பிள்ளையாருடன் நான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 5,489 
 

வழக்கம்போல் வேகமாக எங்கள் தெரு மரத்தடி பிள்ளையாருக்கு கையை வீசி வணக்கம் போட்டு விட்டு பறப்பவன் இன்று நின்று நிதானமாய் “பிள்ளையாரப்பா நீதாப்பா காப்பத்தணும்”, மனதுக்குள் வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டு விட்டு பிள்ளையாரை பார்த்தேன்.

அலங்காரத்தில் இருந்தாலும் சரி சாதாரணமாய் இருந்தாலும் சரி முகத்தில் ஒரு புன்னகையை காட்டித்தான் உட்கார்ந்திருப்பார். இன்று ஏனோ கொஞ்சம் அதிகப்படியான் புன்சிரிப்பை காட்டுவது போல் எனக்கு தோன்றீயது.

என்ன பிள்ளையாருக்கு அலங்காரம் அதிகமா இருக்கு, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

சட்டென்று பிள்ளையார் வாய் விட்டு சிரிப்பது போல தோன்றியது. அது மட்டுமல்ல பேசவும் செய்தார்.

என்ன நாராயணா இன்னைக்கு உனக்கு எந்த வேலையும் இல்லையா?

என்ன பிள்ளையாரப்பா இப்படி கேட்டுட்டீங்க. இப்பத்தான் குளிச்சு முடிச்சு உன்னை தரிசிக்கனும்னு வந்திருக்கிறேன்.

அதனால்தான் கேட்டேன், இன்னைக்கு உனக்கு விடுமுறையா? இல்லை….

பிள்ளையாரப்பா மொத்தமாக லீவு கொடுத்துட்டாங்க, வயதாகி விட்டதாம், நேற்றுடன் ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

அதுதான் கேட்டேன், எப்பொழுதும் எனக்கு “டாட்டா” மட்டும் காட்டுவாயே இன்னைக்கு என்ன நிறுத்தி நிதானமாய் இருக்கிறாய் அப்படீன்னு?

பிள்ளையாரப்பா தப்பாக நினைத்துக்கொள்ளாதே வேலைக்கு போற அவசத்தில் அப்படியெல்லாம் தலையை சொறிந்தேன்.

சரி இப்ப எதற்கு இத்தனை மரியாதை?

பிள்ளையாரப்பா இன்னும் பசங்க எல்லாம் ஒரு நிலைக்கு வரலை. அதுக்குள்ள இந்த ஓய்வு வந்துடுச்சு, மனசு ரொம்ப கலக்கமா இருக்கு, அதுதான் உன்னை பார்த்து வேண்டிக்கலாமுன்னு .மீண்டும் தலையை சொறிந்தேன்.

உங்களுக்கு ஏதேனும் காரியம் ஆக வேண்டுமென்றால் மட்டும் இறைவனை தேடுறீங்க, நீயும் இப்ப உனக்கு காரியம் ஆக வேண்டுமென்று தானே இங்கு வந்திருக்கிறாய்.

பிள்ளையாரப்பா என்ன இப்படி சொல்லி விட்டாய் உன்னை தினமும் தாண்டித்தானே வேலைக்கு சென்றேன், அப்பொழுதெல்லாம் எதையாவது வேண்டிக் கொண்டா உன்னை வணங்கிட்டு போனேன்.

உண்மையை சொல் நீ எதுவும் வேண்டவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் என்னை ஏதோ சொல்லிவிட்டு சென்றது போல் ஞாபகம்…

பிள்ளையாரப்பா அது ஒன்றுமில்லை “ உனக்கு என்னப்பா” உக்காந்த இடத்துல எல்லாம் கிடைச்சுடுது, என்னைய பாரு “நாய் மாதிர் ஓட வேண்டியிருக்கு” நேரத்துல வேலைக்கு போனாதான் அன்னன்னைக்கு கூலி” இப்படித்தான் சொல்லி விட்டு போவேன்.

அப்படி வா வழிக்கு, அப்புறம் எப்படி என்னை தினமும் வேண்டி கொண்டு சென்றதாய் பொய் சொல்கிறாய். உனக்கு பொய் சொல்வது கை வந்த கலை ஆயிற்றே.

பிள்ளையாரப்பா மீண்டும் என்னை குற்றம் சாட்டாதே, சிறு வயதில் ஓடும் ஆற்றில் இருந்து களி மண் எடுத்து வந்து உன்னை உருவம் செய்து நாங்கள் பத்திருபது பேர் பொங்கல் வைத்து, கும்பிட்டோமே, ஏன் சிறு கல் கிடைத்தாலும் உன்னை ஒரு இடத்தில் நட்டு நாங்கள் சாமி கும்பிட்டிருக்கிறோமே.

அப்பொழுது கூட வீட்டில் இருந்து ஒவ்வொருத்தரும் அரிசி, வெல்லம், பருப்பு என்று திருடிக்கொண்டு வந்துதானே பொங்கல் செய்து கும்பிட்டீங்க,. அதுவும் ஒரு விளையாட்டாகத்தானே செய்து கொண்டிருந்தீர்கள்.

வீட்டில் சொன்னால் தரமாட்டார்கள் என்பதற்காக அப்படியெல்லாம் செய்தோம். இருந்தாலும் உனக்கு எங்களால் முடிந்த பூஜை செய்தோமா இல்லையா?

எதற்கு செய்தீர்கள்? கடவுளே “வாத்தியார் அடிக்க கூடாது, இன்னைக்கு வாத்தியாருக்கு சுரம் வந்து ஸ்கூலுக்கு வரக்கூடாது, யாராவது தலைவருங்க செத்து போய் லீவு விட்டறனும், இப்படித்தானே வேண்டிக்கிட்டீங்க.

பிள்ளையாரப்பா அது அப்ப அறியாத வயசு, அதையெல்லாம் மனசுல வச்சுக்காத, சரி அதுக்கப்புறம் சலாவுதீன் என்னைய அடிச்சுட்டான், அவனுக்கு வாத்தியார்கிட்டே அடி வாங்கி கொடு அப்படீனு வேண்டிகிட்டது. பாவம் உனக்காக முஸ்தபா அவன் கூட சண்டை போட்டது பிள்ளையாரப்பா அவன் எக்ஸாம் எழுத வச்சிருந்த பேப்பர் கிழிஞ்சு போயிருந்தது, அதை நான்தான் கிழிச்சுட்டேன்ன்னு என்னை அடிச்சான்,அதுக்குத்தான் எனக்காக முஸ்தபா அவன் கூட சண்டை போட்டான்.

மறுபடி பொய் சொல்லாதே, அவன் உன்னைய விட நல்லா படிக்கிறவன், இன்னைக்கு பரிட்சை எழுதக்கூடாதுன்னுதானே அவனுக்கு தெரியாம நீ கிழிச்சே, பாவம் நீ நல்லவன்னு நம்பி பெரியப்பன் பையன்னாலும், அவன் கிட்ட உனக்காக முஸ்தபா சண்டைக்கு போனான்.

பிள்ளையாரப்பா ஏதோ அறியாத வயசுல செஞ்சதெல்லாம் இப்படி சொல்லி காட்டறியே.

சரி நீ வாலிபனான பின்னாடி மட்டும், என்னை வேண்டிக்கறதுக்காகத்தான் இந்த இடத்துக்கு வந்தியா?

ஆமா என்று சொல்ல போனவன், சற்று தடுமாறி…இல்லை..மனதுக்குள் முணங்கினேன்.

அப்படி எத்தனை வருசம் வந்தே?

ஒரு வருசம் வந்திருப்பேன்

அப்ப என்னை வேண்டியிருக்கிறயா?

ஆமா என்று சொல்லப்போனவன் மீண்டும் தயங்கினேன்.

நிறைய இளம் பெண்கள் இங்கு வருகிறார்கள் என்றுதானே வந்தாய்

அப்ப சின்ன வயசு, வாய்க்குள் முணு முணுத்தேன்.

சரி அதுக்கப்புறம் ஏன் வர முடியலை?

எங்க, ஒரு வருசத்துக்குள்ள வேலைக்கு போ, வேலைக்கு போன்னு விரட்டிட்டாங்க.

வேலைக்கு போக ஆரம்பிச்சப்ப என்னுடைய ஞாபகம் வந்திருக்குமா?

ஹி…ஹி…ஹி..அப்ப இளம் வயசு..வேற வேற ஞாபகம், அதுவுமில்லாம சம்பாதிக்கணும் அப்படீங்கற வெறி…

அப்ப இந்த பிள்ளையார் உனக்கு எப்ப ஞாபகம் வந்தாரு?

பொண்ணு பார்க்க ஆரம்பிச்சு நிறைய ஜாதகம் ஒத்து வரலை, அப்பத்தான் உன்னைய பாக்க வந்தேன்.

அப்ப கூட என்ன வேண்டுனே? பிள்ளையாரப்பா இந்த ஜாதகமாவது சரி பண்ணி கொடு, உனக்கு தேங்காய் உடைக்கறேன்னு வேண்டிகிட்டயா?

என்ன பிள்ளையாரப்பா? இன்னுமா அந்த தேங்காய் ஞாபகம் வச்சிருக்கே

நான் கேட்டதுக்கு பதில் சொல், உனக்கு அந்த ஜாதம் ஒத்து வந்து கல்யாணமும் ஆகி எல்லா இடங்களுக்கும் போய்ட்டு வந்தியா இல்லையா?

ஆமா, ஏன் எல்லா கோயில் குளங்களுக்கு கூட போனேனே.

அப்பவும் இந்த மரத்தடி பிள்ளையார் உனக்கு ஞாபகம் வரலை இல்லையா?

பிள்ளையாரப்பா.. மீண்டும் தலையை சொறிந்து கொண்டேன்.

அதுக்கப்புறம் அதையெல்லாம் மறந்து விட்டு மறுபடி என்னை எப்பொழுது பார்க்க வந்தாய்?

முத குழந்தை நல்லபடியா பிறக்கணும்னு உன்னை வேண்டிகிட்டேன்.

அப்பவும் என்ன சொல்லி வேண்டிகிட்டே?

குழந்தை நல்லபடியா பிறந்தா, உனக்கு தேங்காய் உடைக்கிறதா வேண்டிகிட்டேன்.

குழந்தை நல்லபடியா பிறந்ததா இல்லையா?

நல்லபடியா பிறந்து படிப்பையும் இந்த வருசம்தான் முடிச்சான்..

இத்தனை நடந்தும், அந்த வேண்டுதலை செஞ்சியா?

எங்க பிள்ளையாரப்பா, “சிசேரியன்னு” சொல்லி பயத்துல உன்னைய வந்து பாத்து, நல்லபடியா பிறந்து, அவனை கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வச்சு இப்ப ஒரு வேலையுலயும் சேக்கறதுக்குள்ள அப்பப்பா ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.

அப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, அது உன் வேலை, நடக்காம இருந்திருந்தா கடவுள் தப்பு பண்ணிட்டாரு அப்படித்தானே,…..

அச்சோ தெய்வமே அப்படி எல்லாம் சொல்லுவேனா?

அப்ப அந்த குழந்தை கஷ்டப்பட்டு பிறந்து படிச்சு, நல்ல வேலைக்கு போனது உன்னுடைய உழைப்பு இல்லையா?

அது இல்லை, நான் உழைச்சாலும், உன்னுடைய அனுக்கிரகம் இருந்ததுனாலதான் முடிஞ்சுது..

அதை எப்பவாவது உன் மனம் சொல்லியிருக்கா? இப்ப இங்க வந்த பின்னாலதான், அதுவும் உனக்கு காரியம் ஆகணும்னு ஒத்துக்கறே, சரிதானே?.

எப்படி வலிக்கு வைத்தியரை தேடி சரியான பின்னால அவர் நமக்கு அவசியமில்லை அப்படீங்கற மாதிரி இல்லையா?

பிள்ளையாரப்பா தயவு செய்து என்னை கிளறாதே, நான் பண்ணறது எல்லாம் தப்புத்தான்.

உனக்கு காரியம் ஆக வேண்டுமென்று பேசாதே, சரி இப்பொழுது என்னை எதற்கு பார்க்க வந்தாய்?

பிள்ளையாரப்பா இன்னும் பத்து வருசமாவது வேலை செஞ்சாத்தான் பையனுக்கும் ஒரு வேலையை புடிச்சு கொடுக்க முடியும், பொண்ணையும் படிக்க வச்சு, வேலைக்கு சேர்த்து ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்….

அதனால?

போற இடத்துல வயசானவன்னு ஒதுக்கிடாம வேலைக்கு சேர்ந்துட்டா, உனக்கு தேங்காய்…..

வேண்டாம் வேண்டாம்..உங்கள் மனித வர்க்கம், எத்தனையோ கண்டு பிடிச்சுட்டாங்க., இண்டர்நெட், வாட்ஸப், பேஸ்புக், ஈ-மெயில், ட்விட்டரு, ,இன்னும் எத்தனையோ கொண்டு வந்துட்டீங்க. நீயும் இந்த தேங்காய் உடைக்கிறேன்னு நிறைய் முறை சொல்லிட்டு காணாம போயிருக்கே.அதனால் நீ மறுபடி வேலைக்கு முயற்சி செய், உன்னுடைய திறமையால் உனக்கு வேலை கிடைச்சா எனக்கும் சந்தோசம். அதற்கு என்னுடைய அனுக்கிரகமும் கிடைக்கும்.

சட்டென்று பிள்ளையார் அமைதியாகி விட்டது போல் எனக்கு தோன்றியது.

இவ்வளவு நேரம் என்னிடம் பேசியது கனவா? மீண்டும் கைகளை கன்னத்தில் மாற்றி போட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *