இன்னும் பேத்தி வரவில்லை? தாத்தாவும் பாட்டியும் பரபரத்தனர்.
ஸ்கூல் விட்டதும் நேராக வீட்டுக்கு வரும் செல்லக்குட்டி நந்தினி. நீங்க போய் பார்த்துட்டு வாங்கோ ராஜம்மாள் சொல்ல, பெரியவர் கிளம்பினார். நேரம் நழுவிக்கொண்டே இருந்தது.
சட்டென கண்ணில் பட்டது – சரண்யா
சரண்யா எங்காத்து நந்தினியை பார்த்தியோ? ஸ்பெஷல் கிளாஸ், ஏதாவது இருக்கா?
இல்லையே பாட்டி. வாசல் கேட் கிட்டே நின்னா… பார்த்த ஞாபகம் இருக்கு என்றாள் சரண்யா பெரிய மனுஷித்தனமாய்.
எங்கே போயிருப்பாள்?
மஞ்சள் துணியில் காசு முடிந்து ஆண்டவனை வேண்டிக் கொண்டாள் ராஜம்.
தாத்தாவுடன் நந்தினியும் தெரு முனையில் வருவதை கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
ஏண்டா செல்லம் , இத்தனை லேட்?
பாட்டி… இன்னிக்கு எல்.கே.ஜி.ல நியூ அட்மிஷன். அனுன்னு பேரு. ஸ்கூல் விட்டும் அவளை அழைச்சிண்டு போக யாருமே வரலை. அழுதுண்டு நின்னுச்சா? பார்க்க பாவமா இருந்தது அதான் என் ஸ்நாக்ஸை கொடுத்து துணைக்கு நின்னு பார்த்துண்டேன்.
நந்தினி பேசப் பேச கண்கள் விரிய கேட்டுக்கொண்டிருந்தனர் தாத்தாவும் – பாட்டியும்
– நவம்பர் 2012