நொடிக்கு ஒருமுறை மணியை பார்த்துக்கொண்டிருந்தேன்.இரயில் மிக மெதுவாக போவதாக மனதுக்குப்பட்டது.என் மனதின் வேகத்தை ஈடு செய்ய முடியாமல் இரயில் திணறி திணறி சென்று கொண்டிருந்தது.அழுது அழுது வீங்கியிருந்த என் கண்களையும்,என்னையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு வந்தார்கள் சக பயணிகள்.இவர்களுக்கு எப்படி தெரியும் என்னுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று.இன்றைய பொழுது ஏன் இப்படி விடிந்தது.காலையில் 6 மணிக்குதான் அந்த கொடுமையான செய்தியை அப்பா போன் செய்து சொன்னார்கள்.இரவு உறக்கதிலேயே என் பாட்டியின் உயிர் பிரிந்துவிட்டதாக.எந்த ஒரு உடல் உபாதையும் இல்லாமல் என்ன ஒரு அமைதியான இறப்பு.
பத்து வயதில் என் அம்மா இறந்த பிறகு எனக்கு எல்லாமே என் பாட்டி தான்.எனக்கு ஒரு நல்ல தோழியாக,அம்மாவாக சகலமுமாக இருந்தவர்.என் பாட்டியை நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு நெகிழ்ச்சியான உணர்வு.பாட்டியும் நானும் எத்தனை எத்தனை கதை பேசி இருப்போம்.எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள்.
பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு வருகையில் பயங்கர வயிற்றுவலி.அழுதுகொண்டே பாட்டியிடம் சென்று சொன்னேன்.பாட்டி என்னை தனியே அழைத்து சில விஷயங்களை கேட்டு ஊர்ஜிதம் செய்து கொண்டு, கட்டிகொண்டாள்.அவளுக்கு இந்த சடங்கு,தீட்டுகளில் என்றுமே நம்பிக்கை இருந்தது இல்லை.இவையெல்லாம் இயற்கையான நிகழ்வு இதுக்கு போய் ஏன் பெருசா அலட்டிக்கணும்பாள்.என்னுடைய மாதாந்திர பிரச்சனை, அப்போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்,எதனால் இது ஏற்படுகிறது என ஒவ்வொன்றாக புரிய வைத்தாள்.அன்றிலிருந்துதான் நாங்கள் இருவரும் ஒரு தோழியை போல் பழக ஆரம்பித்தோம்.நான் எந்த ஒரு விஷயத்தையும் அவளிடம் மறைத்தது இல்லை.
காலேஜ் படிக்கும்போது, எதிர் வீட்டு பையன் கொடுத்த காதல் கடிதத்தை அவளிடம் தான் கொண்டு வந்து கொடுத்தேன்.வாங்கிப் படித்தவள், “சாரும்மா, இந்த வயசுல இப்டி தான் நிறைய விஷயங்கள் நடக்கும்,நீ இதை பற்றி கவலைப்படவோ,வருத்தப்படவோ தேவையில்லை.இன்னும் இதுக்கான வயசு இருக்குது.இன்னும் நீ சாதிக்க வேண்டியது நெறய இருக்கு.இப்ப இந்த விஷயத்துல மாட்டிகிட்டீனா,கல்யாணம்,குழந்த அது இதுனு இப்பவே நிறய சுமைகள் வந்துரும்.இந்த வயசுதான் உனக்கே உனக்கானது.இத நல்லா அனுபவி,மனச குழப்பிக்காம படிப்புல கவனம் செலுத்து.பாட்டி உனக்கு நல்லதுதான் சொல்லுவேண்டா”.எனக்கு ஆசானாய் இருந்து வழிகாட்டியவள்.அந்த பையனுக்கு அவள் குடுத்த அறிவுறை ஒரு தனி கதை.
அறுபது ஆண்டுகள் என் தாத்தாவுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவள்.அவரின் சுகம்,துக்கம்,கோபம்,சந்தோஷம் எல்லாவற்றுக்கும் ஊன்றுகோலாய் இருந்தவள்.தாத்தா இறந்தபோது “தாத்தா எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு சந்தோஷமாதான் கண் மூடி இருக்காரு.யாருக்கும் எந்த தொந்தரவும் குடுக்காம போய் சேர்ந்துட்டாரு இல்ல,அழக்கூடாது” என்று எனக்கு சமாதானம் செய்தவள் என் பாட்டி.இரும்பு மனுஷி.
“டிங்க் டிங்க் சென்னையிலிருந்து சேலம் வழியாக கோவை வரை செல்லும் நில்கிரிஸ் எக்ஸ்ப்ரஸ் தடம் எண் 2 ல் உள்ளது”
அறிவிப்பை கேட்டதும் எனக்கு திடுமென்ன உணர்வு வந்தது.அவசர அவசரமாக பேக் எடுத்துக்கொண்டு இறங்கினேன்.ஊரே சோகத்தை அப்பிக்கொண்டு இருந்ததாகப்பட்டது எனக்கு.
தெருமுனையை அடையும்போதே தூரத்து அத்தை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.அவசரமாக அவரை உதறிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினேன்.அதே புன்சிரிப்போடு என் பாட்டி உயிரற்ற உடலாக.கருணை ததும்பும் அந்த விழிகள் மூடிய இமைக்குள் நிரந்தரமாக இருந்தது.என்னை அணைத்த அந்த மார்,ஊட்டிவிட்ட அந்த கைகள்,அய்யோ இனிமேல் பார்க்கவே முடியாது.ஓவென கதறிக்கொண்டு என் பாட்டியின் மேல் விழுந்தேன்.
****
காரியம் முடிந்து ஊருக்கு புறப்படும் நேரம் துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்தேன்.இனிமேல் அழுகவே முடியாது என்னும் அளவு அழுது ஓய்ந்திருந்தேன்.வெளியில் ஏதோ சத்தம் கேட்கவே சென்று பார்தேன்.அங்கு ஒரு ரண களம் நடந்து கொண்டிருந்தது.
அப்பாவுடன் சேர்த்து பாட்டிக்கு ஆறு குழந்தைகள்.இரண்டு பெரியப்பா,மூன்று அத்தைகள்.குழந்தைகளாக இருந்தவர்கள் இப்போது பெரியவர்கள் ஆனதால் அவர்களின் தந்திரத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்.சொத்தை சமமாக பிரித்த பாட்டி,அவர் இருந்த வீட்டை அப்பாவுக்கு எழுதி வைத்திருக்கிறார்.இந்த விஷயம் அப்பவுக்கே இப்போதுதான் தெரிகிறது.அதுதான் பூகம்பத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.
“அது என்ன அப்பிடி ஒரு ஓரவஞ்சனை அம்மாவுக்கு..”பெரிய அத்தையின் அழுகை.
“நம்மலையும் அவங்க தான பெத்தாங்க”….சின்ன அத்தை…
அப்பா எதுவும் பேசாமல் அமைதியாக எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.பணம் பத்தையும் செய்யத்தான் செய்கிறது.உடன் பிறந்தவர்களை எதிரியாகவும் மாற்றுகிறது.நான் அப்பாவின் அருகில் சென்று மெதுவாக அவர் கைப்பிடித்தேன்.
“என்னம்மா”
“அப்பா நமக்கு இந்த வீடு வேண்டாம்பா..ப்ளீஸ்”
என்னை புரிந்து கொண்டவராக என் தலை கோதி தலை அசைத்தார் என் அப்பா.நான் உள்ளே சென்றேன்.
ஒருவருக்கொருவர் சலசலத்துக்கொண்டிருந்தார்கள்.அப்பா பேச ஆரம்பித்தார்.பெரியப்பாவின் பேச்சு காதில் விழுந்தது.
“அதுக்காக இல்லடா வேணு, எல்லாரும் சமமா எடுத்துக்கலாம்னுதான் சொன்னோம்…வேற ஒண்ணும் இல்ல…”….
பீரோ திறந்து பாட்டிக்கு பிடித்த பச்சை நிற புடவையை எடுத்து பேகில் வைத்து கொண்டு கிளம்ப ஆரம்பித்தேன்.
– ஆகஸ்ட் 2010