பன்னீர் மரத் தெரு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 10,955 
 

கனவு ஒளிரும் தெருவாக அது இருந்தது. ஆயர்குலப் பெண்களைப் போல மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துத் திரிந்தனர் சிறுமிகள். உடல் பூத்த பூரிப்பும் இறுமாப்புமாக பால்ய மனம் மாறாமல் இருந்தனர் குமரிகள். கரிய இருள் தெருவில் அப்பிக்கிடக்கும் பின்ஜாமங்களில் கனவுகண்டு சிரிப்பவர்களாக இருந்தார்கள் குழந்தைகள். எப்போதும் பன்னீர்பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அந்தத் தெருவுக்கு கோயில் தெரு என்று பெயர் இருந்தாலும், எல்லோரும் பன்னீர் மரத் தெரு என்றே அழைத்து வந்தார்கள். ஆண்பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகள்தான் அங்கே அதிகமாக இருந்தார்கள் அல்லது பெண்பிள்ளைகளின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. பன்னீர் மரத்துக்கு நேரெதிர் வீட்டில் அகிலா வீடு இருந்தது.பெரும்பாதிப் பூக்கள் அவள் வீட்டு வாசலில் விழுந்துகிடந்ததால், பூக்களைப் பொறுக்கும் சாக்கில் எல்லாக் குழந்தைகளும் அவளுக்கு சிநேகிதமானார்கள்.

ஒரு கறுப்பு முடிகூட இல்லாமல் தலை முழுவதும் வெள்ளையாக மாறிவிட்ட சின்னச்சாமி வாத்தியாரின் கடைசிப் பெண்தான் அகிலா. பள்ளிக்கூடத்தில் அவர் ஒருநாளும் பிள்ளைகளை விளையாட அனுமதிக்காதவராக இருந்தார். தெரு பார்த்த வீடு. வாத்தியார் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து தண்டனையை அனுபவிப்பவர் போல, தெருவில் பிள்ளைகள் விளையாடுவதையே ஓயாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார். குழந்தைகளும் சிறுமிகளும் அவரைக் கண்டு பயப்பட்டார்கள். ஆனால், அகிலா அவர்களின் கண்களுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்தாள். இவ்வளவு அழகான பெயருடனும் அழகுடனும் அவள் இருப்பது அத்தெருவின் பாக்கியம் என்றே குழந்தைகள் கருதினார்கள். அந்தத் தெருவில் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் ஒரே பெண் என்பதால், அவளிடம் பேசப் பிரியப்பட்டார்கள். அகிலாவின் இரண்டு அக்காள்கள், ஒருவர் உள்ளூரிலும் ஒருவர் வெளியூரிலும் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். அண்ணன் இ.பி-யில் சீனியர் கிளார்க். வீட்டுக்கு மூத்தவர் என்றாலும் தங்கைகளுக்குத் திருமணம் முடிந்த பின்பே தன் திருமணம் என்றிருந்தார். வயது நாற்பதைத் தாண்டியிருந்ததால் அதற்கு மேல் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. அகிலா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவளுடைய அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து போயிருந்தார். அகிலா, பெரியகுளத்தில் ஹாஸ்டலில் தங்கி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்த நாளிலிருந்து தெருப் பெண்கள் வாத்தியார் வீட்டு வாசற்படியில் நின்று அவளுடன் பேசத் தொடங்கினார்கள். கோடைகால விடுமுறையில் பன்னீர் மர நிழலில் உட்கார்ந்து தன் கல்லூரியில் உலவிய பேய்க் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தவளை, அதன் பிறகு, ‘யெக்கா… யெக்கா… கதை சொல்லுக்கா’ என்று அடம்பிடித்தனர் பிள்ளைகள். பன்னீர் மர நிழலில் உட்கார்ந்து அவர்களுக்காகத்

தினுசு தினுசான புதுக் கதைகளைச் சொல்லி வந்தாள். அவள் சொல்லும் கதைகளின் ஆழங்களை அறியாமலேயே பிரமிப்பாகவும் ஆர்வமாகவும் சிரிப்புடனும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் சிறுமிகள். அவள் சொன்ன கதைகளில் வந்த மரம் நிறைந்த கடுங்கானகங்களும், கலர்கலரான பேசும் பறவைகளும், தேவதைகளும், துர்தேவதைகளும் அவர்களின் கனவுகளை ஆக்ரமித்தனர். தன் வீட்டில் பூத்த கனகாம்பரம், டிசம்பர் பூக்களைக் கட்டியபடி அவள் கதை சொல்வாள். சிறுமிகளுக்கும் அவளைப் போல பூக்கட்ட வேண்டும் என்றுதோன் றும். ஆனால், அவர்களுக்கு அகிலாவைப் போலகை விரல்களில் நூலைக் கோத்துப் பூக்கட்டத் தெரியாது. அவர்கள் பன்னீர் பூக்களைப் பொறுக்கி கால் பெருவிரலில் நூல் கோத்துச் சரமாகத் தொடுப் பார்கள். பன்னீர் பூக்களைத் தலையில் வைத்தால், பேன் வரும் என்று அவள் சொல்லியிருந்ததால், அதை சாமிக்குப் போட்டார்கள். அவ்வப்போது பன்னீர் பூக்களின் காம்பை உறிஞ்சி அதன் இனிப் பின் சுவையை மட்டும் ருசித்தனர்.

சிறுமிகள் மட்டும் அல்லாமல் அகிலாவிடம் கதை கேட்கும் குமரிகளும் குழந்தையாகிப் போகும் வித்தை நாளெல்லாம் நடந்தது. அகிலா, தன் பருவமறியாது குழந்தையாகப் பாவனை செய்துகொண்டு இருந்தாள். திருமணம் வேண்டாமென்று சொல்லும் அண்ணனையும், வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் அப்பாவையும் தனியாக விட்டுப்போக அவளுக்கு மனதில்லை. அப்பாவும் அண்ணனும் அவளுடைய திருமணப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் தனக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைக்கட்டும், அதற்குப் பின் மாப்பிள்ளை பார்த்துக்கொள்ளலாம் என்று தட்டிக் கழித்து வந்தாள். அரசு வேலைக்கான தேர்வுகளை அவள் அடிக்கடி எழுதினாலும் வேலை ஏனோ அவளுக்குக் கிடைத்தபாடில்லை. அதன்பொருட்டு அவள் கவலைப்பட்டதும் இல்லை. கூட்டுறவுப் பண்ணையில் அவ்வப்போது லீவ் போஸ்ட்டில் கிளார்க் வேலை பார்ப்பாள். நீளமான வெயில் நாட்களில் பூப்போட்ட கலர் குடையைப் பிடித்துக்கொண்டு தெருவில் அவள் நடந்துபோகும் அழகைப் பார்க்கும் சிறுமிகள் வருத்தப்பட்டார்கள். குடைக்குப்பொருத்த மாக அகிலா, டீச்சர் வேலைதான் பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள்.

அகிலாவிடம் கதை கேட்டுக்கொண்டு இருந்த ரமா, கீதா, சுமதி, லதா, செல்வராணி, தங்கம் எல்லோரும் வளர்ந்துகொண்டு இருந்தார்கள். அகிலா இல்லாத நேரங்களில் அவர்கள் மாறிவரும் தங்கள் பருவத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். ரமா தன்னைக் கண்ணன் காதலிப்பதாக சுமதியிடம் மிக மெதுவான குரலில் சொன்னாள். “இதைப் பரம ரகசியமாக வைத்திருக்க வேண்டும். வெளியே தெரிந்தால் கோயில் கிணத்தில் விழுந்து செத்துப்போவேன்” என்று பயமுறுத்தி வைத்திருந்ததால், அதுபற்றி மூச்சுவிடாமல் இருந்தாள் சுமதி.

பன்னீர் மர நிழலில் உதிரி மல்லிகைப் பூவை ஊசியில் கோத்தபடி இருந்த அகிலாவுக்கு ஒவ்வொரு பூவாக எடுத்துக் கொடுத்துக்கொண்டு இருந்தாள் ரமா. அப்போது கண்ணன் நாலைந்து தடவைக்கு மேல் சைக்கிளில் அந்த தெருவைச் சுற்றியே வலம் வந்துகொண்டு இருந்தான். ‘ஏன் இந்தப் பையன் திரும்பத் திரும்ப நம்ம தெருவுல சுத்திட்டுத் திரியுறான் என்று அகிலா கேட்டபோது சுமதிக்குத் தொண்டை வரை வார்த்தை வந்துவிட்டது. ரமா கிணற்றில் மிதக்கும் காட்சி கண்ணுக்குத் தெரியவே, பயந்தவளாக ‘லூஸா இருப்பான் போல’ என்று அவனைத் திட்ட ஆரம்பித்தாள். ரமா அதைக் கண்டுகொள்ளாதவள் போல பூவைத் தொடர்ந்து அகிலாவின் கையில் கொடுத்துக்கொண்டு இருந்தாள். அவள் கண்களில் லேசான கலக்கமும் கூச்சமும் இருந்தது.

பின்பனிக் காலத்தின் வெயில் தொடங்கிய காலையில் பேங்க் மேனேஜரின் குடும்பம் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி பன்னீர் மரத் தெருவுக்குக் குடிவந்தது. மேனேஜரின் மகள் லாவண்யா வந்த முதல் நாளே, சுமதியையும் ரமாவையும் தன் தோழிகளாக்கிக்கொண்டாள். அவர்கள் லாவண்யாவை அகிலாவுக்கு அறிமுகப்படுத்திவைத்தனர். நாகரிகமான பழக்கம் கொண்ட அவளுக்கு, அகிலாவின் பேச்சு மட்டுமே ஈடுகொடுப்பதாக இருந்தது. வேக வேகமாகப் பேசும் பழக்கம்கொண்ட லாவண்யா, தெருப் பையன்கள் தன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பதாக வந்த முதல் நாளே புகார் கூறினாள். அந்தத் தெருவிலேயே இருக்கும் தங்களைக் கண்டுகொள்ளாத பையன்கள், லாவண்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தது அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது.

அதுவரை கேள்விப்படாத அதிசயம் ஒன்று லாவண்யாவின் வீட்டில் ஒளிந்திருந்தது. முதல்முறையாக டி.வி. பெட்டி லாவண்யா வீட்டுக்கு வந்தது. தெருவில் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரும் சென்று அதனை ஒரு முறை பார்த்து வந்தார்கள். வீட்டுக்குள்ளே படம் பார்ப்பது அந்த மக்களுக்கு அதிசயமாக இருந்தது. பன்னீர் மரத்துக்கு அருகில் இருக்கும் பழனி டீக்கடையில் இருந்த ஆண்களெல்லாம் பேங்க் மேனேஜர் வீட்டு டி.வி. பெட்டியைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்படியரு கேளிக்கைப் பொருளை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு வசதி இல்லையென்றாலும் அதை அப்படிச் சொல்லாமல், “வாரத்துக்கு ஒரு நாளைக்கு படம் போடுவானுங்களாம். அந்த ஒரு நாளு கூத்துக்கு ஆயிரக்கணக்குல துட்டைப் போட்டு டி.வி. பொட்டியை வாங்கணுமா? ஒரு ரூபா குடுத்துப்பிட்டு தேட்டர்ல படம் பார்த்துட்டு போயிரலாம்ல!” என்றார்கள். மற்றவர்களிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு நப்பாசை எல்லோர் மனதிலும் தோன்றியது. பேங்க் மேனேஜரின் வீட்டிலிருக்கும் டி.வி. பெட்டியைப் போல் தங்கள் வீட்டிலும் வாங்கிவைக்க வேண்டும் என்பதுதான் அது. குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளேயே படம் பார்ப்பது குதூகலமாக இருந்தது. வெள்ளிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் டி.வி. பார்ப் பதற்காக லாவண்யா வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந் தார்கள்.

அதற்கடுத்து வந்த நாட்களில் அவர்களுக்குக் கதை சொல்வதற்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனாள் அகிலா. குழந்தைகளும் சிறுமிகளும் கதை கேட்பதை மறந்தவர்களானார்கள். ஒருவரும் அவள் பற்றிய சிந்தனையின்றி டி.வி. பார்ப்பதிலும் அதனைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பதையும் மட்டுமே விரும்பிச் செய்தார்கள். அவள் சொல்லாமல் தேக்கி வைத்திருந்த கதைகள் பன்னீர் மரத்துக்குக் கீழே கரைந்துகொண்டு இருந்தன. லாவண்யா வீட்டுக்குள் டி.வி. பார்க்க வரும் கூட்டத்தால் வீடு அலங்கோலமாகிப் போவதாக வீட்டு உரிமையாளர் கோபித்துக் கொண்டார். இதனால் படம் போடும் நேரத்தில் வீட்டை உள்பக்கமாகப் பூட்டினார் லாவண்யா அம்மா. லதாவையும் சுமதியையும் மட்டும் உள்ளேவிடலாம் என்று லாவண்யா அடம்பிடிப்பாள். வேறு வழியில்லாமல் கதவுத் திறந்தால், வாசலுக்கு வெளியே பெருங்கூட்டமாக நின்றிருக்கும் குழந்தைகள் குபுக்கென்று உள்ளே நுழைந்துவிடுவார்கள். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. வீட்டு உரிமையாளர் திட்டுவதைப் பொருட்படுத்தாமல் அவர்களும் நுழைந்துவிடுவார்கள்.

சுமதியும் லதாவும் பள்ளிக்கூடம் போன நேரம் தவிர, மற்ற நேரங்களில் லாவண்யா வீடே கதி என்று கிடந்தார்கள். வீட்டைச் சுத்தப்படுத்துவது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது என்று எல்லா வேலைகளையும் லாவண்யாவின் அம்மா அவர்களிடம் சாதுர்யமாக வாங்கிக்கொண்டாள்.

“பன்னீர் மரத்துக்குக் கீழே உட்காரலாமா?” என்று அகிலா அழைத்தால் “போக்கா தெருவுல போய் உட்காருவாங்களா? எல்லா ஆம்பளைகளும் ஒரு மாதிரியாப் பார்த்துட்டு போவாங்க” என்று மறுத்துவிடுவாள் சுமதி. கட்டுக்கடங்காத கற்பனைக் கதைகளைத் தவிர பேச எதுவும் இல்லாத அகிலா, சுமதி சொல்லும் காதல் கதைகளை வெறுப்பாகக் கேட்டுக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் அதையெல்லாம் கேட்கச் சகிக்காதவள் போல், “கொஞ்ச வேலை இருக்கு. உள்ளே போகட்டுமா” என்று அறைகளில் போய் ஒடுங்கிக்கொண்டாள்.

கதை சொல்லிப் பாவனையை மாற்றிக்கொள்ள முடியாத அகிலாவால் குழந்தை மனதிலிருந்து விடுபட முடியவில்லை. மிக மெனக்கெட்டு தன் உடலை ரசிக்க முயற்சித்தாள். அப்போதுதான் அவள் எப்போதும் ஆண்களை ஆசையோடு பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அவளாகத் திணித்துக்கொண்ட வேடம் அவளின் இயல்பாகிப்போனது. தனிமை, பெரும் படலமாய் சுற்றிக்கொண்ட அவள் உடல் தளர்ந்துகொண்டு இருந்தது. எந்த ஆணையும் தன்னுடன் சேர்த்துக் கற்பனை செய்ய முடியாதவளாக இருந்தாள். அப்படிச் செய்வது அவளுக்கு அருவருப்பூட்டுவதாகவும் இருந்தது.

அவள் திருமணம் செய்துகொள்ளாததைப்பற்றி பேசாதவர்களே இல்லை. அதனாலேயே யாரையும் பார்க்க விரும்பாமல் வெயில் ஊரும் வீட்டின் தாழ்வாரத்தில் பகலெல்லாம் படுத்தே கிடந்தாள். தண்ணிவாட்டுத் தகரத்தின் ஓட்டை வழியே தாழ்வாரத்தில் பாய்ந்த வெயில் ஒரு உலக்கையைப்போல நெளிந்துகிடந்தது. சிறுகச் சிறுக ஒளியின் நீளம் குறைந்து முழுவதுமாக இல்லாமல் போகும் வேளையில் அவள் குளிக்கப் போனாள். தன் உடல் பார்க்காமல் குளியலறையின் சுவர்களைப் பார்த்து மட்டுமே குளித்தாள்.

உள்ளறையில் படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பாவின் நினைவு தப்பியது. அகிலா இருப்பது அறியாமலேயே போய்ச் சேர்ந்தார். அவளுடைய திருமணத்துக்கு அக்காக்கள் பார்த்த படித்த மாப்பிள்ளைகள் அவளின் கண்களில் தெரிந்த தனிமையைச் சகிக்க முடியாதவர்களாக பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பிப்போனார்கள். அந்த நிகழ்வுகளில் பொருள்காட்சியின் பிம்பத்தைப் போலவே வந்து நின்றாள். படிக்காத, வசதி குறைந்த மாப்பிள்ளையைத் தன் தங்கைக்கு மணம் முடித்துவைக்க விரும்பாத அக்காக்கள், தத்தம் குடும்பப் பிரச்னையில் ஆழ்ந்துபோனார்கள். அதற்குப் பின், ‘இப்படி என் தங்கச்சி கல்யாணமாகாமக் கெடக்காளே’ என்று புலம்புவதோடு சரி, மாப்பிள்ளை பார்ப்பதை மறந்தேவிட்டார்கள்.

அப்பாவின் மரணத்துக்குப் பிறகு கோடையில் கிடைத்த லீவ் போஸ்ட் வேலைக்கும் அகிலா போக வில்லை. பன்னீர் மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் தெருவில் இல்லாத குழந்தைகளையும் சிறுமிகளையும் தேடி மனம் அலைந்தது. ஒரு கதைசொல்லியின் வசீகரத்தை இழந்துவிட்டதாக நினைத்த அவள், அதற்குப் பின் எப்போதும் பன்னீர் மரத்தைப் பார்க்க முடியாத அளவுக்குத் தெருக் கதவை மூடியே வைத் திருந்தாள்.

பெரும் வெறுப்பு மூண்ட வாழ்வைப் பார்த்துக் கலங்கிப்போன அண்ணன், தன் ஐம்பதாவது வயதில் ஒரு ஏழைப் பெண்ணை மணந்துகொண்டார். அண்ணனுக்குத் திருமணம் செய்திருந்த தாமரையின் வயதும் அகிலாவின் வயதும் ஒன்றாக இருந்தது. தாமரை ஒருவரைக் காதலித்து அவர் இறந்துபோனதாக ஊரில் பேசிக்கொண்டார்கள்.

அகிலாவுக்கு அந்த வீட்டில் இருப்பது பெருங்கூச்சமாக இருந்தது. உள்ளறையைப் பூட்டிக்கொண்டு தாமரையைப் பார்க்காமல் இருந்தாள். முன்பு தாழ்வாரத்து வரை இருந்தவள் சுதந்திரம் இப்போது அறை வரை என்றாகிப் போனது. அவள் அப்படி விலகி இருந்தது தாமரைக்கு அவள் மேல் காரணமில்லாத வெறுப்பைத் தந்தது. அவள் இன்னும் தன் இள வயதுக் காதலனை மறக்க முடியாத துயரத்தில் இருந்தாள். அகிலாவால் தாமரையின் துயரத்துடனும் சந்தோஷத்துடனும் பங்கெடுக்க முடியவில்லை.

அந்தத் தெருவுக்கு இரண்டாவது டி.வி. வந்தது. புது மனைவியின் ஆசைப்படி வீட்டில் டி.வி. வாங்கி வைத்தார் அண்ணன். குழந்தைகளிடமிருந்தும் சிறுமி களிடமிருந்தும் தன் வாழ்வைப் பிரித்த டி.வி. பெட்டி யின் குரலும் வெளிச்சமும் அவளுடைய துக்கத்தைக் கீறிக் காயப்படுத்திக்கொண்டு இருந்தது. துணியைக் கிழித்து அதன் சத்தம் காதில் விழாதவாறு அடைத்துக் கொண்டு தானாகப் பேச ஆரம்பித்தாள் அகிலா.

தன் துயரங்களுக்கு மிகப் பெரும் வடிகாலாக டி.வி. பெட்டியை நினைத்தாள் தாமரை. மொழி புரியாத படங்களையும் வைத்த கண் மாறாமல் பார்த்தவள், படம் வராத வேளைகளிலும் டி.வி. பெட்டியை போட்டே வைத்திருந்தாள். கொர்கொர் என்று டி.வி பெட்டியிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுக்கொண்டே வீட்டு வேலைகளைச் செய்தாள்.

சாப்பிட, குளிக்க என்று அகிலா அறையை விட்டு வெளியே வரும் வேளையில் டி.வி. பெட்டி பக்கம் கண்ணைத் திருப்புவதில்லை. இருந்தாலும் அதன் சத்தம் பேய்க் கூச்சலைப் போல அவளைத் தொந்தரவு செய்வதைப் பொறுக்க மாட்டாமல் டி.வி. பெட்டியின் சுவிட்சை அணைத்துவிடுவாள். அவள் அந்த இடத்தை விட்டுப்போனதும் தாமரை டி.வி. சுவிட்சைப் போட்டு அக்கம்பக்கத்துக் குழந்தைகளை மலரச் செய்தாள். குழந்தைகள் இப்போது தாமரை அக்காவிடம் பிரிய மாக இருந்தார்கள்.

வாய் திறந்து சண்டை போடாமல் செய்கைகள் மூலமே தங்கள் வெறுப்பைத் தெரியப்படுத்திக்கொண்டார்கள். அவர்களின் பெருத்த மௌனங்களைக் கரைக்க முடியாமல் தவித்தார் அண்ணன். சிரித்த அகிலாவின் முகம் அவருக்கு மறந்து போனது.

அறைக் கதவைப் பூட்டிக்கொள்ளும் அகிலா, தெருவோரமாக இருக்கும் அறை ஜன்னலை நொடிக்கொரு தடவை சாத்துவதும் திறப்பதுமாக இருந்தாள். தெருக்களில் குழந்தைகள் நடமாடுவது தெரிந்தால் வெடுக்கென்று ஜன்னலைச் சாத்திவிட்டு மூலையில் உட்கார்ந்து நகம் கடிப்பாள். அடுத்த நொடியில் அவளது கைவிரல்கள் இல்லாத பூவைக் கட்டிக்கொண்டு இருக்கும். வாய் எதையோ பேசிக்கொண்டு இருக்கும். அவள் முகம் சாம்பல் பூத்துப்போய்த் தீர்க்க முடியாத வேதனையில் மூழ்கிக்கிடந்தது.

தாமரை பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குப் போனதும் அகிலாவுக்கு ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தது. அண் ணன் வேலைக்குப் போன பிறகு தெருக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தவள், டி.வி. பெட்டியை ஒரு கறுப்புத் துணியால் மூடி யாரும் பார்க்க முடியாத இடத்தில் வைத்துவிட்டாள். டி.வி. பெட்டியைத் தொட்ட கைகளைத் திரும்பத் திரும்ப சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டாள். தாழ்வாரத்தில் இருந்த டி.வி. எங்கே என்று தங்கையிடம் கேட்காமல் வீட் டைச் சுற்றித் தேடி அண்ணன் கண்டுபிடித்தார்.

அகிலாவுக்கு நிம்மதியே இல்லை. டி.வி. எழுப்பிய ஒலி வீடெல்லாம் நிறைந்திருப்பதைப் போலத் தோன்றியது. திரையில் தோன்றிய படம் வீட்டுச் சுவர்களிலெல்லாம் நிழலாகப் படர்ந்தது. வீட்டின் எந்த மூலையில் சென்று ஒளிந்துகொண்டாலும் அதன் சத்தமும் நிழலும் விடாமல் துரத்தியது. அதிலிருந்து விடுபடத் துடித்தாள்.

யாரும் சேகரிக்காத பன்னீர் பூக்கள் மண்ணில் உதிர்ந்துகொண்டு இருக்கும் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிப் போன அகிலா, பின் எப்போதும் வீடு திரும்பவில்லை!

அவள் எப்போதும் ஆண்களை ஆசையோடு பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அவளாகத் திணித்துக்கொண்ட வேடம் அவளின் இயல்பாகிப்போனது!

– 10th செப்டம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *