எதையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை கடைப்பிடித்து வரும் பரமசிவம், அன்றிரவு பின்வாசல் விளக்குகளை வேண்டுமென்றே
எரியவிட்டது குமரனுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணியது!
விடிந்ததும்…
“ஏம்பா… தொலைக்காட்சியையோ ஃபேனையோ நாங்க அணைக்க மறந்தாலே எங்களை திட்டி “எதையும் விரயம் பண்ணக்கூடாது’ன்னு ஆலோசனை சொல்ற
நீங்களே… நேத்து பின்வாசல்ல மூணு விளக்கையும் அணைக்காம அலட்சியமா விட்டுட்டீங்க! அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்குத்தானா?’ என்ற மகனின்
எதிர்பாராத கேள்வியில் அதிர்ச்சியடைந்த பரமசிவம்…
“பின்னால குடியிருக்கிற இராமநாதன் வீட்ல நேத்து கரண்ட் ஃபீஸ் போயிடுச்சுடா! பாவம்… அவங்க பையன் பத்தாவது பொதுத் தேர்வுக்கு படிக்க முடியாம
ரொம்ப சிரமப்பட்டான்! நம்மள பகையா நினைக்கிற அவங்களுக்கு நாம லைன் கொடுத்தாக்கூட அதை ஏத்துக்க சங்கடப்படுவாங்கன்னுதான்…. பின்வாசல்ல
எல்லா லைட்டையும் போட்டுவிட்டேன்டா…!’
“அப்பா… என்னை மன்னிச்சிடுங்க… உங்களை சரியா புரிஞ்சுக்காம ஏதேதோ பேசிட்டேன்!’ குமரன் மன்னிப்பு கோர இதனையே முணுமுணுத்தவாறே இராமநாதனும் பரமசிவத்தைக் காண ஓடிவந்தார்.
– கோவை நா.கி. பிரசாத் (ஜூன் 2012)