கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 8,281 
 

“என்ன சீதா? இப்போ எப்படி இருக்கு வலி? தேவலையா? டாக்டர் என்ன சொல்றார்?” அம்மா என் தலையை ஆதூரமாக கோதினாள்.

“பரவாயில்லேம்மா! டாக்டர் ஊசி போட்டார். இப்போ வலி ரொம்ப குறைந்திருக்கு. எப்ப வேணாலும் திரும்ப வலி வரலாமாம். ஆனால், பயப்பட வேண்டாம்னார். சீக்கிரமே வந்து அட்மிட் ஆகச்சொல்லி இருக்கார். ”

“ஐயையோ! இப்போ என்ன பண்றது?”

“பயப்படாதே! ஒன்னும் பிரச்னையில்லே. நிறைய மாத்திரை கொடுத்திருக்கார்.”

“சரி, வாட்டமா இருக்கியே பேசாம போய் படு. நான் வேணா கொஞ்சம் ஹார்லிக்ஸ் சூடா கொண்டுவரவா?”

“வேணாம்! நீ போ! என்னமோ லேசா வாந்தி வருது”

“கிரகச்சாரம்! எனக்கு கையும் ஓடலே காலும் ஓடலே!என்ன பண்ணப் போறோம்?”

“சரி, புலம்பாதே! என்ன விஷயமா இப்போ வந்தே, அதை சொல்லு!”

“இல்லே சீதா! பிரசவத்துக்கு நாள் நெருங்கிண்டிருக்கே! ? நாலு நாள் தானே இருக்கு! இப்போ போய் இப்படி? சிவா கிட்டே பேசிட்டியா ? நார்மல் டெலிவரி ஆகும் தானே? விளையாட்டா இருக்கீங்களே?”

“ஏம்மா எல்லாத்துக்கும் இப்படி கையை பிசையறே? பிரச்னை இல்லாமே பிரசவம் இல்லைம்மா. எல்லாம் சிவாவுக்கும் நல்லாத் தெரியும். நாங்க பாத்துக்கறோம். எதுக்கும் தயாராத்தான் இருக்கோம். நீ சும்மா குட்டைய குழப்பாதே!”

“என்னமோ எல்லாம் நல்லபடியா ஆனா சரி.”

திரும்பவும் எனக்கு மெதுவாக வலி தெரிய ஆரம்பித்தது. கண்ணை மூடிக் கொண்டேன்.

****

அன்று இரவே எனக்கு பயங்கர வலி. இடுப்பு பகுதியிலே ஏதோ தேள் கொட்டினா மாதிரி. தாங்க முடியலே. நான் போட்ட கூச்சலில், அம்மாவும் அப்பாவும் அலறிப் போய், உடனே என்னை நர்சிங் ஹோமில் சேர்த்து விட்டார்கள்.

எங்க பாமிலி டாக்டர் வந்தார். ஊசி போட்டார். அவ்வளவு தான் எனக்கு நினைவு. அப்புறம் எனக்கு என்ன நடந்ததென்றே எனக்கு தெரியாது.

****

மெதுவாக கண் விழித்தேன். விண்டோ ஏ.ஸி மெல்லிதாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. குளுகுளுவென இருந்தது. இடுப்பு வலி போன இடம் தெரியவில்லை. ஒரு நர்ஸ் என் கையை பிடித்து ஊசி போட இடம் பார்த்துக் கொண்டிருந்தாள். மெதுவாக சிரித்தேன்.

“இப்போ உடம்பு எப்படி இருக்கு?”

“வலியே இல்லை. ரொம்ப இதமா இருக்கு. எனக்கு என்ன ஆச்சு?”.

“தெரியாதா? உங்களுக்கு அப்பெண்டிசைடிஸ் அறுவை சிகிச்சை ஆயிடுச்சு. நீங்க இப்போ ரெஸ்ட்லே இருக்கணும்”

“ஓ! எனக்கு ஆபெறேஷன் ஆயிடுச்சா? ”

“இன்னும் ரெண்டு நாளிலே டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. அப்புறம், வாழ்த்துக்கள், உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.”

கேட்டவுடன் எனது மனம் காற்றில் பறந்தது. எவ்வளவு சந்தோஷமான விஷயம். அம்மா எங்கே?

“ரொம்ப நன்றி சிஸ்டர். அது சரி, எங்கே என் அப்பா அம்மா யாரையும் காணோம்?”

“இங்கே தான் இருந்தாங்க! கொஞ்ச நேரம் முன்னாடி தான் , முதல் மாடியிலே குழந்தையை பார்க்க போயிருக்காங்க.”

அறை வாசலில் அரவம். என் அம்மா, அப்பா எட்டிப் பார்த்தார்கள். பின்னாலேயே என் மாமனார், மாமியார். எழுந்துக்க முயற்சி செய்தேன். “அசையாதீங்க! அப்படியே படுத்துகிட்டு இருங்க!“ நர்ஸ் ஆணை.

“சீதா! முழிச்சிகிட்டியா? நாங்க பயந்தே போய் விட்டோம். இப்போ உன் வலி எப்படிஇருக்கு?” அம்மா பக்கத்தில் வந்து என் கையை பிடித்துக் கொண்டாள்.

“எனக்கு ஒண்ணுமே இல்லைம்மா. என் வலியை விடு. எனக்கு குழந்தையை பாக்கணும். இப்பவே பாக்கணும்.”

“கொஞ்சம் பொறு. நேத்து நீ இருந்த இருப்புக்கு இந்த துள்ளாட்டம் போடறே!“ – என் ஆவலைப் புரிந்து கொள்ளாமல் அம்மா.

“குழந்தை ஸ்பெஷல் கேர் வார்ட்லே இருக்கு. சிஸ்டர், சீதாவை இப்போ அழைச்சுகிட்டு போலாமா?” – என் அப்பா என் உதவிக்கு வந்தார்.

நர்ஸ் விழித்தார். பின்னர் சுதாரித்து கொண்டார். “டாக்டர் வரட்டும், கேட்டு சொல்லறேன்”

“என்ன மிஸ்டர். சீதாராமன்! உங்க அப்பெண்டிக்ஸ் வலி இப்போ என்ன சொல்றது?” கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார், எங்க பாமிலி டாக்டர்.

“தேங்க்ஸ் டாக்டர். இப்போ வலி மாயமா போச்சு” – நான்

“அப்புறம், வாழ்த்துக்கள். உங்க மனைவி சிவரஞ்சனி அழகான பையனை பெத்து கொடுத்திருக்காங்க. ட்ரீட் எப்போ கொடுக்கப் போறீங்க?”

“கட்டாயம் உண்டு டாக்டர். சிவாக்கு ஏதோ பிரசவ சிக்கல்னு சொன்னீங்களே.”

“அதெல்லாம், நாங்க சமாளிச்சுட்டோம். நீங்க மத்தியானம் போய் தாயையும் சேயையும் பாருங்க. கொஞ்சம் மெதுவா வீல் சேர்லே போங்க.”

– தமிழ்மன்றம்.காம் தளத்தில் செப் 13, 2013 வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *