கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 9,933 
 

அருண் மதியம் பார்த்த ரயில் நிலையம் இதுவல்ல.எரிந்துக் கொண்டிருந்த தண்டவாளங்களும் இறுகிப் போய் மூச்சழுத்தி திமிறிய ரயிலும் வண்ணங்களழிந்த முகங்களுமாய் அடிமனதை புரட்டிய ரயில் நிலையம் கூடடையும் பறவைகளின் வானத்தில் கரும்புள்ளியாய் தொலைந்து போய்விட்டிருக்க வேண்டும். பகல் பொழுதின் அனல் கோடுகள் உண்டாக்கிய இறுக்கம் முற்றிலுமாக தளர்ந்து போக இதமாக வீசி வருடியது நள்ளிரவின் மென்காற்று.சப்தங்கள் வடிந்து போன இந்த இடம் அவன் கற்பனையே செய்திராத அளவிற்கு ரம்மியமாக இருந்தது.கழுத்தை திருப்பி கண்களை அங்குமிங்கும் மேயவிட்டவன் தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் மங்கலாய் நீண்ட இருளை ஊடுருவி பார்க்க முயற்சித்தான்.ரயில் நிலையத்தினிலிருந்து இறங்கி சாலைக்கு போகும் வழியில் மின்கம்பம் பக்கமாய் ஒரு வண்டிக் குதிரை வெம்மையாய் மூச்சுவிட்டு நின்றுக்கொண்டிருந்தது. வெள்ளை ரோமங்களின் மேல் பூசியது போலிருந்த பழுப்பு கோடுகள் அதன் உடல்வாகிற்கு கொஞ்சமும் பொருந்தமில்லாமல் அந்நியமாய் துருத்திக் கொண்டிருந்தன.குதிரைக்கு பின்னிருந்த பழைய வண்டியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான் அதன் வண்டிக்காரன்.குதிரைக்கருகே சாலை விரிவாக்கத்தில் இடிந்துப்போன ஒரு பழைய கட்டிடம் ஒடிந்து பெயர்ந்த செங்கற்களுக்கும் வளைந்த கம்பிகளுமாய் பார்க்க பரிதாபமாய் காட்சி தந்துகொண்டிருந்தது.சாய்ந்து கிடந்த சுவரில் கை ஊன்றி சமதளத்தில் நீளமாய் படிப்போலிருந்ததின் மேல் அருண் உட்கார்ந்துக்கொண்டான்.

அறைக்கு செல்லக்கூடாது என முடிவெடுத்ததும் அருண் முதலில் கடற்கரைக்குதான் செல்ல நினைத்தான்.அவன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது மணி மதியம் மூன்று.அப்பொழுது கிளம்பியிருந்தாலும் ஆறு ஆறரைக்கெல்லாம் கடற்கரைக்கு போய் சேர்ந்திருக்கலாம். இன்றைக்கு பௌர்ணமி வேறு.கடல் தேவ உருவாய் அலைகளை எழுப்பிக்கொண்டிருக்கும்.நிலவுக்கு கீழே நீல சமவெளியென நர்த்தனம் புரியும் கடல்தான் எவ்வளவு அழகு.ஆனால் அவனுடைய அனுபவம் வேறு மாதிரியானதாக இருந்தது.முன்னரொரு ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் நின்று அவன் முழுநிலவை பார்க்க ஒரு நூற்றாண்டின் துயரம் மொத்தமாய் அவனை சூழ்ந்துக்கொண்டு நெருப்பில் நெளியும் புழுவாய் துடிக்க வைத்தது.ஒரு நூற்றாண்டு துயரத்தை ஒரே தினத்தில் ஒற்றை ஆளாய் சுமக்க நேர்வதன் அவலத்தை அதன் வலியை அநுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.அந்த கடற்காற்றிலும்கூட அவனுக்கு அப்படி வியர்த்துவிட்டது. தோலில் கைப்பையை மாட்டிக்கொண்டு கால் அழுத்த நடக்கும் குடும்ப தலைவிகள், செல்போனில் கடற்கரையை படமெடுத்துக் கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள், வேகமாய் ஓடி தடுக்கி விழும் சிறுபிள்ளைகள், அதிர்ந்து சிரிக்கும் யுவன்கள்,பிதுங்கி வழியும் உடல் கொண்ட சுடிதாரில் பாந்தமாய் பொருந்தும் உடல் கொண்ட குச்சி போன்ற ஒல்லியான உடல் கொண்ட உடல் கொண்ட உடல் கொண்ட யுவதிகள் யுவதிகள் என தான் கண்ட அனைவருமே சந்தோஷமாயிருந்தது அவனை இன்னும் அதிகமாய் எரிச்சல் கொள்ள செய்தது. தனக்கு மறுக்கப்பட்ட ஏதோ ஒன்றால் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தால் மனதளவில் புழுங்கி தவித்தான்.அதிலும் குறிப்பாக இளம்பெண்களின் ஆனந்தம்தான் அவனை தன்னை மிஞ்சிய சித்திரவதைக்கு ஆளாக்கியது.அந்த சிவப்பு நிற சல்வாருக்கு என்ன அப்படியொரு இளிப்பு?இங்கிருக்கும் அத்தனை பெண்களையும் கடற்கரையிலேயே வைத்து வன்புணர்ச்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிற அளவிற்கு அவனது மனம் சடுதியில் வன்மம் கொண்டது. இந்த பெண்கள் எல்லோரும் வலியில் அலற அதன் எதிரொலி கடலிலிருந்து வெளிப்பட்டால் எப்படியிருக்குமென யோசித்து பார்த்தான்.சட்டென்று தான் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவனாக மாறினோம் என்ற கேள்வி மனதுள் எழுந்து அவனை கழிவிரக்கம் கொள்ளச் செய்தது. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கடல் தான்.கடலும் அதன் ஈரநிலமும் அவனது மனதை சாக்கடையாக்கி நாற்றமெடுக்கச் செய்தன. நடுக்கடலில் நின்று மூத்திரம் பெய்தாலொழிய இப்பொழுதிற்கு தன் ஆத்திரம் தீராது என்று தோன்றியது அவனுக்கு.

மதியம் தொடங்கி இரவின் இந்த கணம் வரை அங்கேயும் இங்கேயுமென வெறுமனே அலைந்து கொண்டிருந்ததிலேயே நேரம் தீர்ந்துவிட்டது. காலையில் கல்லூரிக்கு சென்றபோது சாதாரணமாக என்றைக்கும் செல்வதைப் போல்தான் கிளம்பினான்.கொஞ்சம் நஞ்சமென்றில்லாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது உச்சிவெயில்.மதியம் சாப்பாட்டு இடைவெளியின் போது எல்லோரும் கேன்டீனுக்கு போய்விட இவன் மட்டும் தனியாய் வகுப்பிலேயே உட்கார்ந்து கொண்டான். என்னென்னவோ சிந்தனைகளில் உழன்று மனம் பித்து பிடித்தது மாதிரி அரற்றிக்கொண்டிருந்தது. கரும்பலகையில் சுருக்கங்களை உடைய அப்பாவின் முகமும் எப்பொழுதும் கோபித்துக் கொண்டேயிருக்கும் அம்மாவின் முகமும் பூதாகரமாய் விரிந்து பயமுறுத்தின.கால்களை எழுத்து மேஜையின் இரும்பு கம்பியில் பிணைத்துக் கொண்டு இரு கைகளாலும் இருக்கையை மூர்க்கமாய் குத்தத் தொடங்கியவனின் வலது காது மடல் சிவந்துப் போய் நடுங்கிகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கிரி வகுப்பிற்குள் நுழைந்தான். தனக்கு அருகில் வந்து தனது தோல்களை அதிர்ச்சியோடு பற்றிய கிரியை தள்ளிவிட்டு அவன் சுதாரிப்பதற்குள் முகத்தில் ஒரு அறை விட்டான் அருண். இப்பொழுதுவரை கிரியை ஏன் அடித்தோம் என்பது அருணுக்கு தெரியாது.இன்னமும் கூட அந்த நிகழ்வு யாரோ மூன்றாவது மனிதருக்கு நடந்தது மாதிரியும் அதை எவனோ தன்னிடம் சொல்ல கேட்டது மாதியும்தான் இருக்கிறது.

குதிரை லேசாய் கனைத்தது.யாரோ நகரும் ஓசை கேட்டது.குதிரை வண்டிக்காரன் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கசங்கிய லுங்கியும் அதற்கு சம்பந்தமேயில்லாத அடர் நீல சட்டையுமாய் காண்பதற்கே விசித்திரமாக இருந்தவன் நிச்சயமாக இந்நேரத்தில் அருணை இந்த இடத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டான். சொல்லபோனால்,அவன் எந்த வகையிலுமே இன்னொரு மனிதனின் இருப்பை அங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான்.அது சரி,அருண் மட்டும் இங்கொரு குதிரையையும் பைத்தியக்காரத்தனமாய் ஆடை உடுத்தியிருக்கும் அதன் வண்டிக்காரனையும் எதிர்பார்த்தானா என்ன?எல்லாம் விதி.வண்டிக்காரன் அருண் அருகே வந்தமர்ந்தான்.

– இந்நேரத்துல இங்க என்ன நைனா பண்ணுற?

– …..

-பதில் சொல்லாக்காட்டி எப்புடி? வூட்ல எதுனா ப்ராப்ளமா?ஓடியாந்துட்டியா?

சாராய வீச்சம் அருணை வெறுப்புற செய்தது.எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அமைதியாய் தன் பாட்டிற்கு கண்களை மூடிக்கொண்டான்.

சட்டென்று ராஜலட்சுமியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது உடன் பயின்றவள் ராஜலட்சுமி.அவள் மீது அவனுக்கு பிரத்யேக கவனம் என்று எதுவும் கிடையாது. சிறுநகரத்தின் வழமையான முகமும் வாளிப்பற்ற உடலும் கொண்டவளின் கண்கள் சின்னதாய் இருக்கும்.அந்த வருடம்தான் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் வந்து புதிதாய் சேர்ந்திருந்தாள் .எப்பொழுதும் சாதாரணமாய் இருப்பவள் திடீரென ஒரு நாள் காலை இடைவெளியின் போது ரிக்கியைப் போட்டு செமத்தியாக அடிக்க துவங்கிவிட்டாள்.சைக்கிள் கேரியரில் புத்தக பையை இறுக்கிக்கட்ட பயன்படும் எலாஸ்டிக் கயிறால் ரிக்கியின் கழுத்தை சுற்றிவிட்டு ரௌத்திரம் தெறிக்க தனது கையிலிருந்த இயற்பியல் புத்தகத்தினாலேயே அவனை அவள் சாத்தி எடுத்ததை பார்த்த சக மாணவர்கள் எல்லோரும் அரண்டே போனார்கள். யாருக்குமே எதுவுமே புரியவில்லை.சர்க்கஸில் பழக்கப்பட்ட யானை எதிர்பாராவிதமாக மதம் கொண்டு பார்வையாளர்களை தாக்க முற்பட்டால் எப்படியிருக்கும்? சில நொடிகளில் சாமியாடி ஓய்ந்த பெண்ணைப்போல் சரிந்து விழுந்தவள் கண்களில் நீர்த்துளிகள் மின்ன புத்தகத்தை வாசற்பக்கம் வீசியெறிந்தாள்.

கிரி கன்னத்தை தடவியபடியே எழுந்திருத்தபோது பாலாஜியும் இன்னும் மூன்று பேரும் வகுப்பிற்குள் வந்துவிட்டிருந்தார்கள்.அருணுக்குள் கோபம் சிகரெட்டில் எரியும் புகைப்போல் கசப்பாய் தகித்துக்கொண்டிருந்தது.நிலைமையை ஊகித்துக்கொண்ட பாலாஜி உடனடியாக அருணை வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான்.அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் அருண் அவனை எக்கித்தள்ளி வாசற்பக்கத்தில் இருந்த நீளமான கட்டையை கைகளில் பற்றிக்கொண்டு விலங்கிடப்பட்ட மிருகம்போல் உறுமினான்.முகமெங்கும் கருப்பாய் சிரிப்பு படர கட்டையை அவர்கள் பக்கம் வெறித்தனமாக அவன் வீசத் தொடங்கியதில்,நரேனுக்கு தாடையில் விழுந்தது அடி.பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் மாளாதென்பதை கிரகித்துக்கொண்டதும் காட்டுத்தனமாய் நடந்துக்கொண்டிருந்த அருணை சேர்ந்தாற்போல் ஒன்றாய் அழுத்தி கட்டையை பலவந்தமாய் பிடுங்கி தூர அடித்தார்கள். திமிறிக்கொண்டிருந்த அருணின் முகத்தில் பளீரென அறைந்தான் முகுந்த். சாம் நெற்றியில் அடித்ததில் மோதிரம் கீறி ரத்தம் சொட்டியது.சூடுபட்ட பூனைப் போல் மெல்ல பதுங்கி ஒடுங்கலானான் அருண்.வெறியெல்லாம் வடிந்து போய் அப்போதைக்கு பயம் மட்டும் மீதமிருக்க அவனது உடல் சுருங்கி குறுகியது.

கொஞ்ச நேரம் சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த வண்டிக்காரன் சட்டென்று வானத்தை வெறித்துப் பார்த்து மௌனமானான். முழுநிலவைச் சுற்றி மேகங்கள் சதுர துளைகளாய் பரவிக்கிடந்தன.சற்றைக்குள் விருட்டென்று எழுந்தவன் வண்டிக்குள் விரிக்கப்பட்டிருந்த போர்வைக்கடியே கையை விட்டு எதையோ எடுத்து அதை தனது சட்டைக்குள்ளாக மறைத்து வைத்துக்கொண்டான்.அவன் முகத்தில் பரவசமோ பயமோவென கண்டறிய முடியாதபடிக்கு சமனற்ற கலவையாக உணர்ச்சியலைகள் எழுந்தோடிக் கொண்டிருந்தன.போன வேகத்திலேயே திரும்பி வந்தவன் மறுபடியும் அருணுக்கருகிலேயே அமர்ந்துகொண்டான்.மிதமிஞ்சிய ஜாக்கிரையுணர்வோடு கயிறு மேல் நடப்பவனினுடையதைப் போலிருந்தது அவனுடைய இயக்கம்.சட்டைக்குள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த ‘அதை’ மிகவும் லகுவாய் வெளியே எடுத்தான்.

இதையெல்லாம் கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்த அருணுக்கு ஆர்வம் தாங்கவில்லை.மெல்ல எழும்பி அவன் கைகளில் என்ன வைத்திருக்கிறான் என எட்டிப் பார்த்தான்.கண நேரத்தில் அவனுடைய எதிர்பார்ப்பு சப்பென்று ஆகிப்போனது. குறி சொல்பவர்கள் கையில் பிடித்திருப்பார்களே அந்த மாதிரியானதொரு சின்ன கருப்புத் தடி அது.இந்த குறி சொல்பவர்கள்,கிளி ஜோசியம் பார்ப்பவர்கள்,ரேகை கணிப்பவர்கள் மற்றும் இதுபோல் நிறைய இத்யாதி செய்வர்களின் மேல் அருணுக்கு எக்கச்சக்கமான அவநம்பிக்கை உண்டு.ஒரு கட்டத்திற்கு மேல் அளவற்ற நம்பிக்கையின்மையே வெறுப்பாக பரிமணித்துவிட்டது.ஆங்காரமான அசட்டைப் பார்வையில் வண்டிக்காரனை ஒரு முறை முறைத்துவிட்டு வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டான் அருண்.இருந்தும் அவனுக்குள்ளிருந்த குரங்கு மனம் அவனை சும்மாயிருக்கவிடவில்லை.கண்கள் நிலைக்கொள்ளாது வண்டிக்காரன் பக்கமாய் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தன.கொஞ்ச நேரத்திற்கு பிறகு அநிச்சையாய் அவன் மேலேயே பதிந்துவிட்ட கண்களை அருணால் விலக்க முடியவில்லை.

அக்கரிய உருளைத்தடியை மெல்ல நீவிக்கொடுத்தபடியே மந்திரம் போல் எதையோ உதட்டிற்குள்ளாக வண்டிக்காரன் முனகிக்கொண்டிருந்தான். அவனது மொத்த உடலும் விறைத்து போயிருந்தது.இறுக்கமாய் மூடியிருந்த மணிக்கட்டில் பச்சை நரம்புகள் பாம்பு போல் வளைந்து புரண்டன.அருணுக்கு ஒரு பக்கம் இவனை நினைக்க லேசாக பயமாகவும் மறுபக்கம் பயங்கர வேடிக்கையாகவும் இருந்தது.சரியான கிறுக்கிடம் வந்து மாட்டிக்கொண்டோம் என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்.

ரயில் நிலையத்தை கடந்த ரயில் தண்டவாள சரளைக்கற்களுக்கு மேலிருந்த பாலீதின் கவர்களையும் நடிகைகளின் உடல்களை தாங்கிய செய்தித்தாள்களையும் கிழித்தெறிந்துவிட்டு தணலாய் தகித்து மறைந்தது.வெயிலை நினைத்தாலே அருணுக்கு அடிவயிற்றில் மண்வெட்டியால் கொத்தியது போலிருக்கிறது.மொத்த நகரத்தையும் வெயில் தன் பாலைக் கரங்களால் வதைக்க நிலத்தடியிலிருந்து அனல் கக்கும் தீ நாக்குகள் மேலெழும்பி காற்று மரம் வெளியென புலனில் தட்டுப்படும் யாவற்றையும் பொசுக்கி கருக்கி விட்டன.எங்கும் எதிலும் வியாபித்து வெயில் இப்பெரு நகரத்தை தனது வெப்ப மதில்ளின் ஆக்கிரமிப்பிற்கு கொண்டு வந்துவிட்டது.மனிதர்கள் எல்லோரும் புழுங்கி தீய்கிறார்கள்.நிழலையையும் நீர்மையையும் தேடியலைந்தவர்களுக்கு கிடைப்பதெல்லாம் கெட்ட வாடையடிக்கும் பிசுபிசுப்பும் கசந்து வடியும் விஷமும் மட்டுமே.

அருகிலா தொலைவிலா என்று கணிக்க இயலாத ஒரு அலைவரிசையில் ரோந்து போகும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் அருணின் காதுகளை வந்தெட்டியது. சட்டென்று உடலெங்கும் பீதி பரவ ஒரு கணம் பயத்தில் அவன் உறைந்தே போய்விட்டான்.இவ்வளவு நேரம் எப்படி போலிஸ் பற்றிய நினைப்பே இல்லாமல் இங்கே உட்கார்ந்திருந்தோம் என்பதை யோசித்து பார்த்ததில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி மட்டுமே இறுதியில் மிஞ்சியது.பக்கத்தில் வண்டிக்காரன் இன்னமும் மூடிய கண்கள் மூடியபடியேதான் கிடந்தான்.இவனுக்கோ உள்ளே அல்லில்லை.போலீஸ் சும்மா சந்தேகத்தின் பெயரில் பிடித்து போனால்கூட அவ்வளவுதான் கதை முடிந்தது. உடனிருப்பவன் வேறு பார்ப்பதற்கு கஞ்சா விற்கும் பேர்வழி மாதிரி இருக்கிறான். போலீஸ் முடிவே கட்டிவிடும் இவன் நிச்சயமாக பச்சை பொறுக்கிதான் என்று. அப்புறம் இரவெல்லாம் அடித்து துவைத்துவிடுவார்கள்.சமயங்களில் காவல் நிலையங்களில் ஒரு பால் வன்கலவியெல்லாம்கூட நடக்குமென அவன் கேள்வி பட்டிருக்கிறான்.அடங்கவே அடங்காத வெறி கொண்டவர்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் எப்படி ஒருவனை வதைப்பார்களென நாம் யோசிக்கவே முடியாது.இப்படியாக அவனது மனம் என்னவென்னவோ அபத்தங்களை பற்றியெல்லாம் சிந்தித்து கவலையில் பதறியது. நடுங்கும் கை விரல்களின் நகத்தை கொஞ்சம் தோலோடு சேர்த்தே கடித்து துப்பினான்.

காலங்களிலேயே படுமோசமானது வெயிற்காலம் என்பதில் அவனுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.வெண்பனி உலர் நினைவுகளையும் பெருமழை ததும்பும் காதலையும் கொண்டு வருகிறதெனில் வெயிலோ வாதைகளையும் ரணங்களையும் கொண்டுவருகிறது.தாரொழுகும் தீப்பிழம்பாய் சாலையில் ஊரும் வெயிலில் வயோதிகர்கள் மரணத்தை அதன் வலி மிகுந்த நிர்வாணத்தோடு அவ்வளவு பக்கத்தில் பார்த்தார்கள்.அவனிருந்த லட்சுமிபுரத்து தெருக்களில் தொடர்ந்து சங்கொலிகளும் தப்பட்டை சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தன. போன வாரம் பண்டரிநாதன்.அதற்கு முந்தைய வாரம் ரமேஷண்ணின் பாட்டி. நேற்று செல்வியக்காவின் சின்ன தாத்தாவென ஊரே சவப்பெட்டிகளை சுமந்துச் சென்று புதைத்துக் கொண்டிருக்கிறது. சுடுகாட்டைவிடவும் சூன்யம் பிடித்தவை எழவு வீடுகள். வயசாளிகள் செத்த வீடுகளில் ஓலமுமில்லை கண்ணீருமில்லை. விழிகளும் தொண்டையும் இறுகி நீர்க்கட்டிப்போல் ஆகிவிட எல்லோரும் வெற்று சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மரணத்தின் ரகசிய குறியீடுகளை சாத்தான் அச்சுவரில் வரைந்து வைத்திருக்கிறான். எல்லோருக்குள்ளும் பயம் காட்டு முள் செடியைப் போல் வேரிட்டுப் படர்கிறது.

வெயிலை அவன் எவ்வளவு வெறுத்தான் என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.செத்துப் போன கிழவன் கிழவிகளை வெயிலே குருதி சொட்ட கொலை செய்தது என அவன் நம்பினான்.மரணத்திற்கும் பிறழ்வுக்குமிடையே பெரிய தூரமெல்லாம் கிடையாது.இரண்டிற்கும் நடுவே இருப்பது ஒரு மெல்லிய ஜிகினாத் தாள்தான்.கிரியை அருன் அறைய வெயிலும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ராஜலட்சுமி ரிக்கியை அடித்ததும் ஒரு நெடுங்கோடையில் தான்.அப்படியென்றால் அனைத்து பிறழ்வுகளையும் வெயிலே உற்பத்தி செய்கிறது. கருனையை அதன் கடைசி துளிவரை உறிஞ்சி குடித்துவிட்டு எவ்வளவு இரக்கமற்றதாக உலவிக்கொண்டிருக்கிறது வெயில்?

திடீரென்று பக்கத்து சந்திலிருந்து வொள்ளென்று குரைத்தபடியே ஒரு வெள்ளை நாய் ஓடி வந்து இவர்களுக்கு முன்நின்றது.ஒலியற்று கிடந்த இருளின் திரையை கிழித்துக்கொண்டு அது தாவி வரவும் இவனுக்கு போலீசார் கழுத்தை திருப்பி முதுகில் மிதித்தது மாதிரியாகிவிட்டது.சைரன் சத்தத்திற்கு பயந்துதான் நாயும் ஓடி வந்திருக்க வேண்டும் என்று புரிந்துக்கொண்டு ஆசுவாசமடைந்தான்.அதுவரை சலனமே காட்டாமல் எவன் விட்ட வழியோ என்று மௌனச் சாமியார்போல் அமர்ந்திருந்த வண்டிக்காரன் நாய் வந்து குரைக்கவும் கிழே இருந்த கற்களில் பெரிதாய் ஒன்றை பொறுக்கி அதன் தலையை குறிவைத்து ஓங்கி எறிந்தான். குறி சிறிதும் பிசகவில்லை. நாயின் மண்டையை பதம் பார்த்துவிட்டது அந்த கல்.வீறலிட்டலறியபடி ஓடி மறைந்த நாய் அதற்கு பிறகு சத்தமே கொடுக்கவில்லை.

எல்லோரையும் போல் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறோமென்றாலும் அடிக்கடி ஏன் இப்படி கட்டிலடங்காத ஆத்திரத்திற்குள்ளாக அமிழ்ந்துப்போய் பழி தீர்க்கும் சர்ப்பம் போல் ஆகிவிடுகிறோம் என்று யோசித்தாள் ராஜலட்சுமி.ரிக்கி எப்பொழுதுமே அமைதியாக இருக்கக்கூடியவன்.யாரைக் கேட்டாலும் வகுப்பிலேயே அவன்தான் நல்ல பையன் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவன் அவ்வளவு நல்லவனாக இருந்ததுதான் தன் கோபத்திற்கு காரணமோ? தெரியவில்லை.

அன்றைக்கு சாயுங்காலம் தனக்கு விருப்பமான இரண்டு தோழிளோடு குறுஞ்செய்திகளின் வழியே அவள் உரையாடிக்கொண்டிருந்தாள்.ஒருத்தி ஹேமா மற்றொருத்தி ருக்கு.ஹேமாவிடம் தன் துயரங்களை அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டால் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. ஹேமாவால்தான் தன் கண்ணீரை புரிந்துகொள்ள முடியும் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.அதே நேரம் ருக்குவிடம் தான் இயல்பாகவே இருக்கிறோம் என்பதை ஆழமாக நிறுவ வேன்டும்.எனவே அதிக பிரய்த்தனம் எடுத்து அவளிடம் ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டாள். இயல்பிற்கும் முகச்சாயத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு தத்தளிக்கும் கோமாளியினுடையதைப் போலிருந்தது அவளது செயல்பாடு.

ஒரு குறுஞ்செய்தியில் தனது வலிமிகு துயரக்கதையை அழுகை பொங்க ஹேமாவிற்கு தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்தால் அதற்குள்ளாக ருக்குவின் காதல் சாகசத்தை ஏந்திய குறுஞ்செய்தி இவள் படிப்பதற்காய் சத்தமெழுப்பி அலைபேசியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.கன்னத்தை துடைத்துவிட்டு அவளுக்கு வாழ்த்துக்கள் எழுத ஆரம்பிப்பாள். துக்கத்திற்கும் சந்தோஷத்திற்கும் நடுவே ஊடாடும்போது தனது முகம் எப்படியிருக்கும்? நிலைக் கண்ணாடியில் கொடுவிஷம் பாரித்த நீலநிற நாகக்கன்னியை பார்த்தவள் சத்தம்போட்டு சிரித்தாள்.-என்ன கண்ணு…இன்னமும் இங்கதான் இருக்கியா..?

இந்தமுறை அவனது குரலில் முன்பில்லாத தெளிவும் தீவிரமும் சேர்ந்து ஒலிப்பதாக தோன்றியது அருணுக்கு.

-இல்லங்க….ரூமுக்கு போகனும். கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்.

-யப்பா பாருய்யா…அப்போ பேசாம கம்முனு இருந்த..இப்போ என்னடான்னா பேசுற. சரி முகமெல்லாந் வாடிபோய் கெடக்குதே எதுனா ப்ராப்ளமான்னு கேட்டா ஒன்னியும் சொல்ல மாட்டேங்குற…

-அதெல்லாம் ஒன்னுமில்லங்க.சும்மாதான் இங்க வந்தேன்.

-தோடா…அர்த்த ராத்திரில ரயில்வே டேஷனாண்ட வந்து உட்காந்துக்கினு சும்மா வந்தேன்னு கதை சொல்றியே செல்லம்.

லுங்கி மடிப்பிற்குள்ளிருந்து பாதி பிரிந்த நிலையிலிருந்த மாணிக்சந்தை எடுத்து வாயில் கொட்டிக்கொண்டு தொடர்ந்தான்.

-நீ என்னமோ கன்பீஸன்ல இருக்கேன்னு மட்டும் புரியுது. ங்கொம்மா….சும்மா நடந்துக்கினும் ஓடிக்கினும் இருந்தாலே இப்படிதான்…ஜனங்களோடு

சேர்ந்து கயிதையாய் ஆயிடுவோம்.அப்படியே வானத்துல பறந்தோம்னு வச்சிக்கியேன்..ஒரு தொல்லையும் கிடையாது…நம்ம குமாரை(குதிரையை தட்டிக்கொடுத்து) தரேன். ஒரு ரௌண்டு பறக்கிறியா?

பாவமாய் நின்ற குதிரையை ஓரக் கண்ணில் பார்த்து தனக்குள் தானே நொந்துகொண்டான் அருண். ஒரு பஞ்சு மூட்டையை தூக்கிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தால்கூட சொத்தென்று விழுந்து தெத்துவிடும்போல் இருந்தது அந்த குதிரை.இந்த லட்சணத்தில் அது வானத்தில் பறக்குமாம்.போதையில் மூளையேயில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறான் லூசுக்கூ…

-என்னப்பா லூசுக்கூதியாட்டம் உளறான்னு நெனைக்கிறியா…சத்தியமா சொல்றேன்.. இந்த குதிரை சும்மா ஏராப்ளேனாட்டம் பறக்கும்.அதோ அந்த முக்குல ஒரு பயுப்பு இருக்குல்ல அதுக்கு பின்னாடி இருக்க வூட்ல ஒரு தெவடியா முண்டை இருக்கா.அவளை பின்னக்க வச்சிக்கினு குமார் மேல ஏறி ராட்டின சுத்தறாப்புல ஒலகத்தையே ரவுண்டடிச்சிருக்கேன்.

இதை சொல்லும்போது தீவீரம் மிகுந்த ஒரு மத நம்பிக்கையாளனின் குரலை ஒத்திருந்தது அவனது குரல்.உடன் பரவசத்தின் உச்சியில் மனம் உடைந்தழ காத்திருப்பவனை போல் இரத்த சிவப்பேறிய கண்களுடனிருந்தான்.அருணுக்குள் சின்னதாயொரு சந்தேகம் தோன்றியது.ஒரு வேளை இந்த குதிரை உண்மையிலேயே பறக்குமா? அப்படி பறக்குமென்றால் நமக்கே சிறகு கிடைத்த மாதிரிதானே. சனியன் போல் பிடித்துக்கொண்டு உயிரை எடுக்கும் பயங்கள் யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று எங்கேயாவது மனிதர்களே இல்லாத இடத்திற்கு பறந்துபோய் விடலாம்.அதற்கு பிறகு நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.உயர உயர பறந்து நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே ஒரு துகள் மண்ணாய் உறைந்துவிட்டால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

அருண் வண்டிக்காரனை ஒருமுறை கரிசனத்தோடு திரும்பி பார்த்தான்.அவனுக்கு சட்டென்று நிதர்சனம் பொளீரென்று உரைத்தது.இவன் ஒரு குடிகாரன்.அதுவும் குடித்துவிட்டு நாதியில்லாமல் நடுத்தெருவில் கிடக்கிறான். முழுசாய் மப்பேறிப் போய் எதையாவது இவன் உளறி கொட்டினால் அதை அப்படியே நம்பிவிடுவதா?குதிரை பறக்கும் என்று வேறு யாரிடமாவது இவன் சொல்லியிருந்தால் கதையே வேறுமாதிரி இருந்திருக்கும்.ஒன்று இவன் முகத்திற்கு நேராகவே காறித் துப்பியிருப்பார்கள்.இல்லையென்றால் வயிறு வலிக்கும்வரை சிரித்துவிட்டு பிறகு தங்கள் வேலையை பார்க்க கிளம்பியிருப்பார்கள்.ஆனால் நாமோ இவ்வளவுதூரம் முட்டாள்தனமாய் சிந்தித்து வேண்டாத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து அருண் வருத்தம் கொண்டான்.

இப்பொழுது மிகவும் தெளிவாக பக்கத்திலேயே கேட்டது சைரன் சத்தம். தலையை திருப்பி பார்த்தால் தெருமுனையில் சிவப்பாய் ஒளிக்கீற்றுகள் படர அவனிருந்த திசை நோக்கி மெதுவாய் நகர்ந்து வந்துக் கொண்டிருது போலீஸ் ரோந்து வண்டி. ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்தில் மனம் இதுவரை சுழன்று கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு நிகழ்காலத்திற்கு திரும்பியது. வண்டிக்காரனுக்கு அண்டையாய் பார்வையை உருட்டினான்.அவனோ கால்களுக்கடியே முகத்தை பொருத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான்.இவனுக்கு சட்டென்று ஒன்றுமே புரியவில்லை. காரணமேயில்லாமல் மனதில் இரக்கம் சுரந்து அவனது உடலை எடையிழக்க வைத்தது. சைரனின் அலறல் நெருங்கி வருவதை உணந்துக்கொண்ட மறுநொடியிலிருந்து அதிவேகமாய் செயல்பட துவங்கினான் அருண். வண்டிக்காரனுக்கருகே கீழே கிடந்த அந்த கருப்பு தடியை இடக்கையிலெடுத்து கால்சராயின் பைக்குள் சொருகிக்கொண்டான்.எந்த நினைப்புமில்லாது வெறுமையாயிருந்த அவன் உள்மன அடுக்குகளில் ராஜலட்சுமியின் பிம்பம் பெருகி நிரம்பியது.எந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு இயங்குகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் சேணத்தில் கால் வைத்து குதிரையின் மேல் தாவியேறி அமர்ந்துக்கொண்டான்.எப்பொழுது அதன் மேல் ஏறினோம்?எப்படி ஏறினோம் என்பதெல்லாம் அவனுக்கு சுத்தமாய் கவனத்திலில்லை.கண்களை இறுக மூடிக்கொண்டு கடிவாளத்தை முடுக்கி விட்டான்.வியர்வை நீரில் தளும்பியது அவனது முகம்.குதிரை ஒரு கணம் நகர்வது போலவும் மறுகணம் நகராதது போலவும் பிரம்மை தட்டியதில் சுத்தமாய் குழம்பிப் போனான். போலீஸ் வண்டியின் டையர் தரையில் தேய்ந்து கிறீச்சிட சைரன் சத்தம் அதிர்ந்தடங்கியது.

***
சிறுகதை மனதிற் திளைத்து வெளியில் தொலைதல். குமார நந்தன்
Sep. 17 சிறுகதை 1 comment

சிறுகதை மனதிற் திளைத்து வெளியில் தொலைதல்.

குமார நந்தன்

மழை விட்டுவிட்டது கோழிகள் குப்பைக் குழியை மிகத் தீவிரமாகக் கிளற

ஆரம்பித்துவிட்டன. பொன்ராசு கொட்டாங்குச்சியில் மண்ணை அழுத்தி இட்லி

வார்த்தான். நெகு நெகுவென்று பட்டுப்போன்ற மண் இட்லிகள். சுள்ளென

வெய்யில் வந்தது. மழை கழுவிய தூசு தும்பற்ற வெய்யில் “ஐய் அம்மா இப்பத்தா

மழை அடிச்சது இப்ப வெய்யிலடிக்குது பாரே” கத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடி

அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டு “அம்மா வாம்மா” என்றான். முத்தாயி மகனை

வாரி அள்ளிக் கொண்டாள். “எங்க சாமி?” வெளியே வந்தபோது கிழக்கே வானவில்

மின்னிக்கொண்டிருந்தது. வெய்யிலைக் காட்டிய மகனிடம் “கண்ணு பொன்ராசு அங்க

பாரு” என்று வானவில்லைக் காட்டினாள். அவன் கண்கள் திகைப்பில் விரிந்து

நின்றது. இதழில் உறைந்த புன்னகை. “அம்மா என்னது” என்றான் முத்தாயி

வெறிபிடித்தவளாக மகனை முத்தமிட்டாள். “எந்தங்கமடியோ” கீழே இறங்கி

கட்டுத்தறியில் நின்ற அப்பனிடம் ஓடினான். “அப்பா இங்க வா இங்க வந்து பாரு

மானத்துல” “மானத்துல என்ன சாமி” “மானத்துல பட்டுத்துணி வாப்பா

வந்துபாரே”.

“அட சாமி இதுதான் மானத்துல பட்டுத்துணியா எஞ்சாமிக்கி என்னா அறுவு”.

அதை இன்னும் யாரிடமாவது காட்ட வேண்டுமென சுற்றி சுற்றி வந்தான். எட்டிய

வரை கடலைக்காடு. அவனுடைய உலகத்தில் அப்பா அம்மாவைத் தவிர யாருமில்லை.

குப்பைக் குழி அருகே குத்த வைத்து உட்கார்ந்துகொண்டு கோழிகளைக்

கூப்பிட்டான். “ஏ கோழி அங்க மானத்துல பாரு” கோழி ஒரு பக்கமாய் அவனைப்

பார்த்தபடி கொஞ்சம் பின்னால் நகர்ந்து கிளறியது. “மானத்துல பாருன்னா எங்க

பாக்குற மானத்துல பாரு”.

வரப்பில் யாரோ இரண்டு பேர் வருவது தெரிந்தது. சிவப்பு ரிப்பன்

வைத்துக் கட்டிய செம்பட்டை சடையுடன் வரும் பெண்ணைப் பார்த்ததும்

அவனுக்குக் குதியாலமாய் இருந்தது. ஆட்டுக்குட்டியாய் கொணாய்த்தக்கொண்டு

ஓடி அவள் கைகளைப் பற்றிக் கொண்டு “மானத்துல பாரு” என்றான். அவள் எதுவும்

புரியாமல் அண்ணாந்து பார்த்துவிட்டு எதற்காகவோ மிக வெக்கப்பட்டு குனிந்து

சிரித்தாள். “நீ யாரு?” என்றான் சிரித்துக் கொண்டே “நா செல்லி” “எங்க

வூட்டுக்குத்தான் வரீங்களா” “தெரியாது” கூட வந்த அந்தப் பெண் “அட மாப்ள

உங்க ஊட்டுக்குத்தான் வாறோம். நாங்க யாருன்னு தெரியலையா” என்றாள். அவன்

அவளை அந்நிய ஆளைப் போலப் பார்த்தான். “அதென்னடா மாப்ள உம்பொண்டாட்டிய

மட்டும்தா உனக்குத் தெரியுமா எங்களத் தெரியாதா?” வேற்று மொழியில் பேசும்

நபரைப் பார்ப்ப்து போல அப்படியே பார்த்தான். “ஏம் மாப்ள அப்பிடி பாக்கற”.

முத்தாயி வாசலுக்கு வந்து “வா நங்க என்று விட்டு உள்ளே எட்டிப்

பார்த்து யாரு வந்திருக்காங் பாருங்” என்றாள், “வர்றே அண்ணி உம்மவனுக்கு

எம்மவளக் கண்டாத்தான் இனிக்கிது. என்னக் கண்டா மொரைக்கிறா. இப்பவே

இப்பிடி” என்றாள். பொன்ராசு “எப்ப ஊருக்குப் போவீங்க” என்றான். முத்தாயி

பட்டென்று அவன் வாய் மேல் ஒன்று வைத்தாள் “அட ஏம் மதினி அறியாக்

கொழந்தையப் போயி” என்று கையைத் தட்டிவிட்டாள். “அறியாப் பையனுக்கு என்னப்

பேச்சி பாரு நாளைக்கி என்னையில்ல ஒரு சொல்லு சொல்லுவாங்க.” “ஆமாம் போ நீ

வாடா செல்லம்” என்று தூக்கிக் கொண்டாள். “நாங்க இன்னிக்கே போறோம் போதுமா

ராசா”. “வேண்டாம் நாளைக்கி போங்க” என்றான். எந்தங்கம் பெருமாயி மருமகனின்

உச்சியில் முத்தம் வைத்தாள்.

பொன்ராசு வேகமாக இறங்கி செல்லியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு

இரண்டு பேரும் காட்டுப் பக்கம் ஓடினார்கள். அவர்கள் போடும் சத்தத்தில்

இவர்களால் வீட்டுக்குள்ளேயே உட்கார முடியாது போலிருந்தது. இருட்டு கட்ட

பெருமாயி சத்தம் போட்டாள் “ஏ செல்லி… ஓடியா கிளம்பளாம் பஸ்ஸ¤

போயிரும்” பொன்ராசு கத்திக் கொண்டு ஓடிவந்தான். “நாளைக்கிப் போங்க”

“இல்ல ராசா நாங்க போயிட்டு நாளைக்கி வாறோம் மாமனுக்குக் கஞ்சி காச்ச

வேணாமா.” பொன்ராசு தரையில் விழுந்துகொண்டு புரண்டான். “நாளைக்கிப்

போங்க”. “இல்லைனா மாப்ள எங்ககூட வந்திடறியா.” அவன் எழுந்து நின்று கொண்டு

விழித்தான். “மதினி புள்ளைய கூட்டிகிட்டுப் போயிட்டு ரெண்டு நாள்

கழிச்சிக் கொண்டு வரட்டுமா” “வந்தானா கூட்டிகிட்டுப் போ சாமி நா என்னமோ

வேணாங்கற மாதிரி” என்றாள் பாசத்தையே பார்க்காத மாதிரி மகன் செய்யும்

ஆர்ப்பாட்டம் அவளுக்கு அறுவறுப்பாய் இருந்தது.

“உங்க ஊடு எங்க” “அது அங்கோ இருக்குது வரியா” ஒரு நிமிடம்

யோசித்தவன் சரி என்றான். “அங்க போனா அங்கியேதா இருக்கணும் இங்க

வரக்கூடாது.” அவன் தலையைக் குனிந்து கொண்டு சரியென தலையாட்டினான்.

பெருமாயி சிரியோ சிரியெனச் சிரித்தாள். “மதினி உம் மவன் இப்பவே எப்பிடி

மயங்கிட்டான் பாத்தியா?” முத்தாயி வியந்துபோய் சேலையை வாயில் வைத்து

மூடிக்கொண்டு “அதான சொல்லும்போல” என்று சிரித்தாள். சிரிக்கும்போதே

கண்ணிலிருந்து இரண்டு துளி கண்ணீர் தெரித்து விழுந்தது. பெருமாயி “அட நீ

ஒரு பைத்தியம் போ அறியாப் பையனுக்கு என்னமோ ஒரு ஆச இதுக்கா கண்ணுல தண்ணி

உடுவாங்க அடக் கடவுளியே”. வானவில் மறைந்துவிட்டதை பொன்ராசு அப்போதுதான்

கவனித்தான்.

கறுப்புக் கோழிக் குஞ்சுகள் பச்சைப் புல் வெளியில் பதுங்கி

அலைந்தன. புழுதி அடங்கிய கண்ணாடி காற்று மெல்ல வீசியது. காலையில்

பொன்ராசு யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதான சத்தம் கேட்டு ஓடிப்போய்

பார்த்தாள் முத்தாயி. அங்கே யாருமில்லை. “ஏங்கன்னு அங்க யாருகிட்ட

பேசிகிட்டிருக்க” செல்லி கூட. ஒரு ஆறு மாதம் கழித்து கேட்டான் “ஏம்மா

அன்னிக்கோரு நாளு செல்லி நம்ம வூட்டுக்கு வந்தாயில்ல அவ திரும்பியும்

எப்ப வருவா?” முத்தாயிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “சரி நா ஒரு கத

சொல்றங் கேளு ஒரு ஊர்ல…” அன்றிலிருந்து மகனுக்கு தினம் ஒரு கதை சொல்வதை

முத்தாயி வழக்கமாக்கிக் கொண்டாள். அந்தக் கதைகளில் வானவில் வருவதில்லை.

சிறுமிகள் வருவதில்லை. கர்ண பரம்பரைக் கதைகளின் சிறுமிகளையெல்லாம் அவள்

சிறுவன்களாக மாற்றி அமைத்தாள்.

அஞ்சாங்காடு ஊரின் கடைசிக் காடாய் இருந்தது. அதைத்தாண்டி கூழாங்கல்

ஓடையும் மேலே விவசாய முள் ஏரிக்காடும் இருந்தது. ஏரி ஈச்சங் குண்டு வரை

பரவியிருந்தது. ஏரிக்குப்போகவும் கரட்டுக்குப் போகவும் ஊரின்

தெற்குப்புறம் துலக்கமான வழி இருப்பதால் இந்தப் பக்கம் ஜன நடமாட்டம்

என்று எதுவும் இல்லை. பொன்ராசின் காட்டிலிருந்து பார்த்தால் உலகம் ஒரு

அம்பது ஏக்கர் பரப்பளவும் கொஞ்சம் விவசாய முள் காடும் ஒரு சின்ன குன்றும்

தூரத்தே தெரியும் இரண்டு கொட்டாய்களும் கொண்டது.

முத்தாயி மகனுக்கு செல்லியின் ஞாபகம் வரக்கூடாது என்பதற்காக

தனக்குத் தெரிந்த கதைகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். பொன்ராசுக்கு

நிஜ உலகம் வெறும் வயலாய் இருக்கிறது என்ற நினைவே எழவில்லை. அவனுடைய

உலகத்தில் ராஜாக்கள், ராணிகள், மதியூக மந்திரிகள், ராணிகள், இளவரசன்கள்

என்று எத்தனையெத்தனையோ பேர்கள் சதா நடமாடிக்கொண்டே இருந்தார்கள்.

···

ஏழு வருடங்களுக்கு முன்னால் அவன் கட்டுடல் இளவட்டமாய் ஏராளமான

கூட்டாளிகளோடு எல்லோரைப் போலவும் கொஞ்சம் தனித்துவமானவனாகவும் இருந்தான்.

அத்தை மகள் செல்லிக்கும் அவனுக்கும் கல்யாணம் செய்வதைப் பற்றிப் பேச்சு

எழுந்தபோது ஏதோ ஒரு கொள்ளை நோயில் முத்தாயிக்கும் சங்கரலிங்கத்துக்கும்

கழிச்சல் கண்டது. முத்தாயி நாலு நாள் கழிச்சலுக்குப் பின் வீடெல்லாம்

குமட்டவைக்கும் நாற்றத்தைப் பரப்பி விட்டு வெறுமானத்தன்று இரவு உயிரை

விட்டாள். சங்கரலிங்கம் கட்டிலில் இருந்து எழ முடியாதவராய் தன்னுடைய

மரணத்தைத் தரிசித்தபடி அழுது கொண்டு இருந்தார். அன்றிரவு அவன் இதுவரை

தனக்கு வந்த துன்பத்தில் ஆகப் பெரிய துன்பம் எது என்று யோசித்தான்.

எதுவுமில்லை என்று தோன்றியது. முத்தாயின் வாசமும் கலகலவென்ற குரலும்

அவனுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அவன் அப்போதுதான் தன் மனதைக்

கூர்ந்து கவனித்தான். அங்கே முத்தாயி அவ்வளவு துல்லியமாக பேசிக் கொண்டு

உட்கார்ந்திருந்தாள் மனதுக்குள்ளாக அவளைத் தொடக் கூட முடிந்தது. தொடு

உணர்வுகள் விரல்களின் முனையில் கனத்தில் வளரும் தாவர வேராய்ப் படர்ந்தது.

அவளுடைய நினைவுகள் பதிவு செய்யப் பட்டதைப் போல இல்லாமல் நிகழ்வும்

உயிர்ப்பும் கொண்டு இருந்தது. “என்னடா சாயங்காலம் பிடிச்சி மசையனாட்டம்

உட்கார்ந்திருக்க நான் என்ன செத்து போயிட்டன்னு நினச்சியா” என்று

கேட்டுவிட்டு சிரித்தாள். அவன் அந்தக் குரலிலிருந்து தப்பிக்க

முடியவில்லை. மெல்ல மெல்ல அவன் மன இறுக்கம் குறைந்து கொண்டே வந்தது.

மகிழ்ச்சியைக் கூட இந்த சமயத்தில் உணரமுடிந்தது. காலையில்

சங்கரலிங்கத்துக்கு கடைசி இழுப்பு வந்தபோது எப்போதும் போல சகஜமானவனாய்

இருந்தான். உறவுக் காரப் பெண்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதை

விசித்திரமாய்ப் பார்த்தான். உயிர்ப்பாலை ஊற்ற ஆளாளுக்கு கையைப் பிடித்து

இழுத்தார்கள். செல்லி அவன் தோளைக் கட்டிக் கொண்டு உடலே பிளந்து விடுவது

மாதிரி கதறினாள். அவனுக்கு செல்லியைக் கட்டிக் கொள்ளவேண்டும் போல

இருந்தது. மற்றபடி பால் ஊற்றுவதைப் பற்றியும் அப்பாவின் உயிர் கொஞ்சம்

கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருப்பதைப் பற்றியும் பெரிதாய் ஒன்றும்

தோன்றவில்லை. சுற்றி இருக்கும் கூட்டத்தை மீறி தூர இருக்கும் பொன்ராசின்

மீது பார்வை நிலைத்தவாறு அவர் உயிரும் பிரிந்துவிட்டது. வெறித்த கண்களோடு

இறந்து கிடந்த சங்கரலிங்கத்தை ஒரு நிமிடம் நின்று கூட பார்க்காமல் இழவு

வீட்டில் மிக சகஜமானவனாக வளைய வந்தவனை ஜனங்கள் வாயைப் பிளந்து கொண்டு

பார்த்தார்கள். அத்தையும் மற்ற உறவுக் காரப் பெண்களும் அவன் தாடையைப்

பற்றிக் கொண்டு ஓலமிட்டபோது அவர்கள் கையை மெதுவாக நகர்த்திவிட்டு

ஒதுங்கினான்.

கட்டுத்தரி மாடுகள் ஏதோ பழைய ஞாபகத்தில் இருப்பதுபோல முகத்தை

வைத்துக்கொண்டு அசைபோட்டுக்கொண்டிருந்தன. பத்தாவது நாள்காரியம் முடிந்து

கொட்டாய் வெரிச்சென்று ஆனபின் தொடர்ந்து குரல்களையே கேட்டுக்

கொண்டிருந்தவன் முதன் முறையாக அந்தக் குரல்களோடு உரையாட ஆரம்பித்தான்.

மாடுகளுக்குக் கூளம் போடும் போதும் கட்டுத்தரையைக் கூட்டும்போதும்

சமைக்கும்போதும் சாப்பிடும்போதும் தன்னைப் பெற்றவர்களோடு சாதாரணமாகப் பேச

ஆரம்பித்தான். அவன் கட்டுடல் தன்மை ஏதோ ஒரு விதமாக மாறி வித்தியாசம்

உணரமுடியாத அசாதாரணமானவனாக தென்பட ஆரம்பித்தான். கூட்டாளிகள் கூட்டத்தில்

கேளிப் பொருளாக மாறிக் கொண்டிருந்தான். முன்போல பசங்களைப் போயப்

பார்க்கவேண்டும். அவர்களோடு ஊர் நாயம் உலக நாயமெல்லாம் பேசவேண்டும் என்ற

எண்ணம் அறவே போய்விட்டது. யோசனை இல்லாத உடல் உழைப்பாளி மாதிரி காட்டு

வேலைகளில் எந்நேரமும் மாய்ந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பெண்

கொடுக்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை. அவன் அது குறித்துத் தன்னைப்

பெற்றவர்களிடம் வேடிக்கையாக ஏதாவது சொல்லி சிரித்துக்கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் பார்ப்பவர்களுக்கு அவன் பைத்தியம் மாதிரி

பேசிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றாது. அருகிலிருக்கும் நபரிடம் பேசுவது

போல அவ்வளவு இயல்பாகப் பேசிக்கொண்டிருப்பான். உடலற்ற ஒருவரோடு ஒரு மனிதன்

உரையாடுவதைக் காண நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அப்படி ஒரு

அனுபவம் அநேகமாக உங்களுக்கு இருந்திருக்காது இரவில் அவன் பேசுவதைக்

கேட்டுப் பலபேர் காய்ச்சலில் விழுந்திருக்கிறார்கள். கூட்டத்தில்

இருக்கும்போது அவனை விநோதமானவன் என்று யாரும் நினைக்கமுடியாதபடி மிகவும்

சகஜமானவனாக இருப்பான். “ராத்திரியில நீ யாரு கூட பேசிகிட்டு இருக்க?”

என்று யாராவது கேட்டால் “எங்க அப்பங்கிட்ட அம்மாகிட்ட” என்பான். “ஏன்டா

மடையா அவங்கதான் செத்துப்போயிட்டாங்களே!” என்றால் மிக வசீகரமாக

சிரிப்பான். அவனுடைய புதிய குணம் அப்போது வேடிக்கையானதாக மட்டுமே

உணரப்பட்டது.

செல்லி அவனைக் கட்டிக்கிறேன் என்றுதான் சொன்னாள். அத்தை வீட்டுப்

பெண்ணான அவள் முத்தாயியும் சங்கரலிங்கமும் இருக்கும் போது

சின்னப்பெண்ணாய் ஒருமுறை அவன் வீட்டுக்குப் போயிருக்கிறாள். திரும்பவும்

அங்கே போக அவளுக்கு வாய்க்கவில்லை. ஆனால் பெருமாயி அவ்வப்போது அண்ணனைப்

பார்க்கப் போய் வந்து கொண்டுதான் இருந்தாள். செல்லிக்கும் பொன்ராசுக்கும்

கல்யாணம் பண்ணி வைத்துவிடுவது என்று சின்ன வயதிலேயே பேசி வைத்ததுதான்.

ஆனால் திடீரென பெரியவர்கள் இரண்டு பேரும் இறந்துபோனபின் அந்தக் கல்யாணம்

நடக்குமா நடக்காதா என்று ஊராருக்கு சந்தேகமாயிருந்தது. செல்லியின் அம்மா

பெருமாயிக்குக் கூட சந்தேகமாகத்தான் இருந்தது. பெரியவர்கள் இல்லாத

வீட்டில் சின்ன வயசுக்காரப் பயல் ஒழுங்காய் இருப்பானா என்று அவள்

யோசித்துக் கொண்டிருந்தாள் ஆனால் செல்லி இதை ஒரு பிரச்சனையாக

நினைக்கவில்லை. அப்போதெல்லாம் அவன் இப்படி தனியாகப் பேசிக் கொண்டிருப்பது

யாருக்கும் தெரியாது. பெருமாயும் செல்லியும் ஒரு தடவை மாக்கனூர்

சந்தைக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது அஞ்சான் காட்டுக்கு

வந்தார்கள். அப்போது பொன்ராசு பேசிக் கொண்டிருந்தான். தனியாக இருப்பதனால்

தனக்குத் தானே சாதாரணமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது

என்று கொஞ்ச நேரம் குறும்பாக அவனைக் கவனித்தார்கள். அவன் பேசுவது ஒரு

கட்டத்திலும் நிற்கவில்லை. ஒருவேளை தங்களைப் பார்த்தால் பேசுவது

நின்றுவிடும் என்று அவர்கள் அவன் முன்னால் போய் நின்றார்கள். கண்ணுக்கு

முன்னால் நிற்கும் அவர்களை அவனுக்குத் தெரியவில்லை. முத்தாயியிடம் அவன்

கூலியாட்கள் செய்யும் அட்டூழியம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன்

பேசுகின்ற தோரணையைப் பார்த்தால் முத்தாயி அங்கேதான்

உட்கார்ந்துகொண்டிருக்கிறாள் போல இருந்தது. சில விநாடியில் செல்லிக்கு

ரோமங்கள் கூச்சமெடுத்தது. கீச்சென்று கத்திக் கொண்டு கீழே சரிந்தாள்.

“பெருமாயி அய்யோ என் அண்ணமூட்டு பையன் பைத்தியமா போயிடுச்சே. ஐயோ

எம்புள்ள உசுரு போயிருமாட்டமிருக்குதே” என்று கத்திக் கொண்டு அவளைத்

தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ஓடினாள். அதன் பிறகு அஞ்சான்

காட்டுக்குப் பகலிலும் ஆட்கள் வருவது குறைந்துவிட்டது.

அதற்குமேல் அவனுக்கு செல்லி வீட்டுக்குப் போய் பெண் கேட்க வெட்கமாய்

இருந்தது. அவள் முகத்தில் விழிக்கவே வெட்கமாய் இருந்தது. திடீரென்று

அவனுக்கு அந்த இடம் பிடிக்காமல் போய்விட்டது. எங்காவது போய் கூட்டத்தோடு

கூட்டமாய் இருந்துகொண்டு வாழ வேண்டும் போல இருந்தது. கட்டுத்தரையில்

நின்று அவன் தம்பியைப் போல வளர்ந்த மாடுகளை விற்றுவிட்டான். காட்டில்

இருந்தால் ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் அம்மா அப்பா இல்லாவிட்டால்

செல்லி யாராவது நினைவுகளை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறார்கள். திடீரென

வீட்டைப் பூட்டிக்கொண்டு நகரத்துக்குக் கிளம்பிவிட்டான். கூட்டமான மக்கள்

வெளியில் உலவ ஆரம்பித்தான். மார்க்கெட், பஜார், கடைவீதி, கோயில்,

சினிமா…

அத்துவானக்காடாய் இருந்த பொன்ராசின் உலகம் மக்கள் நெரிசல்

மிகுந்ததாய் மாறிவிட்டது. முகங்கள், முகங்கள், ஏராளமான முகங்கள் அவன்

எல்லா முகங்களையும் கண்ணில் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்தான்.

செல்லியைத் தவிர வேறு ஏதாவது இன்னொரு முகமும் செல்லி போல இருக்கும் .

அதைத் தேடிக் கண்டு பிடித்து அவளைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று

நினைத்தான். அவனுடைய நினைப்பு அவனுக்கே வேடிக்கையாய் இருந்தது. அத்தை

மகளான செல்லியே அவனைக் கல்யாணம் செய்யவில்லை. யாரோ ஒருத்தி அவனைக்

கல்யாணம் செய்வாளா? என்றாலும் அவன் அப்படி ஒருத்தியைத்தான் தேடினான்.

செல்லியைவிட அழகான பெண்களெல்லாம் அவன் கண்ணில் பட்டார்கள் இவர்கள் கால்

தூசுக்குக் கூட செல்லி பெற மாட்டாள் என்று நினைத்தான் ஆனால் அப்படி

ஒருத்தியைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ளும் யோசனையே அவனுக்கு

வரவில்லை. அது ஏன் செல்லியிடம் என்ன இருக்கிறது? அல்லது செல்லியைப்

போன்றவளிடம் என்ன இருக்கப் போகிறது என்று யோசிக்க நினைக்கும்போது மூளை

பைத்தியக்காரத்தனமாக காட்சிகளைத் திரையிட்டது. ஒருவேளை தனக்குப்

பைத்தியம்தான் பிடித்துவிட்டதோ என்று யோசித்தான். அது சரியாகவும்

இருக்கலாம் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. இப்பொழுது காட்டை

விட்டுவிட்டு எப்படி இத்தனைநாள் இருக்க முடிகிறது என்பது அவனுக்குப்

புரியவில்லை. இந்தப் பைத்தியக்காரத்தனமான அலைச்சலை விட்டுவிட்டுப் போய்

பெருமாயி அத்தையிடம் செல்லியைப் பெண் கேட்கலாமா என்று யோசித்தான். அது

நடக்காது என்றும் சொல்லிக்கொண்டான். செத்தவர்கள் சும்மா இருக்காமல்

தன்னுடன் வந்து பேசி தன்னுடைய வாழ்க்கையில் இருந்து செல்லியைத்

தொலைத்துவிட்டார்கள் என்று நினைக்கும் போது அவனுக்குப் பெற்றவர்களின்

மீது ஆத்திரமாய் வந்தது. ஆனால் அவர்கள் “அடே கண்ணு நாங்க வந்தா உங்கிட்ட

பேசறம் நீதான வந்து பேசிகிட்டு இருக்க” என்று அவனைக் கேள்வி கேட்டுப்

பரிதாபமாகப் பார்த்தார்கள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

சேலத்தில் ஒரு சினிமா தியேட்டர் வாசலில் அச்சு அசல் செல்லி போலவே

ஒருத்தியைப் பார்த்து என்னைக் கட்டிக்கிரியா என்று கேட்டு மாளாத அடி

வாங்கினான். உடம்பை சாறு வேறு சக்கை வேறாய் பிழிந்தெடுத்துவிட்டார்கள்.

ராத்திரி பஸ்ஸடாண்டில் படுத்துக்கொண்டு இப்போது இவளைத் தேடிப் போவதா

அல்லது செல்லி போல இன்னும் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேடுவதா

என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதிசயமாய் ஒருத்தி கிடைத்தாள்.

அவளைத் தவற விட்டுவிட்டு இன்னும் ஒருத்தியை எங்கே போய் தேடுவது. அப்படி

இன்னும் ஒருத்தியும் செல்லி போலக் கிடைப்பாளா என்று அவனுக்குச்

சந்தேகமாய் இருந்தது. அநேகமாய் இன்னொருத்தி செல்லி போல இருக்க மாட்டாள்

என்றுதான் அவன் நம்பினான். வெளி உலகத்தில் அவனுக்கு எதுவும்

கிடைக்கவில்லை. எதுவும் கிடைக்கவில்லை என்பதைவிட செல்லி கிடைக்கவில்லை

என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் காட்டுக் கொட்டாய்க்கே வந்தவிட்டான்.

சாய் பொழுதின் வெய்யில் தீக்கங்காய் திண்ணையில் ஏற

ஆரம்பித்தது.காற்று புழுதியாடியது. பூ மொக்கைப் போல புழுதி வெளியில்

எழுவதும் மறைவதுமாய் இருக்கும் பேய்க்காற்றுச் சுருள்களைப் பார்த்தபடி

திண்ணையில் படுத்திருந்தான் பொன்ராசு. அவனுடைய வெளி நிசப்தமாகிவிட்டது.

காடும் கொட்டாயும் ஏதோ ஆகாயத்தில் மிதப்பது மாதிரி இருந்தது. செல்லி

சரியாகத்தான் சொல்லி இருக்கிறாள். “நா உன்ன கட்டிக்க மாட்டம்பா அத்தையும்

மாமாவும் போயிட்டா மனுசம் மூஞ்ச பாக்காம ஏங்கியே செத்துப் போவணும்.”

“ஏன்டி நாங்கள்லாம் இத்தினி நாளா இல்லியா நீ மூஞ்ச உம்முனு வச்சிகிட்டு

மூணு மாசத்துக்குக்கூட இருப்ப நம்பளால ஒரு நிமிசம் இருக்க முடியாது ஆயா.”

“சரி நா உங்க ஊருக்கு வந்துட்டுமா?” “எதுக்கு கண்டவன் சிரிக்கிறதுக்கா

காட்ட யாரு பாக்கறது.” பொன்ராசுவின் கண்கள் கலங்கியது “சும்மா கூட

அப்பிடி சொல்லாதடி.” “சீ என்ன மாமா இது கண்ணத் தொட விளையாட்டுக்கு ஒரு

வார்த்த சொல்ல முடியுதா உங்கிட்ட நீயும் அத்தையும் ஒரே மாதிரி.”

“கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு ஏழெட்டு குட்டி போட்ரு. அதுங்க ரவரவன்னு

கத்திகிட்டு கெடக்கட்டும்.” “ஐயே ச்சீ.”

அவன் நினைவு அடுக்கில் ஏதோ ஒன்று மாறிவிட்டது. செல்லிக்கும்

அவனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதைப் போலவும் அவள் அந்தக்

காட்டுக்கொட்டாயில்தான் இருப்பது போலவும் அவன் மனதில் மழைக்காலத்தில்

புற்பூடுகள் தானே முளைப்பதுபோல நினைவுகள் செழித்து நின்றன. இப்போது

பார்ப்பதற்கு பொன்ராசு மிகவும் ஒளிவீசிக்கொண்டு இருந்தான். எந்நேரமும்

அம்மாவிடம் அல்லது அப்பாவிடம் இல்லாவிட்டால் செல்லியிடம் பேச்சு அவன்

உலகம் மூன்று பேர்களாலும் நிரம்பி வழிந்தது.

எங்காவது ஊருக்குப் போனால் நல்ல நிறமுள்ள புடவைகளை வாங்கி வர

ஆரம்பித்தான். செயற்கைப் பூக்கள் அலங்காரப் பின்கள் ரப்பர் பேண்ட்டுகள்,

கல் பொட்டுக்கள் எல்லாமும் பையில் தென்பட்டன. யாராவது பார்த்துவிட்டு

இதெல்லாம் யாருக்கு என்று கேட்டால் எம் பொண்டாட்டிக்கி என்று சொல்ல

ஆரம்பித்தான். அவனே சாப்பாட்டைச் செய்து போட்டுக் கொண்டு “இந்தாடி செல்லி

சோத்த ஏன்டி இப்பிடி ஆக்கி வெச்சிருக்க. இத நாயி மூந்து பாக்குமா? உங்க

அப்பமூட்டுல நீ இப்பிடித்தான் ஆக்கினியா?” என்று கேட்டுக் கொண்டே

தின்பான். அன்று சாப்பாடு சுமாராக இருப்பதாக அர்த்தம். ஒவ்வொரு நாள்

சாப்பாடு நல்ல வாட்டமாக அமைந்துவிட்டால் அம்மாவைக் கூப்பிட்டு “என்ன

இருந்தாலும் ஒங் கைப் பக்குவம் அவளுக்கு வராதும்மா” என்றபடி

சாப்பிடுவான்.

ஆடி மாதத்தில் இருசன் குடி காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது.

கம்பஞ் சோற்றில் மோரை ஊற்றிக் கரைத்துக் குடித்துவிட்டு துப்பட்டியை

எடுத்துப் போர்த்திக் கொண்டு இருசன் குடிக்கு நாடகம் பார்க்கப் போனான்.

காற்று ஆளைத் தள்ளியது. புளியம் பழங்கள் ஆகாயத்தில் சளசளவென சத்தமிட்டன.

வேலஞ் செடிகளின் வெண்ணிறப் பூக்களின் வெளிச்சத்தில் விடு விடு வென

நடந்தான். நாடகம் பார்க்க வேண்டுமென்றோ வேடிக்கை பார்க்கவோ பொன்ராசு

ஆசைப்பட்டதில்லை. உள்ளூர் பண்டிகைக்குக் கூட வரி கொடுப்பான். கோயில்

வாசலில் கட்ட இரண்டு தென்னங் குழைகளைக் கொடுத்து அனுப்புவான். மற்றபடி

கோயில் பக்கம் கூடப் போக மாட்டான்.

போன சித்திரையில் பாறையூர் பெரியாண்டிச்சி கோயில் பண்டிகையில் நல்ல

தங்காள் நாடகம் நடந்தது. அதில் நல்ல தங்காளாய் ஆடிய கரியனைப் பற்றித்தான்

இரண்டு மாதமாய் ஊரில் பேச்சு. அவனுடைய பெண் வேடத்தைப் பார்த்துவிட்டு

கீழக் காட்டு சந்தானம் “கூத்துல கரியனப் பாத்துட்டுப் போய் நம்ப வூட்ல

பொம்பளங்களப் பாத்தா ஆம்பளங்களாட்டம் தெரியுது” என்றான் அப்போதே பொன்ராசு

நினைத்துக் கொண்டான். அடுத்து கரியனின் கூத்து எங்கே நடந்தாலும் போய்ப்

பார்த்துவிடுவது. இருசன் குடி இங்கிருந்து ஐந்து மைல் தூரம்.

உள்ளூரிலிருந்து நாடகம் பார்க்க வென்று யாரும் போகவில்லை. பொன்ராசு

மட்டும்தான் இப்படி வேகு வேகு என்று போய்க் கொண்டிருக்கிறான். இருசன்

குடி காளியம்மன் பண்டிகையில் கரியனின் நள தமயந்தி நாடகம் என்று

சந்தைக்குப் போகும் போது நோட்டீஸ் பார்த்திருந்தான். நோட்டீஸில் கரியன்

பெண் வேடத்தில் பார்ப்பதற்கு செல்லி போலவே இருந்தான். ஓடக் காடு தாண்டி

நெல் வயல்கள் தென் பட ஆரம்பித்தன. சீரியல் பல்புகளில் காளியின் மின்னி

மறையும் உருவமும் வாண வேடிக்கைகளின் வண்ணமும் வானத்தில் தென் பட்டன.

காளியாயி கோயில் மைதானம் பூராவும் கிர்ரெனக் கூட்டம் கூடியிருந்தது.

மறைப்பைப் பிடித்தபடி அறிமுகப் பாடலைப் பாடிக்கொண்டு தமயந்தி

மேடையில் தோன்றினாள். வாத்தியங்களின் தாளக் கட்டுகள் தீப்பிடித்து

முழங்கின. தாதிமார்கள் சட்டெனத் திரையை விலக்கினார்கள். பொன்ராசுவின்

கண்பரப்பில் அயிரமாயிரம் மின்னல் பூச்சிகள் உயிர்பிடித்துப் பறந்தன.

இளவட்டங்களின் வெறி கொண்ட சீழ்க்கை ஒலிகள் தாதன் மலை உச்ச¨யைக் கடந்து

முழங்கின. காட்சிகளும் சத்தங்களும் திடமில்லாமல் சரிந்து விழுவதும்

மாறுவதும் என அர்த்தமற்று நகர்ந்தது இரவு. பொன்ராசு அப்படி ஒரு பெண்ணை

நேரிலும் பார்த்ததில்லை. கதையிலும் கேட்டதில்லை. கற்பனை செய்துகூடப்

பார்த்ததில்லை. தமயந்தி வந்த ஒரே விநாடியில் வெள்ளி முளைத்துவிட்ட மாதிரி

இரவு விருட்டெனப் போய்விட்டது.

வரும்போது மேக்கப் கலைத்த கரியனைப் பார்த்துவிட்டு வந்தான்.

அவனுக்கும் மேடையில் தோன்றிய தமயந்திக்கும் சம்மந்தமே இல்லாததுபோல்

இருந்தது. ஒரே ஒரு ஒற்றுமை மட்டும் அவனால் உணர முடிந்தது. தமயந்தி

வேடத்தில் இருந்தபோதும் இப்போது வேடத்தைக் களைத்திருந்தபோதும் அவனிடம்

செல்லியின் ஏதோ ஒரு சாயலை உணர முடிந்தது. திரும்பி வரும்போது அதைப்

பற்றியே யோசித்துக்கொண்டு வந்தான். கரியனிடம் மட்டுமல்ல ஒவ்வொரு

மனிதனிடமும் செல்லியின் ஏதோ ஒரு சாயல் இருப்பதை அப்போதுதான்

புரிந்துகொண்டான். தனக்குத் தெரிந்த முகங்களையெல்லாம் நினைவுக்குக்

கொண்டு வந்து அதில் செல்லியின் சாயலைத் தீவிரமாகத் தேடினான். ஏதோ ஒன்றைக்

கண்டுபிடிக்க முடிந்தது குறித்து அவனுக்கு உற்சாகமாய் இருந்தது. ஐந்து

மைல் தூரத்தை எப்படி நடந்துவந்தான் என்றே தெரியவில்லை. வீட்டுக்கு

வந்ததும் கண்ணாடியை எடுத்துவைத்துக்கொண்டு உற்றுப் பார்த்தான். அவனுடைய

முகத்திலேயே ஏராளமாக செல்லியின் சாயல்கள் தோன்றின. ஒருவேளை எல்லோரிடமும்

செல்லியின் சாயல்கள் இருக்கிறதா இல்லை உற்றுப் பார்த்தால் சாயல்கள்

எங்கிருந்தோ வருகிறதா என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் மனித

முகங்களில் செல்லியின் சாயல் இருப்பதை மட்டும் அவனால் உறுதியாக

கண்டுகொள்ள முடிந்தது

இரண்டு நாளாய் அவன் வேறொரு உலகத்தில் அலைந்து கொண்டிருந்தான்.

சாப்பாட்டைப் பற்றியும் தூக்கத்தைப் பற்றியும் கூட நினைவு வரவில்லை

எந்நேரமும் மனதில் கரியன் பேசிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சிரித்துக்

கொண்டுமிருந்தான். பெற்றவர்களிடம் கூட எதுவும் பேசவில்லை. வெள்ளிக் கிழமை

சாயந்திரம் மாடுகளுக்குக் கூளம் போட்டுவிட்டு சுண்டைக்காய் பறித்துக்

குழம்பு வைத்து வயிறு புடைக்கத் தின்றுவிட்டு நேரத்தோடு படுத்து அசந்து

தூங்கிவிட்டான். நடு ராத்திரியில் அவன் திடீரென்று எழுந்து

உட்கார்ந்துகொண்டான். தொட்டியில் தண்ணீர் மொண்டு முகத்தைக் கழுவி ஈரல்

துண்டில் முகத்தைத் துடைத்தான். டிரங்குப் பெட்டியைத் திறந்து மஞ்சளில்

சிவப்புப் பூ போட்ட நைலக்ஸ் சேலையை எடுத்து இடுப்பில் கட்ட ஆரம்பித்தான்.

அப்போது அவன் தூக்கக் கலக்கத்தில் இருந்தானா அல்லது சுய நினைவில்

இருந்தானா தெரியவில்லை. முகத்தில் பெளடரை அப்பி கண்களுக்கு மை

தீட்டினான். ஒயிலாக நடந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டு அப்படியே

படுத்துத் தூங்கினான். அரைமணி நேரத்தில் மீண்டும் எழுந்து சரசரவென

புடவையை அவிழ்த்து எறிந்துவிட்டு முகத்தின் அத்தனை தடயங்களையும் சுத்தம்

செய்து கொண்டு மீண்டும் படுக்கையில் விழுந்தான். காலையில் “இந்தாடி

செல்லி இந்த சீலய மடிச்சி வெக்கக் கூடவா உங்கொப்ப மூட்டுல சொல்லித்

தருல?” என்று சத்தம் போட்டுக் கொண்டு புடவையை மடித்துப் பெட்டியில்

வைத்துப் பூட்டிவிட்டு கட்டுத்தாரை பக்கம் போனான்.

காற்றுக் காலம் முடிந்து மழைக்காலமும் முடிந்த பின் பனிக்காலத்தில்

ஒருநாள் பொழுது முளைத்தபின் கண்விழித்தபோது அவன் சேலையைக் கட்டிக் கொண்டு

கட்டிலில் கிடந்தான். கண்களில் மை அப்பியிருந்தது. தலையில் செம்பருத்திப்

பூக் கொத்தும் மருதாணிப் பூக் கொத்தும் இருந்தது. “அடக் கருமாந்திரமே

தூங்கும் போது எந்தப் பீத்தநாய் எனக்கு சீலய சுத்தி உட்டது” என்று

அலறினான். ஆனால் சேலையை உருவி எறியும் நேரத்துக்குள் தன் நோயைப் புரிந்து

கொண்டான். அன்று முழுவதும் உடல் கண கண வென்று இருந்தது. அடக்

கருமாந்திரமே என்று முணகிக் கொண்டே இருந்தான். தான் பெண்ணைப் போலப்

புடவையைக் கட்டிக் கொண்டு கட்டிலில் கிடந்த காட்சி மொழக்குச்சி அடித்த

மாதிரி மனதைவிட்டு அசையாமல் இருந்தது. ஒருவேளை தான் பெண்ணாக மாறிக்

கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகமாக இருந்தது. எந்தக் காலத்தில் இருந்து

இப்படி தூக்கத்தில் வேசம் போட்டுக் கொண்டு திரிகிறேனோ என்ற கேள்வி மூளையை

அறம் போலத் தீட்டிக்கொண்டிருந்தது. தன்னை இந்தக் கோலத்தில் ஊரில்

யாரெல்லாம் பார்த்தாரோ தெரியவில்லையே என்று நினைத்தபோதே உடல் நடுங்கியது.

அந்தக் கரியனின் கூத்தைப் பார்க்கப் போயிருக்கவே கூடாது அதற்குப்

பிறகுதான் தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தான்.

இரவு அவன் படுக்கையில் சாயவே இல்லை. ஓட்டு வீட்டில் மழை போல்

இறங்கும் பனியில் இரண்டு துப்பட்டிகள் போர்த்திக்கொண்டு தாங்க முடியாத

குளிரில் பற்களைக் கிட்டித்துக்கொண்டு குர் ரென உட்கார்ந்திருந்தான்.

முத்தாயோடும் சங்கரலிங்கத்தோடும் அவன் எதுவும் பேசவில்லை. செல்லியிடம்

கூடப் பேசவில்லை. அவனை அறியாமல் கண்களை மூடினால் கூட திடுக்கிட்டு

விழுந்து தன் உடம்பில் புடவை சுற்றியிருக்கிறதா என்று மிரள மிரள

பார்த்தான். விடிந்தபின் தலையெல்லாம் ஒரே பாரமாய் இருந்தது. வேலை எங்கோ

ஒடியது. நினைவு எங்கோ சுற்றியது. அன்றைய பொழுது எப்படியோ போய் விட்டது.

அன்று இரவும் கட்டிலில் படுக்க பயமாய் இருந்தது. தூங்கிவிட்டால் கட்டாயம்

புடவையை எடுத்துக் கட்டிக் கொள்வோம் என பயந்தான். இதை எந்த நாயாவது

பார்த்திருந்தால் ஊருக்குள் தலைநிமிர்ந்து நடப்பது எப்படி என்று

நினைத்துப் பார்க்கவே அச்சமாய் இருந்தது. இன்றும் குளிரில் குத்த வைத்து

உட்கார்ந்து கொண்டு தூக்கத்தில் சாமியாடியபடியே இரவைக் கடந்துவிட்டான்.

சுள்ளென வெய்யில் வந்தபோது அவனுக்கு கனவுக்கும் நினைவுக்கும் பெரிதாக

வித்தியாசம் தெரியவில்லை. தயிரும் பழைய சோறும் சாப்பிட்டதும் தூக்கம்

பிசாசு மாதிரி அவனைப் பற்றியது. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

ஒரு விநாடி சுதாகரித்து தண்ணீர் தொட்டியில் போய் விழுவதற்குள் மயக்கம்

மாதிரி வந்துவிட்டது. செத்தக் குருவி மாதிரி தின்னையில் விழுந்தவன்

மத்தியானம் வரை அசையாமல் கிடந்தான். மத்தியானத்துக்கு மேல் எழுந்தவன்

அலட்சியமாக உள்ளே போய் பெட்டியைத் திறந்தான். தாமரைப்பூ நிறத்தின் மீது

பொன்நிற சமிக்கி வேலை செய்த சேலையையும் நீல வண்ண ஜாக்கெட்டையும் எடுத்து

கணத்த குரலில் கூத்துப் பாடலொன்றைப் பாடியபடி உடுத்திக் கொண்டு பிடரி வரை

இருந்த தலைமுடியை அள்ளி ரப்பர் பேண்ட் போட்டான். தலையில் செம்பருத்தியும்

மருதாணிப் பூவையும் பிய்த்து வைத்தான். முகத்தில் பெளடரை அப்பி

கண்களுக்கு மை தீட்டினான். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு வீட்டை

ரெண்டு முறை பெண் நடையில் சுற்றி வந்தான். இடுப்பில் சுருக்குப் பை

இருக்கிறதாவெனத் தொட்டுப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் விட்டு உள்ளே

போய் காசு எடுத்து வந்து முந்தானையில் முடிந்துகொண்டு “நான் போய் வெத்தல

வாங்கிட்டு வாறேன்”. என்று யாரிடமோ சொல்வது மாதிரி அவனிடமே சொல்லியபடி

வரப்பைக் கடந்து ஊர் வீதிக்குள் ஒரு மகாராணியின் தோரணையோடு நடந்தான்.

சேந்துக் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த பெண்கள் நான்கு

சகடையிலும் கயிற்றைக் கிணற்றுக்குள் பறக்க விட்டுவிட்டு இவனைப்

பார்த்தனர். பிள்ளையார் கோயிலில் தாயம் ஆடிக்கொண்டிருந்த ஆட்களும்,

அச்சாங்கல்லும் நொண்டியும் ஆடிக்கொண்டிருந்த பள்ளிக்குப்போகாத

பொடிசுகளும் அவனைப் பிரமித்துப் போய்ப் பார்த்தனர். தெருவில்

ஒலித்துக்கொண்டிருந்த மனிதக் குரல்கள் விருட்டெனத் தேய்ந்தடங்கின. அவன்

ஆளில்லாத தெருவில் நடப்பது மாதிரி அலட்சியமாய் நடந்து நாகராஜின் பெட்டிக்

கடைக்கு வந்து “வெத்தலை இருந்தா ரெண்டு ரூவாய்க்கி தாரு” என்றுவிட்டு

முடிந்து வைத்திருந்த காசை அவிழ்த்தான்.

நாகராஜ் அவனைக் குறும்பாகப் பார்த்துக் கொண்டு “ஏம்மா பொண்ணு யாரு

தெரியலையே” என்றான்.

பொன்ராசு எதுவும் பேசவில்லை. வெற்றிலையை வாங்கி வாயில் அடக்கிக்

கொண்டு திரும்பினான். இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு திரும்பி

நாகராஜைப் பார்த்தான் “நெசமாவே உனக்கு என்னத் தெரியலையா இந்த வீதியில

என்ன நீ பாத்ததே இல்லியா” என்றான்.

நாகராஜ் பெருங்குழப்பத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டு “இல்லையே” என்றான்.

இவன் “அஞ்சாங்காட்டுப் பொன்ராச உனக்குத் தெரியுமா?” என்றான்

இந்தக் கேள்விக்குத் தெரியும் என்று சொன்னால் சரியாய் இருக்குமா

அல்லது தெரியாது என்று சொன்னால் சரியாய் இருக்குமா என்று ஒரு விநாடி

குழம்பிவிட்டு ஆமாம் என்றான்.

பொன்ராசு “நான் அவம் பொண்டாட்டி செல்லி”: என்று விட்டு வெற்றிலைச்

சாற்றைப் புளிச் செனத் துப்பியவனாய் அஞ்சாங்காட்டைப் பார்த்து நடக்க

ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *