புட்டுக்கலவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 7,387 
 

தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு உருப்படுபராக ராமு சித்தப்பா.

கால ஓட்டத்தில் முகம் மறந்து போன உருவினராயும், என்னிலிருந்து துடைத்து எறியப்பட்டமனிதராயும் ஆகிப்போன ராமு சித்தப்பா நேற்று முன் தினம் மாலை 6 மணியை கடந்த பொழுதில் என்னில் உருக்கொள்கிறார் திடீரென எதிர்பாராத பொழுதில் எதிர்பாராத நேரத்தில் திடீரென என் நினைவலைகளில் நீந்திக்கொண்டு என் முன் நிற்பவராய் கை, கால், முகம், உடல் என அனைத்தும் வெளிப்பட தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு முழு உரு வெளிப்பட நிற்கிறார் ராமு சித்தப்பா.

அது ஒரு அடைமழை நாளின் இரவுப்பொழுது.தோட்டத்தில் இருந்ததால் அது முன்னிரவா,பின்னிரவாஎனசரியாகத்தெரியவில்லை.

ஒன்னறை ஏக்கர் நிலத்தில் (முக்கால் குறுக்கம்) பிடுங்கிப்போட்ட கடலைச்செடியிலிருந்து பிரித்தெடுத்த கடலைகளை தோட்டத்தின் நடுவில் மண் குவித்த மேட்டில் மூடை போட்டு அடுக்கி வைத்திருந்தோம்.

படர்ந்து,கிளைபரப்பி நின்ற வேப்பமரத்தின் அடியில் சுற்றிலுமாய் உள்ள மண்ணை ஒரு சாண் உயரத்திற்கு சதுரமாய் மேடிட்டு அதில்தான் மூடைகளை குடியமர்த்தினோம்.

பச்சைகடலை.ஒட்டியிருக்கிற மண்ணோடும்,அதன் ஈரத்தோடும்,வாசத்தோடும் செடியிலிருந்து பிடுங்கிய மனிதக்கரங்களின் உழைப்போடுமாய் சாக்கு மூட்டையில் போட்டு தைத்து அடுக்கியிருந்தோம்.

ஒன்றின் மீது ஒன்றாக பத்து மூட்டைகள்.இரண்டு வரிசையாக/அதன் மீது போர்த்தப்பட்டிருந்ததார்ப்பாய்.அதனுள்ளே காவலுக்கு படுத்திருந்த நாங்கள்.நாங்கள் என்றால் நான் மற்றும் ராமு சித்தப்பா.

சித்தப்பா என்றால் அவரும் நானும் உறவினர்கள் இல்லை.வேற்று ஜாதிகளுக்குள் முறைவைத்து அழைத்துக்கொள்கிற பழக்கத்தை இன்னும் முடியிட்டும்,அணையாத தீபமாகவும் பாதுகாத்து வைத்திருக்கிற கிராமங்களில் எங்களதும் ஒன்றாக/
மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா, அத்தை, அண்ணன்,,,,,,,,என பழகி விடுகிற
உயிரோட்டங்களில் ஒன்றாக முளை விட்டு நின்று தெரிந்தது.

அந்த வகையில் ராமு எனக்கு சித்தப்பா ஆகிறார்.ஆடு மேய்த்து பிழைப்பை நடத்துகிறசாதாரணஅன்றாடங்காய்ச்சிஅவர்.5 உருப்படிகளை சொந்தமாகவும், இன்னும் அதனுடன் சேர்த்து 5 உருபடிகளை வாரத்துக்கும்(பிறரது ஆடுகளையும் சேர்த்து பாதுகாப்பது.ஆடுகளின் முதலாளிகள் வேறு,வேறு நபராகவும் பராமரிப்பவர் இவராகவும் இருப்பார்.அதற்கு ஒரு கூலி என்கிற ஏற்பாடு மேய்ப்பார்.

காலை எழுந்தவுடன் மொழு,மொழுகடை சாயாவில் துவங்குகிற அவரது ஓட்டம் இரவு படுக்கப் போகிறவரை நிற்காது.எதனை சாக்கிட்டாவது எங்காவது போய்க்
கொண்டிருப்பவராகவும்,வந்து கொண்டிருப்பவராகவும் தென்படுகிறார்.

மனைவி இல்லை,இவர்,ஆணொன்றும், பெண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளைகள் அடங்கிய குடும்பம் என்கிற சிறு சக்கரமே அவரது சுழற்சி அதையும் ஆடு,குட்டி அவற்றின் மேனி வாசனை,கோமியம்,ஆட்டுப்புழுக்கை, அவை உதிர்க்கிற ரோமம்,மேய்தல்,காடு,கரை கூடவே வீட்டின் சாப்பாடு என அவரது நிர்வாகஸ்த வேலைகளுக்கு உட்படுகிற இவைகளில் அவரது சமையல் மட்டும் அவரது பிள்ளகளுக்குக்கூட பிடிப்பதில்லை.

கரைத்தபுளியைஅதன்வாசனை கூட மாறாமல் அப்படியே சூடுபண்ணிக்கொடுப்பார். ரசம் என/இப்படித்தான் எல்லாவற்றிலும் ஆகிப்போகும்.

முக்கால்வாசி நாட்களில் பிள்ளைகளுக்கு தண்ணீர் சோறுதான்/சுளித்த முகத்தோடும் வெறுத்த மனத்தோடும் சாப்பிடும் பிள்ளைகளிடம்,,,,,,,, “இப்படி கை மொன்னையாகிப்போன அப்பங்கிட்ட இத விட என்ன பெரிசா என்ன எதிர்பாக்குறீங்க, பாவம் நல்லாதிங்குற வயசு,நாந்தான் செஞ்சு போட முடியாத பாவியாகிப்போனேன் என்கிற சுய பச்சாதாப வார்த்தைகள் அவரில் எழுகிற கணங்களில் நான் அவரின் முன் போய் நின்று விடுகிற அப்பாவித்தனம் நிகழ்ந்து விடுவதுண்டு பெரும்பாலான நாட்களில்

“வாப்பா.வந்துட்டயா,நீயும் கொஞ்சம் சாப்புடு,இந்த கொடுமக்காரன் செஞ்ச சாப்பாட்ட” என சிறிது நேரம் வேறு வேறாக பேசுகிற பேச்சின் நீட்சி பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பிய பின் அழுக்கையில் போய் முடியும் அல்லது வந்து நிற்கும்.

“மகராசி ஏங்பொண்டாடி போயி சேந்துட்டா,நான் கெடந்து சீப்படுரேன் இதுகளோட,நல்லா வளந்து நிக்குற பிராயம்,அதுகளுக்கு செம்மையா செஞ்சுகூட போட முடியாத படுபாவியாகிப்போனேன் என தலையில் அடித்துக்கொண்டவராய் மௌனமாகி விடுவார்.

அந்த கனம் மிகுந்த நேரத்தில் மௌனம் வியாபித்துக்கிடக்கிற சுற்று வெளியின் அதுவானத்தில் நாங்கள் இருவர் மட்டுமே தனித்த் விடப்பட்டவர்களாகவும்,பேச ஏதும் பேச்சற்றவர்களாகவும் அனேகமாக ஊரில் யாரும் நெருங்க பயப்படுகிற அவரிடம் நானும் எனது குடும்பத்தாரும் நன்றாகவும்,நிறையவுமே பழகினோம்.

அப்படி மற்றவர்கள் அவரை ஒதுக்கி வைக்க நோயுற்ற அவரது உடலே காரணமாக சொல்லப்பட்டது.

கைகால்களில் விரல்களற்ற,மேனியெங்கும் தடிப்பு,தடிப்பாய் வீங்கித்தெரிகின்ற கண்கள் பஞ்சடைந்தும், தலைமுடி செம்பட்டை பாய்ந்தும் உடல் குறுகியும் போய் இருக்கிற அவரைத்தான் நான்சித்தப்பா என்றேன்.

அப்படியான சித்தப்பாவும் நானும்தான் பிடுங்கிப் போட்ட கடலை மூடைகளுக்கு
அன்று காவலுக்குப்போயிருந்தோம்.

இறுகப்பற்றி இழுத்து மூடப்பட்ட தார்ப்பாயின் ஒவ்வொரு முனையிலும் கல்லை வைத்திருந்த வேப்பமரத்தின் அடியில்தான் நாங்கள் படுத்திருந்தோம்.

பரந்து விரிந்து கிளை பரப்பி ஆகுருதி காட்டிய மரம் தனது வயதை இருபது வருடங்களுக்கும் குறையாமல் சொன்னது.

வீட்டிலேயே இரவு சாப்பாடு முடித்து விட்டு தோட்டத்திற்கு போன சிறிது நேரத்திலெல்லாம் மழை தன் கரங்களை விரித்து பூமிக்கும்,வானத்திற்குமாய் நெசவிட ஆரம்பித்தது.

கேட்டால் “இது என் காலம்,அடைமழை நேரம் அப்படித்தான் பெய்வேன்” என்றது அடமாக,அது பார்த்து சொல்லும் போது என்னதான் செய்வது?,,,,,,,,

அதை ராமு சித்தப்பாவிடம்சொன்னபோது “அதெல்லாம்சரியப்பா,இந்த மழையிலயும்,
பேய்க்காத்துலயும்இப்பிடிபழுத்தமரத்துக்கடியிலதார்பாயிக்குள்ளபடுத்துக்கெடக்குறம
ஏதாவதுஅசம்பாவிதமாஆயிப்போச்சுன்னாஎன்னபண்றதுப்பா”,என பேசியவாறும்,
புலம்பியவாறும் அன்று இரவுப்பொழுதை மழையினூடாகவும் மழை நின்ற பின்புமாக கழித்த ராமு சித்தப்பா,,,,,அந்தக்கடலை மூடைகளையும், கடலை மூடைகளுக்கு எங்களுடன் சேர்த்து காவல் நின்ற வேப்பமரத்தையும் விலைக்கு விற்று பணமாக்கி செலவழித்து முடிந்து போன பின் நாட்களின் ஓர் அடர்த்தியான இரவுப்பொழுதில் இறந்து போனார்.

அவரை புதைத்த இடம் இன்று புல் மண்டிப்போயிருக்கலாம். நானும்,வேலை,பிழைப்பு நிமித்தம்கிராமத்திலிருந்து வெளியேறி ஒரு மத்தியதர வர்க்கத்தினனாய் உருமாறிப்போன பொழுதுகளில் என்னில் நெசவிட்ட ராமு சித்தப்பாதன்னைதானே செதுக்கிக் கொண்டு வெளிப்படுபராகவும்,உருப்படுபட்டு தெரிபவராகவும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *