பொட்டு கிளாஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 5,939 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப்படாத கவிதைகளும் வரையப் படாத சித்திரங்களும் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக் காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் சில வரிகளை வாசிப்பதுவும் அப்படியே மாண்டு போகாது என் மனசுக்குள்ளே பதிந்து போயிருக்கும் சிறுவயது நினைவுகள் மீட்டப் பட்டு அந்த சம்பவங்களுடன் நான் சங்கமித்துப் போவதும் சில வாரங்களாகவே நடந்து கொண்டு தானிருக்கிறது.

நானும் பார்வையால் பேச்சால் செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள் தான்.

இன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்டிலும் பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும் தப்பலிலும் சந்தோசமாவது இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.

துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும் தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு உடையார் என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும் – எங்களுர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் – மாணிக்கம்….

எங்கள் அழுக்குத் தலை மயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை…

எங்கள் தென்னையில் ஏறி கள்ளுச் சீவும் கந்தசாமி…

எங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்…. இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களில் நாங்கள் கட்டாடி என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப்படுவான். ஆனாலும் மூத்தவர்களை வாங்கோ போங்கோ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை அவன் இவன் என்று நான் அழைக்க அனுமதித்தா.

அப்பாவின் வயதை ஒத்த அவனை கோபாலு.. என்று கூப்பிட்டு – எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு. என்று சொல்வேன். அவன் சின்னப்பெண்ணான என்னைப் பார்த்து – ஓமுங்கோ..! நான் கொண்டு வந்து தாறன். என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ..?

கள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும் அப்பாவோடும் கதைப்பான்.

பறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினைத்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ..?

கதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.

‘ஓட்டு’ என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப்பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயசில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.

எனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய – ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய – “ஏன்…?” என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு கால கட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.

“அம்மம்மா..! ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர்…? அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்;….?”

அதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி – அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான் – என்று சொன்னா. உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா? என்ன மனிதர்கள் இவர்கள்….!

“ஏன் அம்மம்மா..! அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன..?”

“சீ….. மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி..? அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்”.

அம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் – அவர்களைத்(பஞ்சமர்) தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது. ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.

அதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர் திருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ செயல்களோ அங்கு எடுபடவில்லை. என்ன கதைத்தாலும் மொக்குப் பிள்ளை..! ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை.. போன்ற ஆலாபனைகள் தான் எனக்குக் கிடைத்தன.

ஆனாலும் எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபடவில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.

அவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் தைரியம் இன்றி சமூகக் கோட்பாடுகளுக்குள் அடங்கி, அவவின் பெற்றோரான எனது பாட்டாவினதும் அம்மம்மாவினதும் கட்டுப் பாட்டுக்குள் வளர்நதவ. – இது தப்பு, இது சரி. – என்று பகுத்தாயும் தன்மையும், திறனும் அவவுக்குள் இருந்தாலும், இவைதான் நியதி என்று எண்ணி அதன்படி வாழும் மனப்பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ..!

ஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடுமையான கோபத்துக்காளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால் என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால் மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.

அன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடத்துக்கு (1972) முந்திய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார் எல்லோரும் ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டமர கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.

அம்மா இன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு வழமை போல அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும் அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமுமில்லை. கவலையுமில்லை. இரண்டுக்கு மிடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.

“அம்மா இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ரீ குடுக்கப் போறன்.” எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம் தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்தபடி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..? எனக்குத் தெரியவில்லை.

நான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம் – இந்தா கதிரமலை..! ரீ யைக் குடி..!” – என்று நீட்டினேன்.

அவன் தீப்பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து அந்தப் பொட்டுக் கிளாஸையும் என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாய்ப் பார்த்தான். எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.

“பிடி கதிரமலை…. உனக்குத்தான்…!”

அவன் கண்களுக்குள் என்ன உணர்வோ! நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு! அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.

“இருந்து குடி கதிரமலை.”

ஏதோ ஒரு சந்தோசம் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான்.

எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான் – இக்கணம் பாட்டா கண்டால் பேசப் போறார். – என்று பயந்து கொண்டிருந்தா.

“ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது விம் போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ. ” தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.

அன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய் ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்தநாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.

ஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது – பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்கு ரீ வேணும்..! என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம்மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளசைக் காணவில்லை.

அது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள விறகு வைப்பதற்கென இறக்கப்பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.

– 19.12.2002, மனஓசை, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, @சந்திரவதனா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *