேளையாக பரிசாக ஏதாவது கலர் பேப்பர் சுற்றிய அட்டைப் பெட்டியை கொண்டு வராமல், அழகான பூங்கொத்து இருந்தது, மற்ற பல விருந்தினர்களைப் போல, ஏற்றதாக இருந்தது. நல்ல வேளை, ஸ்ரீதர் தான், “அப்பா… பேசாம இந்த மாதிரி பணக்கார வீட்டுக் கல்யாணத்திற்கு அழகாக ஒரு, “பொக்கே’ வாங்கிட்டு போங்க. போதும்…’ என்று அறிவுரை சொல்லி, வாங்கிக் கொடுத்தான்!
மணமக்களைப் பார்க்க ஏகக் கூட்டம். வரிசை நீண்டு நெடுக இருந்தது. உபசாரங்களுக்குக் குறைவில்லை. பலர் சின்ன சின்னக் கோப்பைகளில் குளிர் பானங்களைத் தந்து கொண்டே இருந்தனர்.
நாராயணன் சந்தித்த அவர் உறவுக்காரர், மேடையில் முகம் முழுக்கப் புன்னகையுடன், மணமக்களை பலருக்கும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்.
பையன் – பெண் இருவருமே இளமையாக, செழுமையுடன், அழகாக இருந்தனர். இருவரும் இன்றைய முறைப்படி, அமெரிக்காவில். “வேர்கள் இந்தியாவில் இருந்தாலும், விழுதுகள் அமெரிக்காவில் தான் ஊன்றுகின்றன…’ என்று எண்ணிக் கொண்டார் நாராயணன்.
அவரின் முறை வந்தபோது, நாராயணனை பார்த்து, மையமாகச் சிரித்தார். ஒரு வினாடி அவருக்கு, தான் இன்னார் என்பது புரியவில்லையோ என்று தோன்றியது நாராயணனுக்கு.
இருந்தாலும், முகம் மலர, “”வணக்கம் பாலகிருஷ்ணன்… நாராயணன்,” என்று வாழ்த்து தெரிவித்தார். “”திருமண வாழ்த்துகள்,” என்று கூறி மலர்ச் செண்டை மணமகளிடம் நீட்டிய போது, “பிரதீப்… இவர் என்னோட நண்பர்,” என்று அறிமுகம் செய்தார் பாலகிருஷ்ணன். இதற்குள் போட்டோகிராபர், வீடியோ ஆசாமிகளுக்கு போஸ் கொடுக்க வேண்டியதாயிற்று.
“”இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்க,” என்றார் பாலகிருஷ்ணனின் மனைவி.
இருவரும் கீழே வந்தனர். ஏதோவொரு மெல்லிசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. காலியாக இருந்த இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தனர்.
“நண்பர் என்றுதா@ன அறிமுகம் செய்தார்… உறவு முறை மறந்து விட்டதா பாலகிருஷ்ணனுக்கு?’ என்று சற்று உறுத்தியது நாராயணனுக்கு.
“”நாராயணன் சார்… வணக்கம்,” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அவர்தான் நாராயணனை சபரிமலைப் பயணத்தில் சந்தித்து, இந்த உறவுப் பயணத்தைத் துவங்கி வைத்தவர்…
“”அடடா… வாங்க, வாங்க… பார்த்தீங்களா பாலகிருஷ்ணனை?” என்றார் நாராயணன்.
“”ம்… பார்த்தேன், பார்த்தேன். என்ன வேதனை சார்… அவருக்கு என்னை சுத்தமாக மறந்து விட்டது. நானாக அறிமுகம் செய்து கொண்ட பிறகும், சற்று முழித்தார். என்னவோ போங்க… ஏண்டாப்பா வந்தோம்ன்னு ஆயிடிச்சு,” என்றார் சற்று வருத்தத்துடன்.
நாராயணனுக்கு சுருக்கென்றது. தனக்கும், கிட்டத்தட்ட அந்த அனுபவம் தான் என்று சொல்ல நினைத்தார்; ஆனால், சொல்லவில்லை.
“”சரி என்னவோ… வாங்க, நாமும் கும்பலோடு கும்பலாகப் போய் சாப்பிட்டு, கிளம்புவோம்,” என்றார் அந்த நண்பர்.
கனகத்திற்கு எதுவுமே ரசிக்கவில்லை. சுற்றிச்சுற்றிப் பார்த்த போதுகூட, எந்த முகமும் தெரிந்ததாக இல்லை. அன்றைய திருமணங்களில், உறவுகள் தான் பிரதானம்; இன்று, அப்படியில்லை. உறவுகளும், நண்பர்களும், வர்த்தக தொடர்புகள் என்று பிரிந்து விட்டன.
எல்லா வைபவங்களுமே, இன்று அந்த வகையில் தான் நடக்கின்றன என்பது தான் நிஜம்.
மாறி வரும் உலகில், நாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறோம். உறவுகள், நண்பர்கள், ரசனைகள், தோற்றங்கள், எல்லாமே மாறிக் கொண்டு தான் இருக்கும். மாற்றங்கள் தான் நிரந்தரம்; அதைத் தான் ஸ்ரீதர் அன்று சொன்னான்.
இன்றைய தலைமுறையினர் பல விஷயங்களை கற்பூரத்தைப் போல.”சட்’டென்று புரிந்து கொண்டு விடுகின்றனர். நாராயணனுக்குத் தன் மகனை நினைத்துப் பெருமையாக இருந்தது.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *