பிருந்தாவனம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 11,958 
 

கடையில் இருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித் திருப்பி ரசித்துக்கொண்டு இருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வரும்போது எல்லாம் பொம்மைக் கடைகளில் நிற்பதும் வேடிக்கை பார்ப்பதும் பழகிவிட்டது. எடுப்பாள். ரசித்துப் பார்ப்பாள். விலை கேட்பாள். பிறகு, ஒரு பெருமூச்சோடும் கசந்துபோன புன்னகையோடும் வைத்துவிடுவாள். ”வாங்கு அண்ணி” என்று நானும் பல முறை தூண்டிப் பார்த்துவிட்டேன். ”ஐயையோ… அதெல்லாம் வேணாம்!” என்று வேகமாகத் தலையாட்டி மறுத்துவிடுவாள். ”பொம்மைக்கெல்லாம் செலவாச்சின்னு கணக்கெழுதுனேன்னு வை… ஒங்கண்ணன் அப்படியே தோல உரிச்சித் தொங்கப் போட்டுட்டுதான் மறு வேல பாப்பாரு!” என்று சொல்லும்போது பதற்றத்தில் அவள் தலை இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடும்.

தலையில் மயில் இறகோடு சிரித்துக்கொண்டு இருந்தது குழந்தை கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப் போல பொம்மைக் கண்களில் ஈரம் ததும்பி இருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப் போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. பொம்மைக் கடை வண்டியைத் திரும்பத் திரும்பப் பார்த்தபடியே நடந்து வந்துகொண்டு இருந்தாள் அண்ணி.

அண்ணனைத் திருமணம் செய்துகொண்டுவந்த தினத்தில் இருந்தே விருப் பங்களை எல்லாம் மென்று விழுங்கும் கலையில் அண்ணி நல்ல தேர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் என்று தோன்றியது. நான் அண்ணியை முதன்முதலாகப் பார்த்தது மூன்று மாதங்களுக்கு முன்னால்தான். அம்மா – அப்பாவுக்கு நாங்கள் மொத்தம் பத்துப் பிள்ளைகள். நான் கடைசிப் பையன். வறுமையின் உக்கிரம் தாங்காமல் படிப்பை விட்டுவிட்டு, நான் ரெட்டியார் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் வேலைக்குப் போக நேர்ந்தது. அப்போது தனபால் அண்ணன் என்னைத் தன்னோடு பாண்டிச்சேரிக்குக் கூட்டி வந்துவிட்டார். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். எனக்கு அந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்திருந்தது. பள்ளியில் இருந்து திரும்பியதுமே எதையாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு, அண்ணியோடு பேசிக்கொண்டு இருப்பதும் பாடம் படித்து அவரிடம் ஒப்பிப்பதும் பிடித்திருந்தன. சுங்கரைக்காய் ஆட்டத்திலும் பல்லாங்குழியிலும் அண்ணியை ஒரு நாளும் ஜெயிக்க முடியாது. படிப்பு முடிந்த பிறகு பல சுவாரஸ்யமான கதைகளைச் சொல்வாள் அண்ணி.

சம்பாதிப்பதில் ஒரு ரூபாயைக்கூட வீணாகச் செலவு செய்யக் கூடாது என்பதில் அண்ணன் கறாராக இருந்தார். தினசரி செலவுகளை எல்லாம் கணக்கு எழுதிவைத்து அவருக்குக் காட்ட வேண்டும். துணி அலமாரியில் ஒரு பெட்டிக்குள் இரண்டு ரூபாய் நோட்டுக்களாக சில்லறை மாற்றி நூறு ரூபாய்க்கும் மேல் வைத்து இருப்பார். அதில் இருந்துதான் செலவுக்கு எடுக்க வேண்டும். உடனடியாக அதை மறக்காமல் எழுதிவைக்க வேண்டும். இரவு வீட்டுக்குத் திரும்பியதும் கணக்கு நோட்டைச் சரிபார்ப்பார். கணக்கில் குழப்பம் இருந்தால் கோபத்தில் கொதித்துவிடுவார். ”என்ன செலவாச்சி? சொல்லு… சொல்லு!” என்று குடைந்து குடைந்து கேட்பார். அந்த வேகத்தையும் கோபத்தையும் பார்த்ததுமே அண்ணிக்குப் பாதி மறதி வந்துவிடும். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ பேசித் திட்டு வாங்குவாள். அந்தக் கணக்கை நேர்ப்படுத்தும் வரை குத்திக் குத்திப் பேசியபடியே இருப்பார் அண்ணன். எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து ஒரு பாவாடை எடுத்ததற்காகப் பொங்கி எழுந்து சத்தம் போட்டார் அண்ணன்.

”இருக்கறதே ரெண்டே ரெண்டுதான். ஓரம் எல்லாம் பிஞ்சி இத்துப்போச்சி. எத்தினி நாளுதான் ஊக்கு குத்திக் கட்ட முடியும்?” என்ற பதிலை அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

”மூக்க சிந்தாதடி கழுத, ஒன்ன வாங்காதன்னு யாரு சொன்னா? உள்ளாற கட்டிகிற பாவாடைக்கு ஏன் இவ்வளோ பணம் செலவு செய்யணும்? முப்பது ரூபாய்க்கி ஒண்ணுனு ஆல வாசல்ல கூவிக் கூவி விக்கறான் தெரியுமா?” என்று எரிந்து விழுந்தார்.

அன்று இரவு முழுக்க அண்ணி அழுதபடியே இருந்தாள். இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

வீட்டு நிலை சரியாகி இயல்பான நிலைக்குத் திரும்ப ஒரு வாரம் ஆனது. இந்த வம்பே வேண்டாம் என்று பணத்தையே தொடாமல் இருந்தால் அதற்கும் சலித்துக்கொண்டார் அண்ணன். செலவுக் கணக்கை முன்வைத்து அடிக்கடி வீட்டின் சமநிலை பிசகுவதும் பிறகு சரியாவதும் பருவ கால மாற்றங்களைப் போல மாறிமாறி நிகழ்ந்தபடி இருந்தன.

அண்ணியைக் காப்பாற்றும் ஆலோசனைகள் தாமாகவே என் மனத்தில் முளைத்தன. கடைக்குப் போகும்போது, வழியில் கரும்புச் சாறு குடிப்போம். அந்தச் செலவைக் காய்கறிச் செலவில் சேர்த்து எழுதவைத்து அண்ணியைக் காப்பாற்றிவிடுவேன். அண்ணிக்கு அந்தத் திட்டம் மிகவும் பிடித்து இருந்தது. பொட்டு, ஹேர்பின், நகபாலீஷ் என அண்ணி தனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளவும் அந்தத் திட்டம் பயன் உள்ளதாக இருந்தது.

நினைவுகளில் அமிழ்ந்தவளைப் போல பேசாமலே நடந்துவந்த அண்ணி, ”அந்தப் பொம்ம கண்ணு முன்னாலயே நிக்கற மாதிரி இருக்குதுடா தண்டபாணி” என்று நாக்கு சப்புக்கொட்டினாள்.

”எனக்கும் ரொம்பப் புடிச்சிருக்குது அண்ணி. சாமி மாடத்துலவெச்சா எடுப்பா இருக்கும்!”

அண்ணி ஒரு கணம் நின்று பார்த்தாள். பிறகு, ”எடுப்பாதான் இருக்கும். அப்புறம் ஒங்கண்ணன் துடிக்கத் துடிக்க குடுப்பாரே, அத யாரு வாங்கறது?” என்றாள். அவளை யும் மீறி சிரிப்பு வெளிப்பட்டுவிட்டது. கண்களில் ஈரம் கட்டும் வரை இடைவிடாமல் சிரித்தாள்.

”அப்புறம் எப்படி அண்ணி காபந்து பண்றது?”- குழப்பத்தோடு அவளைப் பார்த்தேன்.

”அவரு பார்வையிலயே படாத எடமா பாத்துதாண்டா வைக்கணும். சமையல்கட்டு டப்பாவுக்குள்ள, அரிசி அண்டாவுல, அலமாரிக்குள்ள, பொட்டிக்குள்ளனு எங்கனா மறச்சிதான் வைக்கணும். பாக்க ணும்னு தோணும்போது மட்டும் எடுத்துப் பாத்து ரசிச்சிக்கணும். மத்த நேரத்துல மறச்சிதான் வச்சிக்கணும்!”

”தப்பித்தவறி அண்ணன் கண்ணுல பட்டுட்டா?”

”மொதல்ல பொம்ம சுக்குநூறா ஒடஞ்சி உருளும். அப்புறமா நம்ம தல உருளும்…” அண்ணியின் சிரிப்பைப் பார்க்கப்

பாவமாக இருந்தது. அந்த நேரத்தில் எப்படியாவது அண்ணியை அந்தப் பொம்மையை வாங்கி விடும்படி செய்ய வேண்டும் என்று தோன்றியது. ”வா அண்ணி பத்து ரூபா பொம்மையை எட்டு ரூபாவுக்கு கேட்டுப் பாக்கலாம். குடுத்தாலும் குடுப்பாரு!” என்றபடி அவள் கையைப் பிடித்து இழுத்தேன்.

அண்ணி ஒரு கணம் நடையை நிறுத் தினாள். ”எட்டு ரூபாய்க்கு என்னடா கணக்கு எழுத முடியும்?”- அவள் குரலில் அச்சமும் ஆவலும் கலந்து வெளிப்பட்டன.

மாற்றி மாற்றி ஆலோசனைகளைப் பரிமாறிக்கொண்டு இருக்கும்போதே, ”துணி தொவைக்கற சோப்பு வாங்கினதா எழுதலாமா?” என்று இழுத்தேன். அந்த ஆலோசனை அண்ணியின் மனதுக்குப் பொருத்தமாக இருந்தது. அதற்குப் பிறகு தான் கிளம்பியபோது இருந்த பிரகாசத்தை அண்ணியின் முகத்தில் மீண்டும் பார்க்க முடிந்தது. கடையை நோக்கித் தைரியமாக நடந்தோம்.

கடைக்காரர் பொம்மையை ஒரு தாளில் சுற்றி காகிதப் பைக்குள் வைத்துக் கொடுத்தார். அதை வாங்கி அபிஷேகப் பைக்குள் வைத்தாள் அண்ணி. பிறகு, பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அதில் அற்புதமான நிம்மதி உணர்வு படர்ந்து இருந்தது. அவள் கண்களில் பரவி இருந்த திருப்தியைப் பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. வீட்டுக்குள் வந்ததுமே முதல் வேலையாக அதை அலமாரியில் புடவை அடுக்குக்குக் கீழே மறைத்துவைத்தாள். பிறகு, கணக்கு நோட்டை உருவி சோப்பு வாங்கிய வகையில் எட்டு ரூபாய் செலவு என்று எழுதி மூடினாள்.

இரவுச் சாப்பாடு முடிந்ததுமே வழக்கம்போல செலவு நோட்டை எடுத்து கணக்கைச் சரிபார்த்தார் அண்ணன். உருளைக் கிழங்கு, வெங்காயம், மின்சாரக் கட்டணம், வத்திப்பெட்டி, தேங்காய், பூ, பழம், கற்பூரம் என்று விரல்களை நகர்த்திக்கொண்டே வந்தவர், சோப்பு என்கிற இடத்தில் நிறுத்திவிட்டு, அண்ணியை அழைத்தார். பாத்திரம் கழுவி அடுக்கியபடி இருந்த அண்ணி, பதற்றத்தோடு வந்து அவர் எதிரில் நின்றாள்.

”என்ன இது?” என்று விரலால் சுட்டிக்காட்டினார் அண்ணன்.

தொண்டை உலர்ந்துபோனதுபோல எச்சிலைக் கூட்டி விழுங்கினாள் அண்ணி. ”சோப்புங்க”-மென்று விழுங்கியபடி சொன்னாள்.

”படிக்கத் தெரியாத முண்டமா நான்? சோப்புனு எழுதியிருக்கறத படிக்கத் தெரியாதா? அதத்தான் ஏன் வாங்கினனு கேக்கறன்? மாச லிஸ்ட்டுலயே சோப்பு வாங்கியாச்சு இல்ல? அப்புறமா எதுக்குப் புதுசா?” – அண்ணனின் குரலில் படிந்திருந்த கடுமை அச்சத்தைத் தந்தது.

அண்ணி ஒரு கணம் குழம்பி நின்றாள். பிறகு, தயக்கத்தோடு என்னைப் பார்த்தாள். மெதுவாக தைரியத்தைத் திரட்டிக்கொண்டு ”போர்வ தலகாணியில ஊர்ப்பட்ட அழுக்கு. அந்த மாச சோப்புக்குலாம் மசியுதா என்ன? தேச்சித் தேச்சி தோள்பட்டையே இத்துப்போச்சி. இத வாங்கி தேச்சப்பறம்தான் கொஞ்சமாச்சும் வெளுக்க முடிஞ்சிது…” என்று இயல்பான குரலில் சொல்லி முடித்தாள். முகவாயில் விரல்களால் சொரிந்தபடி அண்ணியையே உற்றுப் பார்த்தார் அண்ணன். பிறகு, மெதுவாக மற்ற கணக்கைப் பார்த்துவிட்டு நோட்டை மடித்துவைத்தார்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் அண்ணனுக்கும் எனக்கும் எண்ணெய்க் குளியல். தோசை சாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனுடன் கடைக்குப்போய் கறி வாங்கி வந்தேன். சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிய அண்ணன் அங்கே தொங்கிய சிலந்திவலையைக் கலைப்பதற்காகத் துடைப்பத்தால் தட்டி னார். சட்டென அதன் தொடர்ச்சியாக ஒட்டடை அடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நகர்த்தச் சொன்னதை நகர்த்துவது, கேட்டதை எடுத்துக் கொடுப்பது, அதுதான் என் வேலை.

இரண்டு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. அறைகள் புதுக் கோலம் பூண்டு புது வீடு போலக் காணப்பட்டது. நடுக் கூடத்துக்குவந்து விட்ட அலமாரியை மீண்டும் பின்னால்நகர்த்தி சுவர் ஓரமாகத் தள்ளிவைத்தோம். பல முறை அது குலுங்கிக் குலுங்கி அடங்கியது.

”ரேவதி, அந்தச் சாவிய எடு. அலமாரிக் குள்ள துணிங்கள்லாம் சரிஞ்சி கெடக்கும். தெறந்து அடுக்கி வச்சிடறம்!”

சமையல்கட்டில் இருந்து அண்ணி

வேகமாக வந்து நின்றாள். ”போதும் வுடுங்க. சாப்பாட்டு நேரத்துல இன்னும் என்ன வேல? நான் அப்பறமா பாத்துக்கறேன்” என்று அவசரமாகச் சொன்னாள்.

”நீ வெச்சா என்ன? நான் வெச்சா என்ன? எல்லாமே வேலதான? சாவியக் குடு.” அண்ணியின் முகம் பீதியில் உறைந்துவிட்டது. கலவரத்தோடு என்னை ஓரக் கண்ணால் பார்த்தபடி சாவியை எடுத்துக் கொடுத்தாள். சமையல் கட்டுக்குள் சென்றவள் மறுகணமே மீண்டும் வந்து அண்ணன் எதிரில் நின்றாள். அப்போதுதான் ஆபத்து என் மூளையில் உறைத்தது. ஐயையோ, கண்ணன் பொம்மை யைக் காப்பாற்ற வேண்டுமே என்னும் பதற்றம் நெஞ்சில் படிந்தது.

”நீ போ. தொணைக்கி இவன் இருக்கறான்ல. நாங்க பாத்து அடுக்கிவைக்கறம் போ” – சொல்லிக்கொண்டே அண்ணன் கதவைத் திறந்தார். அண்ணி கண்களை மூடிக்கொண்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள். அவர் சொன்னது போலவே துணிமணிகள் முன்னோக்கிச் சரிந்து இருந்தன. நடுத்தட்டில் அண்ணியின் புடவைகள். அவற்றின் அடியில்தான் கண்ணன் பொம்மை இருந்தது.

அடித்தட்டில் சில தட்டுமுட்டுச் சாமான்கள் குவிந்து இருந்தன. அவற்றின் மீது அண்ணனின் கண்கள் முதலில் படிந்தன. முதலில் எல்லாவற்றையும் வாரி வெளியே வைத்தார். பிறகு, நான் துடைத்துக் கொடுக்கக் கொடுக்க வாங்கி உள்ளே தட்டில் அடுக்கினார். என் இதயத் துடிப்பு கூடியபடி இருந்தது. மறுபடியும் ஊருக்குச் சென்று ரெட்டியார் வீட்டில் மாட்டுச்சாணம் வாரப் போகும் வாழ்க்கை வெகுதொலைவில் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்!

எதிர்பாராத கணத்தில் விளக்கு மாடத் தில் இருந்த அண்ணனின் கைபேசி ஒலித்தது.

”யாருடா அது, எடுத்துப் பாரு!” என்றார் அண்ணன்.

வேகமாக எழுந்து சென்று பார்த்தவன், ”சண்முகம்ணே!” என்றேன்.

”தோ வரேன்…” என்றபடி அண்ணன் எழுந்து வந்து கைபேசியை வாங்கிக்கொண்டு, வாசல் பக்கமாகச் சென்றார். அதே கணத்தில் அலமாரியின் பக்கம் ஓடி அவசரமாக கண்ணன் பொம்மையை எடுத்து பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடப் பைக்குள் போட்டு மூடினேன். அதற்குப் பிறகுதான் என்னால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. பிறகு, இயல்பாக உட்கார்ந்து மறுபடியும் சாமான்களை அடுக்குவதில் ஈடுபட்டேன். பேச்சை முடித்துக்கொண்டு திரும்பிய அண்ணனும் மீண்டும் வேலையில் மூழ்கினார். அடித்தட்டு, மூன்றாம் தட்டு, இரண்டாம் தட்டு, முதல் தட்டு என ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி, துணிமணிகளைச் சரியாக அடுக்கிவைத்தோம். கணக்கு நோட்டையும் பணப்பெட்டியையும் வழக்கம்போல துணி வரிசைக்கு நடுவில் மறைத்து வைத்துவிட்டுத் திரும்பினார்.

எந்தக் கணத்திலும் அவர் வெடித்து கோபம்கொள்ளக்கூடும் என்கிற அச்சத்தில் அண்ணி வெளியே வரவே இல்லை. அண்ணனை அருகில் வைத்துக்கொண்டு அவளுக்கு சைகை காட்டிப் புரியவைக்கும் அளவுக்குச் சூழல் சரியாக இல்லாததால் நான் அமைதியாகவே இருந்தேன். அண்ணி மெதுவாக வெளிப்பட்டு கூடத்தை நோட்டமிட்டாள்.

”என்ன, சமையல் வேல முடிஞ்சிதா?”

”ம்” என்றபடி அண்ணி தலை அசைத்தாள்.

”தலகாணி ஒறய தொவச்சிப் போட்டன்னு சொன்னியே, எங்க அது? எடுத்துக் குடுத்தா அதையும் மாத்திருவம் இல்ல….”

அண்ணி பேசாமல் துணி மூட்டையில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்தாள். பளிச்சென்று நீல நிறக் கோடு விழுந்த அந்த உறைகளை வாங்கி மூலைப் பகுதி யில் இருந்த சுருக்கங்களை எல்லாம் நீவினார் அண்ணன். பிறகு, தனக்குள் ளாகவே பேசிக்கொள்வதுபோல, ”இந்த வெளுப்புக்கு எட்டு ரூபா தெண்டச் செலவா?” என்று முணுமுணுத்தபடி

தலையணையை ஒவ்வொரு உறையிலும் நுழைத்து நாடா கட்டி ஓரமாகவைத்தார். அண்ணி நிலைகொள்ளாமல் தவித்தாள். அண்ணனுக்கும் எனக்கும் பரிமாறும்போது கூட அவள் முகத்தில் குழப்பமே படிந்து இருந்தது. சாப்பிட்ட பிறகு அண்ணன் படுத்துவிட்டார். அண்ணியும் அறையை விட்டு வெளியே வரவில்லை!

நான்கு மணிக்கு எழுந்த அண்ணனுக்கு டீ போட்டுக் கொடுத்தாள். அதைப் பருகிய பிறகு அண்ணன், ”வில்லினூரு வரைக்கும் போய்ட்டு வரேன்!” என்றபடி கைபேசியை எடுத்துக்கொண்டு சைக்கிளில் கிளம்பிச் சென்றார். அவர் தெருவைக் கடக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தாள்.

பிறகு அவசரமாக, ”ஒலகத்துல அவரு கண்ணுல இருந்து எதுவுமே தப்பிக்க முடியாதுடா. கழுகுக் கண்ணு அவருக்கு. பாத்தாரா? பாக்கலையா?” என்று

கேட்டாள்.

நான் புன்னகைத்தபடி ”அந்த அளவுக்கு எல்லாம் வுட்டுடுவனா அண்ணி!” என்று சொல்லிக்கொண்டே மெதுவாக என் பள்ளிக்கூடப் பையைத் திறந்து கண்ணன் பொம்மையை எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த பிறகுதான் அண்ணியின் முகத்தில் படிந்திருந்த குழப்பம் விலகியது. அதை மறைத்த சாகசக் கதையைச் சொல்லச் சொல்ல… அவள் கண்கள் கலங்கின. புன்னகையோடு என் தோளைத் தட்டிக் கொடுத்தாள். கண்ணன் பொம்மையை ஒரு கணம் இரு கைகளுக்கு இடையே ஏந்தி ஆசையோடு உற்றுப் பார்த்தாள். பிறகு, நெஞ்சோடு இறுக்கியபடி சில கணங்கள் வைத்திருந்தாள். அப்புறம் நிதானமாக புடவை அடுக்குக்குக் கீழே மறைத்து வைத்துவிட்டுத் திரும்பினாள்.

”வா, இப்ப நிம்மதியா பல்லாங்குழி ஆடலாம்!” என்று சிரித்தபடி என் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்!

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *