பெண் பார்த்துவிட்டு..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 7,648 
 

“மொத மொதலா நேத்திக்கு ஒரு பொண்ணு பாத்துட்டு வந்தியே!” என்று கேசவன் ஆரம்பித்ததும், சதாசிவம் பெருமூச்செறிந்தான். `இனி இவனிடமிருந்து தப்பிக்க முடியாதே!’ என்ற அயர்ச்சி பிறந்தது.

இன்று, நேற்று பழகியவர்களாக இருந்தால் இப்படித் தொணதொணக்க மாட்டார்கள். இவனோ, பால்ய சிநேகிதன்! தான் மட்டும் தனிக்கட்டையாக, நிம்மதியாக இருப்பது பொறுக்காது, இந்த ஏழெட்டு வருடங்களாக, குடும்பஸ்தனாகிவிடும்படி பார்க்கும்போதெல்லாம் வற்புறுத்திக்கொண்டிருக்கிறான்.

“பொண்ணு நல்ல உயரம்,” என்று சுருக்கமாகச் சொன்னான் சதாசிவம்.

“பலே!”

“அதனால, ஒல்லியா, சித்தே கூனலா இருக்கு!”

“அதனால என்ன! எக்சர்சைஸ் பண்ணினா சரியாப்போயிடும்! அப்புறம்?” என்று ஊக்கினான் கேசவன். “மூஞ்சியைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே நீ! வெக்கப்பட்டுண்டு சரியாப் பாக்கலியா?”

“எனக்கென்ன வெக்கம்! இந்தக் காலத்திலே பொண்களுக்கே வெக்கம்னா என்னன்னு தெரியாது!” என்றுவிட்டு, “சோடாபுட்டிக் கண்ணாடி! அதனால, கண்ணு ரொம்பப் பெரிசாத் தெரியறது,” என்று வர்ணித்தான்.

“சே! முக அழகையே கெடுக்குமே!”

“`அதனால என்ன, காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கலாமே!’ அப்படின்னு நீ சொல்வியோன்னு பாத்தேண்டா!” ஏக்கம்.

“சரி, சொல்லிட்டுப்போறேன். காசா, பணமா! சோடாபுட்டியா இருந்தா என்ன! காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கலாமே!” என்றான் நண்பன். “மேலே சொல்லு”.

“யாருடா, இவன்!” தன் அலுப்பை வெளிப்படையாகவே காட்டினான் சதாசிவம்.

“சொல்லேண்டா. ஒங்கம்மா ஒண்ணும் கேக்கலியா?”

“வருங்கால மாமியாராச்சே! கேக்காட்டா நன்னா இருக்குமா? அவ கெத்து என்ன ஆறது?”

“அப்படிப் போடு! மாமி என்ன கேட்டா?”

“வழக்கமா எல்லாரும் கேக்கறதுதான்! `ஒரு பாட்டுப் பாடும்மா,’ன்னா. அம்மா அவ்வளவு அருமையா யார்கிட்டேயும் பேசி நான் கேட்டதில்லே, போ!”

“இதை கல்யாணம் ஆனப்புறம் சொல்லு. சரி. என்ன பாட்டு?”

“என்னமோ கச்சேரி பாட்டு. எனக்குதான் இதிலே எல்லாம் இண்டரெஸ்டே கிடையாதுன்னு ஒனக்குத் தெரியுமே!”

“பொண்ணு எப்படிப் பாடினான்னு நான் கேட்டிருக்கணும்”.

“கொரலைக் கேட்டா, மயில் பயந்து ஓடிடும்னு அப்போ எனக்குத் தோணித்தா! சிரிச்சுட்டேன்”.

“அடப்பாவி! அவா தப்பா எடுத்திண்டிருக்கப் போறாளே!”

“அதான் இல்லே. பொண்ணோட அப்பா, `மாப்பிள்ளை எம்பொண்ணு பாட்டைக் கேட்டதும், எவ்வளவு சந்தோஷப்படறார், பாத்தேளா?’ன்னு அம்மாவைக் கேட்டார்”.

“எனக்கென்னமோ இந்த வரன் அமையும்னு தோணலே. ஏண்டா லூசு, இருந்திருந்து ஒரு பொண்ணு பாக்கப்போனவன், நன்னா விசாரிச்சுண்டு போயிருக்க மாட்டியோ?”

“எதுக்கு? போன எடத்திலேயே, `கல்யாணத்துக்கு நாள்

குறியுங்கோ’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”.

நண்பன் அதிர்ந்தே போனான். “என்னது! விளையாட்டுக்குத்தானே சொல்றே?”

“இதில என்னடா விளையாட்டு? அம்மாவுக்குக்கூட கொஞ்சம் கோபம். நான் ரொம்பத் தழைஞ்சு குடுத்ததால, அவாகிட்ட பேரம் பேசமுடியாம போயிடுத்தேன்னு!” சிரித்தான்.

“கொஞ்சம் இரு. ஆசுவாசப்படுத்திக்கிறேன். பொண்ணோட கொரல் கட்டை. கேக்கச் சகிக்கலே…!” ஒவ்வொரு பதிலையும் அலசினான்.

“அதிலேயும் ஒரு நன்மை. இனிமையாப் பாடினாள்னா, நாளைக்கே கச்சேரின்னு நாலுபேர் கூப்பிடுவா. இவ வீட்டை மறந்துட்டு, ஊர் ஊரா சுத்துவா. அப்பறம் என்னை யார் கவனிப்பா?”

“பாயிண்ட்!” மெச்சினான் கேசவன். “ஒண்ணு கேக்க மறந்துட்டேனே! பின்னலாவது நீளமா, தடியா இருந்ததோ? நீளமா இருந்திருந்தா, `பொண்ணோட தலைமயிர் மொழங்காலைத் தொடறது!’ன்னு ஒங்கம்மா அதைப்பத்திப் பெருமையா நாலுபேர்கிட்டே பேசிப்பா!”

“அதான் இல்லே,” பெருமையாகச் சொன்னான். “மேலே ரெண்டு கால் — குச்சிமாதிரி. அப்புறம், ஒரே தடி! இடுப்புக் கீழே தொங்கித்து ஒத்தைப்பின்னல்!”

“சவுரியை சரியா வெச்சிருக்க மாட்டாளோ! அப்படி என்ன தலைபோற அவசரம்!” காலங்கடந்து அங்கலாய்த்தான். “நீ வாங்கற பிச்சாத்து சம்பளம் சவுரி வாங்கறதுக்கும், கண்ணாடி மாத்தறதுக்குமே சரியாப்போயிடுமேடா!”

“இந்தக் காலத்திலே யாருடா கேசவா பின்னி விட்டுக்கறா? பேசாம, தோள்வரைக்கும் வெட்டி விட்டுண்டு, நெத்தியிலேயும் ஒரு கத்தை விழறமாதிரி விட்டுண்டா, ஃபேஷனாயிடறது!”

கேசவனுக்கு இன்னொரு சந்தேகம் எழுந்தது. “பொண்ணு நல்ல சேப்போ? அதான் மயங்கிட்டே! ஒனக்கு அந்தக் காலத்திலே, `கறுப்பு சதா’ன்னு பேர் வெச்சிருந்தோமே!”

“டேய்! டேய்! அப்படியா என்னைப்பத்தி கன்னாபின்னான்னு பேசினேள்? நீ எங்கிட்ட சொன்னதே இல்லியே, தடியா!”

“அதுக்கென்ன பண்றது! நம்ப கிளாசில மூணு சதாசிவம்! பொருந்தறமாதிரி ஒவ்வொருத்தருக்கும் பேரு வெச்சோம்! ஒன்னை யாரு ஒங்கப்பாவைக்கொண்டு, கறுப்பா பிறக்கச்சொன்னா? அம்மா எலுமிச்சம்பழக் கலர்!”

“இதெல்லாம் நம்ப கையிலேயா இருக்கு!” என்று, நெற்றியில் ஆள்காட்டி விரலால் ஒரு கீறல் போட்டுக்கொண்டான், விரக்தியுடன். சற்று தெளிந்து, “அவ பேரு சிவகாமியாம்!” என்று தானே தெரிவித்தான்.

“இப்போ அந்தமாதிரி பேரெல்லாம் பாட்டி காரக்டருக்குத்தான் வைக்கிறா கதைகளிலே!”

“போடா! எல்லாத்துக்கும் எடக்கு மடக்கா ஏதாவது சொல்லிண்டு! எங்க ரெண்டுபேர் பேரையும் சேத்துப் பாருடா, ஒத்துமை புரியும். சதாசிவம் – சிவகாமி. இதிலேருந்து என்ன தெரியறது?”

“வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, நீ அவ பேரை ஒன் பேருக்கு முன்னால போட்டுக்கப்போறே!”

அவனை அடிப்பதற்குக் கையை ஓங்கினான் சதாசிவம். “மண்டு! எங்க ரெண்டு பேரும் `எஸ்’ஸிலே ஆரம்பிக்கிறது. நியூமராலஜிபடி, ரொம்ப பொருத்தம்.. அதோட, சிவன்-பார்வதி பேரு வேற!”

இவன் `கறுப்பு’ என்று தன்னைப் பழிக்கவில்லை?

இழந்த உற்சாகம் திரும்பியதுபோலிருந்தது. சதாசிவம் தொடர்ந்து பேசினான். “நம்ப நாட்டிலேயோ சரியான வெயில். தெருவுக்குத் தெரு சரும நோய் வைத்தியர்னு போர்டு மாட்டியிருக்காளே, பாத்ததில்லியா, நீ?”

“அதுக்கு?”

“மேல்தோலு வெள்ளையா இருக்கிறவாளுக்குத்தான் பரு, குஷ்டம் — இந்தமதிரி சரும வியாதி எல்லாம் வருமாம். இவளோ, என்னைவிட கறுப்பு. கல்யாணமானதும், `கறுப்பு’ன்னு ஒங்களைமாதிரி என்னைக் கேலி செய்ய மாட்டா,” என்றவனின் குரல் கம்மியது.

கேசவனுக்கே பரிதாபமாகப் போயிற்று. “என்னதான் சொல்லு, நீ அவசரப்பட்டுட்டியோன்னு நேக்குப்படறது!”

“நீங்க எல்லாரும்தானே என் பிராணனை வாங்கினேள், `கல்யாணம் பண்ணிக்கோடா, பண்ணிக்கோடா’ன்னு,” என்று சலித்துக்கொண்டவன், “இப்ப என்ன! எல்லா விதத்திலேயும் சௌகரியமா அமைஞ்சிருக்கு இந்த வரன்! விடுவியா!” சற்றே திமிராகப் பேசினான்.

“அதான் முக்கியம்! சந்தோஷமா இருங்கோ ரெண்டு பேரும்!” என்று வாழ்த்திய நண்பன், தானும் இவனைப்போல் காத்திருந்து கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கலாமோ என்று, ஏக்கத்துடன் எண்ணமிட்டான்.

அவசரப்பட்டு, இருபத்து மூன்று வயதிலேயே அழகே முக்கியமென ஒருத்தியை மணந்து, இப்போது, `முப்பது வயசிலேயே ஒங்களுக்கு முன்னந்தலையிலே வழுக்கை! அம்பது வயசிலே மொட்டையாகிடுவேள்!’ என்று தினமும் அவள் கேலியுடன் சிரிப்பதைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டாமே!

அதே சமயம், சிவகாமி தன் குடும்பத்தினருடன் விவாதம் செய்துகொண்டிருந்தாள். “ஏற்கெனவே என்னை ஆறு பேர் பாத்துட்டு, `பெண் கறுப்பு,’ `மூஞ்சி இன்னும் கொஞ்சம் நன்னா இருக்கலாம்,’ `ரொம்ப ஒல்லியா இருக்காளே, டி.பியோன்னு சந்தேகமா இருக்கு. எதுக்கும் மெடிகல் டெஸ்ட் பண்ணிடறோமே!’ அப்படின்னு ஏதேதோ சாக்கு சொல்லிட்டு, ஓடிட்டா.

“இப்ப வந்தவனோ, பாத்த ஒடனே ஓகே சொல்லிட்டானே! இந்தப் பையனுக்கு நிரந்தரமான வேலை இருக்கா, பெரிய வியாதி ஏதானும் இருக்குமோன்னு எனக்கென்னமோ சந்தேகமா இருக்குப்பா. அவா குடும்பத்திலே என்ன ஊழலோ! எதுக்கு வீண் ரிஸ்க்! வேற வரன் பாருங்கோ!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *