மாப்பிள்ளை தேடுதல்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,334 
 

முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி.

நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டாம். உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான்.

அவனும் அகமகிழ்ந்து ‘சரி’ என்றான். அப்போது வீட்டுக்காரன் “ஒன்று மட்டும் சொல்லிவிடுகிறேன், பின்னால் பழி சொல்லாதே. என் மகன் வெங்காயம் சாப்பிடுவான்” என்று சொன்னான்.

அதைக் கேட்ட அந்தணனும், தன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்ல. அவள் மகிழ்ந்தாள். ஆனால் “மாப்பிள்ளை எப்போதுமே வெங்காயம் சாப்பிடுவாரா?” என்று மட்டும் போய்க் கேட்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தாள்.

இவனும் அதுபோலவே வந்து கேட்டான். அதற்கு மாப்பிள்ளையின் தந்தை, “எப்போதாவது மாமிசம் உண்ணும்போது மட்டும் வெங்காயம் சாப்பிடுவான்” என்றான்.

“எப்போதும் மாமிசம் சாப்பிடுவானா?” என கேட்க அவன் “சே.சே.கள்ளுக் குடிக்கிறபோது மட்டுமே மாமிசம் உண்பான்” என்றான்.

“எப்போதும் கள்ளுக் குடிப்பானா?” என்று கேட்க ‘சூதாட்டத்திலே தோற்றுப் போகிறபோது மட்டும் தான் குடிப்பான், கவலையை மறக்க” என்றான்.

இன்னும் என்ன பாக்கி? “வைப்பாட்டியும் உண்டா?” என்றான் இவன். அதற்குப் பையனின் தந்தை அவன் 8 மாதமாக ஜெயிலில் இருக்கிறான். எப்படி இப்போது வைப்பாட்டி வீட்டிற்குப் போவான்? வைப்பாட்டி பணம் கேட்டதால்தானே திருடிவிட்டு ஜெயிலில் இருக்கிறான் வேறு ஒண்னுமில்லிங்க.

“பொழுது போகச் சூதாடுவான் கவலையை மறக்கக் கள்ளு குடிப்பான். கறிதின்பான். கறி வாடைக்கு வெங்காயம் தின்பான். அவவளவுதான். வேறு என்னங்க அவனிடம் தப்பு இருக்கு?” என்றான்.

“போதும் ஐயா! போதும்! மாப்பிள்ளை அழகும், நீ வரதட்சணை வேண்டாம் என்ற கருணையும் இப்போது தான் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே, திரும்பிப் பார்க்காமல் நடந்தான் அந்த அந்தணன்.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *