பெயரில் என்னமோ இருக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 9,238 
 

தன் சிநேகிதி வீட்டுக்குப் போய் திரும்பிய கமலம் படபடத்தாள்: “கன்னாபின்னான்னு பேர் வெச்சா இப்படித்தான் ஆகும்!”

புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ரேணுகா நிமிர்ந்தாள். எதுவும் கேட்கவில்லை. அம்மா தானே சொல்வாள் என்று காத்திருந்தாள்.

“மீனாட்சியோட பொண் வயத்துப் பேரனுக்கு துருவன்னு பேரு வெச்சா. ஸ்டைலா கூப்பிடறது த்ருவ். இப்போ என்ன ஆச்சு?”

“என்னம்மா ஆச்சு?”

“ரெண்டாவது குழந்தை பிறந்ததும், இந்தக் குழந்தையைக் கரிக்கிறாராம் அதோட அப்பா. ரெண்டு வயசுக் குழந்தையை அடிச்சுக்கொல்றாராம்!” என்னவோ, தானே அறைபட்டதுபோல் குமுறினாள். “சின்னக்குழந்தை கடையில பாக்கற சாமானையெல்லாம் கேக்கத்தான் செய்யும். அதுக்காக அடிப்பாளோ?”

“சரி. இதுக்கும் துருவன்கிற பேருக்கும் என்ன சம்பந்தம்?”

“அப்பா மடியில ஒக்காரணும்தானே அந்தப் பிள்ளையும் தவம் பண்ணினான்?”

ரேணுகாவையும் கவலை பிடித்துக்கொண்டது. பெயர் சூட்டும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டுமோ, பெற்றோர்?

நல்ல வேளை, அவள் புராண காலத்து ரேணுகாவைப்போல் இல்லை.

பூஜைக்கு ஆற்றில் நீர் மொண்டு வருவதற்காகப் போன முனிவர் பத்தினி ரேணுகா காந்தர்வக் காதலர்களின் சல்லாபத்தைப் பார்த்து சற்றே மயங்கினாளாம். அதற்குத் தண்டனையாக அவளுடைய தலையைக் கோடரியால் வெட்டும்படி மகனைப் பணித்தாராம் கணவர் ஜமதக்னி.

பன்னிரண்டு வயதில், பழைய படங்களில் தோன்றிய சிவாஜி கணேசனைத் திரையில் பார்த்து மயங்கிய தானோ, கமலஹாசன், கார்த்தி, ஆர்யா என்று இன்றுவரை ஒவ்வொரு நடிகரையும் மனதால் நினைப்பதை நிறுத்தவில்லை.

`ராமாயணத்திலே வர அகல்யாமாதிரி நான் கல்லாப் போகணும்னா, இருநூறு தடவை கல்லாகியிருப்பேன்! நல்லவேளை, அந்தக் காலத்திலே நான் பிறக்கலே!’ எத்தனை தடவை தங்கை பார்வதியிடம் அதைச் சொல்லிச் சிரித்திருக்கிறாள்!

பதினேழு வயதில் படிப்பை முடித்துவிட்டு, “இதுக்குமேலே படிச்சா, வரன் கிடைக்கிறது கஷ்டம். அநியாயமா வரதட்சணை கேப்பா,” என்ற அம்மாவின் நியாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தாள் ரேணுகா.

தனக்கு வரப்போகிறவருக்காவது நல்ல பெயர் இருக்கிறதா என்று பார்த்துத்தான் கழுத்தை நீட்ட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

முதல் வரன் ராமச்சந்திரன். ஜாதகம் கிடைத்திருந்தது.

“எனக்கு இவன் வேண்டாம்மா,” என்றவளைப் பார்த்து அம்மா குழம்பினாள்.

நிறையப் படித்திருந்தான். தரகரிடம் வரதட்சணையே வேண்டாம் என்று சொல்லியிருந்தானாம். ஒரே தங்கையும் கல்யாணமாகி வெளிநாட்டில் இருக்கிறாள். இதைவிட நல்ல வரன் கிடைக்குமா? மகளிடம் எடுத்துச்சொன்னாள்.

“பேரைப் பாரு! அப்பா எது சொன்னாலும், அது சரியா, தப்பான்னு யோசிக்காம தலையாட்டுவான். நான் அந்த ராமரா இருந்தா, தசரதர்கிட்ட என்ன சொல்லியிருப்பேன் தெரியுமா?” என்று வீராவேசமாக ஆரம்பித்தவளுடன் மேலே பேசப் பிடிக்காது கமலம் அப்பால் நகர்ந்தாள்.

எப்போதும் கேட்டதுதான். `நீங்க புத்தி கெட்டுப்போய் ரெண்டு மூணு தடவை கல்யாணம் பண்ணிண்டா, அதற்கு நானா பிணை?’ என்றிருப்பாள். ராமாயணமும் இந்த அளவுக்குப் பிரபலமாகி இருக்காது.

அடுத்தது சுப்ரமணியன்.

பயந்துகொண்டே அவன் பெயரைச் சொன்னாள் கமலம்.

“நான் முதல் பொண்டாட்டியா, ரெண்டாவதா?”

ஆச்சரியத்துடன், “எப்படிக் கண்டுபிடிச்சே?” என்றாள் கமலம். “மூத்தாள் போயிட்டாளாம். இந்த வரனுக்குச் சின்ன வயசுதான்! குழந்தையும் கிடையாது!”

“முருகனுக்கு வள்ளி, தெய்வயானை. இந்த சுப்ரமணியனுக்கும் ரெண்டு வேணுமோ?”

“பிடிக்காட்டா விட்டுடு. பிறத்தியாரைப்பழிக்காதே!”

பெண்ணை அதிகமாகப் படிக்க வைத்தது தப்போ என்று யோசிக்க ஆரம்பித்தாள் தாய். எதர்க்கும் குதர்க்கம்தான். கேட்டால், `மூளை எதுக்கு? யோசிக்கத்தானே?’ என்பாள்.

அடுத்து கிடைத்த ஹரிஹரனை கமலமே நிராகரித்துவிட்டாள் கமலம். `ஸ்ரீதேவி, பூதேவி’ என்று ஏதாவது ஆரம்பிப்பாள், மூளையைப் பயன்படுத்தும் மகள். எதற்கு வம்பு!

தான் அந்தப் பிள்ளை துருவனைப்பற்றி இவளிடம் சொல்லியே இருக்கக்கூடாது என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

அதைவிடப் பெரிய தவறு, தகப்பனில்லாத பெண் கெட்டுவிடக்கூடாதே என்ற பரிதவிப்புடன் நாள் தவறாமல் அவளைத் தன்னுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று இதிகாச புரணக்கதைகளெல்லாம் கேட்க வைத்ததுதான். சிறியவளென்று பார்வதியை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போனதால்தான் அவள் இன்று பரம சாதுவாக இருக்கிறாள்.

“கிருஷ்ணனா? எப்பவும் பொண்களோடேயே சுத்திண்டு இருப்பான். ஜொள்ளுப்பார்ட்டி!”

“நன்னாப் பாடுவானாம்!” சற்று நம்பிக்கையுடன் சொல்லிப்பார்த்தாள் கமலம்.

“வேற வினையே வேண்டாம். ஆயர்பாடியில வளர்ந்த கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிச்சுதானே எல்லாரையும் மயக்கினான்?”

“ஒனக்குப்போய் வரன் பாக்கறேனே! இனிமே நான் ஒன்னோட கல்யாணப்பேச்சை எடுத்தா, `ஏண்டி?’ன்னு கேளு!’ என்று கத்திவிட்டு, அப்பால் நகர்ந்தாள் கமலம்.

அம்மா இவ்வளவு கண்டிப்பாக இருப்பாள் என்று ரேணு எதிர்பார்க்கவில்லை. வயதோ இருபத்தாறு ஆகிவிட்டது! காதல் புதினங்கள் படித்துக்கொண்டும், வீட்டுக்குச் சாமான் வாங்கிப் போட்டுக்கொண்டும் காலத்தைக் கழித்தாள்.

ஒரு நாள் சூபர்மார்க்கெட்டுக்குப் போயிருந்தபோதுதான் அவனைப் பார்த்தாள். பின்னாலிருந்து.

என்ன உயரம், அமிதாப் பச்சன் மாதிரி! கடைச் சிப்பந்தியிடம் அவன் ஏதோ கேட்கையில், `எங்கோ கேட்ட குரலாக இருக்கிறதே! இது எந்த நடிகருடையது? சரத் பாபுவா?’ என்ற யோசனை எழுந்தது.

அவன் இவளை நோக்கித் திரும்பினான்.

ரேணுகாவிற்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. தான் வெறித்துப் பார்த்ததை தப்பாக எடுத்துக்கொண்டிருப்பானோ?

“ரேணுதானே?”

யாரிது, உரிமையுடன் தன் பெயரைச் சொல்வது?

“சந்துரு! ஞாபகம் வருதா? ஒன் காதை முறுக்கி கணக்குச் சொல்லிக்கொடுப்பேனே?” சிரித்தான். பல்வரிசையும் அழகாக இருந்தது என்று குறித்துக்கொண்டாள் ரேணு.

நிம்மதியுடன், சிரிப்பும் வந்தது. அவளுக்குப் பத்துப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, மூன்றாவது வீட்டில் இருந்தவன்.

அப்போதெல்லாம், “பாவம், சின்னப்பொண்ணுடா. ரொம்பத்தான் மிரட்டாதே. அன்பாச் சொல்லிக்குடு,” என்று அவனுடைய தந்தை அவளுக்குப் பரிவார்.

“இப்போ என்ன பண்றே? `ஒன்கூடப் பேசறேன்’னு அறுக்காதே!” கலகலவென்று சிரித்தான்.

“சில குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கறேன்”.

“என்ன பாடம்?”

“கணக்கு!” இதைச் சொல்வதற்குள் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

சந்துரு பெரிதாகச் சிரித்தான்.

அவனுடன் என்ன பேசுவது என்று புரியவில்லை. “ஒங்கப்பா சௌக்கியமா?” என்று கேட்டுவைத்தாள்.

“இருக்கணும்,” என்றான். “என் தங்கை கல்யாணமாகி அங்கே இருக்கா. வீட்டையும், நிலபுலனையும் என்பேரில எழுதிவெச்சுட்டு, அவளோடேயே போய் இருக்கார்! அமெரிக்காவில எனக்குக் கிடைச்ச நல்ல வேலையை ஒதறிட்டு, நான் இங்கேயே வந்துட்டேன்னு அப்பாவுக்கு கோபம்.”

மரியாதை குறித்து, “ஒரு நாள் ஆத்துக்கு வாயேன். அம்மா ஒன்னைப் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா,” என்று அழைப்பு விடுத்தாள் ரேணு.

“இப்பவே வந்தா உள்ளே விடமாட்டியா?” மீண்டும் சிரிப்பு. “இன்னிக்குப் பண்ண முடியற காரியத்தை நாளைக்குன்னு ஒத்திப் போடக்கூடாது”.

அவனுடைய காரில் பின்னால் உட்காரப்போனவளை, “முன்னாலேயே ஒக்காரு, வா!” என்று அழைத்தான் சந்துரு.

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தபோது, எதையோ இழந்ததுபோல் இருந்தது. எத்தனை தடவை ஜோடி ஜோடியாகப் போகும் தம்பதிகளையும் காதலர்களையும் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டிருக்கிறாள்!

முகமன் எல்லாம் முடிந்ததும், “ஒரு நாள் பொண்டாட்டியை அழைச்சிண்டு சாப்பிட வாடா, சந்துரு!” என்றாள் கமலம், உபசாரமாக.

“நீங்க வேற, மாமி! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே”.

ரேணுகா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“ஒரு முப்பது வயசு இருக்காது ஒனக்கு? அமெரிக்காவில பொண்ணா இல்ல?”

“எனக்கு வெள்ளிக்காரிகளைப் பிடிக்கலே. இங்கேதான் பொண்குழந்தை பிறக்கறபோதே கொன்னுடறாளே!” தனக்கு மனைவியாகும் பாக்கியம் பெறாத அந்தக் குழந்தைகளுக்காக வருத்தப்பட்டான். “இப்போ எல்லாருக்கும் ஒரே குழந்தைதான் இங்கே. அதுவும் பொண்ணா இருந்துட்டா, கேக்கவே வேண்டாம். தான் வெச்சதுதான் சட்டம்னு சாதிக்கும். சண்டை போடும். நிறைய பாத்துட்டேன். பயமா இருக்கு,” என்றான் சந்துரு.

“எங்க பார்வதியைப் பண்ணிக்கிறயாடா? நீ கேக்கற பொண்ணுமாதிரி இருப்பா! பரம சாது, என்ற அம்மாவின்மேல் ரேணுவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. முதலில் தங்கைக்குக் கல்யாணமானால், அப்புறம் தன்னை யார் சீந்துவார்கள்?

“ஏன் மாமி, ரேணுவை எனக்குக் குடுங்கோன்னா மாட்டேன்னு சொல்லிடுவேளா?”

“இவ ஒன்னை ஆட்டிவைப்பா!” என்று கமலம் தயக்கத்துடன் கூற, “அதனால என்ன! காதை முறுக்கி, படிய வெச்சுடமாட்டேனா!” என்று சந்துரு சிரித்தான்.

ரேணுவும் அந்தச் சிரிப்பில் பங்கு கொண்டாள்.

“ஒரு வேடிக்கை, மாமி,” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தான் சந்துரு. “அப்பா என் ஜாதகத்தை தரகரிடம் குடுத்திருந்தாராம். யாரோ ஒரு பொண்ணு, இவன் பேரு எனக்குப் பிடிக்கலேன்னு சொல்லித்தாம்,” என்றவன், அந்தப் பெண் எதிரில் நிற்பதாகக் கற்பனை செய்துகொண்டு இரைந்தான்: “நீ என்னைப் பண்ணிக்காட்டா போயேன்! எங்காத்து கன்னுக்குட்டி புல் திங்காதா?”

கமலம் கடைக்கண்ணால் மகளைப் பார்த்தாள். அவள் விறைப்பாக அமர்ந்திருந்தாள்.

“நீங்களே சொல்லுங்கோ, மாமி. பேரில என்ன இருக்கு?”

“அதானே! பேரில என்ன இருக்கு?” என்றவள் ரேணு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *